Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு



மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு மற்றும்
 பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி



மன்னார் மறைவாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வு சனிக்கிழமை (30.12.2017) நடைபெற இருப்பதால் மன்னார் நகரம் விழாக்கோலம் பூண்டு வருவதுடன் சகல ஆயத்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வட்டாரம் தெரிவிக்கின்றது.


மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகையின் வரவேற்பு மற்றும் பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வுகள் 30 ந்திகதி (30.12.2017) காலை இடம்பெறுகின்றது. இவ் நிகழ்வை சிறப்பாக மேற்கொள்ள மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குருக்களைள்கொண்ட பல உபகுழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய ஆயரை வரவேற்பதற் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் தள்ளாடிச் சந்தியில் இருந்து மோட்டார் வாகனப் பவனி ஆரம்பமாகி மன்னார் பிரதான பாலத்தை வந்தடையும். மன்னார் பெரிய பாலத்தடியில் புதிய ஆயர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்படுவார். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிய வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை அடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள்இ சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் போன்றோர் புதிய ஆயருக்கு வாழ்த்துத் தெரிவிப்பர். பின்னர் புதிய ஆயர் உட்பட அனைத்து ஆயர்கள் குருக்கள் பேராலய மண்டபத்திற்கு சென்று அங்கு திருப்பலிக்குரிய ஆடையை அணிந்துகொள்வர். பின்னர் பேராலய மண்டபத்திலிருந்து வீதி வழியாகப் பவனியாக வரும் இவர்களைத் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி சிறுமியர் நடனமாடி வரவேற்று பேராலய வாசல்வரை அழைத்து வருவர்.

பேராலய வாசலில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் திருச்சிலுவையை வழங்க புதிய ஆயர் அதனை முத்திசெய்வார். தொடர்ந்து பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. பெப்பி சோசை அடிகளார் ஆசிநீர் குவளையை புதிய ஆயருக்கு வழங்க புதிய ஆயர் அதனைப் பெற்று தானும் ஆசிநீரைப் பூசிக்கொண்டு சூழ நிற்கின்றவர்களுக்கும் ஆசிநீரைத் தெளிப்பார். பின்னர் வருகைப்பாடலுடன் குருக்கள் ஆயர்கள் புடைசூழ புதிய ஆயர் பீடம் நோக்கிப் பவனியாகச் செல்வார்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் திருப்பலியை ஆரம்பிப்பார். திருப்பலியின் வாழ்த்துரைக்குப் பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் மடல் (Pயியட டீரடட) திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் மேதகு நியூஜன் வன் ரொட் ஆண்டகை அவர்களினால் ஆங்கிலத்தில் வாசிக்கப்படும். தொடர்ந்து அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்படும். திருத்தந்தையின் நியமன மடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளிப்பார். தொடர்ந்து பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை புதிய ஆயருக்குக் கையளிப்பார்
பின்னர் ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்குவார். தொடர்ந்து அப்போஸ்தலிக்க பரிபாலகரும்இ கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்துவர். பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும்இ மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும்இ வணக்கத்தையும் கீழ்ப்படிவையும் தெரிவிப்பர்.

தொடர்ந்து குருக்கள் புதிய ஆயரைச் சூழ்ந்து நிற்கும் நிலையில் தமக்கு வணக்கமும் கீழ்ப்படிவும் வழங்குதற்கான உறுதிமொழியை புதிய ஆயர் குருக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார். தொடர்ந்து துறவற சபைகளின் தலைவர்கள்இ பிரதான திருச்சபைகளின் தலைவர்கள்இ மன்னார் மறைமாவட்டத்தின் பொதுநிலைப் பிரதிநிதிகள் போன்றோர் புதிய ஆயருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். தொடர்ந்து உன்னதங்களிலே கீதத்துடன் புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி தொடர்ந்து இடம்பெறும்.

மன்னாரின் புதிய ஆயர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், அந்த மறைமாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணி செய்தமையினாலும் கொழும்புப் பேராயர் மேதகு கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை உட்பட கொழும்பு உயர் மறைமாவட்த்தைச் சேர்ந்த குருக்கள், துறவியர், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் உள்ள ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் இதில் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளனர். தென் பகுதியில் இருந்து வரும் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் 29ஆம் திகதி மாலையே மடுத்திருப்பதிக்கு வந்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் காலையில் மடுத்திருப்பதிக்கு வந்துசேர்வதாகவும் அறிவித்துள்ளனர்.

அனைவரும் காலை 8.30 மணிக்கு மடுவில் இருந்து புதிய ஆயரை வாகனப்பவனியாக மன்னார் நோக்கி அழைத்துச் செல்வர். மன்னார் தள்ளாடிச் சந்தியை இவர்கள் அடைந்தவுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பவனியாக புதிய ஆயர் மன்னார் பாலம்வரை அழைத்துச் செல்லப்படுவார்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராலயத்தில் நடைபெறும் திருவழிபாடுகளில் பங்கேற்கும் எல்லாரும் பேராலயத்திற்குள் உள்வாங்கப்படமுடியாத நிலையில் பேராலயத்திற்கு வெளியே பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளே நடைபெறும் திருவழிபாடுகளை பந்தல்களுக்குள் இருந்து காண்திரையில் காண்பதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஆயர் தள்ளாடியை வந்தடைந்ததும் அங்கு இரானுவத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என இராணுவ வட்டாரம் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)

Servite Convent of Vembar


வேம்பார் இல்ல வரலாறு

தூய ஆவி இல்லம் 

ஏழு கடல் துறையின் முதல் துறையான வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்வூரில் கிறிஸ்தவ வேதத்தினை பரப்ப புனித சவேரியார் (1542 - 1547) இவ்வூருக்கு வந்து, ஆற்றங்கரையின் ஓரத்தில் குடிசையை அமைத்து, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். குளத்தில் விழுந்து இறந்த ஒரு பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்து மக்களின் விசுவாசத்தை வளர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மறை பரப்ப வந்த வெளிநாட்டுக் குருக்களும் விசுவாசத்தை வளர்க்க உழைத்துள்ளனர்.

1883-ல் பங்குத் தந்தையாக இருந்த ராயப்பன் சுவாமி அவர்களால் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரு பால் மாணவரும் கற்று வந்தனர். பின் 1905-ல் ஆண், பெண் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கு 5-ம் வகுப்பு வரையிலும், பெண்களுக்கு 4-ம் வகுப்பு வரையிலும் நடைபெற்றுள்ளது. இப்பள்ளியை உள்ளூர் வாசிகளே (அமலோற்பவ மாதா ஜூபிலி கிளப்) நிர்வகித்து வந்துள்ளனர். 1920-21ல் தலைமை ஆசிரியருக்கும் (தாமஸ்பிள்ளை) நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பள்ளியை 1925-ல் வால சுப்பிரமணியபுரத்திற்கு (தெற்கு வேம்பார்) புனித தோமையார் ஆலய வளாகத்திற்குள் மாற்றியுள்ளனர். 

1923-ல் சங்.S.மரியதாஸ் சுவாமிகள் காலத்தில் திரு.குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்களின் பெரும் முயற்சியால் புனித செபஸ்தியார் பாடசாலை பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்டது. பெண்களின் ஆன்மீகக் காரியங்களைக் கவனிக்க கன்னியர் தேவை என்பதை உணர்ந்த மரியதாஸ் சுவாமிகள் அப்பொழுது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த ரோச் ஆண்டவரின் பரிந்துரையின் பேரில் திருச்சியில் 1854 –ல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புமாக பணியாற்றிக் கொண்டிருந்த புனித வியாகுல மாதா சபைக் கன்னியரை வேம்பார் (பரிசுத்த ஆவி) பங்குக்கு அழைத்தனர். 1925-ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி புனித வியாகுல மாதா சபைக் கன்னியர் நால்வர் வேம்பார் வந்து சேர்ந்தனர். அவர்களை ஊர்மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி ஆரவாரத்தோடும்  வரவேற்றனர். 

