வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 5 June 2015

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்
Train washed away in the 1964 yclone in dhanuskodi

தனுஸ்கோடி பாம்பன் முதல்
தயங்காத இராமேஸ்வரம்
அநியாயப் புயலடித்து
அழிந்த கொடுமை பாடுகிறேன்
அமைதியாகக் கேளும்
இந்தக் கதையை எந்த நாளும்

கண்டோர் நடுநடுங்க
காற்றுமழை புயலடிக்க
மண்டலத்தில் இக்கதையை
மனத்தெளிவாகப் பாடுகிறேன்
மக்களைப் போல நினைத்து
சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து
அறுபத்து நாலாம் ஆண்டில்
வாய்மையுள்ள டிசம்பர் மாதம்
வளருந்தேதி இருபத்திரெண்டில்
அடித்ததே புயற்காற்று
பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்
ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்
பேய்மழையும் காற்றினாலே
பேதலித்து உயிரைவிட்டார்
ஐயோ துயரமாச்சே
சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

மாலை எட்டு மணிக்கு மேலே
மதிப்படங்கா சாமத்திலே
வேலை சோலிதான் முடித்து
வீற்றிருக்கும் வேளையிலே
வருகுதையா ரயிலு
வண்டியைப் புரட்டுதையா
வடகடலும் தென்கடலும்
மண் மோதித் தான் கிளம்பி
தொடர்பாகச் சந்தித்துமே
சூறாவளிப் போல் கொதித்து
வண்டியைத் தூக்கி அடிக்க
மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்
ஆணும் பெண்ணும் ரயிலில் வர
கால்கள்தான் முறிந்து
கடலோடு போகுதய்யா
ஐயோ பரிதாபம்
இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்
தலைக்கு மேலே தண்ணீர் வர
துணியுடைகள் இல்லாமலே
தொங்குதய்யா வீட்டின் மேலே
மதில் இடிந்து சாய
மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

ஐயையோ மனைவி மக்கள்
அநியாயமாய்ப் போகுதென்று
மெய்சோர்ந்து மன்னவனும்
மெதுவாக இழுக்கும்போது
குடும்பத்தோட புரட்டி வெள்ளம்
கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

வள்ளங்களும் விலாஞ்சிகளும்
வளைக்கச் சென்ற தோணிகளும்
வெள்ளத்திலே அடியும்பட்டு
பள்ளத்திலே இழுக்குது பார்
ஐயோ மக்கள் அலற
அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

வெள்ளரிப்பழம் போல
வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா
அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு
ஆளுதவி கிடையாமல்
அலையடித்து ஒதுக்க
நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

இராமேஸ்வரம் ஊர்களிலே
தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட
பூமான்கள் கோவிலெல்லாம்
புரட்டித்தூக்கி அடிக்குது பார்
ஐயோ மக்கள் வாட
அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

சித்தம் புகழ் நடிகரவர்
ஜெமினி கணேசன் சாவித்திரி
அத்த ராத்திரி வேளையிலே
அமைந்தாரே கோவிலுக்குள்
ஆயாசப்பட்டார்
நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

உடுப்பதற்கோ உடையுமில்லை
உண்பதற்கோ உணவுமில்லை
படுப்பதற்கோ பாயுமில்லை
பறக்குதுபார் வெள்ளத்திலே
பார்க்க பார்க்க துக்கம்
பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

கக்கன்ஜி நெடுஞ்செழியன்
காமாராஜர் அண்ணாதுரை
முக்கியமாய் எம்ஜியார்
பாம்பன் செய்தி கேட்டார்
பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

ஏரோப்பிளேன் மீதேறி
எல்லோருக்குமாய் சோறுகட்டி
வாறார்கள் தனுஸ்கோடி
வந்துபார்த்தார் இராமேஸ்வரம்
சோர்ந்து கண்ணீர் விட்டார்
சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

சோறு சோறு சோறு என்று
சுழலுதய்யா மக்களெல்லாம்
ஆரு சோறு போட்டாலும்
அரை வயிறு நிறையுதில்லே
நைந்தோடுது சோறு
மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

சண்டாளப் புயலடித்து
தனஉயிரும் வீடும் போச்சே
கண்டு கவர்மெண்டாரும்
கனகோடி நிதி கொடுத்தார்
காமராஜரைத் தேடு
வேம்பார் பாக்கியம் கவிபாடு!
(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com