Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

கமல பந்த வெண்பா


வேம்பார் திவ்விய இஸ்பிரித்துசாந்து சர்வேஸ்பரனின் ஆலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் மரிய செங்கோல் நாயகியின் பேரில் வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள் புனைந்த கமல பந்த வெண்பா 

கமலம் என்பது தாமரையைக் குறிக்கும். தாமரை மலர்களை ஓவியமாக்கி அதன் மகரந்தம் தொடங்கி அனைத்து இதழ்களிலும் கவிதையின் எழுத்துகளைக் குறிக்குமாறு  கவி புனைவது கமல பந்த வெண்பா எனப்படும். 


ஜீவ பவ நீவ நவ தேவ தவமேவடிவ 
தேவ சுதனைத்தரு ராஜேஸ்வரியே ஏவை 
பவமாசணு காத்துய்ய செங்கோல் மாமரியே 
நிம்ப நகர் வாசகசாலைக் கருளம்மா 

பழம் தமிழரின் கடல் வாணிபம் - 2

பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டு வரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.

“தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(R. SEWELL, HINDU PERIOD OF SOURTHERN INDIA, IN IMP. GAZ.., -2, 322)”

“ஆரியமொழி இங்கு நுழையவில்லை. வட இந்தியாவிலிருந்து முழுமையாக வேறுபட்டு, இந்த நாடுகள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பிற உலக நாடுகளோடு கடல்வணிகம் மூலமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். மிக ஆரம்பகாலம் முதல் அவ்வணிகம் மிகப்பாதுகாப்போடு நடைபெற்றுவந்தது. மன்னார் வளைகுடாவின் மிகச் சிறந்த முத்துக்களும், கோயமுத்தூரின் மணிக்கற்களும், மலபாரின் மிளகும் உலகின் வேறு எங்கும் கிடைக்காது, இங்குமட்டுமே கிடைக்கும். வெளிநாடுகளில் கி.மு. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் இருந்து இவைகளுக்கு மிகப்பெரிய தேவை இருந்து வந்தது(VINVINCENT SMITH, EARLY HISTORY, 334)”.

எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சுகாப் அவர்கள் (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3), தனது நூலில்(பக்: 209, 210) பண்டைய தமிழர்களின் கடல்வணிகச் சிறப்பை வெளிப்படுத்துவதற்காக மேற்கண்ட இரு பகுதிகளை சுவெல், வின்சென்ட் சுமித் ஆகிய இரு புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களிடமிருந்து எடுத்து மேற்கோள்களாகத் தந்துள்ளார்.

திரு.சுகாப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்கிற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சுகாப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அக்குறிப்புகளுக்கு, பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சுகாப் அவர்கள் நன்கு அறிந்து, விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார். தமிழகம் குறித்துப் பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு சுகாப் எழுதியுள்ளார். ஆகவே பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்தியக் கடல் வாணிகம் குறித்த, முக்கியமாகத் தமிழர் கடல்வணிகம் குறித்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

பிளினி, சுட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சுமித், சுவெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சுகாப் அவர்கள் எழுதி உள்ளார். அதனால்தான், சுகாப் என்னும் அறிஞரின் முடிவுகளை உண்மை என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார்(சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 114).

தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரியக் கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்(தமிழக வரலாறு, பக்.32). கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதலே மேலை நாடுகளுக்கும், சீனம் வரையிலுள்ள கீழை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வணிகத் தொடர்பில் தென்னிந்தியாவின் பெரும்பங்கு நன்கு தெரிந்ததாகும் எனவும், தென்னிந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் கடல் வாணிகத் தொடர்பு கி.மு 6 அல்லது 7ஆம் நூற்றாண்டு முதலே இருந்திருக்க வேண்டும் என்கிற கென்னடியின் முடிவு சரியானதாகவே தோன்றுகிறது என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்( பக்: 28, 38,).

இந்தியாவில், கடல்வணிகத்தின் வளர்ச்சி என்பது அடிப்படையில் திராவிடர்களுடையது என்கிறார் சுகாப் அவர்கள்(பக்: 229). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் சுமித், சுகாப், கென்னடி, சுவெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும் சுகாப் அவர்கள், தனது நூலில் தமிழரச வம்சங்கள் இந்திய வரலாற்றில் 2000 வருடங்களுக்கும் மேலான மிக நீண்ட இடைவிடாதத் தொடர்ச்சியைக் கொண்டவைகளாக இருந்துள்ளன என்கிறார் (பக்:238).

ஜவகர்லால் நேரு:

நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்’ என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன(பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக்கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்(பக்: 153)” எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் தென் இந்தியாவுடன்தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப் படுத்துகிறார் எனலாம்.

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

“கிழக்கே மலேயா தீபகத்திற்கும், சுமத்திராவிற்கும், மேற்கே மலபார் பகுதிகளுக்குமிடையேயான வணிகமானது தமிழரிடமே இருந்தது” என கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், ‘வார்மிங்டன் என்பவரது தி காமர்ஸ் பெட்வீன் தி ரோமன் எம்பயர் அண்ட் இந்தியா(கேம்பிரிட்ஜ், 1928) பக். 128-131’ என்கிற நூலை ஆதாரமாகக் காட்டி தனது ‘சோழர்கள்’ என்கிற தனது நூலில்(பக்: 112)’ குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பெரிபுளூசின் ஆசிரியர்(THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF ) கூறுவதாகக் கீழ்கண்ட தரவுகளைக் குறிப்பிடுகிறார்.

மூவகைக்கப்பல்கள் தமிழகத்தில் இருந்தன. 1.கரையோரமாக உள் நாட்டுப்பகுதிகளுக்கு அதிகக் கனமில்லாத பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள்; 2.இவற்றைவிடச் சற்று பெரிய அளவில் கட்டப்பட்டு கூடுதலான பொருள்களை ஏற்றிச் செல்ல உதவும் சரக்குக் கப்பல்கள்; 3.கடல்கடந்து, மலேயா, சுமத்ரா, போனற நாடுகளுக்கும், கங்கை நதிவரையிலும் செல்லக்கூடிய பெரும் கப்பல்கள் ஆகிய் மூன்றுவகைக் கப்பல்கள் அன்று தமிழகத்தில் இருந்தன. அவர் பழந்தமிழ் இலக்கியங்களும், பெரிபுளுசின் ஆசிரியரும் ஒன்றுபோல் குறிப்புகளைத்தருவது மிகுந்த வியப்புக்குரிய சான்றாகும் என்கிறார். மேலும் அவர் “தென்னிந்தியா(தமிழகம்), ஈழம் ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், பெரிபுளுசு கூறுவதைப்போல, தூரக்கிழக்கு நாடுகளுடலான வணிகத்தின் கேந்திரங்களாக விளங்கி, எகிப்திலிருந்து வந்த கலங்களைவிட அதிக அளவிலும், மிகப்பெரிய கலங்களையும் பயன்படுத்தின” என்கிறார்( சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 110-114).

