குமரி முனையில் ஆர்மீனியர்கள்
துருக்கியின் அண்டை நாடான ஆர்மீனியா உலகின் முதல் கிறிஸ்துவ நாடாகும். இவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ சபையின் பெயர் ஆர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபை. இவர்கள் பண்டைய காலத்தில் கன்னியாகுமரி முட்டத்தில் குடியேறி தேவாலயம் எழுப்பினர். பரவர் சிலர் ஆர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபையில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராயினர்.
இக்கோயிலின் பங்கு மக்களான ஆர்மீனியர், பரவர் வேண்டுகோளை ஏற்று திருவாங்கூர் மகாராஜா ஆதித்யா வர்மா கிபி 1494 சித்திரை 15 ஆம் தேதி குமரி முட்டம் தேவாலயத்தில் விளக்கெரிய கோவளம், கன்னியாகுமரி துறைமுகத்தில் பெறப்படும் வரியின் ஒரு பகுதியை ஒதுக்க உத்தரவிட்டார். கிபி 1514 இல் போர்ச்சுகல் இந்தியாவின் அதிகாரிகளின் ஒருவரான Duarte Barbosa தனது குறிப்பில் கன்னியாகுமரியில் பண்டைய காலத்தில் ஆர்மீனியர்கள் கட்டியிருந்த தேவாலயம் உள்ளது.
இன்றும் சிலுவைகள் பொறுத்தப்பட்டுள்ள பலிபீடம் முன்பு ஆர்மீனிய குருக்கள் பூசை நிறைவேற்றி வருகின்றனர். இந்த ஆலயத்தை கடந்து செல்லும் மாலுமிகள் காணிக்கை அளிக்கின்றனர். இவ்வழியாக செல்லும் போர்ச்சுகீசியர்கள் திருப்பலி பூசையில் பங்கெடுக்கின்றனர். இங்கு பல கல்லறைகள் காணப்படுகிறது. அவற்றின் ஒரு கல்லறை மீது லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டள்ள எழுத்து
"Hic jecet Catuldus Gulli filius qui obiit anno...."
எனக் குறிப்பிடுகிறார்.
திருவாங்கூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பரவர் கிராமங்களில் வரிவசூல் செய்ய உரிமை பெற்ற பரவர் தலைவர்களான மூத்த கங்கன், இளைய கங்கன் குமரி முட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆர்மீனிய கிறிஸ்துவம் தழுவியிருந்த பரவரை வரி கேட்டு துன்புறுத்தினர். குமரிமுட்டம் அருகில் மூத்த நயினார் விளையில் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில்
கிபி 1526 பங்குனி 20 ஆம் தேதி திருவாங்கூர் மகாராஜா பூதலவீர மார்த்தாண்ட வர்மா மூத்த கங்கனுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கிய சில வரி விலக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும் குமரி முட்டம் கிறிஸ்துவ பரவர்களுக்கு தனி குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் எந்தவொரு வரியும் பெறக்கூடாது என்று இராஜ சாசனம் எழுதி கையொப்பமிட்டு மூத்த கங்கனுக்கு அனுப்பி வைத்தார்.
----------------------------------------
Foot Notes:
1,The Book Of Duarte Barbosa, Vol 2,Pg.102, 103.
2,The Travancore State Manual by Nagama Aiya, Pg. 195,196,197,296.
3,LEXICONOF TRAVANCORE INSCRIPTIONS
PUBLISHED BY THE
DEPARTMENT OF ARCHAEOLOGY
TRAVANCORE STATE, TRIVANDRUM.
R, VASUDEVA PODUVAL.
DIRECTOR OF ARCHEOLOGY.
1947,Pg.23, 32.
4,TRAVANCORE INSCRIPTIONS A TOPOLOGICAL LIST by Vasudeva Poduval, Pg. 92.
- UNI