Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பாண்டிய வம்சம் காத்த பரதவன்




பாண்டிய அரச வம்சம் இவ்வுலகில் நிலைநிற்க 
தன் பிள்ளையை பலி கொடுத்த பரதவன்..!

(மறைக்கப்பட்ட வரலாறு)


பாண்டியர்க்கு ஆகாத நாளில் பிள்ளை பிறக்க, அப்பிள்ளை இருந்தால் ஆறு ஆண்டுகள் மழை பெய்யாது பிராணிகள் நாசமாகுமென்றும், அப்பிள்ளையைக் கடலிலே போடுகிறது தான் தன்மமென்றும் சோதிடர்கள் சொல்ல பாண்டியர், தேவேந்திர வல்லவராயன் என்னும் ஒரு பரதவனை அழைத்து...

"நீ என் பிள்ளையை கடலில் போட்டு வருவாய்!"
என்று கூற. அதற்குத் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்...

"நாம் பாண்டியரின் பிள்ளையை கொலை செய்வது சரியல்ல" வென்று கருதி பாண்டியரின் பிள்ளையை தன் மனைவி கையில் கொடுத்துவிட்டு தன் பிள்ளையை கடலிலே போட்டான்.

சிலகாலம் சென்ற பிறகு பாண்டியர்க்கு ராஜயோகம் பிறந்த காலத்தில் தான் பாதுகாத்து வளர்த்த பாண்டியரின் ஓரே பிள்ளையை, அப்பாண்டியரிடமே கொண்டு சென்று காட்டி, பாண்டியரின் அப்பிள்ளைக்கு பட்டாபிஷேகம் செய்தான் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்.

மேற்கூறிய இத்தகவலானது கி.பி. 1300 களில் எழுதப்பட்ட காங்கேயனின் வலைவீசி சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







மஸ்கெட்களும் பரவர்களும்


"மஸ்கெட்" என்பது ஐரோப்பிய காலாட்படை வீரர்களால் போர் சமயத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் அதிநவீன துப்பாக்கி வகையில் ஒன்று. இது பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவர்களால் உருவாக்கப்பட்டு, ஐரோப்பியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் இதனை அக்கால தமிழகத்தில் பரவர்கள் வைத்திருந்தனர் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
 
அது சம்பந்தப்பட்ட சான்று ஒன்றை நான் இங்கே பதிவிட விரும்புகிறேன்.. "ஆண்ட்ரே பால்மீரோ" என்ற போர்சுகீசிய பயனி கோவாவில் இருந்து பதினான்கு நபர்களுடன் கப்பலில் பரவர் நாட்டுக்கு வந்திருந்தார். இதை கேள்வியுற்ற பரவர்களோ, அவர்களுக்கு எதிரே சென்று தாங்கள் வைத்திருந்த மஸ்கெட் துப்பாக்கிகளை வான் நோக்கி சுட்டு அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
 
இப்படி தங்களது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த மஸ்கெட் மூலமாகவே பரவர்கள் வரவேற்பு அளித்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது.

தகவல்: ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரான லியான் மேத்தியூ என்பவர் மேற்சொன்ன போர்சுகீசிய பயணி ஆண்ட்ரே பால்மீரோவின் கடிதங்களையும், குறிப்புகளையும் தொகுத்து தமது நூலில் பதிவு செய்தவைகளாகும்.

____________________________________

1,The Visitor: André Palmeiro and the Jesuits in Asia
By Liam Matthew Brockey,Part 1,Inside the empire, 4.In the Footsteps of Apostle, pg:131.



செண்பகராமன் காலிங்கராயன்



பரதவர் கோன் செண்பகராமன் காலிங்கராயனின் வரலாற்றில் மறைக்கப்பட்ட சரித்திரம்:

செண்பகராமன் காலிங்கராயன் என்னும் அரசன், பதினேழாம் நூற்றாண்டில், கன்னியாகுமரிக்கு மேற்கே அமைந்துள்ள கோவளத்தை தலைநகராகக் கொண்டு நாஞ்சில் நாட்டை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

இவரை பாட்டுடை நாயகனாக கொண்டு பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான "செண்பகராமன் பள்ளு" இவரை பற்றி பல அறிய செய்திகளை நமக்கு தருகிறது. அவற்றுள் சிலவற்றை நாம் இப்பதிவில் காண்போம்....

செண்பகராமன் காலிங்கராயன் கோவளம் நகரை ஆட்சி புரிந்த பெரியகுட்டி என்னும் அரசனின் மகன் ஆவார். செண்பகராமனை "குருகுலபரதசாதியில் அவதரித்தவன்" என்று இந்நூல் குறிப்பிடுவதன் மூலம் இவர் பரதவர் சமூகத்தில் குருகுல வம்சத்தை சேர்ந்தவர் என்பது தெளிவு.

"தேடு செண்பகராமன் புகழ்சொல்லும் செம்மை சேர்நாஞ்சி நாடெங்கள் நாடே", "எதிரிகளும் கைகூப்பி நின்று வணங்கும் செண்பகராமனின் நாடு" என்ற பாடல்களின் மூலம் நாஞ்சிவள நாட்டில் செண்பகராமன் மிகவும் செல்வாக்குமிக்க அரசனாக விளங்கினார் என்பதனை அறியலாம்.

செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர்கள்:-

செண்பகராமனின் முன்னோர்கள் சேது நாட்டின் மங்கைபதியை ஆட்சி செய்து, பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஆட்சியை இழந்து மலையாள தேசத்து நாஞ்சில்நாட்டின் கோவளத்தில் வந்து குடியேறினர் என்ற செய்தியை இந்நூல் தருகிறது. இதன் மூலத்தை ஆதாரங்களுடன் ஆராய்வதே சிறந்தது.

