Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

யவனர்கள்



சங்க இலக்கியங்களிலும் தமிழக வரலாற்றிலும் யவனர்கள் என்ற பெயர் இடம்பெற்று இருப்பதை அறிவோம். யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.

''ரோமானியர்கள் வருவதற்கு முன்பே கிரேக்கர்களுடன் தமிழகத்துக்குத் தொடர்பு இருந்தது. கிரேக்க அரசன் பிலடெல்பியாஸ் காலத்தில் தமிழகத்துடன் கிரேக்கம் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது'' என்று, ஜானாஸின் குறிப்பை சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் நடன.காசிநாதன். இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரிக்கமேட்டில் மட்கல ஓடுகள், நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. திரேசில் இருந்து வெளியிடப்பட்ட காசுகள் அமராவதி ஆற்றின் அருகே நடத்திய அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இது, கி.மு. 200-ம் ஆண்டு காலகட்டத்தை சேர்ந்தவை என்கின்றனர். சங்க காலத் தமிழகம் ரோமானியப் பேரரசுடன் வாணிபத் தொடர்புகொண்டிருந்ததை உறுதிசெய்யும் ரோமானியத் தங்க, வெள்ளிக் காசுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியல், மார்கஸ், அரேலியஸ் என்ற ரோமானிய சீசர் மன்னர்களின் காசுகளாகும்.

யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர். இந்த நேரத்தில், பொதுவாகவே வெளிநாட்டினரைக் குறிக்க மிலேச்சர் என்ற சொல் இன்று வரை பயன்படுத்தப்படுவதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ''பட்டினப்பாலை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களைக் குறிக்கவே யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார் முனைவர் தில்லைவனம்.

யவனரை, மிலேச்சர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசரின் மெய்க்காவலர்களாகவும் பணியாளர்களாகவும் கப்பலில் வேலையாட்களாகவும் இருந்தவர்களை மிலேச்சர் என்று குறிப்பிடுவது வழக்கம். காம்போஜ நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்கள் மிலேச்ச மொழி பேசியதால், அவர்கள் மிலேச்சர் என அழைக்கப்பட்டதாக உ.வே.சாமிநாதய்யரின் முல்லைப்பாட்டு உரை சுட்டிக்காட்டுகிறது. யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்து புராணங்களில் யவனதேசம் தனி நாடாகக் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதத்தில் நடைபெறும் ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் யவன அரசரும் ஒருவர் எனக் குறிப்பிடப்படுவது இதன் தொடர்ச்சியே. பாலி இலக்கியத்திலும் யவனர்களைப் பற்றிய பதிவுகள் உண்டு. அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில், 'காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரச பெருமானுடைய ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், யவன அரசனாகிய அண்டியகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இரு வகை மருத்துவ நிலையங்களாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சியில், 'தரும விஜயம் என்னும் அற வெற்றியே மாட்சி மிக்க அசோக மன்னரால் முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த அற வெற்றி நாட்டப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு கி.மு. 258-ல் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்திய தேசத்துக்கப்பால் வட மேற்குப் பக்கத்தில் உள்ள தேசமாக அறியப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் உஜ்ஜைனியில் நடந்த அகழ்வாய்வுகளில் யவனப் பெண்கள் அணியும் பல்வேறு அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட மொழி இலக்கணம் வகுத்த பாணினி, யவனன் என்பதன் பெண்பாலாக யவனாணி என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். யவனர்கள் சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. யவனத் தச்சர் என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.

''மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை''

என மணிமேகலை கூறுவது யவனத் தச்சர்களின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.

''கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்’ என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே அதிக அளவில் தமிழகத்துக்கு வந்திருக்கின்றனர்'' என்கிறார் புலவர் செ.இராசு. இவரது ஆய்வுப்படி மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்காக வந்த ரோமானியர்கள் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கிச்சென்றனராம். சோழநாடு மற்றும் பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றவர்கள், கிழக்குக் கரை முத்துக்களையும் வாங்கியிருக்கின்றனர். ரோம் நாட்டவரின் ரௌலடெட், அரிட்டைன் ஆகிய உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. யவனர்களுக்கு மிகவும் பிடித்தது மிளகு. அதை 'யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர்கள் கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.

