Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

வேம்பாற்றுவாசிகளின் கல்வி நிலையங்கள்



கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய வேம்பாற்றுவாசிகள் தங்களுக்கென கல்விக்கூடங்களை அமைத்த வரலாற்றை இக்கட்டுரை விளிக்கின்றது. 

1571 ஆம் ஆண்டு சேசு சபை அறிக்கையின்படி வேம்பாற்றில் பாடசாலை நடைபெற்று வந்ததை அறிய முடிகிறது. அதில் முத்துக்குளித்துறையின் மற்ற பாடசாலைகளைப் போன்றே தமிழ் மொழியும், போர்த்துக்கீசிய மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். நாளடைவில் வடுகர்கள், மறவர்கள் மற்றும் பல்வேறு குறுநில மன்னர்களின் படையெடுப்பால் அது சிதைவுற்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக 1883 ஆம் ஆண்டு வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தின் பங்குத்தந்தை சங். இராயப்பன் சுவாமிகள் தனது பெயர் கொண்ட புனிதரான இராயப்பர் பெயரால் ஓர் ஆரம்பப் பாடசாலையை (புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை) நிறுவினார். அப்பாடசாலையானது சங். D. சுவாமிநாதர் சுவாமிகள் பங்குத்தந்தையாக இருக்கும் காலத்தில் 1903 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் லோயர் பிரெய்மெரி கலப்பு பாடசாலையாகவும், 1905 ஆம் ஆண்டு அப்பர் பிரெய்மெரி கலப்பு பாடசாலையாகவும் மாற்றப்பட்டது. பின்னர் 1907 ஆம் ஆண்டு ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பாடசாலைகள் பிரிக்கப்பட்டு, ஆண்கள் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், பெண்கள் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையிலும் கற்பிக்கப்பட்டது. ஆண்கள் பாடசாலை புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை எனவும், பெண்கள் பாடசாலை அர்ச். மார்கிரீத் மரியன்னை பாடசாலை எனவும் அழைக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை தூத்துக்குடி ரேஞ்சுக்குட்பட்ட ஆரம்பப்பள்ளிகள் நான்கினுள் முதன்மையானதாகத் திகழ்ந்தது.


இப்பள்ளியின் முன்னேற்றம் மற்ற பள்ளிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற நோக்கில் சப்இன்ஸ்பெக்டர் திரு. T. பரஞ்சோதி B.A.L.T அவர்கள் 1911 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்க ஒன்றினை உருவாக்கினார். அதன் அதிபராக  கோவில்பட்டி ஜூனியர் சப்இன்ஸ்பெக்டர் திரு. N. சேஷய்யர் B.A.L.T அவர்களும், உபஅதிபராக விளாத்திகுளம் சூப்பெரின்டெண்ட்டன்ட் திரு.G. வெங்கட்டராமைய்யா அவர்களும், செயலாளராக பள்ளியின் தலைமையாசிரியரும் செயல்பட்டனர். இப்பள்ளியுடன் பெரியசாமிபுரம், வைப்பாறு, சிப்பிக்குளம், பொம்மையாபுரம், மார்தாண்டன்பட்டி, வௌவால்தொத்தி, நாகலாபுரம், செவல்பட்டி, நரிப்பூர், மூக்கூர், குஞ்செயபுரம், எதிரணைப்பட்டி, மேலமாந்தை, சூரங்குடி ஆகிய பதினான்கு கிராமங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று இவ்வங்கத்தினர் கூடி விவாதிப்பார். 

அந்தகாலகட்டத்தில் வேம்பாற்றில் இருந்த அமலோற்பவ ஜுபிலி கிளப் உறுப்பினர்கள் பள்ளியின் நிர்வாகத்திலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டு விளங்கினர். 1912 ல் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன. அமலோற்பவ ஜுபிலி கிளப்பில் ஏற்பட்ட மனதாங்கல்  ஆசிரியர் சங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

இதே சுழலில் பங்குக்குருவாக இருந்த சங். சுவாமிநாதர் சுவாமிகள் மாற்றப்பட்டு புதிய பங்குகுருவாக நியமிக்கப்பட்ட சங். P.J. மரியதாஸ் சுவாமிகள் 1918 ல் புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டும் பொருட்டு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆசிரியர் சங்கத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்கின. இதனால் திரு. சீனியாப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் இராயப்பர் பாடசாலையிலிருந்து விலகி வாலசமுத்திரபுரத்தில் ஏட்டுப்பள்ளி ஒன்றினை நிறுவி கற்பிக்கத் தொடங்கினார். பள்ளியில் கற்பித்தலில் குளறுபடிகள் உருவானதால் பலர் திருச்சி, பாளையம்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று கற்கத் தொடங்கினர்.

