திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
பொழிப்புரை :
இந்நெய்தல் நிலத்தில், தூய வெண்மணற் பரப் புடைய துறைகளில் வாழும் பரதவர்களால் தொடுக்கப்படுவன மீன் பிடிக்கும் வலைகள். சிவந்து நீண்ட அழகிய கண்களையுடைய பரத்தியர்களால் தொடுக்கப்படுவன செருந்தி மலர் மாலைகள். பெரிய உப்பளங்களில் அளவர்களால் அளக்கப்படுவது உப்பு. அங்குள்ள சாயலையும் மெல்லிய இடையையும் உடைய அளத்தியர்களால் அளக்கப்படுவன முத்துகள்.
குறிப்புரை :
பரதவர், பரத்தியர், அளவர், அளத்தியர் என்பன நெய்தல் நிலத்து வாழும் மக்கட்குரிய பெயர்களாம்.
-திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
பாடல் எண் : 34