'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியடு பெயரும்
வளம்கெழு முசிறி’ 
என, அகநானூறு கூறுவதை யவனர்களைப் பற்றிய சான்றாக சுட்டிக்காட்டுகிறார் வரலாற்று அறிஞர் இராசு.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன், யவனர்கள் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்பாடுகள்கொண்டதுமான கிண்ணத்தில் அழகான பெண்கள் தேறல் எனும் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து யவனர் விற்பனை செய்த பொருட்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரிய வருகிறது. இதுபோலவே அழகாக வடிவமைக்கப்பட்ட பாவை விளக்குகளை யவனர்கள் தமிழகத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர். இந்த பாவை விளக்குகள் மன்னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தன என்று நக்கீரர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேற்சட்டை, மத்திகை என்று அழைக்கப்படும் அரைக்கச்சை ஆகியவற்றை யவனர்கள் அணிந்திருந்தனர். வலிமையான உடல்வாகு உடையவர்கள். அவர்களின் தோற்றம் முரட்டுத்தனம் மிக்கது. தென்னிந்தியாவின் பல இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, மலபார் கடற்கரைப் பகுதிகளிலும் சோழமண்டலக் கரையிலும் வணிகம் செய்யவந்த யவனர்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை உருவாக்கித் தங்கியிருந்த செய்தியை பெரும்பாணாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே, மதுரையின் புறஞ்சேரியில் ரோமானியர் குடியிருப்பு இருந்திருக்கிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. புதுவையின் அரிக்கமேடு, காஞ்சிபுரம், கரூர், கொடுங்கலூர் ஆகிய இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.

பாண்டி நாட்டு மன்னர்கள் தங்களது படைப் பிரிவில் யவனர்களையும் சேர்த்திருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையை யவன வீரர்கள் காவல் காத்துவந்ததை

'கடிமதில் வாயில் காவலிற் சிறந்து
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’

என, சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.
அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. புலிப் படைநடத்திவர யவனர்கள் உதவி செய்திருக்கின்றனர். படையெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்திருக்கின்றன. எதிரிகளின் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை வீசவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனர் என்ற குறிப்புகள் வரலாற்றில் இருக்கின்றன.

பரதர்களின் தமிழ் சொற்கள் சில ....


பரதர்கள் மீன் தொழிலில் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் சில ....




- நீவாடு ( water current)

- கடப்பளகைய போடுங்கப்பா வல்லம் வழியபோகுது . புரிந்ததா

- அண்ணே இப்பம் பாரசூட் இருக்கு தெரி யிமா நின்னு வலியும்

- தாமான எலக்கிவிட்டாலும் வழியாது

- பாகளைய ஒத்த ஆளா நட்டுருக்கான் வ நம்ம தாத்தன் மார் எப்படி இருந்து ருப்பான் வ பாருங்க

- பாமரத்த ஒத்தாலா நட்டுருக்கே நானே. எப்புடி

- வெலங்க போனியா சாய போனியா

- தம்பி தொலவ போட டிசல் வேண்டாம் வெத்தல போதும் எப்புடி

- எந்த கடல் எந்த காத்தா இருந்தாலும் ஒத்தையாத்தான் நட்டிற்க்கான் தாழைக்காரன்

- காத்துகடல் பாத்தால கஞ்சி தூக்குவான்

- கடல பொறுத்தவரை ஆளானபட்ட அனுபவசாலி எல்லாம் போயி சேந்துட்டான் வ நம்ம எல்லாம் பச்ச மண்ணுன்னே பச்ச மண்னு

-நான் சுட்ட மண்னுல

- சரீதான் துடுப்புக்கு மோட்டார் வேகம் ஈடாகுமா

- ஒரு கட்டியம் போடுல

- என்னல மே வலைக்கு போயா பத்தலயா

- எச்ச வல தான். சொச்ச வல எங்கல

- என்ன மீன் தட்டி கிடக்கு

- ஏல வல தாவுள நிக்குதா கரய நிக்குதா

- கங்கில் எத்தனை பாகம் ண்ணே

- மடவலைக்கு குண்டு பத்தளயா

- கன்னி எத்தன விரல்கட்ட

- முனு விரல் பாயும் அயில வல

- ஒண்ணா ஒண்ணறையாண்ணே

- சாத்தாங்கம் தெவு திலுவு பாத்து கைவீச்சு

- ஏலே சாத்துமால் போட்டுறுக்கா

- எத்தனாம் நம்பர்

- ஏலே மூனாம் நம்பர் இருக்கால

- இரண்டாம் நம்பர் குமுலா வலை எட்டாம் நம்பர் திருக்க வல

- நாலாம் நம்பர் பருவலை எப்புடி

- மேக் கோடி எச்சவலை ஒண்ணாம் நம்ப ராத்தான் இருக்கும் நெத்திலி பாயும்

- தாத்திகள்ள கெளப்புங்கல

- அவன் வலைல செவப்பாம்ல

- சிங்கி வல எதுக்குள்ள விடுவிய

- பாற பாத்து எலக்கனுமுல

- இந்த கடல்ல இத்தனை பாகந்தாம்ல பாயும் எல சந்தியா எரில போயா வ எலக்கு ல வலைய

- டேய் அனியத்ல போய் செடரு தெரியுதானு பாரு

- கானாவுள யார் இருக்கா

- தண்ணீ பத்தார் நெரம்பி கெடக்கு

- கடுசு உச்சிக்கு போடா

- குத்து பாய் அடுச்சு இருக்கான்

- தாத்தி போட்டியா தாவு எவ்வளவு

- காத்து கொண்டலா கரவாடையா கச்சானா

- செவப்பு தெரியுது கருப்பு அடிக்குது

- மீனு பச்சைக்கா பட்றைக்கா

- கஞ்சிக்கு வெஞ்சனம் என்ன

- கைவல கலுச்சாச்சா

- பத்தார்ல உக்காரு

- வெப்பளா கெடக்கு

- செக்களுக்கு போனியலே பாடு எப்படி

- வெலுப்புல மீன் பட்டுச்சா

தமிழர் நாட்டுப் பாடல்கள்

தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர் - அறிஞர் அண்ட்ரிக் அடிகளார்


