Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

நாவான் சாத்திரம் - ஓர் அறிமுகம்

கப்பல் கட்டும் கலை குறித்த செய்திகள் ஓலைசுவடிகளில் காணப்படுகின்றன. சென்னை கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இக்கலை குறித்து இருந்த கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்னும் இரண்டு ஓலைசுவடிகளை பழனியப்பப் பிள்ளை (1950), எஸ். சௌந்திர பாண்டியன் (1995) ஆகியோர் முறையே பதிப்பித்துள்ளார்கள். 

‘நாவான் சாத்திரம்’ என்னும் பெயரிலான சுவடியொன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித்துறையின் சுவடி நூலகத்தில் (சுவடி எண் 718) பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சுவடி 33 செ.மீ நீளம், 3 செ.மீ அகலம் கொண்டதாகும். இச்சுவடியில் 14 ஏடுகள், 28 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 9வரிகள் மிக நெருக்கமாக எழுதப்பெற்றுள்ளன. இச்சுவடியில் 81 பாக்கள் உள்ளன. சுவடியிலுள்ள ஏடுகளின் இடதுபக்க ஓரங்களில் ஏட்டெண்ணும், உட்தலைப்புகளும் எழுதப்பெற்றுள்ளன. ஏட்டெண், பாடல் எண் போன்றவை தமிழ் எண்களாலேயே குறிக்கப் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் சீவரத்தினக் கவிராயர் ஆவார். 

இச்சுவடியில் எழுத்துநிலை மிகவும் தெளிவாக எழுதப் பெற்றுள்ளது. சுவடிகளில் பொதுவாகக் காணப்படுவது போன்றே இதிலும் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளிகள் இல்லை. ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு  ஒன்று போலவே எழுதப் பெற்றுள்ளன. மேலும் “h”, “u” இவற்றிக்கான வேறுபாடுகள் இல்லை. எழுத்துப்பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. ஏடுகள் நல்ல நிலையில் உள்ளன. இச்சுவடிக்குக் ‘காப்பு சட்டம்’ போடப்பட்டுள்ளது. 

நாவான் சாத்திரச் சிறப்புக் கூறுகள்  

கப்பலின் சிறப்பு:

தமிழர்கள் மிகுதியாகக் கடற்பயணம் செய்துள்ளனர். பயணக் காலங்களில் மாலுமிகள் விண்மீன்களையும், திங்களையும் நோக்கித் திசை அறிந்து மரக்கலங்களைச் செலுத்தியுள்ளனர். வானத்தை நோக்கி நேரம் அறிந்து கொள்ளவும் பயின்றிருந்தனர். நாம் ஒரு செயலைச் செய்யும்போது நல்ல நேரம், நல்ல நாள் போன்றவற்றைப் பார்க்கிறோம். அது போல கப்பல் கட்டும் முறைக்கும் நேரம் பார்த்துக் கப்பலைக் கட்டத் தொடங்குகின்றனர். இச்செய்திகளைத் தருவது இச்சுவடியாகும். இச்சுவடியில் காணப்பெறும் முக்கியக் கூறுகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. 

கப்பல் செய்வதற்கு ஏற்ற காலம்: 

நல்ல நாள், நல்ல நேரம், திதி, சந்திரன் (நட்சத்திரம்) இவைகளின் சேர்க்கை, மகரம் முதலிய ஆறு சர லக்னங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்கள் தவிர மற்ற நட்சத்திரங்களில் கப்பலைச் செய்கின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்நான்கு இராசிகளிலும் கப்பலைச் செலுத்த முடியாது.

கப்பலை உடனடியாக செய்ய முடியாது. நல்ல நேரம், நாள் பார்த்துக் கப்பல் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதனுடைய ஒவ்வொரு பலகை வைப்பதற்கும் நல்ல நாள் பார்த்து செய்கின்றனர். அப்பொழுதுதான் கப்பலானது முழுமையாக உடையாமல் இருக்கும் என்று நம்புகின்றனர். நல்ல நாள் பார்த்துச் செய்யும் கப்பலே சிறப்பாகக் கடலில் சென்று வரும். கப்பல் மட்டுமின்றி மரக்கலம் செய்வதற்கும் நல்ல நாள் பார்த்துச் செய்கின்றனர். இதனை,

சூலமொன் பானில் நிற்கச் சேர்ந்தனாள் பிறனாள் தானும் 
வாலிபந் தாள மொன்று வயங்குட னிரண்டும் முன்னே 
யேலவே யிருபத் தெட்டு மெண்ணிய கொள்கை யிற்றை 
கோலியே கூம்பி மீதே குறித்தநாள் நடத்து மென்றான் (2)

நடந்தநாள் பரிதி தன்னை நாட்டுக வுச்சி மீதே 
தொடர்ந்தநாள் வலமே யெண்ணாச் சொல்லுக நன்மை தீமை
வடந்தரு கூம்பி மூன்று மனுவொடு வங்கம் பாழாம் 
கிடந்தமுன் னணியச் சூலம் கிளம்பிடில் முறியு மென்றான் (3)

முறிந்தன வடியி நாளும் முதல்வன் தானு மங்கே 
பிறிந்தன மனுக்க ளெல்லாம் பின்மரத் தலையி னுண்மை 
அறிந்தவர் தெரிந்து கொண்டு ரணியமும் பிறமுந் தானும் 
சிறந்ததோர் பதியிற் சேர்ந்து சேர்ந்தினி திருக்கு மென்றார் (4)

திருந்திய வகத்து முன்னாள் செய்யயீ ராறுஞ் செப்பி
லருந்திய சூல மொன்பா னணிமரக் கலங்கள் செய்யிர் 
வருந்திய மிதுனங் கன்னி வளர்சிலை மீன மாகா 
பொருந்திடு மற்ற ராசி யென்னவெ புகன்றார் முன்னோர் (5)

என்னும் பாடல்கள் உணர்த்தக் காணலாம்.

நாள், நேரம், திதி, நட்சத்திரம் (சந்திரனின் நிலை) இவைகளின் நிலை அறிந்து மகரம், துலாம், கடகம், மேஷம், ஆகிய நான்கு சர லக்னங்களை நீக்கி 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம், சத்யம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி தவிர மற்ற நட்சத்திரங்களில் கப்பலைக் கட்டத் தொடங்குகின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்நான்கு இராசிகளிலும் கப்பலைச் செய்யத் தொடங்கக்கூடாது.

கப்பல் செய்வதற்கு முன் அந்த மரத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மரம் வெட்டும் போது கருப்பாக இருந்தால் பாம்பு வாழ்வதாகவும், தயிலம் போல் இருந்தால் தேள் வாழ்வதாகவும், பல நிறங்களில் இருந்தால் தவளை வாழ்வதாகவும், அதிக சிவப்பாகக் காணப்பட்டால் பல்லி வாழ்வதாகவும் சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதனை,

தெள்ளிய ஒற்றை யாகிற் றிருந்திய நன்மை யாகும் 
முள்ளதி விரட்டை யாகி லுண்மையாய்க் கேடே யாகும் 
தெள்ளிய வியாழம் நிற்கில் தீமைகள் திறப்புண் டோடும் 
வள்ளிய பிண்டி நாதர் மரம்பல தொடாதென் றாரே (31)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கறுப்பு நிறம் கொண்ட மரக்கலம் தீமை ஏற்படுத்தும் என்றும், வெள்ளை நிறம் கொண்ட மரக்கலம் நன்மை விளைவிக்கும் என்றும் குறிப்பிடுவர். கப்பல் கட்டுவதற்கு முன் மரத்தை வாங்குபவர்கள் அந்த மரத்தில் எந்த விதமான ஓட்டையும் இருக்கக் கூடாது என்றும், ஓட்டை உள்ள மரத்தை வாங்கினால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் என்றும் நாவான் சாத்திரம் குறிப்பிடுகின்றது. இதனை, 

தண்டிய வண்டி னேறு தாவிய பதத்திற் நின்றால் 
குன்றிடுஞ் செல்வ ந்தானும்  கொடியதோர் மரத்தின் கொத்தி
மிண்டிய துளைகள் கொள்ளில் மேதினி தன்னில் கேடாம் 
மெண்டிசை தனிலெப்போது மியல்விடா தேரை வைப்பே (30)