1920 - 21 ஆம் ஆண்டுகளில் 40 பேர் பாளையம்கோட்டையில் மட்டும் பயின்றனர். அப்போது புனித இராயப்பர் பாடசாலையின் தலைமையாசிரியர் திரு. தாமஸ்பிள்ளை அவர்களுக்கும் வேம்பார் பரதகுல மக்களுக்கும் இடையே மிக கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றியது. அதேநிமித்தம் பங்குக்குருவும் தலைமையாசிரியருடன் இணைந்து பள்ளியை மூடிவிட்டதுடன் அதனை வாலசுப்பிரமணியபுரத்திற்கு மாற்றி திறந்து வைத்தார். இப்பள்ளியானது 1925 ல் புனித தோமையார் ஆலய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1927 ஆம் ஆண்டு முதல் அரசு அனுமதி கிடைக்காமல் நடந்த புனித இராயப்பர் பாடசாலை 1942 ல் அரசு அனுமதி பெற்றது. 1955 ல் இப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் உருவாகி, விரைவில் நடுநிலைப்பள்ளியாக மாறியது.

இதற்கிடையே பாடசாலை இல்லாத காரணத்தால் கல்வி கற்கும் வயதுடைய மாணாக்கர்கள் கல்வி பெற இயலாமல் போனது. இந்நிலையில் பாடசாலையின் அவசியத்தை உணர்ந்த மக்கள் புதிய பாடசாலையை அமைக்கத் திட்டமிட்டனர். 1923 ஆம் ஆண்டில் வேம்பாற்றை சேர்ந்த திரு. குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு புனித செபஸ்தியார் ஆரம்ப பாடசாலை துவங்கப்பட்டு 18.05.1924 அன்று அரசின் அனுமதியுடன் நான்காம் வகுப்பு வரை நடத்தி வந்தார்கள். முத்துக்குளித்துறை மறைமாவட்டம் உருவான பின் பங்கினை ஒப்புக்கொண்ட  சங். S. மரியதாஸ் சுவாமிகளின் பெரும் முயற்சியினாலும் திரு. லாசர் பர்னாந்து, திரு.  S.S. வாஸ், திரு. L.A கர்வாலோ, திரு. நீ. விசுவாசம் பர்னாந்து ஆகியோரின் பெரும் ஒத்துழைப்பாலும் துணை பங்குக்குருவாக இருந்த சங். கபிரியேல் தவத்த சுவாமிகளின் பெரும் முயற்சியாலும் 100 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியை கட்டி முடித்தனர்.

1925 ஜனவரி 23 ஆம் தேதி வியாகுல அன்னை கன்னியர்கள் நால்வர் பரிசுத்த ஆவி பங்கிற்கு வந்து சேர்ந்தனர். பெண் கல்வியை கருத்தில் கொண்டு நடந்து வந்த புனித மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை கன்னியர் இல்லத்திலே நடந்து வந்தது. S. மரியதாஸ் சுவாமிகள் நான்காம் வகுப்பு வரை இருந்த புனித செபஸ்தியார் ஆரம்ப பாடசாலை லோயர் செகெண்டரியாக மாற்றினார். இக்காலகட்டத்தில் வேம்பாற்றில் பரத குலத்தவரே அதிகம் வாழ்ந்தனர். இலங்கை வாணிகம் மற்றும் உள்ளூர் கடல் தொழிலாலும் கிடைத்த பொருளாதார வசதியினால் செழிப்புற்று வாழ்ந்தனர். எனவே இரு பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் இருந்தனர்.

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கு சென்று குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணத்தால் இரு பாடசாலைகளிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைந்தது. எனவே 1964 ஆம் ஆண்டில் பங்குக்குருவாக இருந்த சங். G.சூசைநாதர் சுவாமிகள் நம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் சுற்று வட்டார மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் கருணை இல்லம் ஒன்றினை உருவாக்கினார். அரசு அனுமதி கிடைக்கும் வரையில் தமது சொந்த பணத்திலே நடத்தி வந்தார். கிராமத்தலைவர் திரு. தம்பிராஜ் கர்வாலோ, அருட்சகோதரி. பொனவந்தூர் மேரி, அருட்சகோதரி. கொன்செப்தா மேரி   இவர்களுடன் இணைந்து அரசு அங்கீகாரமும் பெற செய்தார். இன்று புனித சூசையப்பர் கருணை இல்லம் என்ற பெயரில் நடைபெறும் விடுதியில் தூத்துக்குடி, இராமநாதபுரம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவ, மாணவியர் தங்கி பயின்று வருகிறார்கள். மாணவ மாணவியரின் எண்ணிக்கையை மேலும் சரி செய்ய மேற்கூரிய நால்வரும் கலந்து பேசி இரு பள்ளிகளையும் ஒருங்கிணைத்து ஒரே பள்ளியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்படி 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புனித மார்கரீத் மரியன்னை பாடசாலை, புனித செபஸ்தியார் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.

அப்போது புனித செபஸ்தியார் பாடசாலையின் தலைமையாசிரியர் திரு. ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தமது தலைமையாசிரியர் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு அளித்தார். இதனால் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியராக அருட்சகோதரி. பெனற்றாமேரி அவர்கள் பொறுப்பேற்றார்கள். மார்கரீத் மரியன்னை பாடசாலை இருந்த கட்டிடம் புனித சூசையப்பர் கருணை இல்லமாக மாறியது. சங். பவுல் அலங்காரம் சுவாமிகளாலும், சங். சேசு அருளப்பன் சுவாமிகளாலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு போதிய இடவசதி உள்ளதாக திகழ்கிறது.

