மதுரையை கைப்பற்றிய பரதவர் அரசன்
அகநானூறு: 296
பாடியவர்: பேராலவாயர்
திணை: மருதம்
துறை: வாயில் வேண்டி சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது.
சிறப்பு: பெரும் புகழுடையவனும் கொற்கைப் பொருநனுமான நெடுந்தேர்ச் செழியனை பற்றிய செய்தி.
(தலைமகன், வையை புதுப்புனலிலே பரத்தையோடுங் கூடிப் புதுப்புனலாடிக் களித்துத் திரிந்தான் எனக் கேட்டு ஊடல் கொண்டனல் தலைவி. அவன், அவளுடைய உறவை விரும்பியவனாக மறுநாள் வீட்டிற்கு வர, அதனை மறுத்து அவள் சொல்கின்றாள்.)
பாடல் வரி 8-13:
பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கைப் பொருநன், வென்வேற்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.
விளக்கம்:
கடலுக்குள் சென்று பலவகையான மீன்களை கொணர்பவர்கள், பரதவர்கள், அவற்றுடன் வாரிக் கொணர்ந்த முத்து சிப்பிகளை நறவுக் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பவர்களான அந்த கொற்கை மக்களின் (பரதவர்களின்) அரசன் பாண்டிய நெடுந்தேர்ச் செழியன்..
இவன் தமது (அகுதையுடனான போரின்) வெற்றிக்கு பிறகு யானை படையுடன் கூடல் நகருக்குள் புகுந்து நீண்ட காலம் அங்கு தங்கி நாடாள்வது ஊருக்கெல்லாம் தெரியும். அதுபோல மற்றொருத்தியோடு நீ கொண்ட உறவு ஊருக்கெல்லாம் தெரியும் என்று சொல்லி தலைவி ஊடுகிறாள்.
மேற்சொன்னவைகள் மூலம் பாண்டியர்கள் கூடலை கைப்பற்றுவதற்கு முன்பு வரை மீன் வேட்டை மற்றும் முத்து எடுத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த கொற்கை பரதவர்களுக்கு மட்டுமே அரசர்களாக இருந்து வந்தனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
யார் இந்த அகுதை?
அகுதை என்பவன் கூடலை கடைசியாக ஆட்சி செய்த வேளிர் அரசனாவான்.
புறம் 347 வரி 5-7, அகுதை என்பவன் கூடலை ஆண்டதைக் கூறுகிறது.
அகுதையிடமிருந்தே கொற்கை பரதவர்களின் அரசனான பாண்டியன் நெடுந்தேர்ச் செழியன் அக்கூடலை கைப்பற்றி ஆட்சி செய்ய தொடங்கினான்.
புறம் 233 வரி 2-4, அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில் மாண்டதாக கூறுகிறது.
கொற்கை பரதவர்களின் அரசனான பாண்டியன் நெடுந்தேர்ச் செழியன் கூடலை கைப்பற்றி ஆண்டதை கூறும் அகநானூறு 296 பாடல் வரி 10-13 பற்றி ஆங்கிலேயர் காலத்திலேயே வரலாற்று ஆய்வாளரும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த தமிழ் பேராசிரியருமான ஐயா சிவராஜா பிள்ளை அவர்களும் தமது நூலில் விரிவான விளக்கத்துடன் இதை பதிவு செய்துள்ளார்.