வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 23 November 2016

இரத்த பூமி - 14

வலிந்து போய் பாண்டிய பரதரின் வல்லமையையும் வஞ்சினத்தையும் வரலாற்றில் பதிக்க பயணித்தனர்….!



ஏற்கனெவே…..!

புன்னக்காயலை கைப்பற்றி பரதவரை அடிமையாக்க இரப்பாளியை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர் படையின் ஒரு பிரிவு பரதவக்கடலின் சீற்றத்தால் வழிதப்பி முயல்தீவை தாண்டி கீழக்கரையை அடைந்திருந்தது. அங்கிருந்தபடி புன்னைகரை இரப்பாளியின் வசமாகி போனதை அறிந்து மகிழ்ந்து கொண்டாடிய கொள்ளையர் படை அங்கிருந்த மூர்களின் உதவியோடு புன்னக்காயலில் நடை பெறவிருக்கும் இரப்பாளியின் முடிசூட்டுவிழாவிற்க்கு மீண்டும் புன்னயை அடைய திட்டமிட்டிருந்தது.

அறியாத கடலின் ஆக்ரோஷ‌த்துக்கு அஞ்சிய கொள்ளையர்கள் அங்கேயே கீழக்கரையில் நாட்களை கடத்தி வந்தனர். ஆனால் இந்நிலையில் இரப்பாளியின் முடிசூட்டுவிழாவிற்க்கு வடக்கு பரதவ கடற்கரை பரதவர்களை அழைக்க அடப்பனார் தலைமையில் வந்த கொள்ளையர்களுக்கு வேம்பார் சடையனார் அளித்த வரவேற்பையும் அவர்களை மண்ணுக்குள் புதைத்து ஒழித்த கொடூரத்தையும் அறிந்து சீறினார்கள்.

மேலும் இதுபோலவே தெற்கு தென் மேற்கு பரதவகடலோரம் எங்கும் இரப்பாளியின் கொள்ளைக்கூட்டம் கொல்லப்பட்டதும், இரப்பாளியே புன்னைகாயலில் சிறைப்பட்டதும் தெரியவந்து நிலை குலைந்து போனார்கள். பரதவ தலை நகர் புன்னை மீது மறு தாக்குதல் நடத்த உத்தேசித்து பெரிய பட்டண‌த்திலிருந்த மறவர்களின் உதவியை இரப்பாளியின் கப்பற்படை நாடியது.

மறவத்தலைவனை தளபதியாக்கி புன்னைக்காயலில் சிறைப்பட்டு இருக்கும் இரப்பாளியை மீட்டு எடுப்பதற்கும் ஆலோசனை செய்து சதியில் இறங்கியது. இதற்கு மறவர்கள் உடன்படவில்லை ஆனாலும் காலகாலமாய் பரதவரொடு பயணிக்கும் பரதவ பங்காளி மறவர்கள் ஆபத்தான நிலமையை பரதவருக்கு எடுத்து கூற..... 

கீழ‌க்கரையில் மூர்களின் பாதுகாப்பில் இருக்கின்ற இரப்பாளியின் கப்பற்படைப் பற்றிய தகவல்களை தாக்குதல் ரகசியங்களை கொச்சின் போர்த்துகீசிய கோட்டைக்குப் படை திரட்ட‌ போயிருந்த‌‌ பரதவ தலைவன் விக்கிரமாதித்த பாண்டியனுக்கு விரைந்து சென்று சதிவலை பின்னலை விவரித்தனர்.

புன்னைக்கரையை மீண்டும் தாக்க திட்டமிட்டிருக்கும் கடற்கொள்ளையரையும், புன்னைக்கரையில் சிறைப்பட்டிருக்கும் இரப்பாளியையும் கொன்று ஒழிக்கவும், விதாலனால் பிடித்து செல்லப்பட்ட பிணையக்கைதிகளை மீட்கவும், போர்த்துக்கீசிய கேப்டன் கமாண்டர் லோரல் கோயன்கோ மற்றும் பரதவத்தலைவன், பட்டங்கட்டிமாரும் பெரும் படையுடன் புன்னைக்கரையை நோக்கி விரைந்தனர்.