தமிழில் முதன்முதலில் அச்சு நூல்களை வெளியிட்ட அண்டிரிக் அடிகளார் (எ) ஹென்றிக்கு ஹென்றிக்கஸ் (Henrique Henriques) போர்ச்சுகீசிய நாட்டிலுள்ள ‘விலாவிகோசா' என்னும் ஊரில் கி.பி. 1520-ல் பிறந்தார். சமய வாழ்வில் பெரிதும் நாட்டம் கொண்டமையால் ‘பிரான்ஸ்சிகன் துறவறச் சபை'யில் சேர்ந்தார். அவர் யூத மரபைச் சார்ந்தவர் என்பதால் சபையில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, ‘கோய்ம்ப்ரா' பல்கலைக்கழகத்தில் கி.பி. 1545இல் திருச்சபைச் சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தார். அப்போது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட யேசு சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கி.பி. 1546-ல் குரு பட்டம் பெற்ற அண்ட்ரிக் அடிகளார் அதே ஆண்டில் ஏப்ரல் 26 அன்று இந்தியாவிலுள்ள சவேரியாரிடம் செல்ல அனுமதிக்கப்பட்டுப் பயணமானார். அவருடன் 12 யேசு சபைக் குருக்களும் புறப்பட்டனர். அவர்கள் 17.9.1546 அன்று கோவா வந்தடைந்தனர். அக்காலத்தில் மலாக்காவில் இருந்த சவேரியர் அடிகளாரை ‘முத்துக் குளித்துறை'யின் தலைமைக் குருவாக இருந்த ‘அந்தோணி கிரிமினாலி' என்பவரிடம் அனுப்பினார். அவர் புன்னைக் காயல் அதன் சுற்றுப்புற ஊர்களையும் மறைப் பணிக்காக இவரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் கிரிமினாலி இறந்துபோகவே, 1549இல் அண்ட்ரிக் தலைமைக் குருவானார்.

முத்துக்குளித்துறைக்கு வந்தவுடன் இங்குள்ள தமிழ் மக்களிடம் கலந்து பழக தமிழ்மொழி அவசியம் என்பதை அறிந்த அண்டிரிக் தமிழை முதலில் படிக்கத் தொடங்கினார். பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டிலும் தேர்ந்தார். அதன் விளைவாக முதன் முதலில் ‘தம்பிரான் வணக்கம்' (1578) என்னும் நூலை அச்சிட்டு வெளிப் படுத்தினார். தமிழில் அச்சான முதல் நூல் இது என்று கருதப்படுகிறது. Doctrina Christiana என்னும் தலைப்பில் போர்த்துக்கீசிய பாதிரியார் ‘மார்க்கோசி சொரிசி' எழுதிய நூலின் தமிழாக்கமே இந்நூல். இந்த மொழிபெயர்ப்புக்கு பீட்டர் மானுவல் என்பவர் உதவியுள்ளார். இந்நூல் அவர் பணியாற்றிய முத்துக்குளித்துறைப் பகுதியில் வாழ்ந்த பரதவர்கள் பேச்சு மொழியிலேயே மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலுக்கு பரதவர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். எழுத்தறிவில் கேரளக்கரை மக்கள் இந்திய நாட்டில் முத லிடம் வகிப்பதற்குக் காரணம் தம்பிரான் வணக்கமே என்பர்.

தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் என்றால், தமிழக எல்லைக்குள்ளேயே அடிகளாரால் அச்சடிக்கப்பட்ட நூல் ‘அடியார் வரலாறு' (1586). தூத்துக்குடி மாவட்டம் - புன்னைக்காயலில் இந்நூல் அச்சடிக்கப்பட்டது. இவை தவிர, ‘கிரீசித்தியானி வணக்கம்' (1529) ‘கொம்பெசியனாயரு' (1578) முதலிய நூல்களையும் அடிகளார் அச்சிட்டார்.

இதுதவிர முதல் ‘ஐரோப்பியத் தமிழ் இலக்கண நூல்' ஒன்றையும் அடிகளார் எழுதியுள்ளார். இதற்கு ‘மலபார் இலக்கணம்' என அண்ட்ரிக் பெயரிட்டுள்ளார். கையெழுத்துப்படியாக இருந்த இந்த நூலை 1954-ல் லிஸ்பன் நகர தேசிய நூலகத்தில் சேவியர் தணிநாயக அடிகளார் கண்டெடுத்தார். 1982-ல் ஹான்ஸ் ஜெ. பெர்மீர் என்பவர் ஆய்வுப் பதிப்பாக இதை வெளியிட்டார்.