கன்னியர்கள் தங்குவதற்கு இப்போது இருக்கும் இடத்திலே முக்கால் ஏக்கர் பரப்பில் 54 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இல்லம் ஒன்றும் 110 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியும் கட்டினர். கன்னியர்களுக்கென கட்டப்பட்ட இல்லமானது, 1925 மே மாதம் பரிசுத்த ஆவியின் பெருவிழாவன்று (31-ம் தேதி) வணக்கத்துக்குரிய ரோச் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அர்ச்.மார்கரீத் மரியம்மாள் மடம் என்ற பெயரால் திறந்து வைக்கப்பட்டது. அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பெயரே பள்ளிக்கும் வழங்கலாயிற்று. இப்பள்ளியில் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இருந்தன. நான்கு வகுப்புகளிலும் கன்னியரே கற்பித்தனர்.

இக்கால கட்டத்தில் வேம்பாரில் நாயக்கர்கள் மறவர்கள் ஊடுருவல்கள் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் பரதவ குல மக்களே இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இலங்கை வணிகத்தாலும், உள்ளூர் கடல் தொழிலால் கிடைத்த பொருளாதார வசதியாலும் செழிப்புற்று வாழ்ந்தனர். இதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் இருந்ததால் பள்ளிகளில் போதுமான  அளவு மாணவர்கள் இருந்தனர்.

இதனிடையே 1930 - ஆம் ஆண்டு மூக்கையூரிலும், 1942 - ஆம் ஆண்டு பெரியசாமிபுரத்திலும், 1949 - ஆம் ஆண்டு சிப்பிகுளத்திலும், 1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகின. இந்நான்கு மடங்களும் வேம்பார் மடத்துடன் இணைக்கப்பட்டு வேம்பார் செர்வைட் சொசைட்டி என்ற அறக்கட்டளையாக உருவானது. மேற்கண்ட ஐந்து மடத்தை சேர்ந்த கன்னியர்களுக்கான தியானகளும், பயிற்சிகளும் வேம்பார் மடத்திலே நடைபெற்றன. அக்காலத்தில் கன்னியர்களுக்கான தியானங்கள் நடைபெறும் போது வேம்பார் கன்னியர் மடம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும். 

1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் குடும்பங்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. எனவே பள்ளியில் மாணவர்கள் குறைந்தனர். அப்பொழுது பங்குத்தந்தையாக இருந்த சூசைநாதர் சுவாமிகள் அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பள்ளியை 1964 – ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பள்ளியோடு இணைத்து நடுநிலைப்பள்ளியாக்கினர். புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த திரு.ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தலைமைப் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு கொடுத்தார். அருட்சகோதரி பெனிட்டா மேரி ஒருங்கிணைந்த புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். 

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இராமநாதபுரம் மாவட்டம் கிராமங்களில் உள்ள குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் சூசைநாதர் சுவாமிகள் 1964 ல் கருணை இல்லத்தை உருவாக்கினார். 1965-ல் கருணை இல்லம் சகோ.பொனவெந்தூர், கொன்சப்தா, திரு. தம்பிராஜ் கர்வாலோ இவர்களின் பெரும் முயற்சியினால் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளனர். ஆண் குழந்தைகள் தங்குவதற்கு முதலில் மார்க்ரீத் பள்ளியாக இருந்த பள்ளிக் கட்டிடமும், பெண் குழந்தைகள் தங்குவதற்கு ஊரிலிருந்து திரு. வெல்ச்சர் கர்வாலோ கொடுத்த நிலத்தில் திரு. செல்வம்காகு கட்டிக் கொடுத்த கட்டிடமும் பயன்பட்டது. பின்னாளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்ததால் மறைமாநிலம் மூலம் பெண் குழந்தைகள் தங்க  மாடி கட்டிக் கொடுக்கப்பட்டது.

1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகினும் அங்கு கன்னியர் இல்லம் கட்டப்படும் வரையிலும் வேம்பார் (பரிசுத்த ஆவி) மடத்திலிருந்தே கன்னியர்கள் புனித பீற்றர் பள்ளிக்கு பணி செய்ய சென்று வந்தனர். 

1977-ல் கருணை இல்ல குழந்தைகள் மற்றும் வேம்பார் மக்களின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு வியாகுல அன்னை சபைக் கன்னியர்களை பணியாளர்களாகக் கொண்டு சிறிய மருந்தகம் (DISPENSARY) கருணை இல்லத்தின் அருகே கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. பல குழப்பங்களுக்கு மத்தியில் அம் மருத்துவமனை புனித தோமையார் ஆலயப் பங்கிற்கு மாறி 7.10.77-ல் சாக்ரோஸ் மருத்துவமனை என்ற பெயரில் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

10.8.1997 ல் மதுரை மாநிலத் தலைவி அருட்சகோ.ரோகாசிற்றா மேரி அவர்கள் வேம்பார் இல்லத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ததின் அடிப்படையில்  07.10.97 அன்று பெரிய இரும்புக்கதவு அமைக்கப்பட்டது. மதுரை மாநிலத்திலிருந்து தூத்துக்குடி மரிய நட்சத்திர மாநிலம் என்னும் பெயரில் தனியாக 1998-ல் நிறுவப்பட்டது. 

02.12.2000 இல்லம் துவங்கி 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்லம் பழுதுபார்க்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. மின் இணைப்புகள் அனைத்தும் பழுதாகியிருந்தால் அனைத்து இணைப்புகளும் சரிசெய்யப்பட்டது. 6.2.2001 பெரியசாமிபுரம் பங்குத்தந்தை இல்லாத கால கட்டத்தில்  திருவழிபாடுகளில் பங்கு கொள்ள வசதியாக அங்கிருந்த சகோதரிகள் இவ்வில்லத்தில்வந்து தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்கள்.

2௦16 ஜூன் மாதத்திலிருந்து நான்கு மறைமாநிலங்கள் இரண்டு மறைமாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. வேம்பார் யூனிட் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட மரிய நட்சத்திர மறைமாநிலத்தில் சேர்க்கப்பட்டது. வேம்பார் இல்லத்தின் மேல்தளம் பாதிக்கப்பட்டு கட்டைகள் விழும் நிலையில் இருந்ததால் கட்டிடம் பழுதுபார்க்கும் வேலை 25.01.2017 ல் ஆரம்பமானது. சுண்ணாம்பு சுவர் அனைத்தும் கொத்தி பூசப்பட்டது. அறைகளிலும் கோவிலிலும் புதிய டைல்ஸ் போடப்பட்டது. ௦6-௦6-17-ல் கான்கிரீட் போட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் பங்குத்தந்தை சகாய ராஜ் வல்தாரிஸ் அவர்கள் புதுப்பிக்கப்பட்டிருந்த நற்கருணைப் பேழையை மந்திரித்து, திரு இருதயப் படத்தையும் ஸ்தாபித்தார். 28-06-17 இல்ல வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் கன்னியர் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு இல்லக் கோவிலில் புதிய பங்குத்தந்தை பிரதீபன் லிபோன்ஸ் அவர்களால் நன்றித்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

- நி. தேவ் ஆனந்த் 

OUR CHURCH'S - 6


புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை 


ஆலய வரலாறு:


இடிந்தகரையின் முதல் ஆலயம் புனித இராயப்பர் மற்றும் சின்னப்பர் பெயரில் 1552ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஊரின் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக இருந்தது. இக்கோவில் சிறியதாகவும், பழமையாகவும் இருந்ததாலும், கடல் ஆலயப்பரப்பை நெருங்கியதாலும், சற்று வடமேற்காக பெரிய ஆலயம் ஒன்றைக்கட்ட மக்கள் தீர்மானித்தார்கள். கைவிடப்பட்ட பழைய ஆலயத்தில் புனித வியாகுல அன்னை கன்னியர் மடம் இயங்க ஆரம்பித்தது. பிறகு மடத்தைப் புதுப்பித்த போது, பழமையின் அருமை அறியாமல் கோவிலின் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது. 1833ல் புதிய கோவிலுக்காக ஊர்ச் செலவில் அந்திரைக்கட்டியார் மகன் தொம்மை சுவானி பட்டங்கட்டியாரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. 

கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது. இடிந்தகரை முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. 