பரதவர்களுக்கு ஆதியரசன் என்னும் முறையான அரச பரம்பரை இருந்தது என்பதனையும், இவர்கள் சேது நாட்டின், மங்கைபதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்" என்று பதினான்காம் நூற்றாண்டில், காங்கேயனின் வலைவீசி புராணம் ஓலைச்சுவடி, பக்கம் எண். 19ல் குறிப்பிடுகிறது.

மேலும் வலைவீசி புராணம் ஓலைச்சுவடியில் காங்கேயன்......
சேது நாட்டில் அமைந்துள்ள மங்கைபதியை (திருஉத்திரகோசமங்கை)  பரதவர்கோன்நாடு என்று பக்கம் எண். 18ல் குறிப்பிடுகிறார்.  இதே தகவல்களை ஆங்கிலேய அரசு அதிகாரிகளான சைமன் காசி, ஜே. எச். நெல்சன், எட்கர் தர்ஸ்டன், ஹக் நெவில் போன்றோரும் தங்கள் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

இதன்மூலம் பரதவகுல அரசர்களே ஆதிகாலம் தொட்டு மங்கைபதியில் ஆட்சி புரிந்து வந்தனர் என்பது உறுதி. விஜயநகர பிரதிநியாக மதுரையில் ஆட்சிக்கு வந்த விசுவநாத நாயக்கர்(1529-63) காலத்தில் செய்துங்கன் என்பவர் மங்கைபதியில் ஆட்சியாளராக இருந்ததை அழகன் பெருமாள் ஓலைச்சுவடி கதைப்பாடல் பக்கம் எண். 32ல் கூறுகிறது. மேலும் இவர் பாண்டியரின் ஆதரவாளர் என்ற விவரத்தையும் அச்சுவடி நமக்கு தருகிறது.

இந்த செய்துங்கன் காலத்திலோ அல்லது அவருக்கு பின் வந்தவர்களின் காலத்திலோ தான் மங்கைபதியை ஆண்ட பரதகுல ஆட்சியாளர்கள் அதாவது செண்பகராமனின் முன்னோர்கள் கோவளத்துக்கு வந்திருக்க வேண்டும். செண்பகராமனின் அரசகுல முன்னோர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மங்கைபதியை விட்டு கோவளத்துக்கு வரும்போது கூடவே பள்ளர்களையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு வந்தனர் என்பதனை, செண்பகராமன் பள்ளு பக்கம் எண். 53ல் கூறுகிறது.

அரசகுல சின்னங்கள்:-
செண்பகராமன் கடம்ப மாலை அணிந்தவரும், மயில் சின்னத்தை தமது கொடியில் கொண்டவரும் ஆவார்.

நாஞ்சில் நாட்டின் மீதான திருமலை நாயக்கரின் படையெடுப்பு:
செண்பகராமன் நாஞ்சில் நாட்டை ஆட்சி செய்துவரும் காலத்தில், வேணாட்டு அரசன் உன்னி கேரள வர்மன் தன்னரசு பெறகருதி மதுரை திருமலை நாயக்கருக்கு வரி கொடுப்பதை நிறுத்தி விட, திருமலை நாயக்கர்(1623-59) உன்னி கேரள வர்மனை அடக்கி வரிவசூல் செய்து வர, மதுரை வடுகர் படையுடன் 72 பாளையக்காரர்களையும் தனது தளவாய் "இராம அய்யன்" தலைமையில் கிபி1635 ஆம் வருடம் தெற்கே அனுப்பி வைக்கிறார். உன்னி கேரள வர்மனின் நாயர் சமூகத்து படை தளபதி "இரவி குட்டி பிள்ளை" தலைமையிலான வேணாட்டு படைகள் திருமலை நாயக்கரின் தளவாய் "இராம அய்யன்" தலைமையிலான மதுரை வடுகர் படைகளுடன் மோதியது.

முடிவில் "இரவி குட்டி பிள்ளை" போரில் கொல்லப்பட்டு வேணாட்டு படைகள் முழுவதும் தளவாய் இராம அய்யனால் தோற்கடிக்கபட்டன. இந்த வெற்றிக்கு பிறகு மதுரை வடுக படைகள் மேலும் முன்னேறி சென்று கோவளத்து அரசன் செண்பகராமனுடன் மோதினர். வடுகர்களுடனான இந்த சண்டைக்கு இடையில், தளவாய் "இராம அய்ய"னுடன் வந்திருந்த 72 பாளையக்காரர்களுள் ஒருவரான ஊற்றுமலை பாளையக்காரரின் மறவர் படை, செண்பகராமனுக்கு சொந்தமான பசுக்கள் சிலவற்றை கவர்ந்து சென்றனர்.

இதனை வடுகன் சண்டையில் தென்காசி-ஊற்றுமலை மறவர் நிரை சாய்த்த மாடும்" என்று செண்பகராமன் பள்ளு பக்கம் எண்.111ல் கூறுகிறது. முடிவில் செண்பகராமனின் தலைநகரான கோவளத்தை வடுக படையினரால் கைப்பற்ற முடியாமல் போனது.

இதன் காரணமாக செண்பகராமன்.....

"விரோதிகளும் வணங்கும் வீரக்கழலணிந்த கரிகாலனை போன்றவனும்", "பாய்ந்து செல்லும் குதிரை வீரர்களும் தொழுகின்றவனும்", "பகைவர்களை வெல்ல படையுடையவனும்'', "வாள்வித்தையில் வீமனைப் போன்றவனும்"
என்று புகழப்படுகிறார். இருப்பினும் நாஞ்சில் நாட்டில் சிலபகுதிகள் வடுகர் வசம் சென்றது. திருமலை நாயக்கரின் சார்பில் அவருடைய வடுகர் தளபதிகள் அவற்றை ஆட்சி செய்ய தொடங்கினர்.