சமயப்பணி புரிய வந்த அண்ட்ரிக் சமுதாயப் பணி யையும் ஆற்றினார். 1550-ல் முத்துக்குளித்துறை வாழ் பரதவர்களின் நிதியுதவியுடன் மருத்துவமனை ஒன்றை நிறுவினார். இதனைத் தொடர்ந்து 1567-ல் தமிழ்க் கல்லூரி ஒன்றையும் புன்னைக்காயலில் நிறுவி அதன் இயக்குநராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

06.02.1600-ல் தமது 80-ம் வயதில் புன்னைக்காயலில் காலமானார். தூத்துக்குடி மாதாகோயிலில் அவரை அடக்கம் செய்வதற்காகத் தோணியில் கொண்டு சென்றபோது அவ்வுடலுடன் ஏழு தோணிகளில் ஆட்கள் சென்றனராம். அவருடைய உடலைத் தங்களுடைய ஜெபமாலையால் தொட்டு அவற்றை நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ள அலைமோதிய கூட்டத்தை விலக்கி உடலைக் கரைக்கு கொண்டு செல்வதற்குப் படாதபாடு பட்டதாக அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

கிறித்துவர்கள் மட்டுமின்றி, இந்துக்களும் முஸ்லிம்களும் கூட அடிகளாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இன்றும்கூடப் புன்னைக்காயலில் சத்தியப் பிரமாணம் செய்யும்போது அண்ட்ரிக் பெயரில் வாக்குறுதி அளிப்பதைக் காணமுடிகிறது.

- ப. சரவணன், ஆய்வாளர். தொடர்புக்கு: psharanvarma@gmail.com

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 4

அபிதான சிந்தாமணியில் அரக்கர்களால் பல்வேறு துன்பங்கள் ஏற்படும் போது, சிவபெருமான் அவர்களை அழிக்க சரவணப்பொய்கைக்கு கார்த்திகேயனை  அனுப்பியதாகவும், அவருடன் வந்த படை வீரர்கள் பரதவர்கள் என்றும், உலகம் பெரும் கடல் பெருக்கில் அழிந்த போது அவர்கள் தோணியில் ஏறி தப்பியதாகவும், தோணி தரை தட்டிய இடமே சீர்காழியிலுள்ள தோணிபுரம் என்றும் அங்கு தோணியப்பர் ஆலயம் உள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது. இது சீர்காழி பெரிய கோயிலில் தோணியப்பர் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் தோணி வடிவமாய் அமைந்த திருக்கோயில் உள்ள பகுதியாகும். இங்குள்ள மண்டபம் வலம்புரி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரபத்மனை (கடற்கொள்ளையனை) கந்தன் கொன்றதாக கந்தபுராணம் கூறுகிறது. சூரன் கடல்நடுவே வீரமகேந்திரபுரம் என்ற நகரை அமைத்து தேவருக்கு (பரதவருக்கு) தொல்லை கொடுக்க கந்தன் கடல் கடந்து சென்று போரிட  மா மரமானான். (இதனை மா மரத்தின் பின்னால் அல்லது மரத்தில் ஒளிந்தான் எனக் கொள்ளலாம்.) அவனது ஆட்கள் சமரசம் அடைவே இறுதியில் கந்தன் சூரனைக் கொன்று அவனது சின்னங்களான சேவலையும், மயிலையும் எடுத்துக் கொண்டதாக கூறுவர். இதனாலே கந்தன் செந்தில்நாதன் என்னும் பட்டம் கிடைத்தது. இதற்கு அலைகளின் அல்லது படகின் தலைவன் என்ற பொருள் உண்டு. சூரனுக்கு மாமரம் போல கடம்ப மரத்தை காவல் தெய்வமாகக் கொண்ட கடல் கொள்ளையர்களை சேரன் செங்குட்டுவன் அடக்கியதாக பதிற்றுப்பத்துவிலும், சிலப்பதிகாரத்திலும் காணலாம்.  

இதனால் மகிழ்ந்த இந்திரன் (வருணன்) தன் மகள் தெய்வானையை கந்தனுக்கு மனம் முடித்து வைத்தார். இதனால் பரவர்கள் முருகனை மச்சான் சாமி என்றே அழைப்பர். திருவாதவூர் புராணமும் தெய்வானையை பரத்தி என்றே குறிப்பிடுகிறது. பரவரின் வழக்கத்திலுள்ள தாலாட்டுப் பாடல்

 “பரத்தி மகள் தேவானை குலவிளக்கா இங்கிருக்க.. 
குறத்தி மகள் வள்ளி பின்னால் போவானேன் குறவனாய்..”.

