எழுமீன்
மின் > மீன்
மீன் என்றால் இன்றைய தமிழரில் பலரும் கடலில் வாழும் மீனினையே ( fish) நினைப்பர், உண்மையில் மீன் என்பது கடலில் மின்னும் மீன்களை மட்டுமல்லாது, வானில் மின்னும் மீனினையும் குறிக்கும். சங்க இலக்கியங்களில் மீன் என விண்மீன்கள் குறிக்கப்படுவதனைப் பல இடங்களில் காணலாம். மீன் என்பது தமிழில் இவ்வாறு நீர்நிலை மீனினையும் விண்மீனையும் சேர்த்துக் குறிப்பது போன்றே சிந்துவெளி முத்திரைகளிலும் மீன் என்பது குறித்தது.
அண்மையில் வெளிவந்த 'அகிம்சா' (Ahimsha) எனும் சிந்துவெளி நாகரிகம் பற்றிய நூலிலும் தேவ்தத் பட்நாயக் என்பவர் சிந்துவெளி முத்திரைகளிலுள்ள மீன் குறியீடானது விண்மீனையும் சேர்த்தே குறிக்கின்றது என்பதனை மீனின் உடம்பினில் வரையப்பட்டுள்ள ******* ( நட்சத்திர) வடிவத்தினைக் கொண்டு விளக்குவார். சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழுக்குமான தொடர்பினை வெளிக்கொண்டு வரும் மற்றொரு கூறு இதுவாகும்.
அரப்பா முத்திரைகளில் எழுமீன் (ஏழு மீன்கள்) பற்றியும் குறிப்பிடப்படுவதனைப் படங்களில் காணலாம். எழுமீன் என்பது வானில் எளிதாக வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாகவுள்ள விண்மீன் கூட்டமாகும். இதனை பெருங்கரடி (Usra Major) என இன்று அழைக்கின்றனர். எழுமீன் பற்றிச் சங்க இலக்கியமான நற்றிணைப் பாடலும் குறிப்பிடுகின்றது.
"மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கை தொழும் மரபின் எழுமீன் போல" ( நற்றிணை 31 : 1-2) .
மூவேந்தர்களின் சின்னங்களான மீன், புலி, வில் ஆகிய மூன்றுமே சிந்துவெளி முத்திரைகளிலும் முகன்மை வகித்திருப்பதனையும் நாம் இங்கு நோக்கலாம்.
மின்னுவதால் மீன், அதாவது மீன்கள் (விண்மீன்) தாமாக ஒளிரக் கூடியவை, அதனால் மின்னுவதால் மீன் எனப்பட்டது . கோள்கள் அவ்வாறு தாமாக ஒளிர மாட்டாதவை, அவை மீன்களிலிருந்து ஒளியினைக் கொண்டு ஒளிரும், அதனால் கொள்வதனால் 'கோள்' எனப்படுகின்றது. எத்தகைய அறிவார்ந்த பெயரிடல் பார்த்தீர்களா!
மின்னுவதால் மீன்,
கொள்வதால் கோள்,
மீன், கோள் ஆகியன முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்கள்
Star = மீன் = விண்மீன்
நட்சத்திரம்
Planet = கோள் = கிரகம்.
- இலங்கநாதன் குகநாதன்