கத்தோலிக்கமும் பரத ஜாதிதலைவமோரும்
மேலைநாடுகளில் ஆலயங்களில், அரசருக்கு தனி மரியாதை செய்து வருவதைப் போலவே, முத்துக்குளித்துறையில் பரத குல ஜாதிதலைவமோருக்கு போர்த்துக்கீசியர் தொடங்கி அவர்களுக்குப்பின் ஞான மேய்ப்பர்களால் அங்கிகரிக்கப்பட்ட கௌரவ உரிமைகள் வழங்கப்பட்டது. முத்துக்குளித்துறையின் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக பரிசுத்த பனிமய மாதா ஆலயத்தில் ஜாதித்தலைவமோர் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட கௌரவ உரிமைகள் பின்வருமாறு....
1) ஆலயத்தில் பலிபீடத்தை அடுத்துள்ள இடம் பரத ஜாதிதலைவமோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும், அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் தற்போதுவரை தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தில் காணலாம். அந்த இடத்தில் ஜாதித்தலைவமோர் அவர்களுக்கு தனி இருக்கையில் அமர உரிமை.
2) ஜாதித்தலைவமோர், தன் பரிவாரத்துடன் ஆலயத்தில் நுழையும் போது பலிபீடத்தின் பின் புறத்திலிருக்கும் வெண்கல மணி ஒலிக்கப்படும். (ஜாதித்தலைவர் மணி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த மணி இந்நாள் வரை பலிபீடத்தின் பின்புறம் இருந்து வருகிறது.)
3) ஞாயிறு, மற்றும் கடன் திருநாட்களில் விசேஷ பிரார்தனையாக சிங்ஙோர் சிங்ஙோர் தொன் (ஜாதித்தலைவமோர் பெயர்) ஏழுதுறை ஜாதித்தலைவமோர் அவர்களின் ஆத்ம, சரீர நன்மைகளுக்காகவும், அவர்கள் கேட்கிற நன்மையான காரியங்கள் அனுகூலமாகத்தக்கதாகவும், பரத ஜாதியாரின் முன்னேற்றத்திற்காகவும்......... என ஜெபித்தல்.
4) திவ்விய நற்கருணை, குருத்து ஓலை, விபூதி சாம்பல் வழங்கும் போது பலிபீடத்திற்குள் நுழைந்து பெற்றுக்கொள்ளும் முன்னுரிமை.
5) ஆலயத்தின் தர்மகர்த்தாவாக பரிசுத்த பனிமய மாதாவின் ஆபரணங்கள் இருக்கும் கருவூலப் பெட்டியின் திறவு கோல்களை வைத்து இருக்கும் உரிமை.
6) பெரிய வியாழன் அன்று, 12 அப்போஸ்தலர்களாக வருபவர்களின் கால் கழுவும் சடங்கில் கால்களை குருவானவருடன் இணைந்து முத்திசெய்யும் உரிமை.
7) ஜாதித்தலைவமோர் குடும்பத்தில் நடைபெறும் திருமணம், புது நன்மை பெறுதல், யூபிலி, பதவி ஏற்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளில், பரிசுத்த பனிமய மாதாவிற்கு பொன், வைர மற்றும் முத்து நகைகள் அணிவித்தல்.
8) தங்கத்தேர் உற்சவத்தில், பரிசுத்த பனிமய மாதாவின் திருச்சுரூபத்தை தேரில் வைப்பதற்காக முத்துப்பல்லக்கில் வைத்து எடுத்து வரும் போது, முத்துப்பல்லக்கில் உள்ளே அமர்ந்து மாதாவை பிடித்துக்கொள்ளும் பாக்கியம்.
9) பரிசுத்த பனிமய மாதாவின் தங்கத் தேரின் வடத்தை முதன் முதலாக தொட்டுக்கொடுத்து, மரியே மாதாவே எனும் குரலெழுப்பி தங்கத் தேரினை இழுத்து வைக்கும் உரிமை.
10) ஜாதித்தலைவமோர் மரணம் சம்பவிக்கும் போது, முத்துக்குளித்துறையின் அனைத்து ஆலயங்களிலும் துக்கமணி ஒலிக்கப்படுவதுடன், கொடிமரத்தில் கருப்புக்கொடி ஏற்றிவைத்தல்.
11) ஜாதித்தலைவமோர், பரதகுல கொடிகளும், விருதுகளும் கோவில் காம்பவுண்டுக்குள் எடுத்துச் செல்லும் சுதந்திரம்.
12) ஜாதித்தலைவமோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளை வந்திக்கத்தக்க மேற்றிராணியார் அவர்களே முன்நின்று நடத்தி வைத்தல்.
தகவல்: கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா
பாண்டியபதி கோப்புகள்