அதாவது அன்றைய மேற்கத்திய நாடுகளான, உரோம், எகிப்து, கிரேக்கம், அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த கப்பல்களைவிடப் பெரியகப்பல்களைத் தமிழகம் பயன்படுத்தியது. மேலும் அப்பெருங்கப்பல்கள் எண்ணிக்கையிலும் மேற்கத்திய நாடுகளைவிட அதிக அளவில் தமிழகத்தில் இருந்தன என்கிறார் பெரிபுளுசு அவர்கள். பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அதாவது அன்றைய உலகில் தமிழர்களே மிகப்பெரிய கடலோடிகளாகவும், அதிக அளவிலான கடலாதிக்கமும், வணிக மேலாண்மையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பதை இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் தற்பொழுது கி. மு. 2000வரை செல்கிறது என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தனது தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்கள்(பக்: 61, 62). கொற்கை அதன் அருகில் தான் உள்ளது. ஆதலால் கொற்கைத் துறைமுகம் கி.மு. 1000 வாக்கில் இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. ஆகவே சாலமனின் கப்பல்கள் இங்கு வந்து பிற பொருட்களோடு 1)துகிம்-தோகை, அதாவது மயில்தோகை, 2). ஆல்மக் மரங்கள்-அகில் மரங்கள், 3.)கஃபி-கவி எனப்படும் குரங்கு ஆகியத் தமிழகப் பொருட்களைக் கொண்டு போனது உறுதிப்படுத்தப் படுகிறது எனலாம்.

கால்டுவல், மேனாட்டார் மயிலுக்கு பயன்படுத்தும் துகி என்ற சொல் தோகை என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது எனவும், இது உவரித்(OOPHIR) துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது எனவும் இதற்கு பழைய ஏற்பாட்டில் ஆதாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்(திருநெல்வேலியின் சரித்திரம், பக்:23). இங்கு உவரித்துறைமுகம் என கொற்கையைக் கால்டுவல் குறிப்பிடுகிடுறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் நங்கூரம் ஒன்றினை தமிழகத்தின் குருசேடைத் தீவில்(CRUSADAI ISLAND) இருந்து கைப்பற்றியுள்ளது. சிசிலியைச்(SSICILY) சேர்ந்த வல்லுநர்கள் இதனை ஆராய்ந்து இந்நங்கூரம் பர்சியன்(PPERSIAN) வகையைச் சேர்ந்தது எனவும் இதன் காலம் கி.மு. 1000 எனவும் குறிப்பிட்டுள்ளனர் (TAMILS HERITAGE-102) . இஸ்ரேலை ஆண்ட சாலமனின் காலம் கி.மு. 1000. ஆகவே அதே கால கட்டத்தைச் சேர்ந்த கல் நங்கூரம் தமிழகத்தில் கிடைத்திருப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கி.மு. 1000 அல்லது அதற்கும் சற்று முற்பட்ட காலகட்டத்தில் தொடங்கி கி.மு. 500 ஆண்டளவில் நன்கு மிளிர்ந்து படிப்படியாக பல்வேறு நிலைகளில் தமிழர் நாகரிகம் உயர்நிலையை அடைந்தது என்கிறார் தொன்மைத் தமிழகத்தின் செங்கடல் வணிகத்தொடர்பு என்ற கட்டுரையை எழுதிய சு.இராசவேல் அவர்கள்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 13). அதே நூலில் சங்ககாலத் தமிழகத்தில் வெளி நாட்டு வணிகம் என்கிற கட்டுரையை எழுதிய மா.பவானி என்பவர், கி.மு. 500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான இந்திய வணிகத்தில் கிரேக்கர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் எனவும் பல நாடுகளுக்கு இடையிலான இப்பரிமாற்றத்தால் வணிகப்பண்டங்களின் தமிழ் பெயர்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றுள்ளன எனவும் அரிசி, ஒரைஸ் ஆகவும் கருவா, கார்பியென் ஆகவும் இஞ்சி, ஜிஞ்சிபெரோஸ் ஆகவும் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டது எனவும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் உரோமுக்குச் செல்லாமல் கிரேக்கத்திற்கே சென்றன எனவும் அதன் பின்னரே அவை இரோமுக்கு நேரடியாகக் கொண்டு செல்லபட்டன(சீனிவாச ஐயங்கார். பி.டி., 1989 மு.சு.நூ) எனவும், கிரேக்கர்கள் தமிழகத்தோடு வணிகம் செய்ததற்கு அடையாளமாக கிரேக்க நாணயங்கள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன(R. Krisnamurthy.R. 1994coins from Greek islands, Rhotes and Crete found at Karur Tamil Nadu studies in South India coins vol. 4.p. 95) எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பவானி அவர்கள் கிறித்துவ சகாப்தத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே நறுமணப்பொருட்கள், சிறுத்தைப்புலி, தந்தம், நூலாடை, கருங்காலி, அரிசி முதலான பொருட்களை எகிப்தியர்கள் விரும்பி வாங்கினார்கள் எனவும் எகிப்தியர்களோடு தமிழர்கள் வணிகம் செய்ததற்குச் சான்றாக எகிப்தின் செங்கடல் துறைமுகங்களான குசிர் அல் குவாதிம், பெரனிகே ஆகிய இடங்களில் கி.மு. 1ஆம், கி.பி.1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன(சாதன், கணன், கொற்றப்பூமான், பனைஒறி என்கிற ‘தமிழி’ பொறிப்பு ஓடுகள்) எங்கிறார் அவர்(SOURCE: Iravatham Mahadevan, 2003, Early Tamil Epigraphy from the Earliest to the 6th Century A.D. Cre-A, Chennai p-16). மேலும் அவர், தமிழர்கள் கங்கையாறு கடலில் கலக்கிற துறைமுகத்தின் வழியாகக் கங்கையாற்றில் நுழைந்து பாடலிபுரம், காசி ஆகிய ஊர்களில் வணிகம் செய்துள்ளனர் என்பதை ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ’ என்கிற நற்றினைப் பாடல்(189:5) வெளிப்படுத்துகிறது என்பதையும் சீனா, தாய்லாந்து, சாவகம் போன்ற கிழக்கத்திய நாடுகளோடும் தமிழர்கள் மிக நீண்ட காலம் முதல் வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பதையும் தக்க சான்றுகளோடு கூறியுள்ளார்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, பக்: 25-36).