அன்னையின் சிலை பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டது. முற்றுப் பெறாத நிலையில் 1906ம் ஆண்டு பெப்ரவரி 2ம் தேதி ஆலயம் திறக்கப்பட்டது. அதுவரை ஆலயக் கட்டுமானச் செலவு ரூ.20,000/-.1928ம்ஆண்டு கோவில் முகப்பில் 91 அடி உயரமுள்ள இரு ஊசிக் கோபுரங்களும், ஒலி எழுப்ப பெரிய மணியும் அமைக்கப்பட்டன. திருமுழுக்கு வழங்கப்பட்ட கோவில் மணியின் பெயர் சுந்தரி. 1932ம் ஆண்டு மலையுடன் கூடிய கெபி கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய கெபியும், ஒழுங்காக அமையப்பெற்ற தேரோடும் வீதியும் வேறெந்த நெய்தல் கிராமத்திலும் இல்லை. 

இக்கெபியில் அழகிய ஸ்தலங்கள் இருந்தன. அழகுணர்வு இல்லாத பாதிரியார் ஒருவரால் 1983-87ல் ஸ்தலங்கள் மற்றும் கோவில் பீடம் இடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டன. 1954-55ல் கோவில் முன் மேடை அமைக்கப்பட்டது. 1955-57ல் தேரும் அதற்க்கான பிறையும் அமைக்கப்பட்டன. இதே காலத்தில் முதலில் சுவரில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த லூர்து அன்னை, புனித இராயப்பர் மற்றும் புனித சின்னப்பர் சிலைகள் அழகிய தேக்கு மரப்பீடம் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டன. 1962ம் ஆண்டு லூர்து மலையில் அன்னையின் பாதம்பட்ட கல் ஒன்று இவ்வாலயக் கெபியில் உள்ள மலையில்அமலோற்ப்பவ அன்னை சிலையின் நேர் கீழாக பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் திருமுழுக்குப் பெற்ற இருவர் ஆயர்களாகவும், 35க்கும் அதிகமானோர் துறவிகளாகவும், 100க்கும் அதிகமானோர் கன்னியர்களாகவும்  ஆகியிருப்பது உலகில் வேறு எந்த ஆலயத்திற்கும் கிடைக்காத பெருமை.

ஆலய அமைப்பு:

தென் தமிழகத்தில் இதன் வயதை ஒத்த ஆலயங்களில் இதுவே கொள்ளளவில் பெரிய ஆலயம்.கோவிலின் நீளமும், அகலமும் உயரமும் மற்ற கோவில்களை விடக் கூடுதல்.கோவிலின் நடுவில் மொத்தம் பக்கத்திற்கு 7 வீதம் 14 பெரிய தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 4 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பக்கச் சுவர்களில் பக்கத்திற்கு 7 வீதம் 14 தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பிற்காலத்தில் இவற்றின் மீது சாந்து பூசப்பட்டதால் இன்று ஒரே தூண் போல காட்சி அளிக்கிறது. 

மிக உயரமான, பெரிய, பாரமுள்ள கோவில் மாடத்தை இத்தூண்களே தாங்குகின்றன. இவ்வளவு நீளமான கல் தூண்களை எங்கிருந்து, எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. ஒவ்வொரு நான்கு கல்தூண்களையும் இணைத்துப் பிடிக்க அடியிலும்,மேல்முகட்டிலும் வட்ட வடிவ கல் பொருத்தப்பட்டுள்ளது.ஏராளமான தூண்கள் இருந்தாலும், கோவில் பீடத்தை கோவிலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் தெளிவாகப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. மக்கள் ஆலயத்திற்குள் நுழைய முன்புறம் கிழக்குப்பகுதியில் பெரிய மேடையும், அதை அடுத்து 3 வாயில்களும், வடக்குப்பகுதியில் 2ம், தெற்குப் பகுதியில் 2மாக , மொத்தம் 7 வாயில்கள் உள்ளன. 

பாதிரியாரும் கோவில் பணியாளர்களும் உள்ளே நுழைய சிறப்பு வழி உள்ளது. அனைத்து வாயில்களின் முன் ஒழுங்கான படிக்கட்டுகள் கைப்பிடி வசதியுடன் உள்ளன. கோவிலின் முன் மேடை கட்டப்பட்டதால் முன் தோற்றம் குட்டையாகத் தெரிகிறது. முன்பகுதியில் 2 ஊசிக் கோபுரங்களும், அவற்றினிடையே 4 சிறு கோபுரங்களும் உள்ளன. கோவில் மாடம் முழுக்க பக்கத்திற்க்கொன்றாக 11 வீதம் 22 சிறு கோபுரங்கள் உள்ளன. இதற்கு அடுத்த அடுக்கில் பக்கத்திற்க்கொன்றாக 9 வீதம் 18 சிறு கோபுரங்கள் உள்ளன. 

கோவில் மாடத்தில் அலங்காரம் செய்ய வசதியாக பெரிய துளைகள் உள்ளன. 800 கிலோ எடை கொண்ட கோவில் மணி இடது புறம் உள்ளது. இதன் நாதம் 3 கிமீ அப்பால் வரை ஒலிக்கக் கூடியது.கோவில் மாடம் செல்ல வலதுபுறம் வளைவுப் படிக் கட்டுகள் உள்ளன.திருமுழுக்குத் தொட்டி கோவிலின் முதன்மை வாயிலின் அருகில் உள்ளது. ஜன்னல் மாடங்களில் வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அழகிய பீடம் தேக்கு மர வேலைப்பாடுகள் நிறைந்தது. இதன் உச்சியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நடுவில் அன்னையின் ஆளுயரச் சிலையும் இருபுறமும் ஊர்ப் பாதுகாவலர்களான புனித இராயப்பர், சின்னப்பர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த தரை ஓடுகள் அகற்றப்பட்டு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சிலுவைப்பாதை வழிபாட்டுக்கென கோவிலின் உள்ளும் புறமும் ஒழுங்கான வழி உள்ளது.கோவிலின் வலது புறம் கெபி அருகில் உள்ள கிணறு, மாதா கிணறு என்று அழைக்கப்படுகிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக நூறாண்டுகளைத் தாண்டியும் வரும் மக்கள் கூட்டத்தை தாங்கும் திறன் கொண்ட இக்கோவிலின் உள்ளே நுழையும் போது மனதில் தோன்றும் அமைதியையும், அன்னையின் எழில் உருவைக் காணும் போது எழும் பெருமகிழ்ச்சியை வர்ணிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

(நன்றி: இடிந்தகரை நூற்றாண்டு விழா மலர், திரு.யு.ப.மில்ட்டன்)

அகநானூறில் பரதவர்


அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

70 நெய்தல்

கொடுந் திமிற் #பரதவர் வேட்டம் வாய்த்தென,

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,

கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்

5

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,

பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே

வதுவை கூடிய பின்றை, புதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

10

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

15

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

70 உரை

வி - ரை.) ஆன்றிசின் - அமைக. ஈதலால் இன்ப முண்டாகு மென்பதனை, 1'இத்துவக்கும் இன்பம்’ என்பதனால் அறிக. செய்பொருட்டிறவர் - பொருள் செய்யும் கூற்றினர். மோரியர் வடநாட்டின்கண் ணிருந்த அரச வகுப்பினர். இவர்கள் சில பகைவரோடு போர் கருதித் தெற்கே சென்ற காலை, குறுக்காக நின்றதொரு மலையைத் தேருருள் செல்லுமாறு குறைத்து வழிசெய்துள்ளார் என்ற வரலாறு, ‘தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியா மையிற் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி புருளிய குறைத்த, இலங்குவெள் ளருவிய வறையா யும்பர்’ (251) எனவும், ‘முரண்மிகு வடுநர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறையிறந் தவரோ சென்றனர்’ (281) எனவும் இந்நூலுள்ளும், 2'வென்வேல், வெண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடைகழி யறைவாய்நிலைஇய’ எனப்புறநானூற்றிலும் வருவனவற்றான் அறியப்படும். சிலை - ஒரு மரமுமாம். நன்கலம் தரூஉம் - பெற்ற கலன்களைப் பாணர் முதலாயினார்க்குத் தரும் என்றுமாம்.

அகநானூறில் பரதவர்

அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள். 


