குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம்
`தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். ஏறத்தாழ 30 ஆண்டுகள் நகர்மன்ற உறுப்பினராகவும், 5 முறை நகர்மன்ற தலைவராகவும் இருந்த காலத்தில் ஜாதிமத பேதமின்றி தூத்துக்குடி மக்களின் அடிப்படைக்கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக்கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார். குறிப்பாக 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்த போது, மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டார். தன்னலமற்ற தனது தியாகத்தால் அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸின் நினைவினை போற்றிடும் வகையில், அவரின் பிறந்த நாளை நவம்பர் 15-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் ராவ் பகதூர் பர்னாந்தீஸ்க்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க, அவருடைய பிறந்த நாளில் அவரின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின்சார்பில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.