முத்துக்குளிப்பு
பழைய காயலில் அதிக அளவில் முத்துக்குளிப்பு நடந்ததாக வாஸ்கோடகாமா தனது பயணக் குறிப்புகளில் பதிவிட்டுள்ளார். போர்ச்சுகீசியர் கி.பி.1505 முதல் கி.பி.1508 வரை பழைய காயலில் முத்துக்களை பெருமளவு வாங்கினர். ஆனால் பரதவர்களின் கத்தோலிக்க மதமாற்றத்துக்கு பின் போர்ச்சுகீசியர்கள் முத்துக்குளித்தலை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். கி.பி.1587 ல் முத்துக்குளித்துறையிலிருந்து 181 குவிண்டால் அளவிலான முத்துக்கள் லிஸ்பனுக்கு அனுப்பப்பட்டன.
பழையகாயலில் ஆண்டுக்கு இரண்டுமுறை மார்ச்-ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட்- செப்டெம்பர் மாதங்களில் முத்துக்குளியல் நடைபெற்றதாகவும், விற்பனை ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. முத்துக் குளிப்பின் போது போர்ச்சுகீசிய படைத்தலைவன் மற்றும் பரதவ இனத் தலைவன் முத்துக்குளித்துறையில் தங்கினர். பிடிக்கப்பட்ட முத்துக்கள் கோவாவிற்கும் அனுப்பப்பட்டன.
கி.பி.1616 ல் 36 பைகளில் 'அல்ஜோபர் ' வகை முத்துக்கள் போர்ச்சுக்கல்லுக்கு அனுப்பப்பட்டன. அப்போது முத்துக்கள் அவுன்ஸ் கணக்கில் அளிக்கப்பட்டன. இவை போர்ச்சுகீசிய சீனாவுக்கும் அனுப்பப்பட்டன. மதுரை நாயக்க மன்னன் தன்னுடைய பங்காக ஒருநாள் முத்துக்குளிப்பு வருமானத்தை பெற்றுக் கொள்ள, பரதவர்கள் சங்கு குளிப்பதிலும் வல்லவர்கள், சவேரியார் கடிதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் சங்கு குளிப்பு நடந்ததாக அறிகின்றோம். சங்குகள் வங்காளம், பீகார், ஒரிசா போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. (அருட் சகோதரி. முனைவர்.டெக்லா மேரி)
முதலாம் நூற்றாண்டில் கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார். உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.
இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள், பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள்.
முத்துக்குளித்தல் (Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும். முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும்.
நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக்களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துககுளிக்கக் குதித்துவிடுவார். முத்துக்குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
முத்தின்வகைகள்:
1. ஆணி, 2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில், 6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.
ஆனால் பாரம்பரீய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.
செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.
தென்னிந்தியாவைத் தவிற இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும், இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அறியக்கூடிய செய்தி.
பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் மற்றும் அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்
பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.
மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து கதைப்போம்...
பரதவர்கள் தொல்குடிகள்தான். சங்க இலக்கியங்கள்ல அவர்களுக்கு ஒரு தனி அரசு இருந்ததா குறிப்பு இருக்கு. 'தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டினார்' (புறம் 378) அப்படின்னு ஒரு சங்கப்பாடல் இருக்கு. இன்னமும் தூத்துக்குடில அதோட எச்சப் பாடல்லாம் இருக்கு. அவங்களுக்குள்ள ‘கடலரசன்'னு ஒருத்தர் இருக்கார். சாதிப் பஞ்சாயத்துத் தலைவர ‘கடலரசன்’னு சொல்றாங்க. அவங்ககிட்ட தொல்குடிச் சடங்குகள் நிறைய இருக்கு. தாய்மொழி சார்ந்த பிரியமும் ரொம்ப அதிகம்.
பரதவர் வைணவம் சார்ந்து இருந்திருக்கிறார்களா ?
திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாளை மாப்பிள்ளேன்னு சொல்லக் இங்கில்ல. வட மாவட்டத்துல திருக்கண்ணபுரத்துல பார்த்தேன். கூடியவங்க மீனவர்கள்தான். தென்பகுதி முழுக்க நூற்றுக்கு நூறு மீனவர்கள் கிறிஸ்துவர்கள்தான். கிழக்கே தூத்துக்குடியில இருந்து வேம்பாறு வரைக்கும். தமிழ்நாட்டினுடைய முதல் கிறித்துவக் குடிகள் அவங்கதான்.
1530-கள்ல பிரான்சிஸ் சேவியர் காலத்துல மாறுனவங்க. இன்னும் அவங்க தொல் தமிழ்ச் சடங்குகளை எல்லாம் வச்சுருக்காங்க. 'வாசல் பதித்தல்' என்னும் சடங்கு மாதிரி பல சடங்குகளை வச்சிருக்காங்க. இன்னும் அவங்க மூதாதையர்களை பற்றிச் சொல்லும்போது ‘பரவர் புராணம்'னு ஒன்னு வச்சுருக்காங்க. சிவபெருமான் வலைவீசி மீன்பிடித்த திருவிளையாடலோடு தங்களைத் தொடர்புபடுத்துகிறார்கள் பரதவர்கள். 'பரதவர் பாண்டிய வம்சத்தினரே'னு ஒரு புத்தகத்தை நான் பார்த்திருக்கேன். படிச்சதுல்ல, அவங்க தமிழ் Identity—க்குத்தான் முயற்சி பண்றாங்க.
கிறித்துவர்களா அவங்க மாறுவதற்கு முன்பு வழிபாட்டு முறை எப்படி இருந்தது?
