வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 22 December 2017

OUR CHURCH'S - 6

புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை 


ஆலய வரலாறு:


இடிந்தகரையின் முதல் ஆலயம் புனித இராயப்பர் மற்றும் சின்னப்பர் பெயரில் 1552ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஊரின் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக இருந்தது. இக்கோவில் சிறியதாகவும், பழமையாகவும் இருந்ததாலும், கடல் ஆலயப்பரப்பை நெருங்கியதாலும், சற்று வடமேற்காக பெரிய ஆலயம் ஒன்றைக்கட்ட மக்கள் தீர்மானித்தார்கள். கைவிடப்பட்ட பழைய ஆலயத்தில் புனித வியாகுல அன்னை கன்னியர் மடம் இயங்க ஆரம்பித்தது. பிறகு மடத்தைப் புதுப்பித்த போது, பழமையின் அருமை அறியாமல் கோவிலின் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது. 1833ல் புதிய கோவிலுக்காக ஊர்ச் செலவில் அந்திரைக்கட்டியார் மகன் தொம்மை சுவானி பட்டங்கட்டியாரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. 

கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது. இடிந்தகரை முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. 

அன்னையின் சிலை பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டது. முற்றுப் பெறாத நிலையில் 1906ம் ஆண்டு பெப்ரவரி 2ம் தேதி ஆலயம் திறக்கப்பட்டது. அதுவரை ஆலயக் கட்டுமானச் செலவு ரூ.20,000/-.1928ம்ஆண்டு கோவில் முகப்பில் 91 அடி உயரமுள்ள இரு ஊசிக் கோபுரங்களும், ஒலி எழுப்ப பெரிய மணியும் அமைக்கப்பட்டன. திருமுழுக்கு வழங்கப்பட்ட கோவில் மணியின் பெயர் சுந்தரி. 1932ம் ஆண்டு மலையுடன் கூடிய கெபி கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய கெபியும், ஒழுங்காக அமையப்பெற்ற தேரோடும் வீதியும் வேறெந்த நெய்தல் கிராமத்திலும் இல்லை. 

இக்கெபியில் அழகிய ஸ்தலங்கள் இருந்தன. அழகுணர்வு இல்லாத பாதிரியார் ஒருவரால் 1983-87ல் ஸ்தலங்கள் மற்றும் கோவில் பீடம் இடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டன. 1954-55ல் கோவில் முன் மேடை அமைக்கப்பட்டது. 1955-57ல் தேரும் அதற்க்கான பிறையும் அமைக்கப்பட்டன. இதே காலத்தில் முதலில் சுவரில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த லூர்து அன்னை, புனித இராயப்பர் மற்றும் புனித சின்னப்பர் சிலைகள் அழகிய தேக்கு மரப்பீடம் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டன. 1962ம் ஆண்டு லூர்து மலையில் அன்னையின் பாதம்பட்ட கல் ஒன்று இவ்வாலயக் கெபியில் உள்ள மலையில்அமலோற்ப்பவ அன்னை சிலையின் நேர் கீழாக பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் திருமுழுக்குப் பெற்ற இருவர் ஆயர்களாகவும், 35க்கும் அதிகமானோர் துறவிகளாகவும், 100க்கும் அதிகமானோர் கன்னியர்களாகவும்  ஆகியிருப்பது உலகில் வேறு எந்த ஆலயத்திற்கும் கிடைக்காத பெருமை.

ஆலய அமைப்பு:

தென் தமிழகத்தில் இதன் வயதை ஒத்த ஆலயங்களில் இதுவே கொள்ளளவில் பெரிய ஆலயம்.கோவிலின் நீளமும், அகலமும் உயரமும் மற்ற கோவில்களை விடக் கூடுதல்.கோவிலின் நடுவில் மொத்தம் பக்கத்திற்கு 7 வீதம் 14 பெரிய தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 4 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பக்கச் சுவர்களில் பக்கத்திற்கு 7 வீதம் 14 தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பிற்காலத்தில் இவற்றின் மீது சாந்து பூசப்பட்டதால் இன்று ஒரே தூண் போல காட்சி அளிக்கிறது. 

