இலஞ்சிய் வேள் மாப்பரவன்
அரிட்டாபட்டி: மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி அரிட்டாபட்டி உள்ளது. அவ் ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் கற்படுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் கீழ் ஒன்றும் மேல் ஒன்றும் என இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
1. நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.
இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த இளம் பேர்அதன் மகன் இமயவன் என்பவன் இக் கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.
2. செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட புதிதாக கண்டறியப்பட்ட மூன்றாவது அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு இது. மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் ஆன (அரையன்) மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மாப்பரவன் என்றால் மீனவர் தலைவன். முன்னைய கல்வெட்டில் இவன் பெயர் இளம் பேராதன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரே செய்தி இரு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒற்று சேர்த்து கொட்டுப்பித்தவன் எனப் படிக்க வேண்டும்.