மரத்தை இரண்டாக வெட்டி அதையே மூன்று துண்டுகளாக்குகின்றனர். அதில் முன் பகுதியும், பின் பகுதியும் நன்மை ஏற்படும் என்றும், ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்ய பயன்படாது என்றும், நான்கு, ஐந்து துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்ய உகந்தவை என்றும், பத்து துண்டுகளாக கப்பல் செய்தால் மரணம் ஏற்படும் என்றும் சாத்திரம் கூறுகிறது. இதனை,

ஏராவை யீரைந் தாக்கி யிரண்டுமூன் றோன்றும் நன்மை
ஓராத ஆறு மேழும் ஒன்பதுந் தருவா மொட்டும் 
நேராக வங்கம் பாழாம் நிலைத்திடும் நாலு மைந்தும் 
காராருங் குழலாய் பத்துங் கர்த்தாவின் மரண மாமே (17)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலின் அடிப்பகுதி (ஏரா):

கப்பலின் அடிப்பகுதிதான் மிகவும் முக்கியமானது. அதைத் தவறாகச் செய்தால் உடைப்பு ஏற்பட்டு நீருக்குள் மூழ்கிவிடும். இதனால் கப்பலின் அடிப்பகுதியை செய்யும்போது நல்ல நாள் பார்த்துச் செய்கின்றனர். அடி மரத்தின் நீளத்தை அளந்து ஒரு முழத்துக்கு 24 அங்குலமாகப் பெருக்கி வந்த தொகையை 27 - இல் கழித்து மீதியை வைத்து அசுவினி நாளில் கப்பல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனை,

ஏராவி நீளமென தாகு மென்றேற் றிடுமோர் முழங்கள் விரலைத் 
தோராம லெட்டி னாலே பெருக்கித் தொகையான வான வெல்லாம் 
சீராரும் யிருபத் தேழில் கழித்துச் சிதைவுற்று நின்ற சேடம் 
ஆராயும் அசுபதிமுதலாக வெண்ணி அறிந்துநீ சொல்வங்கே நாளே (19)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

மரத்தினுடைய அடிப்பாகத்தை அளந்து எட்டுப் பகுதியாக மடக்கி அதில் ஆறு மடிப்பு விட்டு, அதையே இரண்டு மடங்காக எடுத்து, அதை மூன்று பகுதியாக அமைத்து அதில் இரண்டு பகுதி விட்டு ஒரு பகுதியைப் பாய்மரத்தின் அடிப்பலகையாக நடுப்பகுதியில் வெட்டி முட்டுக் கொடுக்கின்றனர். மரத்தை வெட்டுவது பாவம் என்று கருதுவதால், பஞ்ச பூதங்களை ஒன்று சேர்த்து வெட்டினால் அதன் பாவம் விலகும் என்கின்றனர். இதனை,

பாலுடன் தேனும் நெய்யும் பழமுடன் மஞ்சள் சாரும் 
காலுறு மப்பு மூப்பும் கடுகுட னிளனீர் காந்தம் 
வேலுறு மணியச் சல்லம் மரமூமோ ஒக்கக் கொண்டால்
மாலுறும் நீரை யாட்ட மருவிய கரையிற் சேரும் (44)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலைக் கட்டுவதற்கான செலவுகளைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல், கப்பல் கட்டுவது மட்டுமின்றி கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும், சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் நல்ல நாள் பார்த்துச் செல்ல வேண்டும் என்பது பற்றியும், கிரக நிலை பற்றியும் குறிப்பிடுகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் நல்ல நாள், நட்சத்திரம் பார்த்துச் செல்ல வேண்டும். அப்படிப் பார்க்காமல் செல்பவருக்குக் கடலிலே ஆபத்து ஏற்படும் என்பதைக் கூறுகிறது. இதனை,

கண்ட முழத்தை யெட்டதனிற் கருதிப் பெருக்கிப் பன்னிரண்டில் 
நின்று கழித்தா லாயம்மிச்சம் நிசமுன் முளத்தை யொன்பதனி 
லொன்றப் பெருக்கி யொருபதினில் ஒழித்தால் மிச்சஞ் சிலவென்று 
வென்றி யறிஞோர்  முன்றுரைத்த விதியின் படியே அறிவீரே (22)

காலை யெழு கதிராகில் கனகஞ் சேரும் 
கரியாகில் மிகத்தோசம் கடலிற் கேடாம் 
மாலையெழும் பிறையாகில் வரவு கூடும் 
மங்கையர்தன் சீரடியே மடந்தை கேடாம் 
காலுடனே மழுவாகிற் கடலிற் கேடாம் 
கண்டறிஞோர் ஏராவின் கண்ணடைகள் தானே (23)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பல் கட்டுவதற்கு முன் முதலில் தோணியில் பலகை செய்து கடலில் மிதக்க விடுகின்றனர், அதற்குப் பிறகு கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டும் கருவி போன்றவற்றைச் செய்கின்றனர். ரேவதி, ரிஷபம், அவிட்டம் இவைகள் மூன்று நாழிகை இருக்கும் போது கப்பல் செய்தால் இதனுடைய பின்பக்கம் உடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிவிடும் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. (பா.30)

கிரகநிலை:

கிரகநிலை பார்த்து கப்பல் கட்டத் தொடங்குகிறனர். அவை சனிதிசைப் பலன், செவ்வாய் திசை பலன், சூரிய திசைப் பலன், ராகு திசை பலன் போன்றவையாகும்.

சனி திசைப்பலன்:

சனி, 1 - ஆம் இடத்தில் இருந்தால் நீருக்குள் மூழ்கும், 4 - ஆம் இடத்தில் உச்ச நிலையில் இருந்தால் கப்பல் உடையும், 6 - ஆம் இடம் இருந்தால் காற்று, மழை பாதிப்பு ஏற்படும், 8 - ஆம் இடம் இருந்தால் பொருள்கள் அழியும், 10 - ஆம் இடம் இருந்தால் காற்று அடித்து கப்பல் செல்லாமல் நிற்கும் என்கிறது.

செவ்வாய் திசைப்பலன்:

செவ்வாய், 1 - ஆம் இடம், 5 - ஆம் இடம் இருக்குமானால் கடற்கரையிலே உடைப்பு ஏற்படும்.

சூரிய திசைப்பலன்:

சூரியன், 3 - ஆம் இடம், 6 - ஆம் இடம்,  7 - ஆம் இடம்  இருக்குமானால் கப்பல் ஓட்டும் கருவி உடைப்பு ஏற்படும் என்றும்,  11 - ஆம் இடம் இருப்பின் கரையைச் சேராது என்றும் கூறுகிறது.

ராகு திசைப்பலன்:

ராகு, 5 - ஆம் இடம்,  8 - ஆம் இடம்  இருக்குமானால் கடலில் கப்பலைச் செலுத்த முடியும் என்கிறது. கப்பல் மட்டுமின்றி தோணி, வங்கம், நாவாய் இவைகள் செய்வதற்கும் நல்ல நாள் பார்த்து செய்கின்றனர். இல்லையெனில், இதனுடைய பாய்மரம் சிதைவு பெற்றுவிடும். கப்பல் கட்டும் போது சரியான அளவு எடுத்துக் கொண்டு கட்டினால் தான் சிறப்பாக இருக்கும் என்று மாலுமி கூறுவார். இதனை,

மேடத்தில் அஞ்ச தாகு மிடபத்தி லேழே முக்கால் 
நாடுகற் கடகம் அஞ்சாம் நல்லதோர் சிங்கம் நாலாம் 
நீடுகொல்  நாலே அரைக்கால் நிட்செய மகரமூன்று 
காடொற்ற ராசி தானுங் கரைதனில் சேரு மென்றார் (35)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பல் ஓட்டுபவர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து ஓட்டினால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கரை சேர முடியும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது. (பா 44)

கப்பல் கட்டி முடித்த பிறகு கடலில் செலுத்துவதற்குத் தயாராகும் நிலையில் இருக்கும் போது, கடலில் அதிக கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மஞ்சள், தேன், நெய், சந்தனம், வில்வம், சூடம் போன்ற பொருட்களைக் கொண்டு எட்டுத் திசையில் உள்ள தெய்வங்களுக்குப் பூஜைகள் செய்கின்றனர். அதற்குப் பிறகு பயணம் மேற்கொள்கின்றனர் என்கிறது இந்நூல். இதனை,

சேந்த நல் மஞ்சள் தேனும் நெய்யோடு சந்த னங்கள் 
வாய்ந்ததோர் துளசி வில்வம் மஞ்சளும் சூடன் கோட்டமன்னும் 
காய்ந்ததோர் கனலி லிட்டுக் கருதிய தீபங் காட்டிப் 
போந்தஅஷ் சதைகள் போடா பூசைகள் விரும்பு மன்றோ (45) 

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலில் பயணம் செய்வதற்கு உகந்த காலம் :

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், துலாம், மகரம், தனுசு ஆகிய சுப லக்னங்களிலும், நல்ல திதி, வாரம், நட்சத்திரம் இவைகளின் சம்பந்தத்தால் ஏற்படுகிற நல்ல யோகம், நல்ல நாளில் படகில் பயணம் செய்தால் நன்மைகள் ஏற்படும் என்கிறது. 