65 பாலை

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்

அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்

ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்

சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;


5

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்

பாடிச் சென்ற பரிசிலர் போல

உவ இனி வாழி, தோழி! அவரே,

பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்

செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்


10

மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,

மீன் கொள் #பரதவர் கொடுந் திமில் நளி சுடர்

வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,

மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை

உயவல் யானை வெரிநுச் சென்றன்ன


15

கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,

காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்

ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; ''பணைத் தோள்,

நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,

நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு


20

அரியவால்'' என அழுங்கிய செலவே!


வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்

வருங்காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த் லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான” எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றானும் அறிக: ஐதியம்புதல் - நடக்க நடக்க விட்டி சைத்தல் என்றலுமாம்.

(மே - ள்.) 1'எருமையும் மரையும் பெற்றமம் நாகே’ என்னம் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, ‘உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ’ என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா.

அகநானூறில் பரதவர்

அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

பாடல்

140 நெய்தல்


பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் #பரதவர்

இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

என்றூழ் விடர குன்றம் போகும்


5

கதழ் கோல் உமணர் காதல் மடமகள்

சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,

''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்

சேரி விலைமாறு கூறலின், மனைய

விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய

10

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,

இதை முயல் புனவன் புகைநிழல்j கடுக்கும்

மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வம் தீர வாங்கும் தந்தை

கை பூண் பகட்டின் வருந்தி,

15

வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 6


கிபி. 3 ஆம் நூற்றாண்டில் அசோக மன்னரின் உறவினரான மகிந்தர் இலங்கை செல்லும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி 7 புத்த விகாரங்களைக் கட்டியதாக சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகிறது. பௌத்தர்களின் சிறு தெய்வங்களில் ஒன்றாகிய தாராதேவி என்னும் மணிமேகலை தெய்வம் கடல் காவல் தெய்வமாகும். இது கோவலனின் குல தெய்வமுமாகும். இதனாலேயே தனக்கும் மாதவிக்கும் பிறந்த மகளுக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன். இத்தெய்வத்தை சமுத்திர மணி மேகலை, முதுமணிமேகலை என்றும் வழங்குவர். பௌத்த மத குறியீடுகள் எட்டில் இரட்டை மீன் குறியீடு, சங்கு குறியீடு, கப்பலை ஓட்டும் சருக்கியின் குறியீடு என கடல் சார்ந்த 3 குறியீடுகள் இடம் பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது. 

சிலம்பில் அழற்படுகாதையில் மதுரையில் கண்ணகியின் கோவத்தைத் தவிர்க்க மதுராபதி தெய்வம் முயலும் காட்சியுள்ளது. பத்தினி தெய்வ வழிப்பாட்டில் கண்ணகியின் பங்கு மிகவும் முக்கியமானது. சேரன் செங்குட்டுவன் சுருளி மலையில் கண்ணகிக்கு கோவில் எழுப்ப பாண்டியன் நெடுஞ்செழியன் மகன் வெற்றி வேல் செழியன் கொற்கையில் கோயில் எழுப்பினான். வெற்றி வேல் அம்மன், செழிய நங்கை, செழுகை நங்கை என அழைக்கப்பட்ட அவ்வம்மன் சிலை தற்போது காணாமல் போய் அவ்விடத்தில் துர்க்கையம்மன் சிலை மட்டுமே உள்ளது. கண்ணகி வழிபாடே நாளடைவில் பகவதி அம்மன் வழிபாடாக உருப்பெற்றது. பகவதி வழிபாடு பரதவரிடம் காணப்பட்ட வழிபாடுகளில் ஒன்றாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை கட்டியது பரதவ சிற்றரசன் வில்லவராயனே. இன்றுவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொடியேற்ற நிகழ்வில் பரதவர்கள் முக்கிய இடம் பெறுவதும் வழக்கிலுள்ளது.

பரதவர்கள் கடல் தொழில், உப்பு வணிகம், பண்டமாற்றுதல் (வணிகம்) என வேலை சார்ந்த பிரிவினைகள் உருவான போது செல்வம் பெருக பெருக கடற்கரையை ஒட்டிய ஊர்களில் குடியேறி வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்கள் தமது சமூக அந்தஸ்தையும், பூர்வாசிரமத்தையும் நிலைநாட்ட சமண மற்றும் பௌத்த சமயங்களை தழுவினர். மீன்பிடித்தலும், வேட்டையாடுதலும் கொலைத் தொழில் என சமணம் கூறியது. இதனையே பட்டினப்பாலை பின்வருமாறு கூறுகிறது.

‘வலைஞர் முன்றில் மீன் பிறழ்வும் 

விலைஞர் குரம்பை மா ஈண்டவும் 

கொலை கடிந்து’ ....

இதன் பொருளாக மீன் பிடிப்போரையும், இறைச்சி விற்போரையும் தமக்குப் பகையாகக் கொண்டு, தாம் முற்பட்ட கொலைத் தொழிலை அவர்களிடமிருந்து போக்கி வாழ்ந்து வந்தனர் என்பதாகும். அவர்களில் ஊண் உண்போர் பௌத்த சமயத்தையும், ஊண் உண்ணாதோர் சமண சமயத்தையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களே ‘குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்’ என அழைக்கப்பட்டனர். 

முற்காலத்தில் மூக்கையூர், வேம்பாறு, வைப்பாறு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பரதவர்களின் முக்கிய மீன் பிடி தலமாக அமைந்த நல்ல தண்ணி தீவுப் பகுதியின் கரைப் பகுதியில் காணப்படும் கீழமுந்தல் கிராம தெய்வமாக ‘தாராதேவி’ இருந்தாகவும், தற்போது ‘சேது வந்த அம்மன்’ என்னும் பெயரில் குறிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. இவ்வூருக்கு அருகே காணப்படும் மாரியூர் கடற்கரையோரக் கோவிலில் ‘பவள நிற வல்லியம்மன்’ என்னும் பெயரில் உமையாள் வழிபாடு நடைபெறுகிறது.

மதுரையை அடுத்த அரிட்டாபட்டி கழிஞ்ச மலை குகையில் காணப்படும் சமணர் படுகைகளை இலஞ்சியின் தலைவன் மாபரவன் மகன் இமயவன் அமைத்துக் கொடுத்ததாகக் காணப்படும் கல்வெட்டின் மூலம் சமணம் தழைக்க பரவர்கள் காரணமாக இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. தவிர கொற்கையிலும், பழைய காயலிலும், வேம்பாற்றிலும் சமணர் கால கற்பீடங்களும், சிலைகளும் காணப்படுவதும், கடலோர கிராமங்கள் பலவற்றிலும் சமணர் சிலைகள் காணப்படுவதும் சமண வழிபாடு கடலோரத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்த முடிகிறது. 

பரதவர்கள் வழிபாட்டில் ஊர் தேவதைகள் எனப்பட்ட அம்மன்களே பெரிதும் இடம் பெற்றனர். எனினும் மீனாட்சியே இவர்களின் குல தெய்வமாகும். மீன்பிடித்தலிலும், முத்தெடுத்தலிலும் ‘மீனாட்சி பங்கு’ என்று எடுத்து வைத்தனர். குமரி அம்மன் இவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகும். இவ்வம்மனை ‘கடல் கெழு செல்வி’ என அழைத்து மகிழ்ந்தனர். குமரி அம்மனும், கொற்கை மாரியம்மனும் பரதவர்களின் முக்கிய கடல் காவல் தெய்வங்கள் ஆகும். இவ்விரு அம்மன்களின் கோவில் சன்னிதிகளும் கடலை நோக்கியவாறு அமைந்திருக்கிறது.

புதுச்சேரி, வீராம்பட்டினத்திலுள்ள செங்கழுநீர் அம்மனும் பரதவர் வழிபட்ட முக்கிய தெய்வம் ஆகும். ஒரே தேவதாரு மரத்துண்டினால் செய்யப்பட்டதே இவ்வம்மன் சிலையாகும். பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்து கன்யா, சுகல கன்யா, வனகன்யா, சமாதி கன்யா, என அழைக்கப்பட்ட சப்த கன்னியரின் வழிபாடும் பரதவரிடம் அக்காலத்தில் காணப்பட்டன.