என்ற வரிகள் வழங்கப் பெறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் "செட்டி கப்பலுக்கு செந்தூரான் துணை" என்ற  சொல்லாடலும், பரதவ வணிக செட்டிகள் செந்தூரானுக்கு தேங்காய் உடைப்பார் என்றும் திருசெந்தூர் தல வரலாறு கூறுகிறது. 

பரவர்கள் தங்களுக்குக் கிடைத்த முத்துக்களில் பத்தில் ஒரு பங்கினை திருசெந்தூர் கோவிலுக்கும், மற்றொரு பங்கினை கோவில் ஓதுவார்களுக்கும் வழங்கினர். மேலும் ஆவணித் திருவிழாவின் போது தேர் வடம் தொட்டுக் கொடுக்கும் கௌரவ உரிமையை பரதவ சாதித் தலைவருக்கும், வீரபாண்டியன் பட்டண அடப்பனாருக்கும்  அளிக்கப்பட்டு இருந்தது போல கன்னியாகுமரி ஆலய வைபவங்களில் கௌரவ உரிமை கன்னியாகுமரி மூப்பனாருக்கு அளிக்கப்பட்டது. 

கந்தனின் சின்னங்களாகக் கருதப்படும் சேவலும் ,மயிலும் பரதவரின் 21 சின்னங்களில் சிறப்பிடம் பெறுகிறது. குறிப்பாக மயில் சின்னம் பரதவ சாதித் தலைவரின் பல்லக்கிலும், வேம்பாறு, தூத்துக்குடி, வீரபாண்டியன்பட்டணம் ஆகிய இடங்களில் காணப்படும் பரதவக் கல்லறைக் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. கந்தனின் ஆயுதமான 'வேல்' போன்ற அமைப்பிலே பரதவரின் கட்டுமரத் துடுப்பும் அமைந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். 

கந்தனின் நிறமான கரும்பச்சை நிறத்தை பரதவர்கள் தங்கள் குல நிறமாகக் கொண்டுள்ளனர். மணப்பாடு ஆதியில் 'கந்தபான புரம்' என்றே அழைக்கப்பட்டிருந்தது. இதுபோலவே பழனி முருகன் கோவில் திருவிழாவில் ஒருநாள் இரவு மலையில் தங்கி வழிபாடும் உரிமை பருவத ராஜ குலத்திற்கே அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் பரவர்களைப் போல மச்சான் சாமி என்றே அழைத்து முருகனின் மேலுள்ள உரிமையை அவர்கள் பன்னெடும் காலமாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். 


- தொடரும் -


- நி. தேவ் ஆனந்த்

THE HERITAGE CLUB OF VEMBAR


வேம்பாற்றின் நீண்ட நெடும் தொன்மையையும், பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், மறைந்து வரும் வேம்பாற்றுப் பாரம்பரியத்தை  பாதுகாக்கவும் அவற்றை எதிர்கால தலைமுறைக்கு அளிக்கவும் வேண்டி 20.08.2017 அன்று முதல் வேம்பார் தொன்மைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...

எதிர் காலத்திற்காக கடந்த காலத்தைப் பாதுகாப்போம் என்னும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகக் கூட்டம் குறைந்தது மாதம் இரு முறை நடத்தப்படும். வேம்பாற்றின் தொன்மையைத் தேடும் வேம்பாற்றினைப் பூர்வீகமாகக் கொண்ட பரத குலத்தோர் இதில் உறுப்பினராகலாம். உறுப்பினர் கட்டணம் ரூபாய் நூறு மட்டுமே... ஆண்டு சந்தா ரூபாய் இருபது மட்டுமே.....

தொலைநோக்குப் பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கழகத்தில் இணைய விருப்பமுள்ளோர் இணையலாம்.

தொடர்பிற்கு : vembarheritageclub@gmail.com, heritagevembaru@gmail.com 

- தொன்மை மறவேல் : ஆத்திசூடி 63 - 


பரதவத்தாயின் தாலாட்டு

ஆறோ பெருகி வர
அலைகடலும் பொங்கி வர
அந்த அலைகடலின் கரையினிலே
அராபியக் கப்பல் வர
ஆராரோ
ஆரிராரோ

ரண்டு கப்ப கொடி பிடிக்க
அந்தக் கொடியில ரட்ட
மச்சம் அசைஞ்சி வர-பரதவர்கோன்
கப்பலுன்னா பாதுகாப்பும் சேர்ந்து வரும்
ஆராரோ
ஆரிராரோ

அழகான குதுரவரும் - அராபிய
யாவாரிய சுமந்து வரும்
குல்லா வச்ச யாவாரி
ஆணி முத்த வாங்கிப் போவோம்
ஆராரோ
ஆரிராரோ

கொற்கைத் துறைமுகத்தில் - கண்ணே நீ
கொண்டு வந்த கெட்டி முத்தே
குலசேகரப் பட்டணத்தில் - கண்ணே நீ
குளிச்சி எடுத்த வெண் முத்தே
ஆராரோ
ஆரிராரோ