1977 ஆம் ஆண்டு கருணை இல்ல மாணவ, மாணவியர்கள் மற்றும் நமதூர் மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவ விடுதி ஓன்று கருணை இல்லத்தின் அருகே அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சில குழப்பங்களுக்குப் பின் புனித தோமையார் பங்கிற்கு மாற்றி அமைக்கப்பட்டு 07.10.1977 அன்று சாக்ரோஸ் மருந்தகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. அவ்வாறே நமதூர் குழந்தைகளின் மேற்கல்வியை மனதில் கொண்டுதிரு. தம்பிராஜ் கர்வாலோ அவர்களின் மேற்கொண்ட சீரிய முயற்சியால் 1958 ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பாடசாலைக்கு அருகிலே அரசு உயர்நிலைப்பள்ளி உருவானது. 12.04.1960 அன்று ரோச் பாளையத்தில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பள்ளி 2004 ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளியாக மாறி சிறப்புடன் நடைபெறு வருகிறது என்பதும் நமக்கு என்றும் பெருமிதமே.

மேலும் நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு 2001 – 2002 ஆம் கல்வியாண்டில் புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை அளித்து பெருமைபடுத்தியுள்ளது. திரு. சுதந்திரசீலன் விக்டோரியா அவர்களின் பெரும் உதவியால் 2002 – 2003 ஆம் கல்வியாண்டு முதல் கணினிக் கல்வியை பயிற்சி அளித்து வருகிறது. பங்கு குரு சங். ரஞ்சித்குமார் கார்டோசா சுவாமிகள் அவர்களின் அரும்பெரும் முயற்சியினால் தற்போதைய ஆயர் வந். இவான் அம்புரோயிஸ் அவர்களின் பரிந்துரையால் புனித செபஸ்தியார் பாடசாலை புதிதாக கட்டப்பட்டு 20.01.2007 அன்று திறந்து வைக்கப்பட்டு இன்று புதுபொலிவுடன் திகழ்கிறது. அவ்வாறே 2011 - 2012 ஆம் கல்வியாண்டில் புனித இராயப்பர் நடுநிலைப்பள்ளியும் தமிழக அரசின் சிறந்த பள்ளி விருதை பெற்றதும் நமக்கு பெரும் பெருமையே.

நிம்பநகர் என்னும் வேம்பார் - எண்சீர்

நிம்பநகர் என்னும் வேம்பார் - (எண்சீர்)


புனிதரான சவேரியாரின் பாதம் பட்ட
புனிதரிவர் புதுமைகளைக் கண்டு கொண்ட
அணிதவழும் நிம்பநகர் என்னும் வேம்பார்
அலைகடல் சூழ் அரும்பதியில் அங்குமிங்கும்
அணிஅணியாய் வேப்பமரம் சூழ்ந்து நிற்க
அன்றோருங்கால் மீனவராம் பரவர் மக்கள்
கனிகொடுக்கும்  திராட்சைபோல படர்ந்து நின்று
கடல்வளங்கள் தேடிவந்து வாழ்வு கொண்டார்!

கல்விக்கண் திறந்தபின்னர் கடலைத் தாண்டி
காசுபணம் சேர்ப்பதற்காய் இலங்கை சென்றார்
அல்பகலாய் உழைத்ததனால் செல்வம் பெற்று
அவரவரின் குடும்பவாழ்வு சிறக்க செய்தார்
கல்மனைகள் கல்விதரும் பாட சாலை
கச்சிதமாய் நிறுவியவர் பெருமை பெற்றார்
தொல்தமிழின் இனிமையினை நுகர்ந்து தங்கள்
திறமையினால் புலமைபெற்று அறிஞர் ஆனார்!

பரிசுத்த ஆவியாரின் கோயில் கட்ட
பொன்மனத்துச் செம்மலான அய்யாத் தம்பி
அருளுடைய தமேலான்பார் அள்ளித் தந்தார்
அவருடைய தொண்ணூறு ஆய்ரம் ரூபாய்
பரிசுத்த ஆவியாரின் கோயில் காண
பெருமனத்தால் ஊராரும் உழைப்பு நல்க
அருமையான ஆலயமே எழுந்த தாமே
அன்புடைய தமேலுக்கு நன்றி என்றார்!

காலத்தின் கோலத்தால் கல்விக் கூடம்
கரைகடந்து அகன்றுபோக அல்ல லூற்றார்
ஞாலத்தில் கல்வியன்றி வாழ லாமோ?
நியாயத்தைக் கண்டறிந்த ஞானி யான
நிம்ப நகரோர் ஒன்றி ணைந்து
தம்முடைய செல்வாக்கை உபயோ கித்து
மேலிடத்தின் உத்தரவால் செபஸ்தியார் பள்ளி
மேன்மையுடன் வேம்பாரில் நிறுவ லானார்!

பரிசுத்த ஆவியாரின் கோயில் செய்து
புனிதரான செபஸ்தியாரின் பாது கொண்டு
திருச்சபையின் விசுவாச வாழ்வு தாங்கி
திருச்சபையின் துறவறத்தில் தொண்டு செய்ய
அருமந்த பிள்ளைகளை அர்ப்ப ணித்தார்
ஆனந்த வாழ்வியலை அடைந்து நின்றார்
மறுக்கவொண்ணா புனிதவாழ்வில் ஊன்றி நின்று
முறையாக வழிபாடு நடத்தி வந்தார்!