மரக்கலம் வைக்க ஆகாத நாள்:

உத்திரட்டாதி, அத்தம், உத்திரம், மூலம், பூரம் ஆகிய நட்சத்திரங்களில் நாவாய் செலுத்தினால் நாவாய் முறிந்துவிடும் என்கிறது. இதனை,

அறிவி லத்தம் அளகிய உத்திரம் 
செறிவிலா வளர்முப் பூரஞ் சிதைத்தனர் 
நெறிபடுங் குழலாய் முகூர்த்தஞ் 
செயல்முறி படுங்கலன் முன்னீ ரதனுள்ளே (55)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.
மரக்கலம் வைக்க உகந்த நாள்:

ரோகினி, உத்திரட்டாதி, புனர்பூசனம், பூசம், அவிட்டம், அனுஷம், உத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஏரா வைத்தால் குற்றம் ஏற்பட்டு பிறகு நன்மை பயக்கும் என்கிறது. இதனை,

மூங்கில் ரோணி முரசுத்தி ராடம்பணை 
தாங்கு பூசம் அவிட்டந் தரணியில் 
ஓங்கும் நற்கலம் வைத்தி டில்கலந் 
தீங்கு மற்றுந் திருந்திய செல்வமே (56)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

சூரியன் மற்றும் செவ்வாய் ஒரே திசையாய் இருக்கும் போது கப்பலில் சரக்குகளை ஏற்றிச் சென்றால் அதற்கு சேதம் ஏற்படும். சரக்கு ஏற்றிச் செல்வதற்கு என நல்ல நாள், நட்சத்திரம், ராசி பலன்கள் பார்த்துச் செலுத்த வேண்டும் என்கிறது. இதனை,

குருட்டுநாட் பொல்லா நாளிற் கொலியே கலன்கள் செய்யில் 
அருக்கனுஞ் சோமன்தானும் அணைத்துட நிற்குமாகில் 
மரக்கல நாய னோடு சரக்குமே சேத முண்டாம்
விருத்தாமாந் தீக்கோள் நிற்கில் வென்றில ரென்று சொன்னார் (57)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

சரக்கு ஏற்றிச் செல்லும் நாள்:

அசுவினி, திருவோணம், அனுஷம், ரேவதி, சோதி, மிருகசீரிஷம், அத்தம் ஆகிய நாளில் சரக்குகளை ஏற்றிச் சென்றால் நன்மை ஏற்படும் என்கிறது. இதனை, 

ஆதி யோணம் அனுஷ்டமு ரேபதி 
சோதி மான்றலை சொல்லிடி லத்தமும் 
நீதி சேரு நெறி கட லோடிட 
நாதனார் சொன்ன நாளிது நன்மையே (58)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

மரக்கலம் வைக்கும்/ வைக்காத இடம்: 

ரிஷபம், ரேவதி, துலாம், திருவோணம் இந்த ராசிகளில் மரக்கலம் வைத்தால் நல்ல பலன்கள் ஏற்படும். ஆனால் மீன ராசியில் வைத்தால் அழிவு ஏற்படும் என்கிறது. இதனை,

தகரரி யிடபம் நன்மை தருந்தண்டு தானுந் சூலம் 
பகைவற் காம துலையே நல்லிபலன் மிகுந்தேள் போக்கில்லை 
மிகுகுடங் கடலிற் வாழும் மீனுளக் கேடு போன 
விலத்திகை யிழைத்தோடு மானுந் தேடுமத்தி மத்தில் நன்றே (60)

வாரமுறும் வாரமதை வகுக்குங் காலை 
மதிபுதனும் வானவர்தன் குருவு மற்றைச் 
சோரைநிதம் பருகவுணர் குருவு மென்றுஞ் 
சொல்லறிய பலன்களெல்லாம் கொடுப்பர் நாளுங் 
காரியோடு சேயிரவி கலம்வைத் தெல்லாம் 
கண்டயிவை கலமிறக்க யெடுக்கி லாகாப் 
பூரணமா யுருமினிது வினித்தோர் தங்கள் 
புக்கிருந்த செங்கமலப் பொற்பி னாளே (61)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

இது போன்ற பல சிறப்புகளைப் பெற்ற இச்சுவடிச் செய்திகள் இன்னும் வெளிப்படாமல் இருப்பது தமிழுலகிற்கு இழப்பாகும்.


- மோ.கோ.கோவைமணி 
"நாவாய்"  கடல்சார் வரலாற்றாய்வுகள் நூலிலிருந்து

நன்றி: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

The Morning Star Association - Rules and Regulations


வேம்பாற்று பரதர்களால் 1926 ஆண்டு வேம்பாற்றை தலைமையிடமாகவும் கொழும்பினை செயல்பாட்டிடமாகவும் கொண்டு செயல்பட்ட நிம்ப உதயதாரகை சங்கத்தின் விதிகள் அடங்கிய புத்தகம் 

Download Link 

அம்பா பாடல்

சிலுவை வரைந்து கொண்டேன்
திருப்பாதம் தெண்டனிட்டேன்
கன்னி மேரி மாதாவே
கர்த்தா வே காத்தருளும்
காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு
கைக் குழந்தை வேணுமின்னு
தெற்கே திருப்பதியாம்
தேவ மாதா சன்னதியாம்
மறப் பதில்லை திருப்பதியை
மனப் பாட்டு முனைக் குருசை
குருசே உனைத் தொழுவேன்
கும்புடுவேன் ஆதரிப்பாய்
வேளையிது வேளையம்மா
வேளாங்கண்ணி மாதாவே
மாதாவே உன்னுதவி-உன்
மகனுதவி வேணுமம்மா
தாயே உனதடிமை
தற்காக்க வேணுமம்மா
நண்டு படும் தொண்டியடா
நகர படும் நம்புதாளை
நம்பிக்கை உண்டுமம்மா
நமக்குதவி நாயனுண்டு
நாயன் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
நமக்குப் படைகளுண்டு
நாத சுரக் காரருண்டு
பிச்சிச் சரமோ-நீ
பின்னி விட்ட பூச்சரமோ
பூவைச் சொரிந்தவள் நீ
போன வழி வாராளடா
பச்சை மணக்குதடி
பாதகத்தி உன் மேலே
எல்லை கடந்தாளடி
இலங்கை வனம் கடந்தாள்
தில்லை வனம் கடந்தாள்
திருவணையும் குற்றாலம்
பாராமல் போராளடி
படமெடுத்த நாகம் போல

வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு ; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு ; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு ; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு ; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள்; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள் ; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.

குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.

சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ் , அனுப்பியவர்: S.S. போத்தையா

The Setupatis, the Dutch, and Other Bandits in Eighteenth-Century Ramnad


Rare Article Collection

‘The Setupatis, the Dutch, and Other Bandits in Eighteenth-Century Ramnad (South India)’,
Journal of the Economic and Social History of the Orient, 44:4 (2001)

Author(s): Lennart Bes

Download Link

பட்டினப்பாலை சுட்டும் பரதவர்

விளையாட்டுக் களத்தில் மறவர்களின் மற்போரும் வாட்போரும்:

முது மரத்த முரண் களரி 
வரி மணல் அகன் திட்டை 
இருங் கிளை இனன் ஒக்கல் 
கருந் தொழில் கலிமாக்கள் 
கடல் இறவின் சூடு தின்றும் 
வயல் ஆமை புழுக்கு உண்டும் 
வறள் அடும்பின் மலர் மலைந்தும் 
புனல் ஆம்பல் பூச் சூடியும் 
நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரு 
நாள்மீன் விராய கோள்மீன் போல 
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ 
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி 
பெருஞ் சினத்தான் புறங் கொடாது 
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் 
எல் எறியும் கவண் வெரீஇப் 
புள் இரியும் புகர்ப் போந்தை (59-74) 

புகார் நகரில், வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர். வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள், கடல் இறாலினைச் சுட்டுத் தின்றனர். வயலிலே கிடைத்த ஆமையினை வேக வைத்து உண்டனர். மணலில் மலர்ந்துள்ள அடப்பம்பூவினைச் சூடினர், நீரில் பூத்த ஆம்பல் பூக்களைப் பறித்துத் தலையில் அணிந்து கொண்டனர். நீல நிறமான அகன்ற வானத்தில் வலமாக எழுந்து திரியும் நாள்மீனாகிய சூரியனோடு பொருந்திய கோள்கள் போல அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்தில் போர் புரிவோரும், காண்போருமாகிய மக்கள் ஒன்று கூடி இருந்தனர். கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது, போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில் கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன. 

சொற்பொருள் விளக்கம்:

முது மரத்த – பழைமையான மரத்தையுடைய, முரண் களரி – மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம், பரிமணல் – காற்றால் அறலாக (வரி வரியாக) அமைந்த மணல், அகன் திட்டை - அகன்ற மேட்டுப்பகுதியில், இருங்கிளை – பெரிய அளவில் உறவினர்கள், இனன் ஒக்கல்- இனச்சுற்றத்தினர், கருந்தொழில் – வலிய தொழில் (போர்த் தொழில்), கலி மாக்கள் – செருக்குடைய போர் மறவர்கள் (விடையாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் மறவர்கள்) கடல் இறவின் - கடலில் கிடைக்கும் இறால் மீனின், சூடு தின்ஷிம் சுட்டுத் தின்றும், வயல் ஆமை – வயலிலே உள்ள ஆமை, புழுக்கல் உண்டும் – அவித்து உண்டும், வறள் அடம்பின் – மணலில் பூத்துள்ள அடப்பம்பூ, மலர் மலைந்தும் – மலரினைத் தலையில் சூடியும், புனல் ஆம்பல் – நீரில் வளரும் ஆம்பல், பூச்சூடியும் – பூவினை அணிந்து கொண்டும், நீல் நிற விசும்பின் – நீல நிறமுள்ள வானத்தில், வலன் ஏர்பு திரிதரு – வலமாக எழுந்து உலவுகின்ற, நாள் மீன் விராய – நாள்மீனாகிய சூரியனுடன் பொருந்திய, கோள்மீன் போல - கோள்கள் போல, மலர்தலை மன்றத்து - அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்து, பலருடன் குழீஇ – பலருடன் கூடி, கையினும் – கைகளாலும், கலத்தினும் – படைக்கலன்களாலும், மெய் உறத் தீண்டி – உடலோடு உடல் பொருத மோதியும், பெருஞ்சினத்தால் – மிக்க சினத்தால், புறக்கொடாது - ஒருவருக்கொருவர் பின் வாங்காமல், இருஞ்செருவில் – பெரிய சண்டையில், வீரர்களுக்குள் நடக்கும் பெரும் போரில், இகல் – போர், பகை, மொய்ம்பினோர் – வலிமை வாய்ந்தவர், கவண் எறியும் – கவணால் எறிகின்ற, கல் வெரீஇ – கல்லுக்கு அஞ்சி, புள் – பறவைகள், இரியும் – விட்டுப் போகும், விரைந்து செல்லும். 

பரதவர்களின் இருப்பிடம்:

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி 
நடுகல்லின் அரண் போல 
நெடுந்தூண்டிலில் காழ் சேர்த்திய 
குறுங் கூரை குடிநாப்பண் 
நிலவு அடைந்த இருள் போல 
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83) 

இறந்த வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்குக் கேடயங்களை வரிசையாக வைத்து வேலை ஊன்றி அமைத்திருக்கும் அரண் போல, நீண்ட மீன் தூண்டில் கோலினைச் சார்த்தி வேலி அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய கூரையினையுடைய குடிசை காணப்படும். இதன் நடுவில் நிலவினைச் சேர்ந்திருக்கும் இருளைப் போல, வலை உலர்ந்து கொண்டிருக்கும் மணல் முற்றத்தினை உடையது பரதவரின் இருப்பிடம். 

சொற்பொருள் விளக்கம்:

கிடுகு நிரைத்து – கேடயங்களை வரிசையாக வைத்து, எஃகு ஊன்றி – வேல்களை நட்டு, நடுகல்லின் – வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்கு, அரண் போல – வேலி போல, நெடுந்தூண்டிலின் - நீண்ட மீன் தூண்டிலின், காழ் சேர்த்திய – கோலினைச் சார்த்தியிருக்கும், குறுங்கூரை, சிறிய கூரையினையுடைய, குடிநாப்பண் – குடிசையின் நடுவில், நிலவு அடைந்த இருள் - நிலவைச் சேர்ந்திருக்கும் களங்கமாகிய இருளைப் போல, வலை உணங்கும் - வலை காய்ந்து கொண்டிருக்கும், மணல் முன்றில் – மணல் நிறைந்த வீட்டின் முற்றம் (முன்பகுதி) 

பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்:

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த 
வெண் கூதாளத்துத் தண்பூங் கோதையர் 
சினைச் சுறவின் கோடு நட்டு 
மனை சேர்த்திய வல் அணங்கினான் 
மடல் தாழை மலர் மலைந்தும் 
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் 
புன்தலை இரும் பரதவர் 
பைந் தழை மா மகளிரொடு 
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது 
உவவு மடிந்து உண்டு ஆடியும் (84-93) 

பரதவர், விழுதினையுடைய தாழையின் தாள்களின் அடிப்பகுதியில் வளர்ந்திருக்கும் வெண்டாளியின் குளிர்ச்சியான மலர்களால் கட்டப்பட்ட மாலையினை அணிந்திருந்தனர். சினையான சுறாமீனின் கொம்பினை நட்டு, அதில் தம் நிலத்து தெய்வமாகிய வருணனைத் தங்கச்செய்து, அத்தெய்வத்திற்குப் படைத்த மடலோடு கூடிய தாழை மலரைத் தாம் சூடினர். சொர சொரப்பான பனை மரத்திலிருந்து இறக்கிய கள்ளைப் பருகினர். எண்ணெய் தடவாத தலைமயிரும், கரிய நிறமுமுடைய பரதவர், முழு நிலா நாளில் ஊக்கம் குறைந்து, கருமையான குளிர்ந்த கடலில் மீன் வேட்டைக்குச் செல்லாமல், பசுமையான தழை ஆடையினை உடுத்த தம் பெண்களோடு தாம் விரும்பும் உணவினை உண்டு விளையாடினர். 

சொற்பொருள் விளக்கம்:

வீழ்த்தாழை – விழுதினையுடைய தாழை, தாள் – அடிப்பகுதி, தாழ்ந்த – அடிப்பகுதி, வெண்கூதாளத்து – வெண்கூதாளத்தின், தண் பூங்கோதையர் – குளிர்ந்த பூ மாலையினை அணிந்தவர், சினைச் சுறவின் – சினையாக இருக்கும் சுறா மீனின், கோடு நட்டு – கொம்பினை நட்டு, மனை சேர்த்திய – சுறா மீனின் கொம்பினைத் தெய்வம் தங்கும் இடமாகச் செய்து, வல் அணங்கினோன் – வலிய கடல் தெய்வமாகிய வருணனுக்குப் (படைத்து), மடல் தாழை – மடலையுடைய தாழை, மலர் மலைந்தும் – மலரினைச் சூடியும், பிணர்ப் – சொர சொரப்பான, பெண்ணை – பனை மரத்திலிருந்து (எடுத்த) பிழி மாந்தியும் – கள்ளைப் பருகியும், பைந்தழை – பசுமையான தழையினை, மா மகளிரொடு – கருத்த மகளிரொடு, பாய் இரும் பனிக்கடல் – பரந்த கருமையான குளிர்ச்சியான கடல், வேட்டம் செல்லாது – மீன் பிடித்தலுக்குச் செல்லாது, உவவு மடிந்து – முழுமதிநாளிலே ஊக்கம் குறைந்து, உண்டு ஆடியும் – தாம் விரும்பியதை உண்டு ஆடினர். 

