பெரிய புராணத்தில் நெய்தல் நில நிலவியல் கூறுகள்
தொண்டை நாட்டில் நெய்தல் நிலவளமும் உண்டு என்கிறார் சேக்கிழார். நெய்தல் நிலத்தின் இயல்பையும், மீன்பிடிக்கும் வகையினையும் சேக்கிழார் சித்தரித்துக் காட்டுகிறார். பரதவர் வாழும் கடற்கரை சூழ்ந்த இடங்களில் கைதையும், புன்னையும் பூத்து நிறைந்திருக்கும். பரதவர்கள் கடலில் மீன் பிடித்து குவியல்களாக குவித்து வைத்திருப்பர் என்றும், பரதவப் பெண்கள் கடலில் விளையும் முத்துகளையும், பவளங்களையும் முல்லைத்திணை மக்களுக்குக் கொடுத்து அதற்கு ஈடாக திணையைப் பெறுவார் என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
மேலும் நெய்தல் நிலத்தன்மையினையும், மக்கள் வாழ்க்கையினையும் அதிபத்த நாயனார் வரலாற்றில் சேக்கிழார் விரிவாக பேசுகிறார்.
நாகப்பட்டின கடற்கரையோரத்தில் பரதவர்கள் நிறைந்த ‘நுளைப்பாடி’ அமைந்திருந்தது. இது ‘நம்பியான் குப்பம்’ என்று வழங்கப் பெறுகின்றது. ‘குப்பம்’ என்பது கடற்கரையிலுள்ள பரதவர் சேரிக்கு வழங்கும் பெயராகும்.