தமிழகத்தில் புதிய கற்காலத்துக்கு முந்தைய, கடைக் கற்காலக் கட்டத்துக்கு உரிய கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் இக்கடைக்கற்காலத் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் இவர்களிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் தமிழகத் தொல்பழங்காலம் குறித்து ஆய்வு செய்த ஆல்சின்அம்மையார் கருதுகிறார் (தமிழ்நாட்டு வரலாறு-தொல்பழங்காலம், பக்:181). அதாவது கி.மு. 4000 வாக்கிலேயே கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஆல்சின் அம்மையார் அவர்கள். அதன் பின்னரே உலோகக் காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது(தமிழக வரைவுகளும், குறியீடுகளும்-இராசு பவுன்துரை, பக்: 85-86). அப்பொழுதே கடல் வணிகமும் தொடங்கி விட்டது எனலாம்.

பரதவர்

பரதவர் ?

மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் ஒரு செல் தாவரம் எது என்றால் கிளாமிடாமோனாஸ் என்று சரியாகச் சொலும் . ஒரு செல் உயிரி எது எனறால் அமீபா என்றும் சரியாகச் சொல்லும் . கிளாமிடா மோனாஸ் அமீபா இரண்டும் உருவான இடம் நீர் ... அதாவது கடல் !.

கிளாமிடாமோனாஸ் அமீபா இந்த இரண்டும் பல செல் உயிர்களாகப் பல்கிப் பெருகி உருவான உயிர்களின் சிகரம்தான் மனித இனம். ஆக நீர்நிலைகளில் உருவான உயிர்களில் இருந்தே மனித இனம் வளர்ந்தது. ஆக ஆதி மனித இனம் என்பது ஏதோ ஒருவகையில் நீரோடு கடலோடு கடல் சார்ந்த தொழில்களோடு சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் என்கிறது அறிவியல் .

கடலும் கடல் சார்ந்த பகுதிகளையும் ஓட்டி வாழ்கிற மக்களுக்கு சுருக்கமாக சொல்லப் போனால் மீனவர்களைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லின் பெயர் பரதவர் என்பதாகும் . தமிழினத்தின் மூத்த குடி நாகர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் . (இவர்களும் கடலோடு வாழ்ந்தவர்கள்தான் )

பரதவர் என்ற இனம் பற்றி வரலாறு என்ன கூறுகிறது என்று பார்போமா ?

'பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்தான் .தமிழ் மூவேந்தர்களில் பழமையானவர்களாக கூறப்படும் இனம் பாண்டிய இனமே . பண்டைய என்ற சொல்லுக்கு பழைய என்று ஒரு பொருள் உண்டு . இந்த பண்டைய என்ற சொல்லே 'பாண்டிய ' என்ற சொல்லில் இருந்து உருவானதுதான் . இவர்களின் சின்னம் கடல் வாழ் உயிரான மீன் . (கடலில் இருந்து உயிர்கள் உருவாகி மனித இனம் வரை வளர்ந்தது என்ற அன்றைய தமிழர்களின் குறிப்பாக பாண்டியர்களின் அறிவியல் சிந்தனைதான் மீனை அவர்கள் கொடியில் அமைக்க வைத்தது )

இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது இந்த பரதவர்கள் போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி அரசு நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள்.

பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.(இந்த பரதனைதான் ராமாயணத்தில் ராமனின் தம்பியாக சித்'தி'ரித்து வட இந்திய சம்ஸ்கிருத அடையாளமாக மாற்றி விட்டார்கள்)

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாகஇவர்கள் பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், கங்கை நாட்டார், சிந்து நாட்டார் , சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு.(சிந்துச் சமவெளி எழுத்துக்களில் தமிழ் வார்த்தைகள் இருப்பது நிறுவப்பட்டதை ஞாபகப் படுத்திக் கொண்டால் கங்கை நாட்டார் சிந்து நாட்டார் போன்ற பெயர்களின் காரணம் விளங்கும் . இவர்களின் சிலருக்கும் பின்னால் ஆரிய நாட்டார் என்று பெயர் கொடுத்து குழப்பியது வட மொழி இலக்கியங்கள்)

துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் கடற்படை வீரர்களாக அரச படைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.'

இதுதான் பரதவர்களின் வரலாறு .

இந்த பரத(வ)ர் என்ற பெயர்தான் ராமாயண காப்பியம் வரை போனது .


நெத்திலி மீன் குருமா

தேவையானவை :

நெத்திலி : அரை கிலோ
எண்ணெய் : 4 மே.கரண்டி
கடுகு : அரை தே.கரண்டி
வெந்தயம் : அரை தே.கரண்டி
கறிவேப்பிலை : 2 கொத்து
ப.மிளகாய் கீறியது : 2
பெ.வெங்காயம் : 2
சி.வெங்காயம் : 2
தக்காளி : 3
மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி
மி.தூள் : 1 தே.கரண்டி
தேங்காய் துருவல் : 1 கப்
சோம்பு : 1 தே.கரண்டி


அரைக்க :

தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் வாசனை மறையும்வரை நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் நன்றாகக் கழுவிய நெத்திலி மீனைப் போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.

இது சாதத்திற்கோ, இட்லி, தோசைக்கோ சேர்த்து சாப்பிடலாம்.

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை

அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...'(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு சிறு திருத்தம். நாங்கில் மரம் என்பது 'சில்வர் ஓக்' மரம் என்று குறிப்பிட்டிருந்தேன். தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த திரு. மு. நவநீதகிருஷ்ணன் என்ற நண்பர் நாங்கில் மரம் என்பது ஆசினி அல்லது ஆயினி எனப்படும் பலா மரம் எனத் தெரிவித்தார். இம் மரம் கேரளத்தில் மிகுதியாக உள்ளது என்றும், எளிதில் தீப்பிடிக்காது என்றும், எடை குறைவானது என்றும் தெரிவித்தார். சில்வர் ஓக் மரம் எடை குறைந்ததே ஆயினும், ஆசினி மரம் போல் வலிமையானது அன்று என்றும், சில்வர் ஓக் மரம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆசினி மரம் படகு செய்வதற்கு உகந்தது என்றும் தண்ணீரில் நீண்ட காலம் கிடந்தாலும் சிதைவுறாது என்றும், சில்வர் ஓக் மரமோ எளிதில் சிதைந்துவிடக் கூடியது என்றும் தெரிவித்தார். நாங்கில் என்ற ஆசினி மரம் தற்போது கேரள மாநிலத்தில் அதிகமாக வளர்க்கவும், பயன்படுத்தவும் படுகிறது என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றதன் காரணம், நாங்கில் மரம் எனப்பட்ட ஆசினி மரம் அங்கு இயற்கையாகப் பெருமளவில் வளர்ந்தமையால் ஆகலாம்.