செண்பகராமனின் தலைநகரான கோவளத்துக்கு மூன்று கிலோமீட்டர் வடக்கில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஊரின் வட எல்லையில் அமைந்துள்ள கிராமம் வரை வடுகர்களின் ஆட்சியின் கீழ் சென்றது, இந்த கிராமம் இன்றும் வடுகர் படை அங்கு தங்கியிருந்தற்கு சான்றாக "வடுகன் பற்று" என்றே தான் அழைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் சடைக்க தேவர்க்கு எதிரான போரில் பங்கேற்ற செண்பகராமன்:

இரண்டாம் சடைக்க தேவர்(1635-45) என்பவர் சேது நாட்டை ஆட்சி புரிந்துவந்த மன்னர் ஆவார். இவர் தன்னரசு பெற கருதி திருமலை நாயக்கருக்கு வரி கொடுப்பதை நிறுத்தி விட்டார். தனக்கு பணியாத சடைக்க தேவரை அடக்கி வர திருமலை நாயக்கர் மதுரை வடுகர் படையுடன் 72 பாளையக்காரர்களையும் தனது தளவாய் "இராம அய்யன்" தலைமையில் சேதுநாட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.

திருமலை நாயக்கரின் சேதுநாடு படையெடுப்பு, கி.பி. 1635ல் நடந்த நாஞ்சில் நாட்டு படையெடுப்புக்கு நான்கு வருடம் கழித்து அதாவது கி.பி. 1639ல் நடைபெறுகிறது. இப்படையெடுப்பை பற்றி விவரிக்கும் "ராமய்யன் அம்மானை" என்னும் நூல் நாஞ்சில் நாட்டு அரசன், திருமலை நாயக்கருக்கு ஆதரவாக சடைக்க தேவருக்கு எதிராக படை கொண்டு வந்ததை பற்றி..

"நாஞ்சி நாட்டு துரையும் நல்ல படையத்தனையும்" என்று பக்கம் எண். 25ல் கூறுகிறது. இதன்மூலம் நாஞ்சில் நாட்டு அரசன் செண்பகராமன், சடைக்க தேவருக்கு எதிரான போரில் பங்கேற்றார் என்பதனை அறியமுடிகிறது.

கோயில் திருப்பணிகள்:
செண்பகராமன் கன்னியாகுமரி அலங்கார நாயகி, கோட்டாறு சவேரியார் போன்ற கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். நாகர்கோவிலுக்கு மேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள ஆளூர் என்ற கிராமத்தில் "புனித நிக்கோலஸ்" பெயரில் கோயில் ஒன்றை கட்டினார். மேலும், தமது தலைநகர் கோவளத்தில், "புனித இஞ்ஞாசியாருக்கு" கற்கோயில் ஒன்றினை எழுப்பினார். இக்கோயிலானது கிபி1917 வரை நிலை பெற்றிருந்தது.

தமிழுக்கு ஆற்றிய தொண்டு:
'இயலெல்லாந் தெரி செண்பகராமநல் லேந்தல்' 'பழகுதமிழ்ச் சொல்லே தருஞ் செண்பகராமன்' 'தமிழாகரன்' போன்ற அடைமொழிகள் இவனது தமிழ் பற்றை விளக்க தகுந்த சான்றுகளாகும். இவர் தமிழ் புலவர்களை ஆதரித்து பரிசுகள் வழங்கினார் என்பதை ''கைக்கு வளை கடுக்கன் கற்றோற்க்கு உதவு கொடைச் செண்பகராமன்" மற்றும் "தேடற்கரிய பாடர்புலமையோர்க்குதவு கோவையூர் செண்பகராமன்" ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

செண்பகராமனுக்கு இரண்டு குமாரத்திகளேயன்றி வேறு பிள்ளைகள் கிடையாது.

மருமக்கள்மார் மற்றும் அவர்கள் பிள்ளைகள்:
கற்பூரக் காலிங்கராயன் என்பவர் செண்பகராமனின் மூத்த மருமகன். இவர் மூத்த நயினார் என்றும் அழைக்கப்படுகிறார். வேலப்பபிள்ளை என்பவர் கற்பூரக் காலிங்கராயனின் மூத்த மகன் ஆவார். சுவானி நயினார் என்பவர் கற்பூரக் காலிங்கராயனின் இளைய மகன் ஆவார்.பிரஞ்சிஸ் கொலிவேர் என்பவர் செண்பகராமனின் இளைய மருமகன் ஆவார். இவர் பிரஞ்சிஸ் குட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவளத்தில் செண்பகராமன் காலம் முதலே பரதவர்களின் திருமண விழாக்களில் பாடப்படும் பாடல் பின்வருமாறு...

"வாசலிது வாசலிது-நல்ல
கல்யாண வாசலிது
தேசமதி லேபுகழும்-வெகு 
சிறப்பான கோவைநகர்
மங்கையூர் கோசமதில்-கல்ரதம் 
வைத்தோட்டி யபுமான் 
பொங்குமிகு அயோத்திநகர்-செல்வன் 
புகழரசு புரியுநேசன்
மன்றில்செந்தூர்க் கந்தனுக்கு-மயில் 
மண்டபங் கட்டிவைத்தோன் 
அன்றுகதி ரோன்மறைத்த-பனையை 
அன்புடன்த றித்தவீரன்" என்று முடிகிறது இப்பாடல்.

சேது நாட்டின் மங்கைபதியில், செண்பகராமனின் முன்னோர்கள் கல்ரதம் ஓட்டி சிறப்புற்றதை இப்பாடலின் மூலம் அறியமுடிகிறது.

திருவாங்கூர் அரசன் கார்த்திகை திருநாள் ராமவர்மா(1758-98) காலத்தில், செண்பகராமன் சந்ததியினரின் நாஞ்சிநாட்டு கோவளம் அரசாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கோவளம் நகரானது திருவாங்கூர் அரசன் வசம் சென்றது.
கிபி1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பர்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தனது நூலில்....

