வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 2 April 2017

நலம் தரும் கடல் புற்கள்

கடல்சார் மருத்துவத்துறையில் (Marine Pharmacology) கடற்புற்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், தாதுப்பொருள் மாத்திரைகள், புற்றுநோய் தடுப்பிற்கான மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் பாரம்பரிய இன மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக பல ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது முன்னோர்களிடமிருந்து செவிவழிச் செய்தியாக கடல்புல்லின் மருத்துவக் குணங்களை அறிந்து அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆறு கலக்கும் இடத்திலுள்ள பழவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு கடலில் கலக்கும் இடமாகிய சதுரங்கபட்டினம் (கல்பாக்கம்), தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் இடமான கடலூர், காவேரி ஆறு கடலில் கலக்கும் இடமாகிய பூம்புகார், தாமிரபரணியாறு கடலில் கலக்கும் இடமான புன்னைக்காயல் மற்றும் முத்துக்குளித்துறை பகுதிகளில் உள்ள கடல் கழிமுகப் பகுதிகளில் கடற்புற்கள் அதிக அளவு காணப்படுகின்றன. கடற்புற்கள் பற்றிய விரிவான கட்டுரைகளோ, புத்தகங்களோ நமக்கு கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலான மக்கள் இதனைப் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை பகுதியில் ஏறக்குறைய நாற்பது இடங்களில் கடற்புற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மகளிர் குறிப்பாக பழவேற்காடு, இராமேஸ்வரம் பகுதியில் மிகக் குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த கடற்புற்களை அறுவடை செய்து கொடுக்கிறார்கள். கொண்டு பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடற்புல்லிலிருந்து மருந்து, மாத்திரைகள் தயார் செய்து, விற்பனைக்கு அனுப்பி கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள்.

கடற்புற்கள் இந்தியாவின் 7517 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் மீன் இனப்பெருக்கத்துக்கும், சில அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் உணவாகவும், கடல்நீரில் பிராண வாயுவை அதிகரித்து மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் செத்து மடியாது காக்கவும் காரணமாக அமைகின்றன. 

  • கடல்நீரில் கலக்கும் கரியமில வாயுவை (Carbon –di – oxide) உறிஞ்சுகிறது.
  • மிகுதியான பிராண வாயுவை (Oxygen) வெளியிட்டு கடற்புற சுற்றுசூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்கள் வாழவும் துணை செய்கின்றன. 
ஒரிசா மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய உப்பு நீர் ஏரியான சில்கா ஏரியில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியில் அதிகமான கடற்புற்கள் காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப்பகுதியில் பன்னிரெண்டு வகையான கடற்புற்கள் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் மிகுந்துள்ள இடங்கள், சதுப்பு நிலக் காடுகள் நிறைந்துள்ள இடங்களில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

தமிழகத்தில் காணப்படும் சில கடற்புற்களின் வகைகளையும், அவைகளின் பயன்பாடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

1. அலைவாரி புற்கள்
2. கடல் கோரைக் புற்கள்
3. கடல் கரும்பு புற்கள்
4. வெள்ளை புற்கள்
5. வெள்ளை தாழை புற்கள்

இவைகள் கால்நடைகளுக்கு உணவாகவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. காயங்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன.

6. கடல் தாழை புற்கள் 
7. ஓலைப் புற்கள் 
8. திட்டு வகை புற்கள் 

இவை கடல் நோயை (Sea Sickness) குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை கடல் நீரோடு சேர்ந்து பருகும் பொழுது இதய நோய்களைக் குணப்படுத்தவும், குறைந்த இரத்த அழுத்த நோயை (Low Blood Pressure) சீர் செய்யவும் பயன்படுகிறது.

9. கடல் அருகம்புல் 
10. கொத்து கோரைப் புற்கள்
11. பஞ்சு புல் 
12. கட்டைக் கோரைப் புற்கள்

நமது நாட்டில் கடல் மருந்துகள் பற்றிய படிப்பு கொச்சியிலுள்ள மீன்வள பல்கலைக் கழகத்தில் “KUFOS” (Kerala University of Fisheries and Ocean Studies) இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பாக M.Sc. (Marine Microbiology & Marine Drugs) கடலியல் நுண் உயிரியல் மற்றும் மருந்தாகப் படிப்பகப் பயிற்றுவிக்கப்படுகிறது. 

கடற்புற்களை மீனவ மகளிர் குழுக்களிடமிருந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலியைக் கொடுத்து அறுவடை செய்து, அந்நிறுவனங்கள் மருந்து தயாரிப்பின் மூலம் அதிக இலாபம் அடைவதை விட அரசோ அல்லது மீனவ கூட்டுறவு அமைப்புகளோ இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை உருவாக்கி, தனியார்கள் கொள்ளை இலாபம் அடைவதை தடுக்கலாம். இதன் மூலம் மீனவ மகளிர் நியாயமான ஊதியமும் பெற முடியும்.

இந்த அரிய வகை மருத்துவக் குணங்கள் நிறைந்த கடற்புற்கள் அறுவடையை அரசு முறைப்படுத்தினால், கடல்வளம் பெருகுவதோடு, குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். 

- ஜேம்ஸ் பர்னாண்டோ 



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com