பட்டங்கள் பதவிகளைப் பெற்று வந்து
பகட்டறிவும் பரவலாகப் பெற்று நின்று
சொற்றரிய கவிஞராக கலைஞ ராக
தொழில்நுட்ப வல்லராக புகழும் பெற்றார்
உற்றவிதம் வாணிபத்தில் ஈடு பட்டு
ஒப்பற்ற செல்வத்தை திரட்டி அன்று
அட்டியின்றி ஆதரவு அற்ற வர்க்கு
அகங்குளிர தானதர்மம் நல்கி வந்தார்!

தம்மிடையே ஆழமான உறவு செப்பி
தம்நலனைக் கருதாது உறவோர் வாழ
தம்மியல்புக் கேற்றபடி உதவி செய்து
தம்மிடையே சமாதனம் நிலைக்கச் செய்தார்
வெம்புதுயர் நோய்பிணியால் வாடு வோரில்
வியத்தகுநல் நேசபாசம் காட்டி அன்று
அப்புவியில் சுகநலமாய் அவர்கள் வாழ
அக்கறையாய் சேவைபல செய்து காத்தார்!                

கருத்து வேற்றுமையாய் இருந்த போதிலும்
கண்ணியமாய் பிறருடனே கலந்து பேசி
அருமையாக காரியத்தை இவனே செய்வான்
என்பதாக ஆய்ந்தறிந்து அவன்கண் அஃதை
முறையாக ஒப்படைத்து மதித்து வந்தார்
முழுபலனும் அடைந்துநின்று மகிழ்வு கொண்டார் 
பெரியோரின் வார்த்தையினை சங்கை செய்தார்
பெறற்கரிய வெற்றியினைப் பெற்று வந்தார்!

இலங்கைதேயம் அரசியலின் சுதந்த ரத்தை
இறுதியாக தொளாயிரத்து நாற்பத் தெட்டில்
நிலஉலகில் பெற்றபின்னர் சட்ட திட்டம்
நறுக்கெனவே செய்ததாலே நலிவு கொண்டார்
தலமிருந்த மக்களெல்லாம் மோசம் போனார்
தம்குடும்பம் வாழ்வதற்கு வழியே யில்லை
இலங்கைதேய ஊதியங்கள் இங்கு வாரா
இங்குள்ளோர் வாழவேண்டி இலங்கை சென்றார்!

இவ்விதமாய் நாடுமாறிச் சென்ற தாலே
இவ்வூரில் சனத்திரளும் அற்றுப் போக
அவ்விதமாய் பணபலமும் குன்றிப் போக
அரைகுறையாம் எண்ணிக்கை கொண்ட மக்கள்
செவ்வையான வாழ்வுவாழ இருக்கண் ணுற்றர்
சேமமுற வாழ்வதற்கு வழிஆய்ந் தாரே
எவ்விதமும் இந்தியாவில் பிழைப்புக் காண
இளைஞரையே பெற்றோரும் தூண்ட லானார்!

இளைஞருமே இந்தியாவில் வேலை தேடி
இங்குமங்கும் அலுவலிலே சேர்ந்து கொண்டார்
மழைபொழிந்து பசுங்கதிர் மணிகள் பெற்று
மாவழகாய் தோன்றுகின்ற தன்மை நீங்கி
களையிழந்து காட்சிதரும் கழனி போன்று
கவினுறவே காலமெல்லாம் ஓங்கி நின்ற
பழம்பதியாம் நிம்பநகர் பவிழ்சு மங்கி
பாருலகில் தோன்றியது கொடிய தாமே!


        -    மதுரங்கிளி மகிபன் விக்டோரியா

வேம்பார் சித்திரக்கவி சவியேர் இன்னாசி முத்தையா ரொத்ரிகோ



கீழக்கரையை பிதாவின் இருப்பிடமாகவும் வேம்பாரை மாதாவின் பிறப்பிடமாகவும் கொண்ட புலவர்களின் முழுநாமம், “ செ.மு. சவியேர் இன்னாசி முத்தையா ரொத்ரிகோ” என்பதாகும். மக்கள், அவர்களை மரியாதையாக “செ.மு.” என்று அழைப்பர். இவருடைய குடும்பத்திற்கு “அழகு பாண்டித் தேவர்“ என்ற அடைவிருது இன்றும் வழக்கிலுள்ளது.


மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினராய் (208), அச்சங்கத்திற்கு அழகு சேர்ந்த பெரும்புலவர்களில், இவரும் ஒருவராவார். இராமநாதபுரம் சேதுபதியின் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கின்றார். சேதுபதி மன்னர் மீது, பல நிகழ்ச்சிகளில் கவிபாடி பரிசில் பல பெற்றுள்ளார். சேதுபதியவர்களிடம் தாமிரப் பட்டயமும், பல கிராமங்களை இனாமாகவும் பெற்றுள்ளதாக, வரலாற்றுப் பரம்பரைச் செய்திகள் இன்றும் பறை சாற்றுகின்றன.