"மிகவும் வலிமையான கோட்டை அரண்களால் சூழப்பட்டுள்ள கோவளம் நகர் தற்போது திருவாங்கூர் அரசன் கார்த்திகை திருநாள் ராமவர்மாவுக்கு சொந்தமானதாக இருக்கிறது" என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் இக்காலத்தில் செண்பகராமன் சந்ததியினரின் அரசாட்சி கோவளத்தில் முடிவுற்றது என்பது உறுதி.

செண்பகராமன் காலிங்கராயனின் சந்ததியில் வந்த "மரியஜான் காலிங்கராயன்" என்பவரே இந்த "செண்பகராமன் பள்ளு" என்ற தமிழ் சிற்றிலக்கியத்தை பதிபித்தவர் ஆவார். இவருடைய சந்ததியினர் இன்றளவும் நாகர்கோவில் மாநகரில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________

Foot Notes:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg. 32





















கங்கர் கல்வெட்டு



திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 500 வருடங்கள் பழமையான கங்கர் கல்வெட்டு:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களையும், அவற்றிற்கான பொருள் விளக்கம் தர கல்வெட்டு சொல்லகராதி ஒன்று திருவிதாங்கூர் அரசு தொல்லியல் துறையினரால் கிபி1947 ஆம் ஆண்டு "Lexicon of Travancore Inscriptions" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

அக்கல்வெட்டு சொல்லகராதி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் கங்கர் என வரும் பெயரின் விளக்கத்தை இவ்வாறு நமக்கு தருகிறது......

கங்கர் என்னும் பட்டப்பெயர் கன்னியாகுமரி பகுதி பரதவர்களிடையே பரவலாக காணப்படுகிறது, அப்பெயர் அவர்களின் தலைவரை குறிக்கிறது. 16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மூத்த கங்கர் என்னும் பரதவர் தலைவர் கன்னியாகுமரி வட்டார பகுதிகளுக்கு வரிவசூல் செய்ய உரிமை பெற்றிருந்தார்.

கங்கர் கல்வெட்டு:-

இடம்: கன்னியாகுமரி அருகில் உள்ள குமரி முட்டம்
அரசு: திருவிதாங்கூர்
மன்னர்: சிரவாய் மூத்த தம்பிரான்(வீர உதய மார்த்தாண்ட வர்மா கிபி1516-1535)
காலம்: கிபி1524 பங்குனி 20 ஆம் நாள்
கல்வெட்டு செய்தி: மன்னர்(வீர உதய மார்த்தாண்ட வர்மா) மூத்த கங்கர் (என்னும் பரதவர் தலைவருக்கு) மகிழ்ச்சியுடன் வழங்கிய சில வரி விலக்கு பற்றி பதிவு செய்கிறது.

----------------------------------------

Foot Notes:-

LEXICON OF
TRAVANCORE INSCRIPTIONS
PUBLISHED BY THE
DEPARTMENT OF ARCHAEOLOGY
TRAVANCORE STATE, TRIVANDRUM.
R, VASUDEVA PODUVAL.
DIRECTOR OF ARCHEOLOGY.
1947,Pg.32.

TRAVANCORE INSCRIPTIONS A TOPOLOGICAL LIST by Vasudeva Poduval, Pg. 92.
















பாண்டியர்களும் பரதவர்களும்


(வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை)

பாண்டியர்கள் "திங்கள்" குலத்தவர்கள் என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. கிபி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு, "சந்திரனின் மகன் புதனின் வழிவந்தவர்களே பாண்டியர்கள்" என்ற தகவலை நமக்கு தருகிறது.

மேலும், அந்த வேள்விக்குடி செப்பேடு கூறுகையில், "புதனின் மகனான புரூரவஸ் என்பவர் மேறுமலை மீது இரட்டைமீன் சின்னத்தை பொறித்தார்" என்றும் பதிவு செய்கிறது. மேறுமலை என்பது இமயமலை தொடரில், பனிபடர்ந்த மூன்று கொடுமுடிகளை கொண்ட மலையின் பெயர். இது இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தில் உள்ள உத்தரகாட்சி மாவட்டத்தில், கங்கோத்ரி தேசியப் பூகா பகுதியில் இமயமலையில் அமைந்துள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே பொறிக்கப்பட்ட சிந்து சமவெளி கல்வெட்டுகளில் திங்கள் குலத்தவர்களாகவும், இரட்டைமீன் சின்னத்தை தங்கள் கொடியில் கொண்டவர்களாகவும், மீனவன் என்ற பட்டத்தை உடையவர்களாகவும் வரலாற்றில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டவர்கள், தமிழர்களுள் பரதவர்கள் மட்டுமே.

நான் மேற்சொன்ன புரூரவஸ் என்பவரின் சந்ததியில் வந்தவர் தான் பரத சக்கரவர்த்தி.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

பாண்டியர்களின் முன்னோரான பரத சக்கரவர்த்தி:

அருணாசல புராணம், வச்சிராங்கத பாண்டியன் சுருக்கம், 411- செய்யுளிலே...

"மதுரையில் அரசு செலுத்தி வந்த பாண்டிய வேந்தன் வச்சிராங்கதன், தன் பிள்ளையாகிய பாண்டிய பட்டத்து இளவரசன் இரத்தினாங்கதனை, சீக்கிரத்தில் வரவழைத்து முன்னால் நம் வம்சத்தில் பிரபலனாயிருந்த பரதன் போல் இராச்சியத்தை காப்பாற்றென்று சொன்னார், அவ்வார்த்தை கேட்பதற்கு முன்னமே விடைபெற்று கொண்டு, மகன் இரத்தினாங்கத பாண்டியன் யானை, தேர் முதலாகிய சேனைகள் சூழ மதுரைக்கு போய் அரசாள தொடங்கினார்" என்று கூறுகிறது.