அவர்கள் ஒரு சுறாக்கொம்பை நட்டு வழிபட்டுக் கொண்டிருந் தார்கள்னு சங்க இலக்கியத்துல 'சினைச் சுறாவின்கோடுநட்டு, மனச்சேர்த்திய வல்லணங்கினான்' அப்படின்னு பட்டினப்பாலையிலேயே சுறாவின் கொம்பை நட்டு வழிபட்டதைச் சொல்றாங்க. தொடக்க கிறித்துவ மிஷனரிகள் இதை எழுதும்போது அவர்கள் ஒரு சுறாக் கொம்பை நட்டு வழிபட்டார்கள்னு எழுதுனாங்க. அதுதான் அவங்க வழிபாடு.
- மானுட வாசிப்பு நூலில் தொ.பரமசிவம்.
தொல்குடி பரதவர்கள்
Dev Anandh Fernando
08:21

தலையாலங்கானத்து போரின் நாயகர்களான பாண்டியரும் பரதவரும்:
கூடல் என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரை மாநகர் கிமு நான்காம் நூற்றாண்டில் அகுதை என்பவன் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில் கொற்கை பரதவர்களின் அரசனாக இருந்த பாண்டிய நெடுந்தேர் செழியன் என்பவன் நான் மேற்கூறிய அகுதையை போரில் வென்று கூடல் வரை தனது அரசை விரிவாக்கி அக்கூடல் மாநகரிலேயே தங்கியிருந்து ஆட்சி செய்ய தொடங்கினான்.
இந்த நெடுந்தேர் செழியனின் ஏழாவது தலைமுறையில் தோன்றியவனே புகழ்பெற்ற தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன். மதுரையில் பாண்டிய வேந்தன் மறைந்த பிறகு பரதவர்களின் கொற்கை மாநகரிலே இளவரசனாக இருப்பவனே மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்பது வழக்கம்.
நெடுஞ்செழியன் சிறுவனாக இருக்கும்போதே மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்த அவன் தந்தை இறந்து விட்டார். பரதவர்களின் கொற்கையில் இளவரசனாக இருந்த சிறுவன் நெடுஞ்செழியன் மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்றான்.
தொடக்கத்தில் கொற்கை பரதவர்களின் அரசர்களாக மட்டுமே இருந்த பாண்டியர்கள் தங்களது அரசை உள்நாட்டில் பெரிய அளவில் விரிவாக்கி பேரரசை உருவாக்கியிருந்ததை பொறுத்து கொள்ள முடியாத அவர்களுடைய பகைவர்கள் அவர்களை வீழ்த்தி பாண்டிய நாட்டை தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ள சமயம் பார்த்து காத்திருந்தனர்.
சிறுவனாக இருந்த நெடுஞ்செழியனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று எண்ணி சோழனுடன், சேரனும், வேளிர் ஐவரும் அச்சிறுவனுக்கு எதிராக அணி சேர்ந்தனர். தலையாலங்கானம் என்னும் இடத்தில் சோழன் தனது படையுடன் வந்திருந்தான். சோழனுக்கு ஆதரவாக சேரனும், வேளிர்களான திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரும் அவரவர் படைகளுடன் தலையாலங்கானத்துக்கு வந்திருந்தனர்.
தனக்கெதிராக சோழன் ஆறு பகையரசர்களுடன் தலையாலங்கானத்தில் ஒன்று கூடியிருப்பதை கேள்வியுற்ற சிறுவன் நெடுஞ்செழியன் எதிரி தன்னை தாக்குவதற்கு இடம்கொடாமல் அப்பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று தலையாலங்கானத்தில் வைத்து சோழனையும் அவனுடன் கூட்டு சேர்ந்த ஆறு பகையரசர்களையும் போரிட்டு வென்றான்.
தலையாலங்கானம் என்ற இடத்தில் வைத்து ஏழு பகையரசர்களை வென்றமையால் இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான்.
(குறிப்பு: இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று.)
தலையாலங்கானத்து போரில் பாண்டிய நெடுஞ்செழியன் பெற்ற வெற்றி சிறப்பினை குறித்து மாங்குடி மருதனார் தனது மதுரைகாஞ்சியில் இவ்வாறு பாடுகிறார்.....
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!
தென் பரதவர் போர் ஏறே!
விளக்கம்:
சினம் கொண்ட பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியவர்களும். அப்பகைவரைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் குடிசையில் சார்த்தியிருப்பவர்களும், கொழுத்த இறைச்சியையுடைய சோற்றினையும் கூவைக்கிழங்கினையும் உண்டு, வஞ்சினம் கூறி ஒலித்துக் கொண்டிருப்பவர்களுமான அத்தென்பரதவருள் போரிடும் காளையாக/ சிங்கமாக விளங்கியவனே" என்று பாண்டிய நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடுகிறார்.
இப்படி பாண்டிய நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்து போர் வெற்றி சிறப்பினை பற்றி அவர் மீது பாடப்பட்ட பாடலில் அவருடன் பகைவரின் நாட்டுக்குள் முன்னேறி சென்று அவர்களை போரிட்டு வீழ்த்திய தென்பரதவரை பற்றி ஏற்றி பாடி, பிறகு அவ்வீரமிக்க தென்பரதவருள் முதல்வனாக அப்பாண்டிய நெடுஞ்செழியனை பாடி முடிக்கிறார் மாங்குடி மருதனார்.
- UNI
பாண்டியரும் பரதவரும்
Dev Anandh Fernando
22:44