இவர் இலங்கையில் சிலாபம் என்னும் நகரில் வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள இவர் தொடக்கக் காலங்களில் இலங்கையிலிருந்து அடிக்கடி இந்தியா வந்து போயிருந்தலும், தம் வாழ்க்கையின் பிற்பாதியில் அதிகமாய் மதுரையிலேயே வாழ்ந்தார். எனினும் அவரை வேம்பாற்றுவாசி யென்றே, ஏனைய வித்வான்கள் அறிவர். புலவர்களின் மனையாள் பனையூர் ஜமீன் வம்ச வாரிசைச் சேர்ந்தவர்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்து நிர்வாகிகளாகிய சேதுபதி மன்னர், கானாடுகாத்தான் பெருநிலக் கிழார் பெத்தாச்சி செட்டியார், D. சுவாமிக்கண்ணுப் பிள்ளை, சீநிவாச அய்யங்கார், சிவசாமி அய்யர் ஆகிய சான்றோர்களுடன், புலவரிவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். 

புலவரிவர் பிறந்த வேம்பார் என அழைக்கப்படும் நிம்ப நகரின் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தூய ஆவியானவர் மீதும், அவ்வூர் பாதுகாவலரான புனித செபஸ்தியார் மீதும், மற்றும் புனிதர் பலர் மீதும் பல தேனினுமினிய பாடல்கள் பாடியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் பவனிப் பாடல்கள், விருத்த வெண்பாக்கள், திருமண கேளிக்கை, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான இன்னிசைப் பாடல்கள் பலவும் இசைத்துள்ளார்.

புலவரவர்களின் தனிச் சிறப்பு சித்திரக் கவி தீட்டுவது. இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியவர்கள், திருநெல்வேலியில் கூடிய தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் “500 வருடங்கட்குப் பின் தமிழ்நாடு காணும் சித்திரக்கவி” என்று புலவரவர்களுக்கு புகழாரம் சூட்டினார்கள். சதுரங்க பந்தக்கலித்துறை, சிலுவை பந்தவெண்பா, இரத பந்தவெண்பா, கமலபந்தவெண்பா, வினோத விசித்திர குதிரையடிச் சதுரங்க பந்த வெண்பா, உபய நாகபந்த வெண்பா, முரச பந்தவெண்பா என்று பல வகை சித்திரக்கவிகள் இவருடைய படைப்புகளாகும்.


புலவரவர்கள் தாம் இயற்றும் சித்திரக்கவிகளின் ஒவ்வொரு வகைக் கவியிலும் முதன் முதலாக தாம் வழிபடும் தெய்வத்திற்கும் புனிதர்களுக்கும் கவி இயற்றிய பின்னரே, ஏனையோர்க்கு அவ்வகைக் கவிகளை இயற்றுவார்கள். ஏறத்தாழ 65 வருடங்கள் வாழ்ந்த பின்னர், புலவரவர்கள் மதுரையில் 1919ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ந் தேதி மரணமானார்கள். தமிழ்ச் சங்க அங்கத்தினர்களும் மற்றும் மதுரைப் பிரமுகர்களும் சித்திரக் கவிஞரை சிறப்புடனே மதுரையில் அடக்கம் செய்தார்கள்.

உயிர்த்த சேசு பேரில் பாடல்

உயிர்த்த சேசு பேரில் பாடல் - 1 



காட்சி நல்ல காட்சி தானையா பரன் உயிர்த்தார் 
மாட்சிமை மிகுந்தாரே மெய்யாய் 

தாட்சியாய் திருசிலுவைதனில் உயிர் விட்டெமை 
மீட்சி செய்து மோட்சம் சேர்த்தவர் - 2 
தீட்சியாய் புரிந்தார் ஆட்சி 

சொல்லொண்ணாத பாடுபட்டு கள்ளன்போல உயிர்விட்டு 
வல்லமை மிகுந்த விதமாய் - 2
செல்வன் சேசுயிர்த் தெழுந்தார் 

வானவர் மகிழ்ந்து கூட மங்கள ஜெயங்கள் பாட 
ஈன அலகை வாடியோட - 2
கடவு ளன்று யிர்த்தார் 

நிம்பநகர் கணுகூலனே நித்திய ஜெயசீலனே
வம்பு செய் மானிடர் ஒழிய - 2
தம்பிரா னுயிர்த் தெழுந்தார் 

வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 6

வேம்பாறும் அதன் பாதுகாவலரும்




வேம்பாற்றில் கடல் தொழில் செய்து வந்த அனைத்துக் கடலோடிகளும் சந்த செபஸ்தியாரின் பேரிலே தங்களுக்கென “புனித செபஸ்தியார் நாட்டுப்படகு சங்கம்” என அமைக்கத் தூண்டிய உந்துதலும், சந்த செபஸ்தியார் திருத்தல நிர்மாணத்தின் வெள்ளிவிழா ஆண்டின் நிறைவாக வேம்பாறு பேருந்து நிலையத்தில் 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கவின் மிகு “சந்த செபஸ்தியார் சதுக்கமும்” (San Sebastian’s Square) சந்த செபஸ்தியாரின் மேல் வேம்பாற்றுவாசிகள் கொண்ட அன்பிற்கு தக்க முன்னூரணமாகும்.