ஆசினி மரம் தண்ணீரில் நீண்ட காலம் இருந்தாலும் சிதைவுறாது என்று நண்பர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் யோசித்த போது ஒரு வரலாற்றுக் குறிப்பு நினைவுக்கு வந்தது. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார் தமது நாட்டில் ஓக் மரத்தை முதன்மையாகப் பயன்படுத்திக் கப்பல்கள் கட்டுவித்து வந்தனர். அக் கப்பல்கள் 10 ஆண்டுகள் கூடத் தாக்குப்பிடிக்காமல் கடல் நீரினால் பாதிப்படைந்து சிதைந்து வந்தன. அதன் விளைவாக, குஜராத் பகுதியிலுள்ள சூரத் நகரில், பாரம்பரியக் கப்பல் கட்டுமான நிபுணர்களான பார்ஸி இனத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழிற்கூட முதலாளிகளின் உதவியுடன் கப்பல் கட்டும் தளங்களில் கட்டுவிக்கப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாருக்காக சூரத் நகரில் வடிவமைத்துக் கட்டுவிக்கப்பட்ட ஒரு கப்பல் அமெரிக்க சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேலும் பல போர்களிலும் பங்கேற்று ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் பொருத்திப் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர்தான் அக் கப்பல் பழுதடைந்து பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டது. இந்த வரலாற்றுக் குறிப்பு பாரதிய வித்யா பவனால் வெளியிடப்பட்டுள்ள 'India - Its culture and its people' என்ற தலைப்புடைய இந்திய வரலாற்றுத் தொகுதிகளுள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் பற்றிய தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

