Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

திரைகடலோடிய தொல் தமிழர்கள்


இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று ‘தேசியக் கடல்வழி நாள்’ கொண்டாடிவருகிறது. 1919-ல் இதே நாளில் இந்தியாவின் சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனம் தயாரித்த ‘எஸ்.எஸ்.லாயல்டி’ என்ற கப்பல் முதன்முதலாக மும்பையிலிருந்து இங்கிலாந்துக்கு இயக்கப்பட்டதன் நினைவாக, இந்த நாள் கடல்வழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், நமது முன்னோர்கள் ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே பெரும் மரக்கலங்களில் கடல் கடந்து சென்று கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

திராவிட நாகரிகம் எனக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள், மிகச் சிறந்த கடலோடிகளாக விளங்கினர். குஜராத் பகுதியில் லோத்தல் என்ற இடம் பெரும் துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது. இதனை அகழாய்வு செய்த தொல்லியல் அறிஞர் எஸ்.ஆர்.ராவ், இவ்வூரில் கப்பல் தளம் ஒன்றைக் கண்டறிந்து, சிந்துவெளி மக்கள் அயல்நாடுகளுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிவித்தார்.

மொகஞ்சதாரோவில் கிடைத்த முத்திரை ஒன்றில், கப்பலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததும் இதை உறுதிசெய்கிறது. ஆனால், நமது பாட நூல்களில் உலகத்தில் கடல் வழியைக் கண்டுபிடித்தவர்கள் 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த மாலுமிகளான வாஸ்கோடகாமா, அமெரிக்கோ வெஸ்புகி, பார்த்தலோமியா டையஸ், கொலம்பஸ் ஆகியோர்தான் என்று மாணவர்களுக்கு ஆங்கிலேயர்கள் வகுத்துத் தந்த பாடத்திட்டங்களையே இன்னும் கற்பித்துக்கொண்டிருக்கிறோம்.

கடல்களால் சூழப்பட்ட பண்டைத் தமிழக நிலப் பகுதிகள் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் ஆட்சியின் கீழ் இருந்தன. அவர்கள் கடல்வழிப் பயணத்தையும் கடல் வணிகத்தையும் ஊக்கப்படுத்தினர். முசிறி, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்ற பெரிய துறைமுகங்களும் பல சிறிய துறைமுகங்களும் சங்க காலத்தில் இருந்தன. இத்துறைமுகங்களுக்கு வெளிநாட்டு வணிகர்கள் வந்தனர். உள்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் மேலை மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் குழுக்களாகச் சென்றுள்ளனர்.

திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், நாணதேசிகள், அய்யப்பொழில், அஞ்சுவண்ணம் என இவர்கள் வழங்கப்பட்டனர். மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்துள்ள பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டில் ‘கடலன் வழுதி நெடுஞ்செழியன்’ என்ற பெயர் காணப்படுகிறது. எனவே, பாண்டியர்கள் கடலோடிகளாக அக்காலத்தில் விளங்கினர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி என்ற இடத்தில் பொ.ஆ. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளில் ‘கடலகப் பெரும்படைத் தலைவன்’ என்ற பெயர் காணப்படுகிறது. கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய பெரும் படைத் தலைவரை இது குறிக்கிறது.

சேரர்களின் முசிறித் துறைமுகத்திலிருந்து பெரும் கப்பல்களில் பல பொருட்களைத் தமிழர்கள் ஏற்றுமதிசெய்து ஆப்பிரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் செங்கடலை ஒட்டி இருந்த துறைமுகங்களான பெரினிகே, குசிர்-அல்-குதாம் ஆகிய துறைமுகங்களுக்கு ஏற்றிச் சென்றனர். காற்றின் போக்குக்கேற்பத் திசை அறிந்து, பல கலங்களைத் தமிழர்கள் செலுத்தினர். கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலும் அக்காலத்தில் இருந்துள்ளன. சேர மன்னன் செங்கோட்டு வேலன் இக்கடல் கொள்ளையர்களை அழித்து ‘கடல்பிறகோட்டிய செங்கோட்டு வேலன்’ என்ற பட்டம் பெற்றான்.

முசிறியிலிருந்து சென்ற தமிழ் வணிகர் ஒருவர், செங்கடல் பகுதியில் இருந்த தனவந்தர்களிடம் தனது வணிகத்துக்காகப் பெருமளவில் கடன் பெற்ற செய்தி ஒன்றை கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது. இது தற்போது அலெக்சாண்டிரியா அருங்காட்சியகத்தில் உள்ளது. முசிறியிலிருந்து ஹெர்மபோலிஸ் என்ற கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைய மதிப்பில் அச்சரக்குகள் மூன்று பெரிய கப்பல்களில் ஏற்றக் கூடியவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செங்கடலை ஒட்டி இருந்த குசிர்-அல்-குதாம், பெரினிகே துறைமுகங்களில் தமிழகக் கப்பல்கள் நங்கூரமிட்டு, அத்துறைமுகங்களிலிருந்து நில வழியாக ஆப்பிரிக்காவின் உள்பகுதிக்கு ஒட்டகங்கள் மூலமாகப் பயணப்பட்டு, நைல் நதியில் இருந்த துறைமுகத்தை அடைந்தன. சூயஸ் கால்வாய் வெட்டப்படாத அக்காலத்தில், நைல் நதி வழியாகப் பெருங்கப்பல்கள் தமிழகத்தின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்த அலெக்சாண்டிரியாவைச் சென்றடையும். இச்சரக்குகள் அலெக்சாண்டிரியாவிலிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ரோமாபுரிக்குக் கொண்டுசெல்லப்படும். மேற்குறித்த முசிறி வணிகரைக் குறிக்கும் கிரேக்க ஆவணம் பொ.ஆ.1-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