தொண்டி துறைமுகத்தில் - கண்ணே நீ
துணிந்தெடுத்த பார் முத்தே
வங்காளக் கடலினிலே - கண்ணே நீ
வாரி வந்த நல்முத்தே
ஆராரோ
ஆரிராரோ

தென்மதுர வீதியில் - கண்ணே நீ
வித்து வந்த பாண்டி முத்தே
ரோமாபுரித் தேசத்திலும் - நம்
பவுசைச் சொல்லுதடி
ஆராரோ
ஆரிராரோ

மூணு கப்ப கொடி புடிக்க
முத்துக் கப்ப ஓடி வர-மூழ்கி
முத்தெடுக்கும் பாண்டியரே -உன்மாமம்
பதறாம கண்ணுறங்கு
ஆராரோ
ஆரிராரோ........

- வலன்டினா பரத்தி

பாய்மரக் கப்பல்


பண்டையத் தமிழர்களோடு அதிகமான அளவுக்கு வணிகத் தொடர்பில் இருந்தவர்கள் யவனர்களே. யவனர்கள் என்றால் அராபியர்கள். கேரளத்து கொடுங்கல்லூரிலிருந்து குமரியின் குளச்சல்வரை வந்தவர்கள் அவர்கள்.

"யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"

என்பது சங்கத் தமிழ் பாட்டு.  உலகின் பல நாடுகளுக்கும் பாய்மரக் கப்பல்களில் அரபிகள் சென்றார்கள். அவர்கள் பயணம் செய்து வந்த கப்பல்களின் தோற்றத்தைக் கண்டு தமிழ் மக்கள் வியந்தார்கள். யவனர்கள் வெண்ணிற குப்பாயம் அணிவார்கள். அவர்களை ” குப்பாயத்தார் ” என்று அழைக்கும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்தது.

திருவிளையாடல் புராண காலத்திலேயே "பள்ளிக் குப்பாயத்தார்" என்று அரபிகளை வர்ணித்த வரிகள் வரலாறாய் இருக்கிறது. அதனால் குப்பாயம் அணிபவர்களை "பாய்கள்" என தமிழர்கள் அப்பவே அழைத்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

உருதுவில் பாய் என்றால் சகோதரன். அந்த பாய்க்கும் தமிழ் முஸ்லிம்களை அழைக்க பயன்படும் பாய்க்கும் வேறுபாடு உண்டு. உருது பாய் வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ் பாய் வந்து விட்டாரென்பதுதான் உண்மை.

அதற்கு ஆணித்தரமான இரு காரணங்கள் உண்டு. அவை …குப்பாயமும் பாய்மரக் கப்பல்களும்.

குப்பாயம் அணிவதை வைத்து யவனர்கள் "பாய்" என்றழைக்கப்பட்டார்கள். அவர்கள் அரபி வணிகர்களாக வந்து போனார்கள். இஸ்லாம் தோன்றிய பிறகு "முஸ்லிம் பாய்களாக" வாழ ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால்…

முஸ்லிம்களின் பெயரால் அழைக்கப்பட்டவைதான் 'பாய்மரக் கப்பல்கள்' குப்பாயமணிந்த பாய்மார்கள் ஓட்டி வந்த கப்பல்கள் 'பாய்மார் கப்பல்கள்'  என்று அழைக்கப்பட்டு அவை மரக்கப்பல்களாகவும் இருந்த காரணத்தால் 'பாய் மரக் கப்பல்கள்' என்றும் தமிழர்களால் அழைக்கப்பட்டன.

பரதவர்களின் பதவி பெயர்கள்


பரதவர்களின் பழங்காலப் பதவி பெயர்கள் - 3

முத்துக்குளித்துறைப் பரதவரின் நீண்ட வரலாற்றுச் சுழற்சியில் அவர்கள் கிறிஸ்தவம் தழுவிய நிகழ்விற்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலே அவர்களிடம் ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான சமூகத் தன்னாட்சி அமைப்பு முறையும் (An Autonomous body and Rule) இருந்ததற்கான தடய எச்சங்களாக பட்டங்கட்டி, அடப்பன், ஞாயம் போன்ற பதவி பெயர்கள் தங்கிய குடும்பங்கள் இன்றும் கடலோரக் கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது அவை பற்றி ஆய்ந்தரியத் தூண்டும் எண்ணங்கள் எழுவது இயல்பு தானே.

ஞாயம் :

ஞாயக்காரன் என்ற சொல் தான் மக்களின் பேச்சு வழக்கில் தேய்ந்து சுருங்கி ஞாயம் ஆகியிருக்க வேண்டும். ஆராச்சிமணியும், அரண்மனையும், அரசபீடமும் பண்டைய தமிழகத்தில் இருந்ததாகவும், அரசனே நீதி வழங்கியதாகவும், பல இலக்கியச் சான்றுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் பார்த்திருந்தாலும், மன்னன் வாழ்ந்த தலைநகரை விட்டு வெகு தொலைவிலிருந்த ஊர்களிலும், கிராமங்களிலும் வழக்குகள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பதைச் சிறிது சிந்தித்தால் ஞாயம் என்ற பெயருக்கு விடை கிடைக்கலாம். 