சங்கமுக நீராடலும் , பகல் விளையாட்டும்:

புலவுமணல் பூங்கானல் 
மாமலை அணைந்த கொண்மூ போலவும், 
தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும் 
மலி ஓதத்து ஒலிகடல் 
தீது நீங்க கடல் ஆடியும் 
மாசு போக புனல் படிந்தும் 
அலவன் ஆட்டியும் உரவுத்திரை உழக்கியும் 
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் 
அகலாக் காதலொடு பகல் விளையாடிப் 
பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் 
பொய்யா மரபின் பூமலி பெருந்துறை (94-105) 

(க.ரை) புலால் நாறும் மணலையும், பூக்களையும் கொண்ட கடற்கரையிலே, பெரிய மலையைச் சேர்ந்த மேகத்தைப் போலவும், தாயின் மார்பினைத் தழுவிய குழந்தையைப் போலவும், தெளிந்த நீரினையுடைய கடலோடு,காவிரியாறு கலக்கின்ற இடமாகிய சங்கமுகத்துறையில் (கடலும் ஆறும் கலக்குமிடம்) அலைகளின் ஒலி மிகுந்து காணப்பட்டது. இச்சங்கமுகத்தில் தீவினை நீங்க கடலாடினர். கடலாடியதால் மேனியில் படிந்த உப்பு நீங்குவதற்காக, பின் பாவிரியாற்றிலே குளித்தனர். நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும்,மணலிலே பாவை செய்தும், ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தனர். பின்பும் அவ்விடத்தை விட்டு நீங்குவதற்கு விருப்பமின்றி, விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடினர். நீர்வளம் என்றும் பொய்க்காததால், பூக்கள் நிறைந்து காணப்படும் காவிரிப்பூம்பட்டினத்துச் சங்கமுகத்துறை, பெறுவதற்கரிய தொன்மையான சிறப்பினையுடைய சொர்க்கத்தை ஒத்து விளங்கியது. 

சொற்பொருள் விளக்கம்:

புலவு மணல் – புலால் நாற்றம் வீசும் மணல், பூங்கானல் – பூக்களைக் கொண்ட கடற்கரை,மாமலை அணைந்த – பெரிய மலையைச் சேர்ந்த , கொண்மூப் போலவும்- மேகத்தைப் போலவும், தாய் முலை தழுவிய – தாயின் மார்பைத் தழுவிய, குழவி போலவும் – குழந்தையைப் போலவும், தேறுநீர் – தெளிந்த நீர், புணரியொடு – கடலோடு, யாறுதலை மணக்கும் – காவிரியாறு ஒன்று கூடும், காவிரியாறு ஒன்றுசேரும், மலி ஓதத்து – ஒலி மிகுந்து காணப்படும் அலை ஒலி கடல் – ஒலிகிகின்ற சங்கமுகத்துறை (கடலும் ஆறும் சங்கமிக்கும இடம்) தீது நீங்க – தீ வினை நீங்க, கடலாடியும் -கடலிலே குளித்தும், மாசுபோக – கடல் நீரில் குளித்த உப்பு நீங்க, புனல் படிந்தும் – காவிரி நீரிலே குளித்தும், அலவன் ஆட்டியும் – நண்டுகளைப் பிடித்து அலைந்தும், உரவுத்திரை உழக்கியும் – ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும், பாவை சூழ்ந்தும் – கடற்கரை மணலிலே பாவை (மணல் பொம்மை) செய்தும், பல்பொறி மருண்டும் - ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தும், அகலாக் காதலொடு – நீங்காத விருப்பத்தோடு, பகல் விளையாடி – பகற்பொழுதெல்லாம் விளையாடி, பெறற்கரும் – பெறுவதற்கு அரிதான, தொல்சீர் – தொன்மையான சிறப்புடைய ,துறக்கம் ஏய்க்கும் – சுவர்க்கத்தை ஒத்திருக்கும், பொய்யா மரபின் - நீர் வளம் பொய்த்துப் போகாத மரபினையுடைய, பூமலி பெருந்துறை – பூக்கள் நிறைந்து காணப்படும் பெரிய காவிரிப்பூம்பட்டினம். 

காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள் :

துணைப் புணர்ந்த மட மங்கையர் 
பட்டு நீக்கித் துகில் உடுத்தும் 
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் 
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் 
மகளிர் கோதை மைந்தர் மலையவும் 
நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக் 
கொடுந் திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும் 
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் 
வெண் நிலவின் பயன் துய்த்தும் 
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115) 

காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வச் செழிப்பு மிகுந்த நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில் வாழ்ந்த மங்கையர், இரவு நேரத்தில் பாடல்களைக் கேட்டும், நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண்ணிலவின் காட்சி இன்பத்தை நுகர்ந்தும் மகிழ்ந்தனர். தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் ,தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் கள்ளினை அருந்தாது மட்டினைக் குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை(மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர். இவ்வாறு இன்பம் நுகர்ந்து, இரவின் கடையாமத்திலே கண் அயர்ந்தனர். இந்த இரவினிலே, மீன் பிடிக்கச் சென்ற வளைந்த கட்டுமரங்களையுடைய பரதவர், நெடிய தூண்களையுடைய வீட்டின் மாடங்களிலே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளி பொருந்திய விளக்குகளை எண்ணிப்பார்ப்பர். (மீன் பிடிக்கச் சென்ற பரதவர், மாடங்களில் ஏற்றி வைத்த விளக்குகளில் அணைந்தன தவிர அணையாமல் எரியும் சுடர்களை எண்ணி இரவு நேரத்தைக் கணக்கிட்டுக் கரைக்குத் திரும்புவர் போலும்) 

சொற்பொருள் விளக்கம்:

துணைப்புணர்ந்த – கணவரைக் கூடின, மட மங்கையர் – இளம் பெண்கள் , பட்டு நீக்கி –பட்டாடையினை நீக்கி, துகில் உடுத்து – பருத்தி ஆடையினை இடுத்தி, மட்டு நீக்கி – கள்ளினைத் தவிர்த்து, மது மகிழ்ந்து – மதுவினை அருந்தி மகிழ்ந்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - கணவர் அணியும் (கோதை) மாலையினை சூடியும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் – மகளிர் அணியும் கோதையினை ஆடவர் சூடியும், நெடுங்கால்மாடத்து- நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில், ஒள்எரி நோக்கி – ஒளியுள்ள விளக்குகளை எண்ணுவதும், பாடல் ஓர்ந்தும் – பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தும், நாடகம் நயந்தும் – நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண் நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் காட்சி இன்பத்தை அனுபவித்தும், கண் அடைஇய – கண் உறங்குகின்ற, கடைக் கங்குலான்- இரவின் கடைசிப்பகுதி .


கப்பலின் மேலேற்றப்பட்டுள்ள கொடிகள்:

வெளில் இளக்கும் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்துறைத் தூங்குநாவாய் துவன்று இருக்கை மிசைக் கூப்பின் நசைக் கொடியும் (172-175) கள் விற்கும் முன்றிலிலுள்ள கொடி மீன்தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில் மணல் குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின் நறவு தொடைக் கொடியோடு (176-180)


(க.ரை) காண்பதற்கு இனிய புகார் நகரின், அலை வீசும் கடற்கரையின் முன்னே, கட்டுத்தறியை அசைக்கும் ஆண் யானையைப் போல, அசைகின்ற மரக்கலன்கள் நிறைந்த இடத்தில் மரக்கலன்களின் மேல் ஏற்றப்பட்டுள்ள விருப்பமான கொடியும்,

சொற்பொருள் விளக்கம்: வெளில் இளக்கும் - கட்டுத்தறியை, களிறு போல- களிற்றைப் போல, அலை வீசும் கடற்கரையின் முன்னே, தீம்புகார் திரை முன்துறை-இனிய புகார் நகரின் துவன்று – நிறைந்த, இருக்கை – இருப்பிடத்தில், மிசை – மேலே, கூம்பின் – மரக்கலன்களின் உச்சி , நசைக் கொடி – விருப்பமான கொடி, (அயல்நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்களுக்குப் பிறநாட்டு கப்பல்கள் வந்துள்ளமையினை அறிவிப்பன அவற்றின் மேலே ஏற்றப்பட்டுள்ள கொடிகளே என்பதால் நசைக்கொடி என்றனர்)