அருணாசல புராணம் என்னும் இந்நூல், எல்லப்ப நாவலர் என்பவரால், 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

பரதவர்களின் முன்னோரான பரத சக்கரவர்த்தி:

ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பட்டே என்பவர் தமது நூலில்....

"பரதவர்களின் சொந்த பாரம்பரிய மரபுவழி செய்தியின் படி, அவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த  பரத சக்கரவர்த்தியின் வம்சாவளியினர் ஆவர்".

மேலும், எச்.ஆர்.பட்டே கூறுகையில்....

"இந்த பாரம்பரிய மரபுவழி செய்திக்கு ஆதாரமாக, பரதவர்கள் இன்றுவரை தங்கள் திருமண விழாக்களில், தாங்கள் சார்ந்துள்ள சந்திரகுலத்து சின்னங்களையும், பதாகைகளையும் ஏந்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.

தமிழர்களுள் பரத சக்கரவர்த்தியை முன்னோராக கொண்ட ஒரே சமூகம் பரவர்கள் மட்டுமே.

____________________________________________________


Foot Notes:-
Madras District Gazetteer:Tinneveli District by H.R.Pate Pg.122






















மாபரவன் எளம்பேராதன்



கிமு இரண்டாம் நூற்றாண்டில் பாண்டியரின் சிற்றரசனாக மாபரவன் எளம்பேராதன்:

அரிட்டாபட்டி தமிழ்-பிராமி கல்வெட்டு ஒன்று:

அரிட்டாபட்டி என்னும் ஊர் மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி உள்ளது. அந்த ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் சமணத் துறவியர் தங்குவதற்கு ஏற்ப செதுக்கிய கற்படுகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது.

இங்கு கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால பரவர்சமூகத்து சிற்றரசன் ஒருவனை பற்றிய கல்வெட்டு ஒன்றை 2003, செப்டம்பர் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. அடுத்த நாள் 15 ஆம் தேதியே நான் மேற்சொன்ன கல்வெட்டை பற்றிய முழு செய்தியும் இந்து, டைம்ஸ் போன்ற நாளிதழில் இந்தியா முழுவதும் வெளிவந்தது.

The Hindu News Dated Monday, Sep 15, 2003
The Times of India News Dated Monday, Sep 15, 2003

கல்வெட்டு செய்தி:
இலஞ்சி வேள் மாபரவன் மாகன் எமயவன் நல் மழுக்காய் கொடுப்பிதவன்

விளக்கம்:
இலஞ்சி என்னும் ஊரின் அரசனான மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுக்கையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

இலஞ்சி என்னும் ஊர் தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு 4 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இலஞ்சி இதுவா அல்லது வேறா என்பது ஆய்வுக்குரியதே.நான் மேற்கூறிய இக்கல்வெட்டில் இலஞ்சி அரசன் தனது இனப்பெயரால் மாபரவன் என்று குறிக்கப்பட்டுள்ளான். 

அரிட்டாபட்டி தமிழ்-பிராமி கல்வெட்டு இரண்டு:

நான் மேற்சொன்ன அதே கழிஞ்ச மலையடிவாரத்தில் உள்ள குகையில் நீர்வடி விளிம்புக்கு மேலாக இக்கல்வெட்டு ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் அதே கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததே ஆகும்.

இக்கல்வெட்டை தமிழ்நாடு தொல்லியல் துறை சிறப்பு ஆணையர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர் அவர்கள் தமது "தமிழ்-பிராமி கல்வெட்டுகள்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

கல்வெட்டு செய்தி:
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன்
விளக்கம்:

இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த எளம்பேராதன் மகன் இமயவன் இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

முதலாவது கல்வெட்டில் தனது இனப்பெயரால் மாப்பரவன் என்று குறிக்கப்பட்ட இலஞ்சி அரசன் இரண்டாவது கல்வெட்டில் தனது இயற்பெயரால் "எளம்பேராதன்" என்று குறிக்கப்பட்டுள்ளான். ஒரே செய்தி அரிட்டாபட்டி கழிஞ்ச மலையடிவாரத்தில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

திங்கள்குலத்து பரவர் சமூகத்தவர்கள் திங்கள்குலத்து பாண்டியர்களின் செல்வாக்குமிக்க சிற்றரசர்களாக இருந்தனர் என்பதனை அரிட்டாபட்டியில் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட இந்த இரண்டு கல்வெட்டுகளின் வாயிலாக நாம் ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.









பாண்டியரின் மூலம்




பாண்டியர்கள் என்றாலே இன்று மதுரை என்று அழைக்கப்படும் கூடல் நகரம் தான் நமக்கு முதலில் நினைவில் வரும், ஆனால் அதற்கு முற்றிலும் மாறான ஒரு வரலாற்று செய்தியை இப்பகுதியில் காண்போம் . 
கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, இன்றைய தென்தமிழக பகுதி பல நாடுகளாக பிரிந்து கிடந்தது, ஒவ்வொன்றும் தனி தனி ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. இவற்றுள் பாண்டியர்கள் ஆட்சி செய்த நாடு எதுவென நாம் சான்றுகளை கொண்டு நிறுவுவதே சிறந்தது.

நெடுந்தேர் செழியன் காலம் வரையில் கொற்கை தான் பாண்டியர்களின் தலைநகர். அந்த கொற்கை எந்த நாட்டின் கீழ் வருகிறது என்று பார்ப்பது அவசியம்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த "தாலமி" என்ற கிரேக்க பயணி தமது நூலில் பரதவர்களின் நாட்டை பற்றி குறிப்பிடுகையில், அந்நாட்டின் வர்த்தக ஸ்தலமாக கொற்கை விளங்கியது என்ற செய்தியை அவர் பதிவு செய்வதன் மூலம் கொற்கை பரதவர் நட்டுக்கு உட்பட்ட பகுதி என்பது தெளிவு.

