வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 7
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்
சந்த செபஸ்தியாரின் மேல் நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பற்றுதலின் காரணமாகவும்
பலவிதமான பக்தி முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சந்த செபஸ்தியாரின் அருகிருப்பை
வேண்டியும், சந்த செபஸ்தியாரின்
மேல் வைத்த நேர்ச்சையின் காரணமாகவும் அவருக்கு அணிவித்த மாலையின் நூல்களையோ அல்லது
அவரது திருஉருவத்தை அளந்த எடுத்த நூல்களையோ தங்கள் கரங்களில் கட்டிக்கொள்ளும் வழக்கமும், தற்காலத்தில் திருவிழாவின் நவநாட் காலங்களில் வெள்ளை நிற சட்டையும், கருஞ்சிவப்பில் பட்டுக்கறை பதிந்த வேஷ்டியும் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.
இதில் வெண்மை நிற மேற்சட்டை சந்த செபஸ்தியாரின் தூய உள்ளதையும், கருஞ்சிவப்பு நிற வேஷ்டி அவர் சிந்தின உதிரத்தையும், பட்டுக்கறை அவர் அடைந்த மாட்சியையும் குறிப்பதாக அமைகிறது.
பிற இடங்களில் இல்லாத வகையில் வேம்பாத்தில் மட்டும் ஏன் இருமுறை சந்த செபஸ்தியாரின்
சப்பரப் பவனி நடைபெறுகிறது என்ற வினாவிற்கு விடையாக, இரவு நேரம் தீய சக்திகள் சஞ்சரிக்கும் நேரமாகும். அந்த
நேரத்தில் நடைபெறும் சப்பரப் பவனி தீய சக்திகளை ஒடுக்க நடைபெறும் வெற்றிப் பவனியாக
அமைகிறது. இது பாரிவேட்டை எனப்படும் உலாவிற்கு ஒத்தது போல அமைகிறது. அப்பவனியின் போது
நிம்பநகரின் அனைத்து சந்துகளிலும் சந்த செபஸ்தியாரின் திருவுருவம் தாங்கிய சப்பரம்
சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்படுகிறது.
அவ்வாறே காலையின்
நடைபெறும் சப்பரப்பவனி உலகெங்கும் வதியும் நிம்பவாசிகள் தங்கள் பாதுகாவலரை வெகு ஆடம்பரமாக
பஜனைகள் படியவாறே தங்கள் தெருக்களில் அழைத்து வந்து இராவைப் போலவே பகலிலும் சப்பர வீதியின்
அனைத்து வீடுகள் முன்பாகவும், அனைத்து சந்துகள் முன்பாகவும் நிறுத்தப்பட்டு
சந்த செபஸ்தியாருக்கு நேர்ச்சை செலுத்துவதாக அமையும். முற்காலத்தில் பகல் நேரப் பவனியில்
மட்டுமே பாடப்பட்ட பஜனைகள் தற்போது இரவு நேரப் பவனியிலும் பாடப்படுகிறது. முற்காலத்தில்
இரவு நேரப்பவனிகளில் சந்த செபஸ்தியாருக்கு அணிவிக்கப்பட்ட தங்க அம்புகள் காணாமல் போய்
பின்னர் ஆற்றின் அக்கறையிலும், பனை மரங்களில் குத்திய நிலையிலும்
கண்டெடுக்கப்பட்டுள்ளதும், தற்காலத்தில் தங்க அம்புகள் காணாமல்
போய் பின்னர் மக்களால் கண்டெடுக்கப்படுவதும் நிதர்சனமான உண்மையாகும்.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து