அர்சிஷ்ட சூசையப்பர் பேரில் பாடல்

வாழ்க சூசைத் தாதையே
தேவ மாதாவின் பத்தாவே
தூய்மை மிகுந்தவரே
வாழ்க வாழ்க

மானிடருக்குள்ளே பெரிய
வரங்கள் நிறைந்தவரே
வானவர் மகிமையே
வாழ்க வாழ்க

துன்பப் படுவோர்க்கும்
துயரத்தால் வாடுவோர்க்கும்
இன்பமான தஞ்சமே
வாழ்க வாழ்க

மாசில்லாத கன்னிகைக்கு
மணவாளன் ஆனவரே
தூய சூசையப்பரே
வாழ்க வாழ்க

சேசு மரியாயி கையில்
ஏந்தி அணைக்கப்பட்டு நீர்
நேசமாய் மரித்தீரே
வாழ்க வாழ்க

இத்தனை பாக்கியம் பெற்ற நீர்
என் மரண வேளையிலும்
ஒத்தாசையாய் இருப்பீரே ... ... ...
வாழ்க வாழ்க

பரதவரின் குடிநீர் நுட்பம்


”கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ?”

என்பது படகோட்டி திரைப்படத்தின் பாடல் வரிகள். உலகெங்கும் தங்கள் நாவாய்கள் மூலம் கடற்பயணம் மேற்கொண்டு திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழ் குடிமக்களாம் பரதவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. வணிகப் பொருட்களை அதிகம் ஏற்றி செல்லும் கப்பல்களில் தங்கள் தேவைக்காக குடிநீரை அதிகம் கொண்டு செல்லும் போது அதிக இடம் எடுத்துக்கொள்ளும் அவ்வாறே கப்பலின் எடையும் அதிகரிக்கும். ஆக பெரும் கடற்பயணங்கள் மேற்கொண்டு உலகையே வலம்வந்த இவர்கள் தங்களின் கடற்பயணங்களில் குடிநீருக்கு என்ன செய்வார்கள்? என்ற வினா நாம் அனைவரின் மத்தியிலும் எழுவது இயல்பே?. 

பெரும்பாலும் கடற்பயணங்களில் வணிகப் பொருட்களை விற்க செல்லும் இடங்களில் கிடைக்கும் நீரை சேகரித்து வைத்துக் கொள்ளுவர் என்றும் கடல் நடுவே காணப்படும் தீவுகளில் கிடைக்கும் நன்னீரை சேகரித்து குடிநீராகப் பயன்படுத்துவார்கள் என்றும் நாம் வழக்கமாக எண்ணுவோம். எனினும் பரதவர்கள் கடல் நீரையே குடிநீராகப் பயன்படுத்தும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர் என்பதே உண்மை.

உலகெங்கும் தங்கள் நாவாய்கள் மூலம் கடற்பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த பரதவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைப் பற்றி சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் தங்களின் கடல் பயணத்தின்போது தங்களுக்குத் தேவைப்படும் குடிநீருக்காக கடல் நீரையே சார்ந்து இருந்தனர். கடல் நீரை குடிநீராக்கும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர். 

இத்தொழில் நூட்பத்திற்காக அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்:

தேத்தான் கொட்டை: - தேற்றான் கொட்டை

இது நீரை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. 

இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது. 
          • அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
          • முஸ்டா (கோரைக்கிழங்கு),
          • உசிரா (வெட்டி வேர்),
          • நாகா (நன்னாரி),
          • கோசடக்கா (நுரைபீர்க்கை),
          • அமலக்கா (நெல்லி) 
போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம். 

Strychnos potatorum P.Oudhia Ecoport seeds
ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

இன்றும் கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

ஆல்கஹாலை வெகுவாக கட்டுப்படுத்தும் நிலம்புரண்டி என்னும் என்னும் மூலிகை மனித வாடை தொலைவில் இருக்கும்போதே மண்ணில் புதைந்து கொள்ளும் தன்மை கொண்டது. இதைக் கண்டுபிடிக்க கையில் தேற்றான் கோட்டையை வைத்துக் கொண்டு நடக்கும் போது இது மண்ணில் புதைவதில்லை. ஒருவேளை மண்ணில் புதைந்துவிட்டால் அந்த  இடத்திற்கு வரும் போது கையில் இருக்கும் கோட்டைகள் தானாகவே ஆடும் தன்மை கொண்டது. இதன் மூலம் மண்ணில் மறைந்துள்ள நிலம்புரண்டி செடியை கண்டறியலாம்.

 அரைநெல்லிக்காய் மரக்குச்சி:

நீரின் சுவையை அதிகரிக்க செய்யவும்,  உடல் வெப்பத்தை தணிப்பதற்கும் சிறந்ததாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். கடற்பயணங்களில் நீரின் சுவையை அதிகரிக்க அரைநெல்லிக்காய் மரக்குச்சி பயன்பட்டது.  

முருங்கைக்குச்சி  :

தேத்தாங்கொட்டையைப் போலவே முருங்கையும் நீரிலுள்ள பாக்டிரியாக்களை நீக்கி தூய்மையான குடிநீரை தருகிறது. இரவு படுக்கைக்குப் போகும் முன் நீரில் முருங்கை விதைகளை போட்டு விட்டு காலையில் நீரை வடிகட்டிக் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தற்காலத்தில் முருங்கை விதை மற்றும் இலையில் இருந்து எடுக்கப்படும் காரிஜிக் ஆண்டிமைக்ரோபியல் புரதங்கள் நீரைச் சுத்திகரிக்கும் திறன் உள்ளவை என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துளசி:

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. துளசியில் இல்லாத சத்துகளும், மருத்துவகுணமும் வேறெதிலிலும் இல்லை.  துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் வியாதியே நம்மை நாடாது. கடற்பயணத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க துளசி பயன்பட்டது.

செம்பு பாத்திரம்:

உள்ளே ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்து பின்னர் பருகினால் நீரிலுள்ள பாக்டிரியங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு மிகவும் தூய்மையான நீர் கிடைக்கும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும். செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதனாலேயே அக்காலத்தில் செம்பு குடம் ஒன்று சீதனமாக கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

வெட்டிவேர் மற்றும் நன்னாரி இவை இரண்டையும் சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்துக் கட்டி நீரில் போட்டு வைத்து நன்கு ஊறிய பின்னர் பருகும் போது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் அதிக நீரிழப்பைக் குறைத்து தாகம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அத்துடன் உடல் வெப்பத்தையும் குறைக்கிறது. நீர் நல்ல வாசனையாக இருக்கும்.

குறிப்பாக 
            • தேத்தான் கொட்டை
            • அரைநெல்லிக்காய் மரக்குச்சி 
            • முருங்கை மரக் குச்சி 
ஆகிய மூன்றையும் போதிய அளவு எடுத்து உப்புத் தண்ணீரில் போட்டுவிட்டால் உப்புநீர் நன்னீராகிவிடும். இந்த தொழில்நூட்பத்தை கொண்டே கடல் நீரை குடிநீராகப் பயன்படுத்தி கடற்பயணங்களில் பரதவர்கள் தங்கள் நாவாய்களை செலுத்தினர்.

வேம்பாற்றுத்துறையும் முத்தரிப்புத்துறையும்

பண்டைய வேம்பாற்றில் நியாயக்காரர் என அழைக்கப்பட்டவரும் பரத குலத்தின் அடப்பனார் பதவியை வகித்தவருமான பெரிய அடப்பனார் சந்தியாகு மாதவடியான் பர்னாந்து அவர்களின் புதல்வி நீக்கிலம்மாள் பர்னாந்து அவர்களைத் திருமணம் செய்தவர் தொம்மை முறாயிஸ் கோமஸ் ஆவார். பெரிய அடப்பனாரின் மகளைக் கட்டிய சில காலங்களில் இவர் கோமஸ் அடப்பனார் என அழைக்கப்பட்டார்.