இரு நாட்கள் கழித்து புன்னைக்கரையை நெருங்கிய போது மணப்பாட்டு தாவிலே கிடந்த மடிக்காரர்கள் போர்துகீசிய கப்பலை கண்டு கூச்சலிட்டு குறுக்கே பாய்ந்தனர். கப்பலிலிருந்த பரதவ தலைவரும் பட்டங்கட்டிமாரும் நங்கூரம் போட்டு நலம் விசாரித்த போது அவர்களது வாய் வழி செய்தி கேட்டு அதிர்ச்சியாயினர்.

அதாவது புன்னைக்கோட்டைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட‌ இரப்பாளியும் அவனது கொள்ளையர் படையும் தாக்குதல் நடத்தி தப்பி சென்று விட்டது, அப்படி தப்பி செல்ல நினைத்த பொழுது கோட்டைக்கு கிழக்கே புதைக்கப்பட்டிருந்த வலைகளில் கொள்ளையர் படையில் சிலர் சிக்கி மாண்டு போனதாகவும் இரப்பாளியும் ம‌ற்றும் சிலரும் கடல் வழியே கீழக்கரைக்கு தப்பிச் சென்றதாகவும். அவர்கள் சொல்ல சொல்ல வீரபாண்டியனார் விக்கித்து போனார்.

விரக்தியின் விளிம்பிற்க்கு சென்றவர் சொன்னார், இந்த வீரபாண்டியனோடு பரதவனின் வீரமும் விவேகமும் விடைபெற்றுவிட்டது. திறம்பட திட்டங்களை தீட்டி தந்த பிறகும் கொற்கை கோ கோட்டை விட்டு விட்டாரே ஆறாப்பழி அனைத்தும் பாண்டியம்பதிக்கு அல்லவா?

அடுத்த தலைமுறையை காக்க முத்துகுழி தலைமை தாங்க தகுதி இழந்தாரோ இளம் தலைவன் என புலம்பி தவிக்கும் போது.... அனைத்தூர் பட்டங்கட்டிமார் புடை சூழ பரதவ தலைவனை தேற்றினர்

ஐயா ராசா பாண்டியம்பதி 
இளைய ராசாவை 
குறைவாக நினைக்காதிங்க 
குலம் காக்க வந்த நம்ம 
குமரவேள் பாண்டியன் ஐயா

குத்து வாளுக்கு இரையாகி குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்தபடி பாண்டிய வம்சத்தையே பகைவனிடமிருந்து பாதுகாத்தவர் ஐயா, உண்மையை அறியாமல் ஒன்றுமே சொல்வதற்கில்லை, ஆனாலும் ஐயா தற்போது நிலைமை புரிந்த பிறகு புன்னை கரைக்கு சென்று பயனில்லை.

தப்பி சென்ற இரப்பாளியும் கொள்ளையர்களும் கீழக்கரையிலோ பரதவ தீவுகளில் தான் இருக்க வேண்டும் எனவே அங்கேயே சென்று எதிரியின் கூடாரத்திற்கே சென்று இராப்பாளியையும் கொள்ளையரையும் பின்புலமாக இருக்கும் மூர் இனத்தையும் சங்காரம் செய்வோம் என சடுதியில் பரதவ பட்டங்கட்டிமார் சூளுரைத்து பகைவரின் குருதியின் சுவையறிய துடியாய் துடித்தனர். 

இதை கேட்ட போர்துகீசியரும் புன்னைக்கரையை தொடாமல் கீழக்கரை திசையை நோக்கி செல்ல கப்பற்படையின் பாயை திருப்பி தாவுக்குள் வளிந்தனர்…….?

வலிந்து போய் பாண்டிய பரதரின் வல்லமையையும் வஞ்சினத்தையும் வரலாற்றில் பதிக்க பயணித்தனர்….!


….……. கடல் புரத்தான்………
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com