Mgr Emmanuel Fernando, the new bishop of Mannar, in the service of Tamils


Pope Francis appointed him bishop two days ago. He will meet diocese’s staff to understand its most urgent needs. The province is still feeling the consequences of the country’s civil war. The new bishop plans to continue in the footsteps of his predecessors. Politics and religion do not mix, but it is urgent to defend people.

Colombo (AsiaNews) – Mgr Fidelis Lionel Emmanuel Fernando is the new bishop of Mannar, a diocese in Sri Lanka’s Northern Province, scene of major fighting during the country’s civil war. Pope Francis appointed him two days ago.

His appointment will give him an opportunity to serve the Tamil people, "use my mother tongue and help the people in Mannar who are looking for a leader, who need someone who can speak to them, who can listen to them." The new bishop plans to be close to those who " lost their land" and to the relatives of those who "disappeared" or were "killed".

Born on 20 May 1948 in Jaffna, he was ordained in January 1973. In 1987 he obtained his doctorate in Moral Theology from the Catholic University, Washington. In February 2012, he was appointed auxiliary bishop of the Archdiocese of Colombo. He has held several positions, including professor, vice rector and rector at the National Seminary, Kandy.

Here is his interview with AsiaNews.

Your Excellency, what is your impression of this new appointment?

Well, I know Mannar is a big diocese. More than one hundred thousand Catholics. More than one hundred priests and also many religious. I have to serve this diocese so I look it as a big task given to me. I have to take on this responsibility and be prudent. Thus, I can only prepare myself with the help of the Lord to handle this huge task.

What is your plan for new pastoral work in the diocese?

Although the appointment was made three days ago I have not yet met the priests there, so I will work on a plan for the diocese only after I meet the priests and the religious in the diocese. I need to know what its urgent needs are, what its priorities are. Only afterwards will I be able to lay down a plan.

How are you going to identify the need of the people, especially the Tamils who suffered because of the long civil war?

I have recently visited Mannar and I know that it still has lot of problems. After the war, they [the Tamils] lost their land, their dear ones who disappeared. A lot of people were killed. Families have been suffering as a result of the absence of family members, especially the heads of families. They are still in a situation that has not yet been settled. There are a lot of things that need to be solved. Therefore, we have to help them find solutions to the many different types of problems they are facing. 

For example, in some places their homes are near churches, and have been occupied by soldiers. So, they have to travel two, three kilometres just to come to church. We need to find various solutions to this kind of problem.

Your Excellency, previously you were auxiliary bishop in the south, in Colombo. Now you are going to take on a big responsibility as the bishop of Tamil people, in the northern part in the country. Soon after hearing about your appointment, some people, especially in social media, raised questions as to why a Sinhalese bishop was chosen for a Tamil area and Tamil People? They wonder: “What does he know about Tamil people to serve them . . . So what is your take on this challenge?

People who really know me, know that I studied at St Benedict's Collage in Tamil, in Kotahena, Colombo. So, I have a firm foundation in the Tamil language. I took pains to study Sinhalese in order to be close to the people in Colombo. It [Sinhalese] is not my mother tongue. My mother tongue is Tamil. And I would love to serve Tamil speaking people. I did that in Colombo, wherever it was possible to serve the Tamil people in Colombo. In fact, I feel sorry that I have to leave them because they depended on me for Tamil services in Colombo. But now I have the opportunity to use my own mother tongue and help the people in Mannar who are looking for a leader, who need someone who can speak to them, who can listen to them.

Bishop Rayappu Joseph led the diocese of Manar for a long time, and will never be forgotten. People wonder if the new bishop will follow his path.

Yes, in the Catholic Church, it is not like politics. When we accept a task, our main duty is to continue what our predecessors did. Mgr Thomas Savundaranayagam was the first bishop of Mannar. What he did was deepened by Bishop Rayappu Joseph who succeeded him. So, it is now my duty to continue from where Bishop Rayappu Joseph left off. I don't know whether I have the talent and the capacity to do so. It is up to God to give me the strength, to help me in continuing what Bishop Rayappu Joseph did for his people.

I of course will be very careful of not mixing politics with religion. Whatever we can do for the people, we will do. Even speak on their behalf. Speak of their rights. That is all that we will do. I have the support of other bishops. About three or four bishops have been with me at the National Seminary, either as staff or students. So, I know them. I also have the support of His Eminence Cardinal Malcolm Ranjith with whom I have served for many years. Therefore, on that score, the Catholic Church has seen it all before I was appointed to this important position.

My message is that God has entrusted me with a huge task. It is an episcopal ministry of very high order. I would be grateful to people who will cooperate with me, people who will pray for me, people who will give me a hand.


 - Melani Manel Perera

Source : www.asianews.it

அச்சும் பதிப்பும்


ஆசிரியர் ஐயா.மா.சு.சம்பந்தன் அவர்கள் எழுத்தில் ஏப்ரல்'1980 ல் தமிழர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட "அச்சும் பதிப்பும்" நூலில் #பரதவர் பற்றி இவ்வாறு பதிவிட்டுள்ள தொகுப்பு.

"கடற்கரை யோரங்களில் மீன் பிடிக்கும் பகுதியில் வாழ்ந்த முத்துக்குளித்துறைப் பரவர்கள், முதல் அச்சகம் ஏற்பட நிதியுதவியளித்தனர்.

முத்துக்குளித்துறையில் வாழும் பரவ மக்களது பெருந்தன்மையால் 1577லேயே(15ம் நூற்றாண்டு) தமிழுக்கு அச்செழுத்துக்கள் வந்து விட்டன; அவை உலோகத்தினால் தயாரிக்கப் பட்டவையாகும்.

அந்நூலின் பெயரே "தம்பிரான் வணக்கம்"(Doctrina).

இந்திய நாட்டில் முதல் அச்சு கண்ட தமிழ் நூல் பரவ மக்களது உதவியால் கொல்லத்தில் அச்சிடப்பட்டு #புன்னைக்காயல் இல் 1557ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "தம்பிரான் வணக்கம்"(Doctrina) என்னும் நூலேயாகும்.

#பரவ_மக்கள் அச்சு அடிக்கப்பட்ட முதல் நூல்களைக் கண்டு வியப்புடன் பார்த்துக் களித்தனர்.

தமிழ் மொழி அச்சுக் கண்டதால், தமிழ் இனத்தவருக்கு உலகிலே பெரும்புகழ் உண்டாக்கியது.

இந்நூலின் படியொன்று 1579ஆம் ஆண்டு ரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பெற்றது. இதன் மற்றொருபடி ஆஸ்திரியா நாட்டின் நூலகத்திற்குச் சென்றது. அந்நூலக நூல்கள் விற்கப்பட்டபோது, இந்த அரிய நூல் 1951ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள #ஹாவர்டு_பல்கலைக்கழக நூலகத்தினரால் விலைக்கு வாங்கப்பெற்று இன்றுவரை​ காப்பாற்றப் பட்டு வருகிறது.

Download Link - 1

Download Link - 2 

அகநானூறில் பரதவர்


அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள். 


30 நெய்தல்

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,

துணை புணர் உவகையர் #பரத மாக்கள்

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,


5
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,

அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,

பெருங் களம் தொகுத்த உழவர் போல,

இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,


10
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!

பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங் கானல் வந்து, ''நும்


15
வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

30 உரை

(சொ - ள்.) 1-11. நெடுங் கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை-நெடிய கயிறு கட்டப்பெற்ற குறிய கண்களையுடைய அழகிய வலையில், கடல் பாடு அழிய இனமீன் முகந்து - கடலின் பெருமை குன்ற இனமாகிய மீன்களை முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - துணையுடன் கூடிய மகிழச்சி யுடையராய் இளையரும் முதியருமாய நுளையர்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்புஒய உமணர் அருந்துறை போக்கம் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ - உப்பினைச் செலுத்தும் உப்பு வாணிகர் அரிய துறைகளிற் செலுத்தும் சகடுகளிற் பூட்டப்பெற்ற வலிய எருதுகளை யொப்பக் கூடி, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி - நுண்மணல் செறிந்த பக்கத்துள்ள கரையில் ஆரவாரம் பெருக இழுத்து, பெருங் களம் தொகுத்த உழவர் போல - பெரிய களத்திலே நெல்லைத் தொகுத்த உழவர்களைப் போன்று, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி - தம்மிடம் வந்து இரந்தோர்களுடைய வறிய கலன்கள் நிறைய அம் மீன்களைச் சொரிந்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றி - எஞ்சிய வற்றைப் பல கூறுகளாகச் செய்து விலைகூறி விற்று, கோடு உயர்திணி மணல் துஞ்சும் துறைவ - கரை உயர்ந்த திண்ணிய மணற் பரப்பில் தூங்கும் துறைவனே;

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல்


வேம்பாற்றில் காலம் காலமாக மரித்த விசுவாசிகளுக்காக நவம்பர் மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் ஊர் கூடி வந்து ஊர் சுற்றி செபிக்கப்படும் செபம்....

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல் 



நமதாண்டவராயிருக்கிற சேசுக் கிறிஸ்துவின் பேரில் பக்தி விசுவாசமுள்ள உத்தமக் கிறிஸ்தவர்களே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதி குறைந்து நித்திய ஆறுதல் அடையத்தக்கதாகவும், கத்தோலிக்கு ரோமன் திருச்சபையானது கால காலத்திலும் வர்த்தித்து வரத்தக்கதாகவும், ஈனப் பசாசினுடைய சுவாமி துரோகத்திற்கு ஏதுவாயிருக்கிற நீசப்பாவிகள் பிரமையாகிற தங்கள் தப்பிதத்தை விட்டு ஆரோசித்து பரம ஞான சுகிர்த வழியிலே திரும்பத்தக்கதாகவும், அர்சிஷ்ட பாப்பானவருடைய சுகிர்த நற்கருத்துக்கள் நிறைவேறத்தக்கதாகவும், சுவாமியைப் பார்த்து மிகுந்த பக்தியோடே பரலோக மந்திரம் ஓதிக் கொள்வோம்..... (பரலோகத்தில்.........)

பாவிகளாயிருக்கிற நாமெல்லோரும் பாவத்தின் மயக்கமென்கிற நித்திரை செய்யாமலும் அந்த நித்திரை நேரத்தில் சாவானது நம்மைத் தெரிந்து கொள்ளாமலும், சர்ப்பன பயபக்தியாய் விழித்துக் காக்கக் கடவோம். அதேனென்றால் சாவு வருவது சத்தியம், ஆவி இருப்பது அசத்தியமாகுமே. ஐயையோ எனது பிறவிகளே இன்றைக்கோ இருக்கிறோம், நாளைக்கோ மரிக்கிறோம் என்று ஸ்திரமாக நினைத்துக் கொள்கிறது. ஆ! என் சர்வேஸ்ரா மோட்சமென்கின்ற சம்பாவனையும், நரகமென்கின்ற ஆக்கினையும் இவ்விரண்டும் சதாகாலத்திலும் அருதிகளுக்கு மாத்திரமே நிச்சயமாயிருக்கிறது. ஐயையோ, அந்நேரம் மகா கடினதோடும், உக்கிரமத்தோடும் சுமுத்திரையான கணக்குக் கேட்கும் திருநடுவிலே நீங்களும், நாங்களும் என்ன கணக்கு சொல்லப் போகிறோமோ என்றெண்ணி, இந்நேரமும், எந்நேரமும் முழுமனதோடு விதனப்பட்டு தபசு பண்ணக் கடவோம்.....

ஐயோ நீங்களும், ஐயோ நாங்களும் ஆண்டவருடைய திருநடுவிலே என்ன கணக்கு சொல்லப் போகிறோம்.....

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய ஆறுதலைக் கொடுத்தருளும் சுவாமி.... 

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் வேதனை குறைய அனுகிரகம் செய்தருளும் சுவாமி......

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய மோட்ச பாக்கியத்தைக் கொடுத்தருளும் சுவாமி.....

எங்கள் சிநேகிதரே! நீங்களாயினும் எங்கள் பேரிலே இரக்கமாயிருங்கோ.... இரக்கமாயிருங்கோ........ எப்போதும் எப்போதும் உள்ள ஆறுதலை, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு கொடுத்தருளும் சுவாமி.......

புன்னைக்காயல் மருத்துவமனை

புன்னைக்காயல் என்னும் தென் தமிழகக் கடற்கரை ஊர் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் நிலைத்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தமிழகத்தில் முதல் தமிழ்க் கல்லூரியும் (கி.பி. 1567) முதல் தமிழ் அச்சுக்கூடமும் (கி.பி. 1578) முதல் வேதியர் பயிற்சி நிலையமும் (கி.பி.1550) தோன்றியது இவ்வூரில் தான். அனைத்திற்கும் மேலாகத் தமிழகத்திலேயே மருத்துவப் பணிக்கென்று முதல் மருத்துவமனையை உருவாக்கியதே புன்னைக்காயல்தான்! அந்த வகையில் புன்னைக்காயலின் புகழ் தமிழகத்தில் மங்கி மறையாமல் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழகத்தின் முதல் மருத்துவ மனையை உருவாக்கித் தென்னிந்தியா முழுமைக்கும் மருத்துவப் பணிக்கு வழிகாட்டிய இப்புகழ்மிக்கப் புன்னைக்காயலில் தற்போது தமிழக முன்னணித் தொழிலதிபர் திரு A.ராஜா பிஞ்ஞேயிர அவர்கள் பெருந்தொகை செலவு செய்து கட்டியெழுப்பியுள்ள புதிய மருத்துவ மனையைத் தூத்துக்குடி முன்னாள் ஆயர் அருட்பெருந்தகை M.அம்புரோஸ் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். புன்னைக்காயலில் ஏறக்குறைய 455 ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்புடன் பணியாற்றி வந்த அந்தப் பழைய முதல் மருத்துவமனையை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இப்பழைய மருத்துவமனையின் தோற்றம், சிறப்பு, பணிகள் ஆகியவற்றை வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தோற்றம்

போர்த்துக்கீஸியரின் ஆதரவின் கீழ் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இந்தியாவின் தென்பகுதிகளில் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி வந்த யேசு சபையினரின் அரிய முயற்சியினால் பல அற நிலையங்களும், அறிவாலயங்களும் இந்தியாவில் உருவாகின. இருப்பினும் அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவ மனைகளே இயங்கி வந்தன. ஒன்று சால்செட்டிலும், மற்றொன்று புன்னைக்காயலிலும் நிறுவப் பட்டிருந்தன. (1) 

அந்த வகையில் புன்னைக்காயல் மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவான முதல் மருத்துவமனை என்பதில் ஐயமில்லை. புனித சவேரியாருக்குப் பின் முத்துக்குளித்துறைப் பகுதியின் தலைமைக் குருவாகப் பணியாற்றி வந்த யேசு சபைக் குரு ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவரே இம்முதல் மருத்துவமனையை 1550-ஆம் ஆண்டு புன்னைக்காயலில் நிறுவினார். இது பற்றி அவர் உரோமையிலுள்ள யேசுசபைத் தலைவர் இல்லத்திற்கு 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய மடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

"முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற ஏழைமக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இந்த மருத்துவமனையானது, இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்கப் புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை....... இம்மருத்துவமனையானது நமது (யேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.(2) 

இம்மருத்துவ மனையில் சாதிமத வேறுபாடின்றி எல்லாப் பிணியுற்ற மக்களும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இங்கு விளங்கிய கிறிஸ்தவப் பிறரன்பு பிறமத மக்களை மிகவும் கவர்ந்தது. "இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! அதனால் கிறிஸ்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக்கருதினர். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருநீராட்டுப் பெற்று இறந்தனர்."(3)

அக்காலத்தில் முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியத் தளபதியாகப் பணியாற்றி வந்த மனுவேல் ரொட்ரீகஸ் குட்டினோ என்பவர் புன்னைக்காயல் மருத்துவமனையைத் தனது சொந்த வீடாகவே கருதி அங்கேயே அவர் வாழ்ந்து வந்தார். அங்கிருந்த பிணியாளர்களையும் அவர் தனது சொந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மதித்துப் பேணினார். ஏழைப் பிணியாளர்கள் மீது அவர் காட்டிய இரக்கமும், அன்பும் இன்னும் பல அதிகாரிகளையும் இம்மருத்துவமனையில் சேவை செய்யும்படித் தூண்டியது. (4)