2006 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரவிய சிக்குன்குனியா எனும் விஷக்காய்ச்சல் வேம்பாற்றிலும் கடுமையாகப் பரவியது. ஆரம்பத்தில் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிம்பவாசிகள் புனிதரை இரந்து வேண்டிக் கொண்டதன் பேரில் விரைவில் குணம் பெற்றனர். பின்னாட்களில் இக்காய்ச்சல் வேம்பாற்றுவாசிகளை மீண்டும் பாதிக்கவில்லை என்பதையும் குறிப்பிடுவது சாலச் சிறந்தது.

சந்த செபஸ்தியாரின் மேல் பெரும் பக்தியும், பற்றுறுதியும், மரியாதையும்; கொண்ட வேம்பாற்றுவாசிகள் தவறிழைக்கும் ஒருவரிடமிருந்து உண்மையைப் பெற சந்த செபஸ்தியாரின் முன்னிலையில் வாக்குமூலம் பெறும் வழக்கமும், உறுதி (சத்தியம்) பெறும் வழக்கமும், பெரும் தவறிழைக்கும் ஒருவரிடமிருந்து உண்மையைப் பெற சந்த செபஸ்தியாரை கட்டி அணைத்து உறுதி (சத்தியம்) பெறும் வழக்கமும் வேம்பாற்றில் அன்றிலிருந்து வழக்கிலுள்ளது.

ஆண்டின் முதல் மாதமாம் ஜனவரியில் 11 ஆம் தேதி முதல் 21 தேதி வரை கொண்டாடப்படும் சந்த செபஸ்தியாரின் பெருவிழாவில் முதல் 9 நாட்களும் அவருக்கென கவின்மிகு சிம்மாசனம் அமைக்கபட்டிருக்கும். 19 ஆம் தேதியன்று இரவு சப்பரபவனி நடைபெற்ற பின் சந்த செபஸ்தியாரின் முகத்தோற்றம் கண்டே அந்த ஆண்டு தங்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை நிம்பநகரோர் அறிந்து கொள்வர். அவ்வாறே 20 ஆம் தேதியன்று காலையிலும் சப்பரப்பவனி நடைபெறும். அதன் பின்னே சந்த செபஸ்தியாரின் மகோற்சவ பெருவிழா நடைபெறும்.

உலகெங்கும் பரவியிருக்கும் நிம்பவாசிகள் இன்றளவும் சந்த செபஸ்தியாரின் நாமத்தைத் தாங்கியே தங்களின் பெயர்களை அமைத்துக்கொள்ளும் சிந்தனை வேம்பாற்றுவாசிகளிடம் சங்கிலித் தொடர் போல்மேலெழுந்து காணப்படுவதும் மிகுந்த பக்தியின் வெளிப்பாடே. உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்தாலும் புனிதரின் சொரூபத்தையோ அல்லது படத்தையோ தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுவதும் தமது பாரம்பரிய வழிபாட்டின் தொடர்பே ஆகும். தமக்கு ஏற்படும் இன்ப, துன்பங்களில் புனிதரின் பாதுகாவலை தொடர்ந்து தங்களுக்கு உறுதுணையாய் மதித்து வருவதும் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொண்டாடப்படும் மூன்று பெரும் விழாக்களில் பரிசுத்த ஆவி திருவிழாவும், அந்தோணியார் திருவிழாவும் பங்கு அளவிலானத் திருவிழாக்களாகவும், செபஸ்தியார் திருவிழா ஊர் திருவிழாவாக, வெகு விமரிசையாக உலகெங்கும் வாழும் நிம்பநகரோரால்; நன்றியின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகிறது. இன்றளவிலும் தூத்துக்குடி மறைமாவட்டத்தைப் பொறுத்த வரையில் வேம்பாறு என்றாலே செபஸ்தியார் தான் என்று அறியப்படுகிறது. குறிப்பாக பிற மதத்தவர், பிற இனத்தவர்கள் வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தை செபஸ்தியார் ஆலயம் என்றே இன்றளவிலும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு வேம்பாறும் அதன் பாதுகாவலராம் சந்த செபஸ்தியாரும் இரண்டுறக் கலந்துள்ளார்கள் என்பது உள்ளங்கனி நெல்லிக்கனியாகும்.

இறுதியாக மேற்கண்ட அனைத்தையும் உற்றுநோக்குகையில் வேம்பாற்றின் பாதுகாவலராம் சந்த செபஸ்தியாரின் மேல் வேம்பாற்றுவாசிகள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியும், பற்றுதலும் ஊழி, ஊழி காலமாக எக்காலத்திலும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

உந்தனருள் தந்திடவே மைந்தரும்மைப் போற்றி செய்தோம்.

நி.தேவ் ஆனந்த் பர்னாந்து

Golden Jubilee Celebration for Our Hostel

புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின் பொன் விழா 

எதிர் வரும் 12.4.2015 ஞாயிறு அன்று நமதூரின் உயிர் மூச்சாக செயல்படும் புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியின் முக்கிய அங்கமாக விளங்கும் புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின் 50 ஆண்டு நிறைவு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அன்று முழுவதும் பற்பல நிகழ்வுகள் நமது கன்னியர் இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளதால் வேம்பாற்று மண்ணின் மைந்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்குவிக்குமாறும்நமதூரில் 50 ஆண்டுகள் சிறப்பாக கல்விப் பணி ஆற்றும் புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின் பொன்விழா சிறக்க வழி செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

Fotos







ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரரை நோக்கிய ஜெபம்

நவநாள் செபம் : 

அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் அளித்தவரும் வேதசாட்சி முடி பெற்றவருமான சந்த செபஸ்தியாரே! 