மிக உயரமான, பெரிய, பாரமுள்ள கோவில் மாடத்தை இத்தூண்களே தாங்குகின்றன. இவ்வளவு நீளமான கல் தூண்களை எங்கிருந்து, எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. ஒவ்வொரு நான்கு கல்தூண்களையும் இணைத்துப் பிடிக்க அடியிலும்,மேல்முகட்டிலும் வட்ட வடிவ கல் பொருத்தப்பட்டுள்ளது.ஏராளமான தூண்கள் இருந்தாலும், கோவில் பீடத்தை கோவிலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் தெளிவாகப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. மக்கள் ஆலயத்திற்குள் நுழைய முன்புறம் கிழக்குப்பகுதியில் பெரிய மேடையும், அதை அடுத்து 3 வாயில்களும், வடக்குப்பகுதியில் 2ம், தெற்குப் பகுதியில் 2மாக , மொத்தம் 7 வாயில்கள் உள்ளன. 

பாதிரியாரும் கோவில் பணியாளர்களும் உள்ளே நுழைய சிறப்பு வழி உள்ளது. அனைத்து வாயில்களின் முன் ஒழுங்கான படிக்கட்டுகள் கைப்பிடி வசதியுடன் உள்ளன. கோவிலின் முன் மேடை கட்டப்பட்டதால் முன் தோற்றம் குட்டையாகத் தெரிகிறது. முன்பகுதியில் 2 ஊசிக் கோபுரங்களும், அவற்றினிடையே 4 சிறு கோபுரங்களும் உள்ளன. கோவில் மாடம் முழுக்க பக்கத்திற்க்கொன்றாக 11 வீதம் 22 சிறு கோபுரங்கள் உள்ளன. இதற்கு அடுத்த அடுக்கில் பக்கத்திற்க்கொன்றாக 9 வீதம் 18 சிறு கோபுரங்கள் உள்ளன. 

கோவில் மாடத்தில் அலங்காரம் செய்ய வசதியாக பெரிய துளைகள் உள்ளன. 800 கிலோ எடை கொண்ட கோவில் மணி இடது புறம் உள்ளது. இதன் நாதம் 3 கிமீ அப்பால் வரை ஒலிக்கக் கூடியது.கோவில் மாடம் செல்ல வலதுபுறம் வளைவுப் படிக் கட்டுகள் உள்ளன.திருமுழுக்குத் தொட்டி கோவிலின் முதன்மை வாயிலின் அருகில் உள்ளது. ஜன்னல் மாடங்களில் வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அழகிய பீடம் தேக்கு மர வேலைப்பாடுகள் நிறைந்தது. இதன் உச்சியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நடுவில் அன்னையின் ஆளுயரச் சிலையும் இருபுறமும் ஊர்ப் பாதுகாவலர்களான புனித இராயப்பர், சின்னப்பர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த தரை ஓடுகள் அகற்றப்பட்டு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சிலுவைப்பாதை வழிபாட்டுக்கென கோவிலின் உள்ளும் புறமும் ஒழுங்கான வழி உள்ளது.கோவிலின் வலது புறம் கெபி அருகில் உள்ள கிணறு, மாதா கிணறு என்று அழைக்கப்படுகிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக நூறாண்டுகளைத் தாண்டியும் வரும் மக்கள் கூட்டத்தை தாங்கும் திறன் கொண்ட இக்கோவிலின் உள்ளே நுழையும் போது மனதில் தோன்றும் அமைதியையும், அன்னையின் எழில் உருவைக் காணும் போது எழும் பெருமகிழ்ச்சியை வர்ணிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

(நன்றி: இடிந்தகரை நூற்றாண்டு விழா மலர், திரு.யு.ப.மில்ட்டன்)
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com