மருத்துவர்:

புன்னைக்காயல் மருத்துவமனையில் முதல் தலைமை மருத்துவராக முத்துக்குளித்துறையைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வந்தார். இவரைப் பற்றி சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி யேசுசபைத் தலைமை இல்லத்திற்கு எழுதியதாவது:- "இம்மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வருகிறார். இவர் முன்னர் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு மறைக்கல்வி போதித்தவர். சிறந்த பக்திமான். இவரும் இவரது மனைவியும்
ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய சீலர்கள். இறைவனின் அருளால் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு, இருவருமே இப்போது பிரம்மச்சாரிகளாகக் கற்பு வாழ்க்கையை மேற்கொண்டு தங்களை இறைவன் சேவைக்கே அர்ப்பணித்துவிட்டனர். இறைவன் அவர்களை எந்நாளும் ஆசீர்வதிக்கட்டும்!"(5)

சில வேளைகளில் யேசு சபைச் சகோதரர்கள் ஒரு சிலரும் இம்மருத்துவமனையில் பணி புரிந்தனர். விசுவாச வாழ்விலும், பிறர் பணியிலும் ஆர்வமிக்கக் கிறிஸ்தவர்களுக்காக சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1572-ஆம் ஆண்டில் புன்னைக்காயலில் ஏற்படுத்தியிருந்த 'பிறரன்புச் சபை" (Confraternity of Charity)எனும் பக்திச் சபையிலிருந்து வாரந்தோறும் இரு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் பிணியாளர்களுக்குச் சேவை செய்தனர். 

ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் "பிறரன்புச் சபை" வாரக் கூட்டத்தில், அந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் பணி செய்வதற்கென இருவர் நியமிக்கப் படுவர். (6). இவர்கள் பிணியாளர்களை அன்புடன் பராமரித்ததோடு, மரணப் படுக்கையிலிருந்தவர்களையும் தேற்றி, அவர்கள் நல்ல மரணமடையும்படி உதவினர். மேலும் ஏழைப் பிணியாளர்களுக்கு உணவும் குளிர்காலத்தில் உடையும் இலவசமாக வழங்கினர். (7)

புன்னைக்காயல் மருத்துவமனையில் கிறிஸ்தவர் மட்டுமின்றி, பிறமத மக்களும் சிகிச்சையோடு இலவச உணவும், உடையும் பெற்று வந்ததினால் அதன் பொருளாதாரம் பின் தங்கிய நிலையிலிருந்தது. இதற்காக வாரந்தோறும் அந்தப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஊர்களின் மக்களிடமிருந்து இம்மருத்துவமனையின் செலவுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. (8) 

முத்துக்குளி நடக்கும் காலங்களில் கிறிஸ்தவர்கள் புன்னைக்காயல் மருத்துவமனைக்குப் பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். 1560- ஆம் ஆண்டு முத்துக்குளிப்பின் போது மட்டும் பெருமளவு நன்கொடை வழங்கினர். முத்துக்குளிப்புக் காலங்களில் பொதுமக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராள மனதுடன் நன்கொடை வழங்கினர். (9).

மேலும் முத்துக்குளித் துறைப் பகுதி வாழ் கிறிஸ்தவ மக்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதப் பணமும் புன்னைக்காயல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி போர்த்துக்கீஸியத் தளபதி ஏற்பாடு செய்திருந்தார். இது பற்றி வேம்பாறு ஊரைச் சேர்ந்த தியோகு டி மஸ்கித்தா என்பவர் 1583- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியில் கூறிய சாட்சியமாவது:

"ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஹென்றி குருக்கள் புன்னைக்காயலில் மருத்துவமனையொன்று நடத்தி வருகிறார். இம்மருத்துவமனையின் செலவுகள் மக்கள் வழங்கும் தர்மத்தைக் கொண்டும், முத்துக்குளியின்போது கிறிஸ்தவ மக்கள் வழங்கும் நன்கொடை கொண்டும், குற்றங்கள் புரிந்த கிறிஸ்தவர்களுக்கு இக்குருக்கள் விதிக்கும் அபராதப் பணமும் கொண்டு நடத்தி வருகின்றனர். " (11)

போர்த்துக்கீசியப் போர் வீரர்கள் இந்தியாவின் வெப்பத்தன்மையாலும், நலக்குறைவுள்ள உணவினாலும் பாதிக்கப்பட்டு அடிக்கடி நோயில் விழுந்தனர். பிணியுற்ற அவர்கள் தகுந்த உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் மேலும் குறைந்த வருமானமுடைய அவர்கள் வறுமைக்குப் பலியாகித் தவித்தனர். இவ்வெளிய போர்த்துக்கீஸிய வீரர்கள் புன்னைக்காயலின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் பிணியுற்றப் போர்த்துக்கீசிய வீரர்களுக்கெனப் புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையை அவர் இருந்த ஆலயத்துக்கருகிலேயே 1551-ஆம் ஆண்டு நிறுவினார். இம்மருத்துவமனையின் கட்டிடச் செலவினைப் போர்த்துக்கல் நாட்டு மன்னரே ஏற்றுக் கொண்டார். (12) இப்போர்த்துக்கீசிய மருத்துவமனையின் நிரந்தரப் பொருளாதாரத்துக்கென்று, முத்துக்குளித்துறைத் தளபதி மனுவேல் குட்டினோ செய்த விண்ணப்பத்திற்கிணங்க, கோவை மேலாணையாளர் (Viceroy) ஆண்டுதோறும் 100 ஸ்குடி என்னும் தொகை அனுப்பி வைத்தார்.(13)

மருத்துவமனையின் மறைவு:

பொதுமக்களுக்காகவும் போர்த்துக்கீஸியருக்காகவும் புன்னைக்காயலில் ஏற்படுத்தப்பட்ட இவ்விரு முதல் மருத்துவமனைகளும் 1553-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிரிகள் (வடுகர்கள்) புன்னைக்காயல் மீது நடத்திய படையெடுப்பின் போது நெருப்புக்கு இரையாகி அழிந்து போயின என்று சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் புனித இஞ்ஞாசியருக்கு எழுதியுள்ள மடலிலிருந்து அறிகிறோம்.. (14) அதன் பிறகு யேசு சபைக் குருக்கள் மக்கள் தாராளமுடன் வழங்கிய நன்கொடையைக் கண்டு மீண்டும் ஒரு மருத்துவமனையைப் புன்னைக்காயலில் எழுப்பினார். இம்மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்களுக்குக் கிறிஸ்தவ மக்கள் வழங்கிய தர்மப் பணத்திலிருந்தே சம்பளம் வழங்கப்பட்டது. 

இந்த மருத்துவமனையானது 1590-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. (15) முத்துக்குளித் துறையில் 1579-ஆம் ஆண்டு வரை யேசு சபையின் தலைமை இல்லமாக விளங்கிய புன்னைக்காயலின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து யேசு சபையினர் தங்களின் தலைமை இல்லத்தைத் தூத்துக்குடிக்கு மாற்றிவிட்டனர். அது முதல் புன்னைக்காயல் மருத்துவமனையும் தனது பழைய மாண்பினை இழந்து விட்டது. (16). அடிக்கடிப் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கனின் வடுகர் படையினர் நடத்தியத் தாக்குதலின் போது இம்மருத்துவமனையும் வலிமை இழந்து படிப்படியாக மறைந்திருக்க வேண்டும் என நம்பலாம்.

பிற மருத்துவ மனைகள்:

புன்னைக்காயல் மருத்துவமனையினால் மக்களுக்கும், கிறிஸ்தவ மறைக்கும் விளைந்த ஏராளமான நன்மைகளைப் பார்த்துவிட்டு முத்துக்குளித்துறையின் மற்ற முக்கிய ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைப்பதற்குச் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி 1566-ஆம் ஆண்டு சில பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்பினை கிறிஸ்தவ மக்களிடமே அவர் ஒப்படைத்தார். 