எங்கள் மீதும், எங்கள் குடும்பங்கள், உற்றார், உறவினர் மீதும் உலகக் கிறிஸ்தவர்கள் அனைவர் மீதும் மனம் இரங்கியருளும். சர்வேஸ்ரனுடைய  ஏவுதலுக்கு செவிசாய்த்த, உமது வியப்பிற்குரிய பிரமாணிக்கத்தையும், பிராணனைத் தர மிகவும் அபேட்சித்த உம்மைத் தளராத விசுவாசத்தையும் எண்ணி உம்மைப் புகழ்கின்றோம். உமது நெஞ்சத்தில் பற்றி எரிந்த விசுவாச ஒளி எங்கள் நெஞ்சிலும் பற்றி எரியச் செய்தருளும்.

மகிமை நிறைந்த வேதசாட்சியே! கொள்ளை நோய், பெருவாரிக் காய்ச்சல், வைசூரி முதலான வியாதி வருத்தங்கள் நீக்கும் மருத்துவரே! எங்களின் நேசப் பாதுகாவலரே! உமது ஆன்மீக உழைப்புகளையும், ஜெபதபங்களையும், வீர தியாகத்தையும் முன்னிட்டு எங்களுக்கு வரும் துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்ளவும், எங்களை இடரும் வியாதி, வருத்தங்களிலிருந்து விடுதலை அடைந்து மனிதனை விட ஏக சர்வேஸ்ரனுக்கு மட்டுமே பயந்து வாழும் வரம் பெற்றுத்தாரும்.

பகையினை விரட்டுகிற சேனாதிபதியான சந்த செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களின் சகாயமும், எங்கள் தாயாரும், வழிகாட்டியுமான அதிபரிசுத்த தேவதாயின் மீது உமக்குள்ள நேசத்தைக் குறித்து, மதுரம் நிறைந்த அத்தாயாரின் மீது இடையறாத உண்மை பக்தி பெருகவும், விசேஷமாய் எங்கள் மரண நேரத்தில் அவருடைய பாதுகாப்பிற்கு நாங்கள் பத்திரவான்கள் ஆகவும் வேண்டிய வரம் பெற்றுத் தாரும்.

சேசு நாதரை நேரில் கண்ணும் வரம் பெற்ற சந்த செபஸ்தியாரே! சேசுவினிடத்தில் கொண்ட அத்தியந்த இரக்க நேசத்தில் நீர் அதிகரித்திருக்கின்றீர் ஆதலால், நீர் அவரைக்  கேட்பவைகளை எல்லாம், அவரிடமிருந்து நீர் பெற்றுக்கொள்ளக் கூடியவராய் இருக்கின்றீர். இதனிமித்தம் நம்பிக்கையுடன் உம்மை அண்டி வந்து, நாங்கள் உம்மிடம் கேட்கும் விண்ணப்பங்களுக்கு சர்வேஸ்ரனிடத்தில் உமக்குள்ள  வல்லபத்தைக் கட்டி எங்கள் மன்றாடுகளுக்கு அணுகூலமாயிரும்.

சர்வேஸ்ரனுடைய மகிமைக்காகவும், உமது பக்தி பரப்புதலுக்காகவும், உம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் ஆறுதலுக்காகவும், அநேக ஆசாரியமான விஷயங்களில் நீர் எங்களுக்கு உதவி புரிந்தது போல, இப்பொழுதும் உமது உதவியை ஏராளமாய்ப் பொழிந்தருளும். (தேவைக்காக மன்றடவும்) எங்கள் வேண்டுதல்கள் தந்தருளப்படுவதால், நீர் செய்த உபகாரங்களை வெளிப்படுத்துவதில் உம்மை மகிமைப்படுத்தி, உமது புகழ்ச்சியை என்றென்றும் பாடிப்புகழ வாக்களிக்கிறோம். 
ஆமென் 

இரத பந்த வெண்பா



வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 5

வேம்பாறும் அதன் பாதுகாவலரும்


கடந்த காலத்தில் சந்த செபஸ்தியார் சிற்றாலயம் இருந்த பகுதியில் “சன் செபஸ்டியன் ஹால்” (St. Sebastian’s Hall) என்ற கட்டிடம் “வேம்பாற்று அமலோற்பவ ஜுபிலி கிளப்’ இளைஞர்களின் வாசகசாலையாகவும் (Library) வெகு காலம் திகழ்ந்துள்ளது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இவை அனைத்தையும் ஓருமித்து முழுமையாக கவனிக்கும் போது வேம்பாற்றில் சந்த செபஸ்தியாருக்கென சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றதையும், அது சிதைவுற்றதையும் பின் அதன் மீள்உருவாக்கமாகவே சந்த செபஸ்தியார் திருத்தலம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது.
               