வழிவழியாக கண்டு, கேட்டு, அடைந்த அனுபவ அறிவால் சில முதியவர்கள் ஊரில் ஏற்படும் வழக்குகளுக்கு தீர்வு கூறியிருக்கலாம் என்ற ஊகம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதற்கு சான்றாக 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே 

பாதாள முனி படருமே – மூதேவி 

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே 

மன்னோரம் சொன்னார் மனை 

என்ற வெண்பாப் பாடலைக் காணலாம். வழக்கு மன்றங்களில் ஒரு தலை சார்பாக, நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு சொன்னால் ஏற்படும் விளைவுகளைக் கூறும் அப்பாடல் ஊருக்கு ஊர் ஞாயம் வழங்கும் ஞாயகாரர்களை ஒருவரோ அல்லது பலபேர் கொண்ட ஒரு குழுவாகவோ மன்றங்களில் தீர்ப்பு கூறினார் என்பது புலனாகும். 

அன்றாட வாழ்வில் இயற்கை மூலங்களை எதிர்த்துப் போராடிப் பொருளீட்டும் பரதவர் இயல்பாகவே இறைபயம் கொண்டவர்கள், அவர்களிடையே ஏற்படும் பூசல்களையும் வழக்குகளையும் தீர்த்துவைக்கும் ஞாயக்காரர்கள் பண்டைய நாட்களில் இருந்தார்கள் என்பதற்கு புனித சவேரியாரை புனிதர் நிலைக்கு உயர்த்த பல ஆய்வுகள் நடத்திய போது மணப்பாட்டில் புனிதர் 71 வது சாட்சியாக சான்று பகர்ந்த கஸ்பார் த மிராண்டா என்பவரைப் பற்றிக் கூறும்போது Ordinary Judge என பதிவு செய்யப்பட்டிருப்பது காணத்தக்கது. (Monumenta Xavieriana Vol II Page 541 – dated 1616 August 27 – see 71st witness). 

- செல்வராஜ் மிராண்டா 

நன்றி : பரவர் மலர் 2017


குறிப்பு : வேம்பாற்றில் காணப்படும் கி.பி. 1602 ஆண்டின் கல்லறைக் கல்வெட்டு பரதவரிடையே பட்டங்கட்டி, அடப்பனர் ஆகிய பதவிகள் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. 

மேலும் அவ்விரு பதவிகளை சுவாம் வாசு என்பவர் கொண்டிருந்தார் என்பதையும் பறைசாற்றுகிறது. மேலும் வேம்பாற்று பெரிய அடப்பனார் சந்தியாகு மாதவடியான் பர்னாந்து அவர்களையும், அவர்களது வம்சத்தினரையும் ஞாயக்காரர் வம்சம் என்றும் அழைக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

விடிந்தகரை 1.1

என் சொந்தங்களுக்கு விடிந்தகரை என்னும் வீரமிக்க பரதவ சரித்திர தொடரை எழுத தொடங்குவதற்குத் முன்பு சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், நம்மை நாமே புரிந்து கொள்ளவும் வேண்டுமென வேண்டுகிறேன். இன்று தமிழ் உலகில் வாழும் எந்த இனத்திற்கும் இல்லாத பெருமை கொண்டவர்கள் நாம். நமது பரதவர்கள். ஆதி முதல் இன்று வரை நமக்கான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டவர்கள் நாம். 


சங்கத்து இலக்கியமானாலும், பண்டை பாரத இதிகாசம் ஆனாலும், பரதவர் என்னும் ஒற்றைச் சொல்லே இன்று வரை பிறழாமல் பயணப்பட்டு வந்து நம் தலை மேல் மகுடமாய் ஏறி நிற்கிறது. 1500 களில் பாராண்ட பரத குலத்து பாரம்பரிய முத்துகுளித்தலும், பரதவக் கடலும் மதுரை நாயக்க அரசால் அரேபிய மூர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. சொந்த மண்ணிலேயே சித்திரவதைகளுக்கும், சீர்கேடுகளுக்கும் ஆளாகிப் போயினர் தொல் பாண்டி பரதவர்கள். மீண்டும் தன் மாட்சிமையைப் பெற்றெடுக்க போராடத் துணிந்த பரதவர்கள் போர்த்துக்கீசியரிடமிருந்து ஆயுதம் வாங்க கொச்சினுக்குப் போனார்கள். 