மேலும் மருத்துவர்களாகவும் இப்பகுதியில் வாழும் மக்களையே நியமித்தார். ஒவ்வொரு கிறிஸ்தவ ஊரிலுமுள்ள பொதுமக்களிடமிருந்து உணவும், உடையும் தர்மமாகப்பெற்று இம்மருத்துவமனைகளிலுள்ள ஏழைப் பிணியாளர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். தூத்துக்குடியில் கிறிஸ்தவத் தனவந்தர் ஒருவர் தனது சொந்த செலவிலேயே பெரிய மருத்துவமனையொன்றை நிறுவினார். 

முத்துக்குளிப்பு நடக்கும்போதெல்லாம் தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவ மக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராளமுடன் பொருளுதவி வழங்கினர் (17). தூத்துக்குடி மருத்துவமனையானது 1603-ஆம் ஆண்டு கயத்தாறு மன்னனும், மதுரை நாயகனும் சேர்ந்து தூத்துக்குடியின் மீது நடத்திய தாக்குதலின் போது நெருப்புக்கு இறையாகி அழிந்தது. (18)

1572-ஆம் ஆண்டின் யேசு சபைக் கணக்குப்படி, முத்துக்குளித்துறையில் மொத்தம் 27 கிறிஸ்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன.

1. மணப்பாடு

2. வீரபாண்டியன்பட்டணம்

3. புன்னைக்காயல்

4. தூத்துக்குடி

5. வைப்பாறு

6. மன்னார்

மன்னாரில் போர்த்துக்கீஸியருக்கும் பொதுமக்களுக்கும் என்று இரு மருத்துவமனைகள் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளிலும் மிகப் பெரியதும், சிறப்பு மிக்கதும் புன்னைக்காயல் மருத்துவமனையே! (19) தமிழ்நாட்டின் மருத்துவப் பணிக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி, கிறிஸ்தவப் பிறரன்பை சாதிமத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கி வந்த புன்னைக்காயலைத் தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

(நன்றி:ஞானதூதன் 1977)


அருட்திரு. வெனான்சியுஸ்


வரலாற்று ஆய்வாளர், தூத்துக்குடி மறை மாவட்டம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ






நவ.22,2017. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் பிதேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ (Fidelis Lionel Emmanuel Fernando) அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1948ம் ஆண்டு மே 20ம் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆயர் இம்மானுவேல் அவர்கள், கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கென 1973ம் ஆண்டு சனவரி 6ம் நாள், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் பெற்றோர், தமிழகத்தின் தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த வேம்பார் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர், கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை முடித்து, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புனித அலாய்சியஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில், மெய்யியலை முடித்த இவர், இறையியல் படிப்புக்காக உரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். உரோம் உர்பானியானம் பாப்பிறை கல்லூரியில் இறையியலை முடித்து, அறநெறியியலில் முதுகலை பட்டமும் பெற்றார். 

1981ம் ஆண்டு முதல், 1987ம் ஆண்டு வரை, கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆயர் இம்மானுவேல் அவர்கள், பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தில், ஏறக்குறைய 85 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Source

புறநானூறில் பரதவர்


புறநானூறில் இருந்து பரதவர் பற்றிய இன்னும் சில தகவல்கள்

புறநானூறு 378

சோழ வேந்தன் நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான். 

தென்னாட்டுப் பரதவரின் கொட்டத்தை அடக்கி அவர்களை வேரோடு சாய்த்தான். வடநாட்டு வடுகரை வாட்போரில் வென்றான். அவன் தலையில் தொடுத்த கண்ணி. கையில் வேல்.அவன் குதிரையின் குளம்பு [வடிம்பு] எங்கும் பாவின.

அவன் அரண்மனை [கோயில்] தோரண மாலை, கள் ஆகியவற்றின் இருப்பிடம். மேற்குத் திசையில் தோன்றும் பிறை வடிவில் வெண்ணிறத்தில் அமந்திருந்தது. குளிரந்த நீர் கொண்ட குளம் போன்ற அகழியுடன் திகழ்ந்தது.
அந்தக் கோட்டை வாயிலில் நின்றுகொண்டு, தன் பெரிய கிணைப் பறையை முழக்கிக்கொண்டு, வேந்தனின் வஞ்சிப்போர் வெற்றியைப் பாடினார்.


அதனைக் கேட்ட வேந்தன் அரிய அணிகலச் செல்வத்தைப் பரிசாக வழங்கினான். அவை புலவருக்காகச் செய்யப்பட்டவை அல்ல. மேம்பட்ட சிறப்புடையவை. புலவர் தாங்கமுடியாத அளவு மிகுதியாக வழங்கினான்.


அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணிய வேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணிய வேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர்.

இது எப்படியிருந்தது என்றால்,

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது.


தென் #பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஓட்டிய,

தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக்கை,

கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,

நல் தார், கள்ளின், சோழன் கோயில், 5

புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,

பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்

அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,

எஞ்சா மரபின் வஞ்சி பாட,




எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, 10

மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை

தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,





இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,

விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,

செவித் தொடர் மரபின விரல்செறிக்குநரும், 15

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,

மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20

செம் முகப் பெருங் கிளை இழைப்பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.


திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங் குடையார்பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

The Lord's Prayer into the Tamil language by Philippus Baldaeus - 1620


The Lord's Prayer into the Tamil language by Philippus Baldaeus - 1620

From the book:

A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel. As also of the isle of Ceylon; with all the adjacent kingdoms, principalities, provinces, cities, chief harbours, structures, pagan temples, products, and living creatures: the manners, habits oeconomies and ceremonies of the inhabitants. As likewise the most remarkable warlike exploits, sieges, sea and field-engagements betwixt the Portuguese and Dutch; with their traffick and commerce. The whole adorned with new maps and draughts of the chief cities, forts, habits, living creatures, fruits, &c . of the product of the Indies, drawn to the life, and cut in copper plates. Also a most circumstantial and compleat account of the idolatry of the pagans in the East Indies, the Malabars, Benjans, Gentives, Brahmans, &c. Taken partly from their own Vedam, or law-book, and authentick manuscripts ...with the draughts of their idols, done after their originals.

By Philippus Baldaeus (1632-1672)
Translated fro the High Dutch by Awnsham Churchill in 1671
Printed for A. and J. Churchill, London -1703

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938


வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில், சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.

அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின் அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும், அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றிய பின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.

சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைல்கள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும், பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது. 

தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று, இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக, அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது. உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையுமாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48 வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28 வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி (24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். 

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும் “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள் கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.

அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றைய நாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்களின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.

“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள் வல்வெட்டித்துறையிலும், அதனை அடுத்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும், வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும், வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”

அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.

அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.

அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம் தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.

பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம் சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.

இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம், அத்திலாந்திக்சமுத்திரம், பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும் சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.

அமெரிக்க மற்றும் ஸ்ரீலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக (15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813 இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணி அம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறைமுகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இலங்கை மக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில் வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம் தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நுட்பத்திறனும் அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளுர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா, காக்கிநாடா, தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்.... ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிருககாதல்லவா....

ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?





ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்

அகநானூறில் பரதவர்


அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

10 நெய்தல்

[இரவுக்குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.]

வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய

மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த

முடிவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்

புள்ளிறை கூறும் மெல்ல புலம்ப.நெய்தல் உண்கண் பைதல கலுழப்

பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்

அரிதுதுற் றனை யாற் பெரும உரிதினிற்

கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு

குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப். 

பழந்திமில் கொன்ற புதுவலைப் #பரதவர்

மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி 

மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்

வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே.

-அம்மூவனார்.

(சொ - ள்.) 1-4. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய-பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன - விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அருபு ஊழ்த்த - மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடிவுமுதிர் புன்னை - முடம் பட்ட முதிர்ந்த புன்னைமரத்தின், தடவுநிலை மாசினை - பெரிய நிலையை


அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள் ‘அகம்’ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு. . .’ என இந் நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com