அதன் விவரம் காண்க

அன்றைய காலகட்டத்தில், பாண்டிய அரசு என்பது கொற்கையை மையப்படுத்தி பரதவர் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது என்பதனை ஆதாரபூர்வமாக நாம் அறிய முடிகிறது. பாண்டிய அரசை பரதவர் நாட்டுக்கு வெளியே விரிவாக்கிய பூதப்பாண்டியன்:

பரதவர் நாட்டின், கொற்கையில் ஆட்சிக்கு வந்த பூதப்பாண்டியன்(கிமு350-325) என்ற கோமான், உள்நாட்டில் அமைந்துள்ள வேற்று அரசர்களின் நாடுகளை கைப்பற்ற தொடங்குகிறார். இவர் ஒல்லையூர் என்ற நாட்டை கைப்பற்றியமையால், "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" என்று அழைக்கப்படுகிறார்.

புறநானூறு 71 (சேர, சோழ) வேந்தர், பூதப்பாண்டியனுக்கு எதிராக படை கொண்டு வந்ததை கூறுகிறது. இப்போரில் பூதப்பாண்டியன் இறந்து போனார், அவரது மனைவி பெருங்கோப்பெண்டு அவருடன் உடன்கட்டை ஏறினாள்.

மதுரையை கைப்பற்றிய நெடுந்தேர் செழியன்:

பூதப்பாண்டியனுக்கு அடுத்து, பரதவர் நாட்டின் கொற்கையில் நெடுந்தேர் செழியன்(கிமு325-300) ஆட்சிக்கு வந்தார். புறம் 347 வரி 5-7, அகுதை என்பவன் கூடலை ஆண்டதைக் கூறுகிறது. நெடுந்தேர் செழியன், அகுதையுடன் போரிட்டு வென்று, கூடல்வரை பாண்டிய அரசை விரிவாக்கினார் என்றும், அதன் பிறகு கூடலில் நிரந்தரமாக தங்கி ஆட்சி புரிந்தார் என்றும் அகநானுறு 296 வரி 10-13 கூறுகிறது. புறம் 233 வரி 2-4, அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில் மாண்டதாக கூறுகிறது.

பாண்டிய அரசை பேரரசாக்கிய பசும்பூண் பாண்டியன்:

நெடுந்தேர் செழியனுக்கு பிறகு கூடலில் ஆட்சிக்கு வந்த பசும்பூண் பாண்டியன்(கிமு300-275), பாண்டிய அரசை மேலும் விரிவாக்கினார். கூடலுக்கு தெற்கே ஆட்சி புரிந்த பொதியமலை தலைவனையும், வடக்கே ஆண்ட எவ்வியையும், மேற்கே வாழ்ந்த கொங்கரையும் அடக்கினார் என்றும், பலநாடுகளை வென்று "நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன்" என்ற பெயரை பெற்றார் என்றும், அறம் கடைப்பிடித்த செங்கோல் ஆட்சி புரிந்தார் என்றும் (அகம்.162: 18, 20-22), (அகம்.266: 10-12), (அகம்.253: 4-5), (அகம்.338: 2, 3, 5) இப்பாடல்களால் நாம் அறிகிறோம்.

இப்படி பாண்டியர்கள் தங்களுடைய சொந்த தேசமான பரதவர் நாட்டுக்கு வெளியில் கைப்பற்றியிருந்த நாடுகளை தக்கவைத்துக் கொள்ளவும், பேரரசின் நிர்வாக வசதிக்காகவும் மதுரையில் தங்கி விட்டாலும் கூட அவர்கள் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தனர். அது என்னவெனில் தங்களது சொந்த தேசமான பரதவர் நாட்டின், கொற்கையில் ஆட்சி பொறுப்பில் இருப்பவனே பாண்டியர் முடிக்கு சொந்தக்காரன்.

(எ.கா) "மதுரையில் ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் மறித்துபோன பிறகு பரதவர் நாட்டின், கொற்கையில் இளவரசனாக வீற்றிருந்த வெற்றிவேல் செழியன் மதுரைக்கு வந்து முடிசூட்டிக் கொண்டான்" என்று சிலப்பதிகாரம் 27வது காதை வரி 127-138 கூறுகிறது. இதன்மூலம் பாண்டியர்களின் முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாக பரதவர் நாட்டின், கொற்கை விளங்கியது என்பது தெளிவு.

கொற்கை பற்றிய ஆய்வுகள்:
"ராபர்ட் கால்டுவெல்" என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய ஆய்வாளர், தமது கொற்கை பற்றிய ஆய்வு பயணத்தில், தமிழர்களுள் வழங்கிவந்த பாரம்பரிய செய்திகளுடன் சேர்த்து தமது கள ஆய்வுகளில் கிடைத்த வேறு ஆதாரங்களின் அடிப்படையில், பாண்டியர்களின் அரசு முதலில் பரதவர் நாட்டு, கொற்கையில் தொடங்கியது என்பதையும், அதன் பிறகே அவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்து அங்கு தங்கள் புதிய தலைநகரை நிறுவினர் என்பதையும் உறுதி படுத்துகிறார்.

கொற்கை இன்று கடற்கரையில் இருந்து உள்ளே அமைந்திருந்ததாலும் சங்ககாலம் தொட்டு அங்கு வாழ்ந்து வந்த பரதவர்கள் இன்றும் அதே கொற்கையில் வாழ்வியல் சான்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-
History of Tinneveli by Robert Caldwell Pg. 283







பாண்டியபதி ராஜாக்கள்



பாண்டியபதி என்பவர்கள் தூத்துக்குடியை தலைநகராக கொண்டு மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டிணம், புன்னைக்காயல், வைப்பார், வேம்பார் நகரங்களை உள்ளடக்கிய ஏழுகடற்றுறையின் ஆட்சியாளர்கள் என்பதால் "ஏழுகடற்றுறை ராஜாக்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியை மையப்படுத்தி இவர்களுடைய ஆட்சி இருந்தபடியால் "தூத்துக்குடி ராஜாக்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். பாண்டியபதிகள் ஒட்டுமொத்த பரதவர்களின் பரம்பரை தலைவர்கள் என்பதால் "ஜாதிதலைவன்" என்ற பெயரும் இவர்களுக்கு உள்ளது. மேற்கண்டவைகள் குறித்த  ஆவணங்களைக் காண்போம்...