The Pearl fleet at Mannar
[Johann Wolffgang Heydt] ~ 1735

கோமஸ் அடப்பனாருக்கு ஏராளமான படகுகளும், தோணிகளும் இருந்தன. வேம்பார் பகுதியில் மட்டுமில்லாமல் இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற முத்துக்குளித்தலிலும் இவரது படகுகளும் அதிகம் ஈடுபடும். இவர் தமது உறவினர்களான நெய்தல் நில மக்களாகிய பரதர்களையும், திமில்வாணர்கள் என அழைக்கப்படும் திமிலர்களையும் கொண்டு கடல் தொழிலும், கடல் வணிகமும் செய்து வந்தார். முத்தெடுப்பதற்காக இவர் தமது தொழிலாளர் கூட்டத்துடன் மன்னாரின் முத்தரிப்புத்துறை என அழைக்கப்படும் இடத்தில் குடியேறினார். தொழிலாளர்களுக்காக தனது வீட்டருகே ஒரு குளம் வெட்டினார். அக்குளம் திமிலர் குளம் என்றும், அவர் தங்கி இருந்த இடம் அடப்பன் தோட்டம் என்றும், அவரின் தோணிகளை கட்டிய இடம் கோமிசன் முட்டு (கோமசின் முட்டு) என்றும், அவரின் தோணிகளை காவல் காத்த சுவானி குருஸ் இருந்த ஓடைப் பகுதி சுவான் ஓடை என்றும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பெரும் வேம்பாற்றுக் கூட்டமே முத்தரிப்புத்துறையில் குடியறியது. மன்னார் வளைகுடாவில் வேம்பாற்றிக்கு நேரெதிரே முத்தரிப்புத்துறை அமைந்திருப்பதால் இக்குடியேற்றம் அமைய சாத்தியமானது.

பொதுவாகவே வேம்பாற்றுவாசிகள் முத்துசல்லாபத்திற்காக மன்னார் செல்வதும் முத்துசல்லாபம் முடிந்த பின் வேம்பாற்றிக்கு திரும்பி வருவதும் வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு செல்லும் போது முத்து சல்லாபம் சிறப்பாக நடைபெற வேண்டி தங்களது பாதுகாவலியான வேம்பாத்து பரிசுத்த ஆவி கோவிலில் தற்போது நடுநாயகமாக வீற்றிருக்கும் பரிசுத்த செங்கோல் நாயகியை தம்முடன் எடுத்து செல்வதும், திரும்ப வரும் போது எடுத்து வருவதும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு முத்தரிப்புத்துறையில் பரிசுத்த செங்கோல் நாயகிக்கு ஆலயமும் வேம்பாற்றுவாசிகள் எழுப்பினர். முத்தரிப்புத்துறையில் கோமஸ் அடப்பனார் பரிசுத்த செங்கோல் நாயகிக்கு பெருநாள் எடுத்துக் கொண்டாடினார். பின்னர் வேம்பாத்துக்கு திரும்பும் போது பரிசுத்த செங்கோல் நாயகியை மீண்டுமாக பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொலுவேற்றினார். 

சுருபம் கைமாறப்பட்டதால் முத்தரிப்புத்துறையில் செங்கோல் மாதா ஆலயத்தில் வேறொரு செங்கோல் மாதா சுருபத்தை வைத்து வழிபடலாயினர்.  தற்போது வரையிலும் செங்கோல் மாதா ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழாவே பரதர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உற்று நோக்கும் போது வேம்பாற்று பரிசுத்த ஆவி ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழாவை தற்போதும் கோமஸ் அடப்பனாரின் குடும்பத்தினரே கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தகுந்தது. முத்தரிப்புத்துறையில் தற்போது அமைந்துள்ள ஆலயம் 17.05.1936ல் கட்டப்பட்டது.

மன்னார் தீவில் வருடாவருடம் சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கான ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் முத்துக்குளித்தல் செழுமை பெற காணிக்கை மாதா திருவிழா அன்று (பெப்ரவரி மாதம் 2 ஆம் தேதி) பரிசுத்த செங்கோல் மாதாவிற்கு பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கூடுதல் தகவலாக வேம்பாற்றின் பாதுகாவலரான சந்த செபஸ்தியாரின் பெருவிழா முத்தரிப்புத்துறையில் வாழும் திமிலர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு தற்போது பரத இளைஞர்களால் வெகு விமரிசையாகக்  கொண்டாடப்பட்டு வருவதும் கவனத்திற்குரியது. கோமஸ் அடப்பனாரால் குடியேற்றப்பட்ட வேம்பாற்றை சேர்ந்த பரதர்களும், திமிலர்களும் வேம்பாற்றில் தங்களால் கொண்டாப்பட்ட இவ்விரு திருவிழாக்களை ஆளுக்கொன்றாகப் பிரித்துக் கொண்டனர்.

வேம்பாற்றுவாசிகளைப் போல முத்தரிப்புத்துறை பரதர்களும் சந்த செபஸ்தியாரை 'ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன்' என அழைத்து வருகின்றனர். அவ்வாறே ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனுக்கு வேம்பாற்றில் கூறப்படும் ஜெபங்களையே முத்தரிப்புதுறையிலும் கூறப்படுவது குடியேற்றத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இச்செபங்கள் இங்கிருந்தே மன்னார் தீவு முழுமைக்கும் பின் பண்டைய யாழ்ப்பாணம் மறைமாவட்டம் முழுதும் பரவி இன்று இலங்கை தீவு முழுவதும் அனைவராலும் செபிக்கப்பட்டு வருகிறது.

நினைத்த நேரத்தில் வேம்பாற்றிக்கும் மன்னாருக்கும் சென்று வரும் அளவு மந்திர தந்திரத்தில் கோமஸ் அடப்பனாருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கோமஸ் அடப்பனாரும் சில காலம் முத்தரிப்புத்துறையிலே வாழ்ந்து மரிக்க, அவரை அங்கேயே அடக்கி கல்லறை எழுப்பப்பட்டது. அதன் மேல் ஸ்தூபியும் எழுப்பப்பட்டது. இலங்கையில்  நடைபெற்ற விடுதலைப் போரில் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் கோமஸ் அடப்பனாரின் நினைவு ஸ்தூபியும் சிதைந்து போனது. 

பிற்காலத்தில் இங்கிருந்து வடகரையோரமாக வள்ளங்களைக் கொண்டு சென்ற பரதவர்கள் வங்காலை தொட்டு மன்னார் கரைகளிலும், தெற்கே சென்றவர்கள் முள்ளிகுளத்தில் அடப்பன்குளம் என்னும் குளத்தை வெட்டி விவசாயமும், கடல் தொழிலோடு, வேட்டையாடித் தேன் எடுப்பதிலும் தங்கிவிட்டனர். தரை மார்க்கமாக பரதவர்கள் பறப்பாங்கண்டல், சிறுகுளம், ஊற்றுப்பிட்டி, மூர்க்கரசன்குளம் ஆகிய இடங்களிலும், திமிலர் பாலப்பெருமாள்கட்டு, மணமோட்டைப் பகுதியிலும் தங்கினர்.

வேம்பாற்றுவாசிகளைப் போலவே இவர்களும் கத்தோலிக்கத்தில் விசுவாச வாழ்வு வாழ்கிறார்கள். வேம்பாற்றிலிருந்து இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்திற்கென ஒரு ஆயரும், 16 குருக்களும், 36 கன்னியர்களும் சென்றிருப்பதைப் போல 7 குருக்களும், 16 க்கும் அதிகமான கன்னியர்களும் முத்தரிப்புத்துறையிலிருந்தும் சென்றுள்ளனர். மேலும் வேம்பாற்றில் காணப்படும் 1602 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக்கல் குறிப்பிடும் கூஞ்ஞ குடும்பத்தினர் வேம்பாற்றில் ஒருவர் கூட இல்லாத நிலையில் முத்தரிப்புத்துறையில்  பலரும் வாழ்வதும் கவனத்திற்குரியது. 

கோமஸ் அடப்பனாரால் முத்தரிப்புத்துறையில் குடியேறிய மக்களுக்கும் வேம்பாற்றுவாசிகளுக்குமான தொடர்பு பிற்காலத்தில் முற்றிலும் அற்றுப்போனது. இன்று எள்ளளவும் தொடர்பில்லாத நிலையிலே இரண்டு ஊர் பரதர்களும் உள்ளனர். தற்காலத்தில் ஏறத்தாழ 700 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்த குடும்பங்கள் பல. 