தேக்கு, ஆசினி, மலை வேம்பு போன்ற மரங்கள் இத்தகைய கப்பல் கட்டும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. இந்திய நாட்டின் பாரம்பரியக் கப்பல் கட்டுமானத் தொழிற்கல்வி தச்சர்களில் ஒரு பிரிவினரால் பயிலப்பட்டு வந்துள்ளது. இத் தச்சர்களை 'மாந்தையர்' என 'ஐவர் ராஜாக்கள் கதை' போன்ற தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இச் சொல் மா வித்தையர் அல்லது மா விந்தையர் என்ற தொடரின் திரிபாகத் தோன்றுகிறது. இந்தியர்களின் கப்பல் கட்டும் வித்தை பற்றிக் கி.பி. 13ஆம் நூற்றாண்டைய வெனிஸ் பயணியான மார்கோ போலோ மிகவும் புகழ்ந்துள்ளார். சுமத்ரா நாட்டின் பாரோஸ் துறைமுகத்தில் உள்ள கி.பி. 1088ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் 'மாவேத்துகள்' (மகாவித் என்பதன் திரிபு) என்று இக் கப்பல் கட்டும் தச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுவாக விஸ்வகர்ம சமூகத்தவரே பண்டைக் காலப் பொறியியல் நிபுணர்களாதலால், தமிழ் நிகண்டுகள் அவர்களை அறிவர், வித்யர் என்று குறிப்பிடுகின்றன. ஆசாரி என்ற சாதிப் பட்டப் பெயரும், வித்யை கற்பிக்கும் ஆசார்ய பதவி தொடர்பானதே. கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில் துறையில் இயந்திரமயமாதல் அறிமுகப்படுத்தப்பட்டதால் நம் நாட்டின் பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் ஆங்கிலேயரால் உறிஞ்சி சீரணிக்கப்பட்டன. நம் நாட்டுப் பாரம்பரியத் தொழில்நுட்ப வல்லுனர்கள் காலனி ஆதிக்கத்தாலும், கனரக இயந்திரங்களாலும் நசுக்கப்பட்டுச் சிதைந்து போயினர். இது பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரத் தொடர்புகளுக்குப் பெருமளவில் வழியின்றிச் செய்து விட்ட இந்திய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு நம் நாட்டின் தொழில்நுட்ப விஞ்ஞானச் சூழலின் பின் தங்கிய நிலைமைக்கு முதன்மையான ஒரு காரணமே என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்தியச் சமூக அமைப்பும், பாரம்பரியக் கல்வி முறையும் ஒட்டு மொத்த அநீதியின் வடிவம் என்ற தவறான கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தத் தவறான கருத்தினை மாற்றுவதற்கு இத்தகைய ஆய்வு உதவக் கூடும்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் தமது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி நம்மைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தானைச் சுட்டுக் கொன்று, கர்நாடக மாநிலத்திலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அப்போது திப்புவின் படைக்கலக் கொட்டிலிலிருந்து இரண்டு ராக்கெட்டுகள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டன. அவை தற்போது லண்டன் அருகிலுள்ள உல்ரிச் நகரில் ராதண்டோர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பம் முதலானவை 1806ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தொடங்கின என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். அவ்வாறிருக்கும் போது, ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் இந்தியாவில் அப்போதே இருந்திருக்கிறார்கள் என்பதே மிகவும் வியக்கத்தக்க ஒரு செய்தியாகும். இந்த ஆய்வுக் களத்தில் ஈடிணையற்ற அறிஞர் என ஏற்றுக்கொள்ளப்படுள்ள அப்துல் கலாம் அவர்களே இந்த உண்மைக்குச் சான்றளித்துள்ளார். இது மட்டுமின்றி, வேறொரு வரலாற்றுக் குறிப்பும் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. கர்னல் வெல்ஷ் என்பவர் 1800-01ஆம் ஆண்டளவில் மருது சகோதரர்களுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவராவார். இவர் தமது Military Reminiscenses என்ற நூலில் மருது சகோதரர்கள் ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை நோக்கிச் செலுத்துவதற்காக ராக்கெட்டுகளைப் பொருத்திக் கொண்டிந்ததைத் தாம் கவனித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மருது சகோதரர்களுக்குத் திப்பு சுல்தானுடன் தொடர்பு இருந்தது என்பது உண்மையாயினும், திப்புவின் உதவியுடன்தான் ராக்கெட் தயாரித்தனரோ என்று நாம் ஐயுறத் தேவையில்லை. ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் அப்போது தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க வாய்ப்புண்டு. தூத்துக்குடியைச் சேர்ந்த பரதவர் சமூக சாதித் தலைவர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ் கோம்ஸ் என்பவர் மூலமே மருது சகோதரர்களுக்கு வெடி மருந்துகள் கிடைத்து வந்தன என்றும், திருநெல்வேலியைச் சேர்ந்த நாகராஜ மணியக்காரர் என்பவரும் ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவரும் தூத்துக்குடி பரதவர் சாதித் தலைவரைச் சந்தித்துச் சதி ஆலோசனையில் ஈடுபட்டனர் என்றும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஆவணங்கள் தற்போது தமிழ்நாடு அரசின் வரலாற்றாய்வு மற்றும் ஆவணக் காப்பகத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேற்குறித்த பரதவர் சாதித் தலைவரைப் பற்றிய சில கள ஆய்வுகளை மேற்கொண்டவன் என்ற வகையில் ஓரிரு ஊகங்களை என்னால் குறிப்பிட முடியும். தூத்துக்குடி நகரில் மாந்தையர்கள் எனப்பட்ட கப்பல் கட்டும் தச்சர்கள் பெருமளவில் இருந்துள்ளனர். தற்போது கூட, படகுகள் செய்யும் தச்சர்களுக்கான சங்கம் தூத்துக்குடியில் உள்ளது. இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் துணையுடனும், பல்வேறு ரசாயனங்களைத் தயாரிக்கின்ற அறிவுடைய (நாவிதர் குலத்தவராகக் கருதப்படுகிற) மருத்துவர் குலத்தவரின் துணையுடனும், கோயில் திருவிழாக்களில் வாண வேடிக்கை நிகழ்த்தும் வாணக்காரர்கள், கர்ப்பூரச் செட்டிகள் போன்றவர் துணையுடனும் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கவும், செலுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. கர்ப்பூரம் என்பது வெடி மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்போது, அதன் எரிதிறன் அதிகரிக்கும் என்பதால் கர்ப்பூரம் மிக உயர்ந்த விலையுடைய அரும் பொருளாக மதிக்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளுள் சுமத்ராவிலுள்ள பாரோஸ், ·பன்சூர் போன்றவை கர்ப்பூரம் அதிகமாகக் கிடைத்த இடங்களாகும். ·பன்சூர் கர்ப்பூரம் எடைக்கு எடை தங்கத்திற்குச் சமமாக மதிப்பிடப்பட்டு விற்கப்பட்டதாக மார்கோ போலோ குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வாறோசு சூடன் (பாரோஸ் நகரக் கர்ப்பூரம்) என்பது முதன்மையான ஒரு இறக்குமதிப் பொருளாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரால் (சிலம்பு. 14:109க்கான உரை, பக்கம் 375, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. பதிப்பு, 1978) குறிப்பிடப்படுகிறது. கர்ப்பூரச் செட்டிகள் என்ற பிரிவினர் துறைமுக நகரங்களில் அதிகமான அளவில் குடியேற்றப்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் ஆவர். இவர்களிடையே வெடிரங்கச் செட்டியார் போன்ற பட்டப் பெயர்களும் வழங்கி வந்துள்ளன. வெடியுப்பு சீன நாட்டிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெடியுப்பு போன்றவற்றில் வாணிகம் செய்கின்ற அதிகாரம் எளிதில் பிறருக்குக் கிட்டிவிடாத வண்ணம் அரசர்களால் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. வெடிமருந்து தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவும் இவ்வாறே பாதுகாக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு போன்ற இடங்களிலும், ஆழ்வார் கற்குளம் என வழங்கப்படுகின்ற ஆழ்வார் கற்களத்திலும், ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள கடம்பூர்ப் பறம்பிலும் சீனிக்கல் எனப்படும் வெங்கச்சங்கற்கள் (Quartzite) அதிகமாகக் காணப்படுகின்றன. இக் கற்கள் உலையில் சூடு அதிகரிப்பதற்கும், நெடுநேரம் சூடு தணியாமல் இருப்பதற்கும் உதவக் கூடியவையாதலால், இவை தொல்பழங்காலம் முதற்கொண்டு இரும்பு உருக்குதல் போன்றவற்றுக்காகக் கொல்லர் உலைக் களங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இத்தகைய சீனிக்கற்கள் கிடைத்த இடங்கள் கற்களங்கள் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் குறித்த பழம் பாடல் நூல் வெடிமருந்தினைச் சீனி என்று குறிப்பிடுகிறது (பக்கம் 83-88, கட்டபொம்மன் வரலாறு அல்லது சண்டைக் கும்மி, அரசினர் கீழ்த் திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பு, சென்னை, 1960). வீர பாண்டிய கட்டபொம்மன் காலத்தில் (1790-99), கட்டபொம்மன் படையினராலும் வெடி மருந்து தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்துப்பு போன்ற வெடியுப்புகளுடன் சீனிக்கற்களும் அரைத்துப் பொடித்துக் கலந்து பயன்படுத்தப்பட்டன. சீனிக்கல் சூட்டினை மிகுவிப்பது மட்டுமின்றி வெடிகுண்டு வெடித்துச் சிதறும் போது கண்ணாடித் தூள் ஏற்படுத்துவது போன்ற பாதிப்பை விளைவிக்கக் கூடியது என்பதாலும் இவ்வாறு கலக்கப்பட்டது. அதற்கு, இப் பகுதியில் எளிதில் கிடைத்த சீனிக்கற்கள் மிகவும் பயன்பட்டன. பாஞ்சாலங்குறிச்சி அருகில் கவர்னகிரிப் பகுதியில் வெடிமருந்துக் கிடங்கு எனக் குறிப்பிடப்படும் இடிபாடான செங்கல் கட்டுமானம் ஒன்றுள்ளது. இது வீரன் சுந்தரலிங்கம் தற்கொலை செய்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுத்த வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடங்கு எனச் சிலரால் கருதப்படுகிறது. (தளபதி சுந்தரலிங்கம், ஆ. மோகன்தாசு, விடுதலை வேள்வியில் தமிழகம், பாகம் - 1.) ஆனால், அவ்வாறிருந்திருக்க வாய்ப்பில்லை. இது புரட்சி அணியைச் சேர்ந்த பாளையக்காரர் படையினரின் வெடிமருந்துக் கிடங்காகவே இருந்திருக்க வேண்டும். (கவர்னகிரி என்ற பெயரே கவுனிகிரி என்ற பெயரின் திரிபாக இருக்கக்கூடும். கவுனி என்ற சொல் கட்டபொம்மன் குறித்த பழம்பாடலில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு கோட்டை வாயில் என்றும், ஒரு வகைப் பாஷாணம் என்றும் பொருளுண்டு. கவுனிகிரி என்ற பெயரே 'வெடிமருந்துக் கூடம்' என்று பொருள் படக்கூடும். இது மேலும் ஆராய்வதற்குரியது.) கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின், ஆங்கிலேயத் தளபதி பானர்மனால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று அந்த அறிவிப்பு செப்புப் பட்டயங்களில் பொறிக்கப்பட்டு எட்டயபுரம் சிவன் கோயில் வாயில் முதலிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்குப் படும்படி சுவரில் பதிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், சேவகர், சேர்வைக்காரர் முதலான பாளையக்காரப் படை வீரர்கள் வெடிகுண்டு முதலிய ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது நம் கருத்துக்கு ஓர் ஆதாரமாக அமைகிறது.[1]

கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு, ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியையே அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்தனர். அப்படி ஓர் ஊர் இருந்த சுவடே இல்லா வண்ணம், நில வருவாய்க் குறிப்பேடுகளிலிருந்து அவ்வூர்ப் பெயர் நீக்கப்பட்டது. கட்டபொம்மனின் ஆளுகையிலிருந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிர்வாக அதிகாரம் எட்டயபுரம் எட்டப்ப நாயக்கர், மேல்மாந்தை விஜய குஞ்சைய நாயக்கர், கடம்பூரிலிருந்த மறவர் குலத் தலைவர் ஆகிய ஆங்கிலேய ஆதரவாளர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு வெடி மருந்து தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய சீனிக்கற்கள் வழங்கும் பொறுப்பு கடம்பூரிலிருந்த மறவர் குலத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அவருக்கு 'சீனி வேளாளர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. சீனிக்கற்களை விளைவிப்பவர் என்பது போலப் பொருள்படும் ஒரு கெளரவப் பட்டம் இதுவாகும்.

துறைமுக நகராகிய தூத்துக்குடியில் பரதவர் சமுகத்தவருக்குச் சமமாக அதிக எண்ணிக்கையில் வாழும் மற்றொரு சமூகத்தவரான சான்றோர் குலத்தவர் (நாடார்கள்) தீப்பெட்டி, பட்டாசு போன்றவை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்ட முன்னோடியான ஒரு சமூகத்தவராவர். 1870ஆம் ஆண்டளவில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை அடுத்த உமரிக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நாடார் என்பவர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கப்பல் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். சென்னைப் பட்டினத்தில் இருந்த லெவிச்சி துரை, பவிச்சி துரை முதலிய பரங்கித் துரைமார்கள் இவரிடமிருந்து சரக்குகளை விலை பேசி வாங்கினர் என்றும், சாதிலிங்கக் கட்டி, கட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கெளரிப் பாஷாணம், பச்சைக் கர்ப்பூரம், பவளக் கர்ப்பூரம், ஈயச் செந்தூரம், இந்துப்பு, வெடியுப்பு, பொரி காரம், நவச்சாரம், சீனக் காரம் முதலான பல சரக்குகள் விற்கப்பட்டன என்றும் கப்பல் பாட்டு (பக்கம் 61-75, உமரிமாநகர் தல வரலாறு, ஆசிரியர்: காசிப்பழம் என்கிற சின்னாடார், உமரிமாநகர் அஞ்சல், ஆத்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம், 1987) என்ற ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது. இந்தக் கப்பல் வாணிகம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்ததாகப் பாடல் மூலம் தெரிய வந்தால் கூட, இது ஒரு பழம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே என நாம் ஊகிப்பது தவறாகாது. மேலும், இப்பகுதியிலுள்ள சான்றோர் சமூகத்தவர் கட்டபொம்மனுடன் விரோதம் பாராட்டினர் என்பது உண்மையே ஆயினும், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்கள் இணைந்து உருவாக்கிய புரட்சி அணிப் படைகளில் சான்றோர் சமூகத்தவரும் பெருமளவில் கலந்து கொண்டனர் என முனைவர் ராஜய்யன் (South Indian Rebellian, K. Rajayyan, Page 201, Rao and Raghavan Publishers, Mysore-4, 1971) எழுதியுள்ளார்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கணிக்கப்படும் போகர், சித்த மருத்துவத் துறையிலும் பெரும் பங்கு நிகழ்த்தியுள்ள ஒரு சித்தராகக் கருதப்படுகிறார். பழனி மலையில் இவர் அடக்கமானதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இவர் விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்தவர்[2]என்றும், ககன குளிகை (ஆகாய மார்க்கம்)யின் மூலம் சீன நாட்டுக்குச் சென்று வந்தவர் என்றும் கதைகள் வழங்குகின்றன. இக் கதைகளுள் பல மிகைப்படுத்தப்படவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆயினும், போகருடைய ஆய்வுக் களம் என்பது வானூர்தி, ராக்கெட் செலுத்துதல் போன்ற தொழில்நுட்பக் களங்களாக இருந்திருக்கக் கூடும். கட்டுத் திட்டமான ஆய்வு நெறிமுறையுடன் இந்த விஷயத்தை அணுகினால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.



அடிக்குறிப்புகள்:



[1] இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல இடங்களில் என்னால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பானர்மனின் அறிவிப்புப் பொறிக்கப்பட்டுள்ள செப்பேடு எட்டயபுரம் சிவன் கோயில் வாயில் தூண் ஒன்றில் பொருத்தப்பட்ட நிலையில் தற்போதும் உள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள இச் செப்பேட்டில் பானர்மன் என்ற பெயர் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. இது தொடர்பான ஒரு சுவையான செய்தி அறிந்துகொள்ளத் தக்கது. பாஞ்சாலங்குறிச்சியை அடுத்த வெள்ளாரம் என்ற ஊரில் எட்டயபுரம் ஜமீந்தாருக்குச் சொந்தமான மாளிகை ஒன்று இடிபாடான நிலையில் காட்சியளிக்கிறது. இம் மாளிகைக்கு அருகில் தரையில் பதித்து நிறுத்தப்பட்டுள்ள பலகைக் கல் ஒன்றில் கொல்லம் 1074ஆம் ஆண்டுக்குரிய (கி.பி. 1899) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் ஜமீனின் காவல்காரரான ஜகவீரெட்டு மணியக்காரன் மகன் உமையண்ண மணியக்காரன் என்பவர் சாலிக்குளம் சிறைக்காடு காவலுக்குப் போயிருந்தபோது, வெடிகுண்டினால் இறந்து சிவலோக பதவி அடைந்தார் என்று அக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு தொடர்பாகக் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்றுண்டு. இதற்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாலிக்குளம் சிறைக்காடு பகுதியில் கட்டபொம்மன் ஓய்வெடுக்கச் சென்றிருந்தபோதுதான் ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படை நடத்தி வந்தனர். கட்டபொம்மன் முதலான புரட்சியணி வீரர்களைத் தூக்கிலிட்டு, புரட்சியணியின் படைவீரர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்து, எட்டயபுரம் கோயில் வாயிலில் செப்புப்பட்டயத்தில் பொறித்துப்பதித்து வைத்திருக்கும் நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் எட்டயபுரம் ஜமீன்தார் மாளிகை முன்பு எட்டயபுரம் மணியக்காரன் வெடிகுண்டினால் இறந்த செய்தியையையும் கல்லில் பொறித்து நிறுத்தி வைக்க வேண்டிய அவலம் நேர்ந்ததன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. புரட்சி அணியினரின் வன்மம் தலைமுறைகள் கடந்தும் நீடித்து நின்றிருக்கிறது போலும். இவ்வாறு சிதறல்களாகக் கிடைக்கும் செய்திகள் சேகரித்துத் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால்தான் இந்தியச் சுதந்திரப் போராட்டம் குறித்த முழுமையான பரிமாணம் கிட்டும்.



[2] கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் விளைவாக விஸ்வகர்ம சமூகத்தவர் பாதிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் தொழிலாளர் சமூகத்தவராகிய விஸ்வகர்ம சமூகத்தவரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த பிரக்ஞை அச் சமூகத்தவர் மத்தியில் நிலவிற்றா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. கி.பி. 1887ஆம் ஆண்டில் காங்கிரஸ் இயக்கத்தின் மகாசபைக் கூட்டத்தில், கும்பகோணம் கைவினைஞர் சங்கத்தின் சார்பில் காங்கிரஸ் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இரும்பு கொல்லுத் தொழில் பட்டறை நடத்தியவரும், தஞ்சை நகராட்சி மன்ற உறுப்பினருமான மூக்கன் ஆசாரி என்பவர் இந்தியர்கள் தொழில்நுட்பக் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றித் தமிழில் உரை நிகழ்த்தினார் என்று தெரிகிறது. ("மூக்கன் ஆசாரி", க.நா. பாலன், விடுதலை வேள்வியில் தமிழகம், பாகம் - 1, தொகுப்பாசிரியர்: த. ஸ்டாலின் குணசேகரன், நிவேதிதா பதிப்பகம், ஈரோடு - 4.) சுப்பிரமணிய பாரதியார் மூக்கன் ஆசாரியைப் பற்றிப் பாராட்டி எழுதியுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தியச் சிந்தனை மரபின் தலைசிறந்த பிரதிநிதியாகக் கருதத்தக்க சுப்பிரமணிய பாரதியார் "சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்" என்று பாடியுள்ளார். சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் என்ற புதுமையான சொல்லாட்சியே ஆழமானது. நகர சுத்தித் தொழிலாளர்களாக உள்ள தாழ்த்தப்பட்ட குலத்தவர்கள் மேற்கொண்டுள்ள தொழில் தொடர்பான அறிவும் பயிற்சியும் ஒரு சாஸ்திரமே. அவர்களும் சாஸ்திரிகளே என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். உலகத் தொழிலனைத்தும் உவந்து கற்றுக் கொண்டால்தான், இந்தியச் சமூகம் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற இயலும் என்ற கருத்துடைய பாரதியார் தொழிலாளர் சமூகத்தின் பிரதிநிதியான மூக்கன் ஆசாரியின் முழக்கத்தை உணர்ந்து பாராட்டியுள்ளார் என்பதில் வியப்பில்லை.
- எஸ். இராமச்சந்திரன்

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் ஞாழற் பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள ஞாழற் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.

 141.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பசலை செய்தன பனிபடு துறையே.

142.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே.

143.தோழி கூற்று

எக்கர் ஞாழல் புள்இமிழ் அகன்துறை
இனிய செய்து நின்றுபின்
முனிவு செய்தஇவள் தடமென் தோளே.

144.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குருகு உறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.

145.தோழிகூற்று

எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே.

146.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழ்இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்றஎன் மாமைக் கவினே.

147.தோழிகூற்று

எக்கர் ஞாழல் மலரில் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே.

148.தோழிகூற்று

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது கமழும் துறைவனை
நீஇனிது முயங்குமதி காத லோயே.
149.தோழிகூற்று    

எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்துஅகறல் வல்லா தீமோ.

150.தலைவிகூற்று

எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்குந் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்


அகநானூறு - மணிமிடை பவளம் 


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்இருங்கழி செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள் 

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,

இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே

Paravars (Bharathas) of Ceylon

From the 12th to the early 15th century ,the seafaring Paravar of the fishing coast of South India were recruited by the Sri lankan Coastal kings to strengthen their armies. Mainly settled down the coastal areas (negombo ) and latter Portuguese times more Paravar came and settled ( Francis Xavier)


The last group of Paravar from south India came and settled in the British times.The cotton boom in 1850-60 more Paravar migration came from South india. mainly from Paravar oor (towns) Alanthalai ,Manapad, Punniyakayal, Tutucorin, Vembar, Vepar and Veerapandiapatnam from south india settled in sri lanka.


They had the Portuguese connection so it made them comfortable to settle in sri lanka.
Most popular names 


Pereiras , the De Mels ,the Victorias ,the Roches, the Paivas, the Mirandas .Moraeses , the lobos, The Gomez, The Croos, The Soris

Hope we all know X. I Pereira postal Stamp.. he was a politician .


Santiago Aiyya Thamby de Mel / S Miguel Fernando /J L Carwallio`s some of the old business people who were involved in Clothing .


Dry fish/ arrack/ Land sale/imports and exports/ Kerosene (risisng sun)/Hotels were popular biz..


Lots of contribution to our country, now they are Sri lankans .


in 2001 The Paravar have sought a separate identity as Barathas



Thanks: /www.lankanewspapers.com

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் பாணற்குரைத்தப் பத்து பாடல்கள் தொகுப்பு


நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள பாணற்கு உரைத்த பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


131.தலைவி கூற்று

நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்என் கௌவை எழாஅக் காலே.

132.தலைவி கூற்று

அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளுமாறே.