தூத்துக்குடியில் ராஜா டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா(1808-1839) என்ற பாண்டியபதி ஆட்சி புரிந்து வந்த காலத்தில் பிரஞ்சு நாட்டை சேர்ந்த மார்ட்டின் என்ற ஏசுசபை குருவானவர் பரதவர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார். பிரஞ்சு நாட்டவரான இந்த மார்ட்டின் பாதிரி புன்னைக்காயலிலிருந்து கிபி1838 ஆம் வருடம் ஜுலை 11 ஆம் தேதி மதுரை மிஷன் பாதிரியார் பெர்டிராண்ட்க்கு தாம் எழுதிய கடிதத்தில்....

"ஒட்டுமொத்த பரதவர்களின் தலைவராக தூத்துக்குடியில் இருப்பவர் டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா என்பவர் ஆவார். இவர் பரதவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு படைத்த நபராக இருக்கிறார். நானும் என் உடன் வந்தவர்களும் வீரப்பாண்டியன் பட்டிணம் வந்திருந்தபோது, அங்குள்ள பரதவர்களை திருப்திப்படுத்த அவர்களின் தலைவரும் தூத்துக்குடி ராஜாவுமானவரின் இல்லத்தில் தங்க வேண்டியிருந்தது.

வீரபாண்டியன் பட்டினத்து மக்கள் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள அவருடைய இல்லம் ஒரு அரண்மனை ஆகும். பிறகு நாங்கள் வீரபாண்டியன் பட்டினத்திலிருந்து புறப்பட்டு கடைசியாக தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். தூத்துக்குடி மாநகர் பரதவர்களின் தலைநகர் ஆகும். பரதவர்களின் அரசனும் தூத்துக்குடி ராஜாவுமான டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா(1808-1839) தமது இரண்டு குமாரர்களான இளவரசர்களுடன் எங்களை வரவேற்க நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

நாங்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்த காலம் வரை அவருடைய மேசையில் அவருடன் உணவு அருந்தினோம். மேலும் ராஜா எங்களை இந்த வருடம் ஆகஸ்ட் 5 தேதி நடக்கவிருக்கும் பனிமய மாதாவின் திருநாள் சம்மந்தமான ஏற்பாடுகளை உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொண்டார்". என்று பிரஞ்சு நாட்டவரான மார்ட்டின் பாதிரி குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேய அரசு அதிகாரியான சைமன் காசி தமது குறிப்பில்....

"டச்சுக்காரர்கள் பாண்டியபதிகளை ஏழுகடற்றுறை ராஜா என்று அழைத்தனர்" என்று பதிவு செய்கிறார். 

ஆங்கிலேய அரசு அதிகாரியான "ஜேம்ஸ் ஹார்னெல்" தமது நூலில்....
"பாண்டியபதிகளை டச்சுக்காரர்கள் ராஜாவாகிய ஜாதிதலைவன் என்று அழைத்தனர்" என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியபதிகளுள் கடைசியானவர் ராஜா டான் மனுவேல் லூயிஸ் டி குரூஸ் அனஸ்தாசியுஸ் மோத்தா கொரைரா என்பவர் ஆகும்.

_____________________________________________

Foot Notes:-

1.La Mission Du Madure Vol 1 By French Jesuit Bertrand. Pg 60, 62, 63, 64
2.Madras Fisheries Bulletin No 7,The Sacred chank of India by BY JAMES HORNELL, Fs, Superintendent of Pearl and Chank Fisheries to the Government , pg 10
3.Remarks on the origin and history of parawas, by SIMON CASIE CHITTY, maniyagar of puttalam, ceylon, The Journal of Royal Asiatic Society. pg 134



















Prominent Paravas


பாதிரியார் புனித பிரான்சிஸ் சவேரியார் பரவர்களிடையே மறைபரப்பு பணி செய்து வந்த காலத்தில் பரவர்களின் மூன்று முக்கிய தலைவர்கள்  புன்னைகாயலை சேர்ந்த ஜோவாம் டா குரூஸ் (Joam da Cruz), மனுவேல் டா குரூஸ் (Manuel da Cruz) மற்றும் வேம்பாரை சேர்ந்த மனுவேல் டி லிமா (Manuel de Lima) ஆகும்.
 
________________________

Foot Notes:-

St Francis Xavier His Life, His Times Vol 2 by Father George Schurhammer. Pg 426.





பரதவர் நாட்டு மாநகரங்கள்



உலகத்தார் போற்றிய பரதவர் நாட்டு மாநகரங்கள்:

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒரு நகரம் உலக பிரசித்தி பெற்றாதாய் விளங்கும். இன்று ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லன்டன் போன்ற நகரங்களை நாம் இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

பரதவர் நாடு என்றாலே அன்று அதாவது 16 & 17 ஆம் நூற்றாண்டுகளில் உலகத்தார் அனைவருக்கும் தெரிந்திருந்தது, காரணம் பரதவர் நாட்டு நகரங்கள் அன்று உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்கியது.
 
"பீட்டர் மார்ட்டின்" என்ற பிரஞ்சு நாட்டவர் தமிழகம் வந்திருந்தபோது, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரதவர் நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரங்களை நான் சுற்றி பார்க்க விரும்பினேன்" என்று கிபி1700 ஆம் வருடம் ஜூன் ஒன்றாம் தேதி காமநாயக்கன் பட்டியிலிலிருந்து தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

JOHN LOCKMAN, Travels of the Jesuits, Vol 1 Pg. 375 ,Letter of father Peter Martin to Father Le Gobien Camien-naken-patti, in the kingdom of madura,1stJune, 1700.