மேற்கண்ட பல்வேறு தகவல்களை இலங்கை அரசின் கலாபூஷன் விருதினைப் பெற்றவரும், முத்தூர் சிப்பியன் என அனைவராலும் அழைக்கப்பட்டவரும் முத்தரிப்புத்துறையினை சேர்ந்தவருமான அலோசியஸ் பர்னாந்து,  தமது சிப்பிக்குள்முத்து என்னும் முத்தரிப்புத்துறையின் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

- நி. தேவ் ஆனந்த் 

An ethnological study on Islamic, Tamil and other groups who contributed to Sri Lankan Pearl Fishery.

Rare Article Collection

An ethnological study on Islamic, Tamil and other groups 

who contributed to Sri Lankan Pearl Fishery. 

Sinhala Language 

பட்டு (கடல்) வழி


உலகின் முதன் முதலில் பட்டுப்புழுவை வளர்த்துப் பட்டினை உற்பத்தி செய்தவர்கள் சீனர்களே. பட்டு உற்பத்தியின் இரகசியத்தை உலகில் யாருக்கும்  இவர்கள் கற்றுத்தரவில்லை. பட்டுநூலை உற்பத்தி செய்து யவன நாடுகளுக்கு இவர்கள் விற்றனர். அவரகள் சென்ற பெருவழி பட்டுபெருவழி என அழைக்கப்பட்டது. இவ்வழி மத்திய ஆசியா வழியாக சென்றது.  மேலும் சுமத்ரா, மலேசியா, பர்மா, வங்கம், கலிங்கம், சாதவானநாடு, தமிழ்நாடு, செங்கடல் வழியாக யவனநாட்டிற்கு சீனத்துபட்டினை வணிகம் செய்தனர். இந்த கடல்வழியை பண்டைய நாளில் பட்டு (கடல்) வழி என்று அழைத்தனர். இந்த பட்டு பெருவழியும், பட்டு (கடல்) வழியும் பட்டு வணிகத்திற்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளச் செய்யும் தகவல்களை உள்ளடக்கிய செய்தித்  தொடர்பு வழியாகவும் விளங்கின.


குறிப்பாக ஆட்சி முறைகள், ஆட்சி மாற்றம், கலகம், இயற்கை அழிவுகள் ஆகிய செய்திகளை தாங்கி செல்வதாக அமைந்தது. பட்டினப்பாலை (189) 'குணக்கடல் துகிரும்' என்றும், அர்த்தசாஸ்திரம் 'சீனப்பட்டா' என்றும் சீனபட்டினை சிறப்பித்துக் கூறுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் சீனப்பட்டிற்கும் உள்ளூர் பட்டுக்கும் இடையேயான தரம் பற்றிக் கூறுப்படுகிறது. 'பட்ட' என்ற சொல் பட்டு என்பதன் திரிபாக எடுத்துக் கொண்டால் கி. மு.4 ஆம் நூற்றாண்டிலேயே சீனத்துப்பட்டு தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூற முடியும். அவ்வாறே கடல் வழியாக யவனதேசத்திற்கு தென்னிந்தியா மூலமே சீனப்பட்டு சென்றிருக்க வேண்டும். 

யார் இந்த பரவன்?


சிலப்பதிகார பரவர்களை எழுத ஆரம்பித்த உடன் எடுத்த எடுப்பிலே மகாகவி பாரதியே நினைவில் வந்தார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  

என்று பாடிய மகாகவி மறு அடியில் இப்படி பாடி சிலப்பதிகாரம் என்ற தமிழ் மொழியின் முதற் காப்பியத்திற்கு பெருமை சேர்த்தார். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்றோர் மணியாரம் பதித்த தமிழ்நாடு....."

தமிழரின் அரசியல், பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை சிறப்பாக எடுத்து கூறும் இந்த முத்தமிழ் காவியம் பரவர்களைக் குறித்தும் பேசி இருக்கிறது.

'கற்பும் காமமும், நற்பால் ஒழுக்கமும்/ மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்/ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்/ பிரிவோம் அன்ன கிழவோன் மாண்புகள்' என்று தொல்காப்பியம் (தொல் கற் 11) பட்டியலிட்டிருக்கும் பெண்ணுக்குரிய பேரார்ந்த மாண்புகளையும், கற்பின் திண்மை பாய்ந்த பொற்புடைத் தெய்வமாக போற்றப்படும் சிறப்புகளையும் கொண்டவளாக கண்ணகி விளங்கினாள் அன்றோ? அவள் ஒரு 'பரத்தி' என்றால் அது எமக்கு பெருமை தானே? இந்திய விடுதலை வேண்டி முழக்கமிட்ட பாரதி, 

பரவரோடு குறவருக்கும் 
மறவருக்கும் விடுதலை 

என்று பாடினானே ...யார் இந்த பரவன்?

'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி' அஞ்சி அஞ்சி வாழ்பவனா? 'அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு' உறங்கி கிடப்பவனா? ' மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்று என்னும் ஈனக்' குலத்தைச் சார்ந்தவனா? இல்லை..... இல்லை.... ஒரு போதும் இல்லை.... அவனுகென்று ஒரு வரலாறு இருக்கிறது.

அவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பை காவியம் பாடுகிறது. கவிதைகள் போற்றுகிறது. 'நெரித்த திரைக் கடலும், நீல விசும்பினிடை திரித்த நுரையும்' எனப் பாடுகின்றன. பரவர்களின் காலத்தை கணக்கிடுவது எப்படி? சங்க காலத்திற்கு முன்பே பொங்கு புகழ் வாழ்க்கை கொண்டிலங்கிய பரவர்களைச் சிலப்பதிகாரம் சிறப்பாகப் பாடுகிறது.

உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் 
பரதவர் மிகுந்த பயங்கெழு மாநகர் 

செல்வச் சீமான்களான பரதர்கள் நிறைந்த மாபெரும் புகார் நகர் என சிறப்பித்துள்ளது. அன்று யாவனரோடும், எகிப்தியரோடும் வணிகம் வளர்த்து வானுயர வாழ்ந்த பேரினம் அல்லவா பரவர் இனம்? 

'தமிழன் வேறு' 'பரவன் வேறு' என்பதல்ல......
முதல் தமிழனே பரவன் தான் .......
அவன் கடல் தோன்றியபோதே தோன்றியவன் .....
அவனது வரலாறு கடலோடு தொடங்குகிறது.

' திங்களோடும் செழும் பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும் 
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் 
உடன் பிறந்தோம் நாங்கள்'
  - என்றாரே புரட்சிக்கவிஞர் பாரதி தாசன்.....


அந்த கடலோடு பிறந்த தமிழோடு பிறந்த தமிழன் பரவனே..... நெய்தல் நிலத்தின் நிகரில்லாத் தலைவன் பரதனே.... 'இலங்கு இரும்பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிற்' காரன் பரவனே...... அவனே பண்டிதன்...... அவனே பாண்டியன்..... அவன் காற்றை அறிந்தவன்... கடலின் புத்திரன்! பரவன் இந்த மண்ணிற்கு அந்நியன் அல்ல.... அடிமையும் அல்ல.... அவன் மறந்து போன தன்னினத்தின் கனவுகளையும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியே தீர வேண்டிய காலம் இப்போது வந்தாயிற்று.... பேச்சு, எழுத்து என்ற இருவகை எடுத்துரைப்பு முறைகளாலும், கலைந்து கிடக்கின்ற இந்த தொல்குடிப் பரவனின், 'கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையையும்' நிலம் நோக்கிய பெருவெளியில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தாக வேண்டும். அப்போது தான் ' பரவன்' யாரென 'பரவன்' தெரிந்து கொள்வான்.

முதலில்

காற்றிலே இன்னும் வேகமாய் அசைகிறது எம் கொடி 
எம் பதாகை காற்றில் உயர உயர 
கொடியில் நீந்தும் மீன் 
இனி ஆகாயத்திலும் பறக்கும் ......!

- பானுமதி பாஸ்கர் 
நன்றி : பரதர் சமூக வழிகாட்டி இதழ் 
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com