சந்த பேதுரு பள்ளி நிம்ப நகரை விட்டகன்றதும் சந்த செபஸ்தியாரின் பேரில் புதிய பள்ளியை “புனித செபஸ்தியார் உயர்தர ஆரம்பப் பாடசாலை” (St. Sebastian’s Higher Elementary School) என அமைக்கத் தூண்டிய உந்துதல் இத்தூயவரின் மேல்நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பற்றுதலின் வெளிப்பாடாகும். இடைக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தில் செயல்பட்ட “சந்த செபஸ்தியார் வாலிபர்சபை” (Society of San Sebastian) சந்த செபஸ்தியாரின் மகிமைக்காகவும், அவர் பேரில்பக்தி முயற்சியை வளர்த்தெடுக்கும் பொருட்டு சிறப்பாக செயல்பட்டது. தற்போது இதனை மீள்உருவாக்கம் செய்து (Soldiers of San Sebastian) என்ற பெயரில் உலகளாவிய அளவில் வேம்பாற்றுவாசிகளை உறுப்பினராகக் கொண்டு செயல்பட அணியமாகி வருகிறது.

ஐயா’ என்ற சொல்லாடல் அப்பா, தந்தை அல்லது மதிப்புமிக்கவர் என்ற பதத்தை வழங்கி நிற்கிறது. நிம்பவாசிகளுக்கு ஐயா என்றாலே செபஸ்தியாரைய்யா, மிக்கேலய்யா என இருவரை மட்டுமே குறிக்கிறது. அதிலும் குறிப்பாக செபஸ்தியாரைய்யா என்ற பதமே அனைவர் நெஞ்சங்களிலும் ஊடுருவியுள்ளது. புனிதரின் திருவிழா அன்று பகலிலும்அதற்கு முந்தின நாள் இரவிலும் இவ்விரு ஐயாக்களின் லாவண்ய சொரூபங்களை பவனியாக, பஜனைகள் பாடிக் கொண்டு, தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கோவில் கொடிமரம் அருகில் வட திசையை நோக்கியும், வளனார் தெருவின் மழைநீர் வடிகால்அருகில் கிழக்கே ஆற்றினை நோக்கியும், டிமல் பஜாரில் மேற்கே பேருந்து நிலையம் நோக்கியும்பழைய செபஸ்தியார் குருசடி பகுதியில் தெற்கே வாலசமுத்திரபுரம் கோவிலை நோக்கி என நான்கு மூலைகளையும் நோக்கி நான்திசைகளிலிருந்தும் தங்களுக்கு இடர் நேராதவாறு செபித்து வரும் வழக்கம் வேறெந்த ஊர்களிலும் இல்லாத நடைமுறைச் சிறப்பாகும்.

கத்தோலிக்க திருமறையைத் தழுவுவதற்கு முன்னர் நிம்பவாசிகள் தங்கள் ஊரின் தென்மேற்கு எல்லையில், சேது பாதையில் ஐய்யனாருக்கு கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். ஐய்யனார் வழிபாட்டின் தொடர்ச்சியே இங்கு ஐயா என்ற சொல்லின் மூலமாக இருப்பதை அறியமுடிக்கிறது. ஏனெனில் காவல் தெய்வம், குதிரை வீரன், தீய சக்திகளை அழித்தல், தொற்று நோய் அகற்றுதல் ஆகியவற்றுக்காக மக்கள் இவ்விருவரிடமும் மன்றாடும் வழக்கம் தற்போது வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்



450 ஆண்டுகள் பழமையானது. வேம்பார் சர்ப்பமடம் பகுதியில் இருந்த  மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து இவ்வாலய சிலைகள் கொண்டுவரப்பட்டது. அவ்வாறே வேம்பார் சிவபெரும்குன்றம் பகுதிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்த சிலைகள் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கொண்டு செல்லப்பட்டது.  

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை திருநெல்வேலி மேடைத்தளவாயில் வசிக்கும் அரியநாயகி முதலியார் குடும்பம் நிர்வகித்து வருகிறது. இக்குடும்பத்துக்கே பத்தியப்பட்டது. மேல்மாந்தையில் உருவான முதல் ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். ஜமின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடனும் சீருடனும் திகழ்ந்தது. பற்பல இடங்களில் நிலபுலன்கள் இருந்தன. தற்போது ஆலயமும் அதனைச் சுற்றிய இடங்களும் மட்டுமே உள்ளன. 

இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமே ஆலயப் பராமரிப்புக்கு உதவுகிறது. ஆலயத்தில் வழிபாடுகள் காலையிலும், மாலையிலும் நடைபெருகின்றன. இவ்வாலயத்திற்கு இருவாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் நோக்கி சுந்தரேஸ்வரர் பீடமும் தெற்கு வாயிலை நோக்கி மீனாட்சியம்மன் பீடமும் அமைந்துள்ளது. இங்கு சிவன், மீனாட்சி, சுப்பிரமணியன், விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், தட்சனாமூர்த்தி, முதலிய சிலைகள் உள்ளன.

வேம்பார் சிவபெரும்குன்றம் பகுதி இன்றும் அரசின் வருவாய் துறையால்  ‘சிவபெரும்குன்றம் மால்’ என்றே அழைக்கப்படுகிறது. (இது டிமேல் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.)
-    சங்கரநாராயணன் – அர்ச்சகர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மேல்மாந்தை
(4 தலைமுறையாக இவ்வாலயத்தில் பணி செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்) 

நேர்காணல் நாள் : 15.07.2013
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com