ஓடாவி



தச்சு தொழில் செய்த பரதவர்கள்:

ஆங்கிலேய ராணுவ அதிகாரியான "ஹோராஷியோ ஜான் சக்லிங்" என்பவர் கிபி1876 ஆம் வருடம் லண்டனில் பதிபிக்கப்பட்ட தமது நூலில்...

"பரதவர் சமூகத்தவர்கள் தொழில்ரீதியாக பல பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்களுள் ஒரு பிரிவினர் தச்சர்களாக இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார்.

நாம் பரதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொழிலை சொல்லமுடியாது. காரணம் பரதவர்கள் பல தொழில் செய்தவர்கள். அவற்றுள் ஒன்றே இந்த தச்சு தொழில்.

____________________________________________

ஆதாரம்:-

CEYLON A GENERAL DESCRIPTION OF THE ISLAND HISTORICAL, PHYSICAL, STATISTICAL By OFFICER Suckling, Horatio John Vol I Pg. 415









தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து



நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்த குட்டி இங்கிலாந்து

நாம் இன்று யாரிடமாவது தமிழகத்தில், இங்கிலாந்தை போல காட்சியளிக்ககூடிய சில பகுதிகள் உள்ளன என்று சொல்வோமானால் அவர்கள் அதனை துளியும் நம்பமாட்டார்கள். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில், ஒரு குட்டி இங்கிலாந்து இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்.

ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பேட் என்பவர் தமது நூலில்....

பரவர் நாட்டில், மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம் போன்ற கிராமங்கள் மற்ற இந்திய கிராமங்களை போல் அல்லாமல் மாறாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களை போல் காட்சியளிக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.

மேலும் எச். ஆர். பட்டே கூறுகையில்....

மணப்பாடு நகரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் அங்குள்ள வீடுகள் அனைத்தும் அச்ச அசலாக ஆங்கிலேயர்களின் வீட்டு மாடல்களில் கட்டப்பட்டிருக்கிறது. மணப்பாடு நகரில் மாடி வீடுகளானாலும் சரி, மாடி இல்லாத வீடுகளானாலும் சரி, அனைத்துமே கற்களால் கட்டபட்டு, வீடுகளின் மீது ஓடுகள் பதிக்கப்பட்டு, காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

மணப்பாடு பரவர்கள் அனைவரும் இலங்கையில் தங்கியிருந்து வர்த்தகம் செய்து வந்தனர். இடைவெளி கிடைக்கும் போது மணப்பாடு நகருக்கு சென்று தங்களது மனைவி, பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து வந்தனர்.


००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-

MADRAS DISTRICT GAZETEER, TINNEVELI by H. R PATE,I.C.S,Volume 1,Pg:101,










மறவர் பரதவர் உறவு



மறவர் பரதவர் இனக்குழுக்களுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவு

கிபி 17 ஆம் நூற்றாண்டில் "ஜான் நியூஹோஃப்" என்னும் டச்சு பயணி தமது நூலில்...
 
"சேது நாட்டு மறவர் இனக்குழுவின் தலைமை இடம் பெரியபட்டிணம்" என்று குறிப்பிடுகிறார்.

"ரெவரென்ட் பசௌட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1763 ஆம் ஆண்டு, லண்டனில் பதிபிக்கப்பட்டு, ராபர்ட் மவுண்டேக், ஜான் முர்ரே ஆகிய பிரபுக்களுக்கு சமர்பிக்கப்பட்ட தமது நூலில்....

"(திருநெல்வேலி) பரதவர் நாட்டுக்கு வடக்கே உள்ள சேதுநாட்டில் மறவர், பரதவர் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் வசம் கோட்டைகள் அமைக்கப்பட்ட தீவுகள் உள்ளன" என்று குறிப்பிடுகிறார். காலம் செல்ல செல்ல, மறவர் தலைவர்கள், தங்களது இரத்த சகோதரர்களான பரதவர்களையும், தங்கள் அரசில் இனைத்து கொண்டனர். இதன் காரணமாக சேதுநாட்டு மறவர், பரதவர் ஆகிய இருவருக்கும் பொதுவான தலைநகராக பெரியபட்டிணம் மாறிப்போனது.

இதனை "மலாச்சி போஸ்ட்லெத்வேட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1755 ஆம் வருடம், லண்டனில் பதிபிக்கப்பட்ட தமது நூலில் பதிவு செய்கிறார்.

சேதுநாட்டு மறவர் இனக்குழுவின் தொன்மை:-

ஆங்கிலேய அரசு அதிகாரி "ஹக் நெவில்" தமது நூலில்....

"சேதுநாட்டு மறவர்கள் முன்பு பரதவருள் வணிகம், மீன் வேட்டை ஆகியவற்றை செய்து வந்தவர்களாய், பின்பு தனி இனக்குழுவாக பிரிந்து சென்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றில் "சேதுநாட்டு மறவர்கள், பரதவ (மீனவ) குடிகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓலைச்சுவடியை "கர்னல் காலின் மெக்கென்ஸி" சேகரித்து, பின்பு இது "வில்சன்" என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது.

_____________________________

ஆதாரம்:-

1.Voyages and Travels to East Indies and Brazil by John Nieuhof Vol ll pg.258
2.Historico-political Geography by Mr Paschoud Vol ll, pg.181
3.Universal Dictionary of Trade and Commerce by Malachy Postlethwayt
4.Oriental Studies by Hugh Neville Vol l pg.19
5.The mackenzhi collection of oriental manuscripts by H. H. Wilson pg.207


































About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com