திருமந்திரநகர்
தூத்துக்குடி என்று பொதுவாக அனைவராலும் அழைக்கப்பட்டாலும், பரதவர்கள் இன்றும் தங்களுடைய ஆலயப் பாடல்களிலும், விருத்தப்பாக்களிலும் தூத்துக்குடியை, "திருமந்திர நகர்" என்றே குறிப்பிடுகின்றனர். தூத்துக்குடியை பரதவர்கள் 'திருமந்திர நகர்' என்று குறிப்பிடுவதற்கான காரணங்களைப் பழங்காலக் கலவெட்டுக்களில் காணப்படும், 'திருமந்திர நகர்' என்ற சொற்களின் மூலம் அறிய முடிகிறது.
"திருமந்திர ஓலை நாயகம்" என்ற கல்வெட்டில் காணப்படும் வார்த்தைக்கு "அரசன் ஆணையை ஓலையில் எழுதிய பின்னர் அவ்வோலையை அரசனிடமிருந்து கிடைத்த ஆணையாகக் கருதி அதைப் பார்த்து அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி," என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு வார்த்தை திருமந்திர நகர் என்பதாகும். இதற்குக் "கோவில்" என்றும், கோவிலில் வழங்கப்படும் உணவைத் தயாரிக்க ஏற்படும் செலவினங்களைக் கொடுத்துக் குறித்து வைக்கப்படும் ஊர்" என்ற பொருள் வருகிறது.
மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களையும் ஆராயந்து பார்க்கும்போது சில செய்திகள் கிடைக்கின்றன. பாண்டியர்களால் முத்துக்குளித்துறையின் பரதவ குலத்தினர் குறுநில மன்னராகவே கருதப்பட்டு வந்திருக்கின்றனர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அரசாணையை, முத்துக்குளித்துறைத் தலைவன் மற்ற பரதவ மக்களுக்குத் தெரிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக பரதகுலத் தலைவர், "திருமந்திர ஓலை நாயகம்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதுபோலவே தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும்போது கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மதுரை, திருச்செந்தூர், போன்ற ஊர்களில் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டுக்கும் அதற்குச் செய்வதற்கான செலவினங்களுக்கான பணத்தையும் முத்துக்குளித்துறைத் தலைவனான பரதவகுலத் தலைவன் பாண்டிய மன்னனிடம் கொடுத்திருக்க வேண்டும். எனவே பாண்டிய மன்னர்களால் தூத்துக்குடி, "திருமந்திர நகரம்" என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிட்டிருக்கப் படவேண்டும்.
கல்வெட்டுக்களில் காணப்படும் இரண்டு வாசகங்களான, 'திருமந்திர ஓலை நாயகம்' அல்லது 'திருமந்திர போனகப் புறம்' என்பது மருவி, "திருமந்திர நகர்' என்று பரதவர்களால் தூத்துக்குடி அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பரதவர்கள் மத்தியில் மட்டுமே திருமந்திர நகரம் என்ற வார்த்தை தூத்துக்குடியைக் குறிப்பிடும் சொல்லாக இன்றளவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Ronaldo Fernando