133.தலைவிகூற்று

யான் எவன்செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றெனஎன் புரிவளைத் தோளே.

134.தலைவி கூற்று

காண்மதி பாண இருங்கழிப்...
பாய்பரி நெடுந்தேர் கொண்கனோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே.

135.தலைவி கூற்று

பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தலங் கண்ணியை நேர்தல்நாம் பெறினே.

136.தலைவி கூற்று

நாண்இலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்லுகுப் போயே.

137.தலைவி கூற்று

நின்னொன்று வினவுவல் பாண! நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம்நலம் பெறுபவோ மற்றே.

138.தலைவி கூற்று

பண்பு இலை மன்ற பாண இவ்வூர்
அன்புஇல கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.


139.தலைவி கூற்று

அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்அல மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே.

140.தலைவி கூற்று

காண்மதி பாணநீ உரைத்தற்கு உரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.


கடல் சார் தொழில் முனைவோர்


கடலும் கடல்சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் நிலம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பரதவ மக்கள் கடலில் கலம் செலுத்தி மீன் பிடித்தலைத் தம் தொழிலாகக் கொண்டவர். கடல்படு பொருட்களுள் மீனும், உப்பும் பரதவ மகளிர் தொழில்முனைவோருக்கு முக்கிய வணிகப் பொருட்களாயின.

மீன் பிடித்தலும் விற்றலும் 

பரதவர் பிடித்து வரும் மீன்களைப் பரதவகுலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச் சென்று விற்றுவிட்டு அதற்கு ஈடாகத் தமக்குத் தேவையான பிற பொருட்களைப் பெற்று வந்தனர். இதனை, 


ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ

விழவு அயர் மறுகின் விலையெனப் பருகும் (அகம்.320:1-4)

என்பதில் அறியலாம். பாண்மகள், நள்ளிரவில் சென்று பிடித்துத் தன் தமையன்மார் விடியலில் கொணர்ந்த திரண்ட கோடுகளை உடைய வாளை மீன்களுக்கு ஈடாக, நெடிய கொடிகள் பறக்கும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லை வாங்க மறுத்துக் கழங்கு போன்ற பெரிய முத்துகளையும் அணிகலன்களையும் பெற்று வந்ததையும்(அகம்.126:7-12), வரால் மீன் கொண்டு வந்த வட்டி நிறைய இல்லக்கிழந்திகளிடம் பழைய நெல்லையும் (ஐங்.48:11-3), அரிகாலில் விதைத்துப் பெறும் பயறினையும் (ஐங்.47:1-3) பெற்று வந்ததையும் அறியமுடிகிறது.


இவற்றோடு, பரத ஆண்கள் பிடித்து வரும் மீன்களை வணிகப்படுத்தியதோடு, பெண்களே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவருகிறது. கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீன்களைப் பிடித்த பாணர் மகளை, 

நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்

தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல் (216:1,2)

என்று காட்டுகிறது அகநானூறு.

உணங்கல் மீன் உற்பத்தி

பரதவ ஆண்கள் பிடித்து வந்த மீன்களுள் விற்றது போக எஞ்சியவற்றையும், விற்பனைக்குரிய காலங்கடந்து பிடித்தவற்றையும் பரதவ மகளிர் உப்பிட்டு உலர வைத்து உணங்கல் மீன் தயாரிப்பர். வருவாயைப் பெருக்கிய தொழிலுள் இதுவும் குறிப்பிடத்தக்கது. இத்தொழிலையும், தொழில்நுட்பத்தையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கடற்கரை மணலில் மீன்கள் உலர்த்தப்பட்டிருந்தன(அகம்.300:1-2). பரதவர் பிடித்து வந்த மீன்களும் இருங்கழியில் முகந்து வந்த இறால்களும் நிலவொளி போலும் எக்கர் மணலில் நன்றாக உலர்ந்து, பாக்கம் எங்கிலும் புலால் நாற்றம் பரவி வீசியது(குறு.320:1-4). பரதவ மகளிர் நிணம் மிகுந்த பெரிய மீன்களைத் துண்டங்களாகத் துணித்து உப்பிட்டு, வெண்மணல் பரப்பில் அவற்றைப் பரப்பி வெயிலில் உலர்த்தி, பறவைகள் அவற்றைக் கவராமல் காவல் காத்தனர். இதனை,

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண் (நற்.63:1-2)
என்பதிலும்,

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் (நற்.45:6-7)


என்பதிலும் அறியலாம்.

உப்பு வணிகம்

எந்தத் திணையைச் சார்ந்த மக்களாயினும் அவர்களின் அன்றாடத் தேவைகளுள் முதன்மையானது உப்பு. அதனால், நெய்தல் நில மகளிர் உப்பு வணிகத்தில் சிறப்புடன் ஈடுபட்டனர். உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உவர் நிலத்தில் விளைவித்த உப்பினை வண்டிகளில் ஏற்றிச் சென்று மற்ற இடங்களில் வாழும் மக்களிடத்தே விற்பர். உமணர்கள் தங்கள் குடும்பத்தோடு கூட்டங்கூட்டமாக உப்பு விற்கச் சென்றனர். உப்பு வண்டிகளை உமணப் பெண்களே ஓட்டிச் சென்றனர். ஊருக்குள் சென்றதும் உப்பு விலை கூறி விற்பர். உப்பிற்கு ஈடாக பிற பொருட்கள் மாறு கொள்ளப்பட்டன (பெரும்பாண்.56-65; நற்.183; அகம்.60:4; 140:7-8; 390:8-9; குறு.269:5-6; பெரும்பாண்.164-165; மலைபடு.413; பட்டினப்.28-30). உப்பிற்கு ஈடாக நெல்லைக் கோரும் உமணப் பெண்களை,

உமணர் காதல் மடமகள்
சேரி விலைமாறு கூறலின் (அக.140:5-8)
என்பதிலும், 


நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் (அக.390:8-9)

என்பதிலும் காணலாம்.

நன்றி: anichchem.blogspot.in

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் கிழவற்குரைத்தப் பத்து பாடல்கள் தொகுப்பு


நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு,மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள கிழவற்குரைத்தப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


121. பரத்தை கூற்று;தோழி கூற்றுமாம்

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தென்திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.

122.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே.

123.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்என் பெருங்கடல் திரைபாய் போளே.

124.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டல் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.


125.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லவோ கொண்கநின் கேளே
தெண்திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

126.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடல் பெருந்திரை மூழ்கு வோளே.

127.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கிநன் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.

128.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே!

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com