யவனர் எனக் குறிக்கப்படும் அயல்நாட்டவர், தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வசவசமுத்திரம், அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய துறைமுகங்களில் கிடைத்த தொல்பொருட்கள் பலவும் யவன நாட்டிலிருந்து வந்தவை. ‘யவனத் தேறல்’ எனப்படும் மதுவை யவனர்கள் ஆம்போரா எனப்படும் குடுவைகளில் எடுத்துவந்துள்ளனர். இம்மதுக்குடங்கள் இத்துறைமுகங்களில் பெருமளவில் கிடைத்துள்ளன.

இதே போன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வில் கப்பல் உருவம் பொறித்த இரண்டு மட்கலன்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் சங்க காலத்தில் கடல் வணிகம் மேற்கொண்ட நகரமாக விளங்கியிருந்தது. மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் உற்பத்தி செய்யப்பட்ட மணி வகைகள் மற்றும் ஆடைகள் அழகன்குளம் வழியாக ஏற்றுமதிசெய்யப்பட்டன. யவன வணிகர்கள் தமிழகத்தில் பொன் நாணயங்களைக் கொடுத்து, நறுமணப் பொருட்களை வாங்கினர். ‘பொன்னொடு வந்து கறியோடு பெயர்ந்து’ எனச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பொன் கொடுத்து, கறி எனப்படும் மிளகை ரோமானியர்கள் வாங்கினர்.

செங்கடல் பகுதியில் குசிர்-அல்-குதாம், பெரினிகே மற்றும் ஏமன் பகுதியின் கோரொரி ஆகிய துறைமுகப்பட்டினங்களில் அண்மையில் அகழாய்வுகளில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வோடுகளில் கணன், சாதன், கொற்றபூமான், ..ந்தை கீறன் போன்ற தமிழ் வணிகர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் கீழை நாடுகளான சுமத்ரா, ஜாவா, சீனம் ஆகிய நாடுகளிலும் 2,500 ஆண்டுகளுக்கும் முன்பாகவே கடல்வழிப் பயணம் மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து நாட்டிலுள்ள கோலங் தோம் அருங்காட்சியகத்தில் பொ.ஆ. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பொன் உரசும் கல் ஒன்றில் ‘பெரும்பதன் கல்’ என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு இதனை உறுதிசெய்கிறது.


தக்கோபா என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில், தமிழர்கள் குடியிருப்புகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் அருகிலுள்ள மணிக்கிராமத்தைச் சார்ந்த வணிகர்கள் தென்கிழக்காசியப் பகுதிகளில் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். சீனர்கள் தங்கள் தூதுவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர் என்பதை சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பல்லவர்கள் காலத்தில் சீனப் பயணியான யுவான் சுவாங் பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளார். காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயிலின் சிற்பங்களில் சீனப் பயணியின் சிற்பம் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிடும் ‘பட்டினப்பாலை’யில் சீனர்கள் இன்றளவும் ‘சுங்’ என்ற பெயரில் பயன்படுத்திவருகின்ற தொங்கு நாவாய் என்னும் பெரிய கப்பல் பற்றிக் குறிப்பு உள்ளது.

சோழ மன்னர்களான ராஜராஜனும் ராஜேந்திர சோழனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஸ்ரீவிஜய மன்னன் விஜயதுங்கன் தனது தந்தையின் பெயரில் சூடாமணிபன்ம பௌத்த விகாரை ஒன்றை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு ராஜராஜ சோழனின் அனுமதியைப் பெற்றார். சீனாவில் செங்கிஸ் கான் காலத்தில் அவரது பெயரால் சிவன் கோயில் ஒன்றைத் தமிழர்கள் கட்டியுள்ளனர். இத்தகைய தொன்மை வரலாற்றைக் கொண்ட கடல்வழிப் பயணம் குறித்தும், தமிழகத் தொன்மைக் கடற்கரைத் துறைமுகங்கள் குறித்து அறிவதற்கும் ஆழ்கடல் அகழாய்வு செய்வதற்குத் தமிழக அரசு இவ்வாண்டு பெரும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

- சு.ராஜவேலு, மேனாள் துறைத் தலைவர், 
தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் 
கடல்சார் தொல்லியல் துறை. 
தொடர்புக்கு: rajavelasi@gmail.com


கொற்கையம் பெருந்துறை


நீர் போற்றுதும்! நீர் வார்க்கும் ஆறு போற்றுதும்!

தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னோடி 'தமிழர் நாகரிகம்' என்று சொன்னால் அதுதான் உண்மை.

மிதவை, தெப்பம், வள்ளம், கட்டுமரம், பரிசல், ஓடம், படகு, தோணி, புணை, அம்பி, வங்கம், வத்தை, நாவாய், கப்பல், திமில், உரு, கலம் எனப் பலபல பெயர்களில் கடல்கலன்கள் கட்டி உலகெங்கும் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

தமிழாண்ட மன்னர்கள சேர, சோழ, பாண்டியர் மூவரும் பழங்காலம் தொட்டே திரைகடல் ஓடி வாணிகம் செய்து பொருளீட்டிய தமிழ் மாந்தர்களைப் புரந்தவர்கள். இத்தனை வாணிகமும் சிறப்புற நடந்தேறத் துணை புரிந்தவைதான் தமிழகத் துறைமுகங்கள்.

சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்
எயிற்பட்டினம் (நாகப்பட்டினம்) – ஒய்மா நாட்டுத் துறைமுகம்
நீர்ப்பெயற்று (மரக்காணம்) – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

மேலும், பண்டைய தமிழ் மன்னர் மூவரும் அரசுக் கட்டிலின் தலைமையிடமாகத் தலைநகரையும், வாணிகப் பொருளாதாரத்திற்கானத் தலைமையிடமாக ஒரு துறைமுகத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

'சேரருக்கு வஞ்சியும் முசிறியும்
சோழருக்கு உறையூரும் பூம்புகாரும்
பாண்டியருக்கு மதுரையும் கொற்கையும்' எனக் கொண்டனர்.


இலக்கியத்தில் கொற்கை:

"மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" - அகநானூறு
உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி
நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் – புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும்
தென் கொற்கைக் கோமான்" - முத்தொள்ளாயிரம்
’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ (அகம் 201. 3-5)
என்றும்,

‘முத்துப்பட பரப்பின் கொற்கை முன்துறை’ (நற்றிணை 23-6)
‘நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’(அகம். 296 8-10)
’இருங்கழி சேயிறா வினப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ (ஐங்குறு. 188)
’அலங்கிதழ் நெய்தார் கொற்கை முன்றுறை
இலங்குழுத் துறைக்கு மெயிறு கெழு துவர்வாய்’ (ஐங்குறு. 185)

'திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கல்வடு தபுக்கும்’
நற்றேர் வழுதி கொற்கை’ (அகம். 130)
’கலிகெழு கொற்கை’ (அகம். 350)
’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலம்பு. 14. 180)

என்றும் கொற்கைப் பெருந்துறை இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன்? சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள்.

சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது. கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது.

கொற்கை, விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம். யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண்.

கொற்கையின் முத்து:

இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்’ (முத்தொள்ளாயிரம். 68)

என கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் எனச் சுட்டிக் காட்டுகிறது.

முத்துக்களின் சிறப்பு:

‘பல்லரண் கடந்த பசும்பூப் பாண்டின்
மல்குநீர் வரைப்பிற்கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய வுயர் மண லடைகரை
ஒத வெண்டிரை யுதைத்த முத்தம்’ (தொல். களவு. நூ. 11. நச். உரை மேற்கோள்)

‘பொரையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ் குவளை’ (யா.வி.சூ. 15 மேற்கோள்)

என இலக்கியங்கள் கொற்கையின் முத்தைச் சிறப்பித்துள்ளன. மேலும், கொற்கையின் முத்துக்கள் மரக்கலமேறி கடல் கடந்து சென்று பிற நாட்டு மன்னர்கள் முடியிலும், மாதர்கள் அணியிலும் இடம்பெற்றன என்பதைப் பல நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள்:

‘கொற்கைக் கோமான் தென்புலம்’ (சிறுபாணாற்றுப்படை. 62-63)
’நற்றேர் வழுதி கொற்கை’ (அகநானூறு. 130)
”விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி
சிறப்பின் கொற்கை” (அகநானூறு 201; 3-5)
”பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்” (மணிமேகலை 13;84)
‘பொற்றேர் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றதும் எல்லாம் ஒழிவின்றி உணர்ந்து’ (சிலம்பு. 27; 83-84)
‘கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்’ (சிலம்பு. 27; 127)

என்று கொற்கைப் பதியில் பாண்டியர்கள் ஆட்சி செய்தமை பற்றி பெருமைப்பட இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டுத் தொடர்புகள்:

இடைச்சங்கத்தைத் தொடங்கி தமிழை வளர்த்த கொற்கை, தலைநகராக, துறைமுகமாக விளங்கி தமிழகத்தின் வளம்கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது. பல நாட்டோடு வாணிபத் தொடர்புகொண்டு இருந்திருக்கிறது.

கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது.

“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.

பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.

"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன.

- நெல்லை க.சித்திக்

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com