கடல் பட்டு
பழங்கால இத்தாலிய கலைகளில் ஒன்று ‘ கடல் பட்டு’ நெய்தல். இன்று பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு நூல்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தாலியின் சார்டினியன் தீவில் வசிக்கும் சியாரா விகோ, சிப்பியில் சுரக்கும் உமிழ்நீரில் உருவாகும் பட்டு நூலை எடுக்கிறார். தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தப் பட்டுத் துணியை பைசஸ் என்கிறார்கள். எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற இடங்களில் கடல் பட்டு உற்பத்தி ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. கடல் பட்டு எடை இல்லாதது. தொட்டால் சிலந்தியின் வலையைத் தொடுவதுபோல அத்தனை மென்மையாக இருக்கிறது. தண்ணீர், அமிலம், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளக்கூடியது. வசந்த காலத்தில் கடல் பட்டுக்காக அதிகாலை கடலுக்குச் சென்று விடுகிறார் விகோ. ஒவ்வொரு சிப்பியிலும் உருவாகியிருக்கும் பட்டு நூலை, சிப்பிக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாமல் வெட்டி எடுக்கிறார். 300 முதல் 400 தடவை வரை கடலில் மூழ்கி, 200 கிராம் பட்டு நூலைச் சேகரிக்கிறார். பைசஸ் அருங்காட்சியகத்தில் வைத்து, நூலைப் பக்குவப்படுத்தி நூற்க ஆரம்பிக்கிறார். கடல் பட்டு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கலை. இதுவரை கடவுள், அரசர், போப் போன்றவர்களுக்கே கடல் பட்டு நெய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவு கடல் பட்டுத்துணி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது. ஆனால் இன்று சாதாரணமானவர்களுக்கும் கடல் பட்டை அளிக்கிறார் விகோ. இதற்காக பணம் எதையும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.
ஒரு சின்னச் சிப்பியில் இருந்து முத்து, பட்டு எல்லாம் ஆச்சரியமா இருக்கு!