துப்பாக்கிக்குப் பதிலாக தூக்கிக்கொண்டு வந்தது என்னவோ சிலுவையைத்தான். அன்று முதல் பாரமான மத சிலுவை பரதவர்களின் தோள்களிலே சுமத்தப்பட்டது. சுற்றி சூழ் பகைவர்களிடமிருந்து தப்பிப் பிழைக்க எடுத்த முடிவு 1530 களிலிருந்து 1700 களுக்குள் பாண்டி பரதவனுக்குள் மூன்றில் இரண்டு பங்கை மதத்திற்காகவும், தன்மானத்திற்காகவுமே காவு கொடுத்தது. துவக்கத்தில் பாதுகாத்த போர்த்துக்கீசியர் சவேரியார், கிருமினாலி, ஹென்றிகஸ் போன்ற தூயவர்கள் பின்னால் இந்த பரதவ சமூகம் திரண்டதைக் கண்டதுமட்டுமில்லாமல் அவர்கள் போர்த்துகீசிய ஆட்சியாளர்களை ஒதுக்கியதால் ஜெஸ்யூட் என்னும் சேசு சபைக்கும், போர்த்துகீசிய ஆட்சியாளர்களும் இடையேயான அதிகாரப் போட்டி உருவானது. 

அதன் காரணமாகவே போர்த்துகீசியர்களாலும் பரதவர்கள் துன்புறுத்தப்பட்டனர். எண்ணிலடங்காதவர்கள் அடிமைகளாக பல நாடுகளுக்கு போர்த்துகீசிய கேப்டன்களால் விற்கப்பட்டனர். ஆனாலும் மக்களோடு மக்களாயிருந்த சேசுசபைத் துறவிகள் இதற்காக லிஸ்பன் போர்த்துகீசிய அரசிடம் மன்றாடியது. இங்குள்ள நாயக்க வடுகர்களிடமும் போராடியது. சவேரியார் முதற்கொண்டு அவரைப் பின்தொடர்ந்த பாதிரியார்கள் வரை வாளெடுத்துப் போராடி இச்சமூகத்தைப் பல இன்னல்களிலிருந்து மீட்டெடுத்தனர். 

ஆனாலும் என்னவோ காலங்கள் கழியக்கழிய போர்த்துக்கீசிய ஆட்சியாளர்களுக்கும், பரதவகளுக்கும் இடையேயான நல்லிணக்கம் குறைந்தே போனது. வேதாளைப் போர்க்களத்தில் போர்த்துகீசியர்களுடன் நின்று போரிட்ட பரதவரின் வீரம் செறிந்த வரலாறுகள் மறைக்கப்பட்டன. பரதவரின் இரப்பாளியை சிறையெடுக்க தானே தனி வியூகம் வகுத்த பரதவரின் சாணக்கியத்தனம் அன்றே போர்த்துகீசியர்களுக்கு வெளிக்காட்டாத வங்சினத்தை வளர்த்து வந்தது. 1600 களில் குமரி முதல் வேம்பாறு வரை பரதவர்கள் ஒடுக்கப்பட்ட போது டச்சுக்காரர்கள் வருகையால் அதிகாரத்தை இழந்து விடுவோமே என பயந்திருந்த போர்த்துகீசியர் நாயக்கர்களின் உறவை தக்க வைத்துக் கொள்ள பரதவருக்கு உதவ மறுத்தனர். 

நிலைமையை உணர்ந்த சேசுசபையினரும் பரதவர்களை ஆசுவாசப்படுத்தவே முயன்றனர். ஆனால் அன்றைய இளம் பரதவர்கள் துணிந்து எடுத்த முடிவுதான் இச்சரித்திரக் கிறுக்கல். இக்கதைக்குப் பின்னர் தான் மன வேகத்தோடு சேசு சபையின் ஒரு குழுவினர் இங்கிருந்து தூய தோமா துயிலிடத்திற்கு அதாவது சென்னை மயிலாப்பூருக்குச் சென்று சேசு சபையை பரப்ப எத்தனித்தனர். ஆக வரலாறே நம்முடையது. நம்மைச் சுற்றியே வரலாறு. வரலாற்றில் தொலைத்துப் போனவர்கள் வேண்டுமானால் வீணாய்க் கிடக்கலாம். ஆனால் வரலாற்றைக் கொண்டவர்கள் மட்டுமே வரலாறு படைக்க முடியும். இனி ஒரு விதி செய்வோம். பரதவன் பாராள வழி செய்வோம். இது துவக்கம் தான். 

அன்புடன் 

கடல்புறத்தான்

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 3

சைவ வழிபாட்டில் பரதவர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். தம் பாண்டிய வம்சத்தில் பிறந்த மலையத்துவசப் பாண்டியன் மகளான மீனாட்சியை தம் குலதெய்வமாகக் கொண்டிருந்தனர். மீனாட்சியின் திருமணம் மதுரையில் சோமசுந்தரருடன் நடைபெற்றதாகவும், சிவனே சோமசுந்தரராக தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே  பாண்டியர்கள் மதுரையில் மீனாட்சி எனப்படும் அங்கையற்கண்ணிக்கு ஆலயம் அமைத்தனர். இவ்வாலயத்தை தலைமைப் பீடமாகக் கொண்ட பரதவர்கள் தங்கள் ஊர்களிலும் மீனாட்சி சொக்கநாதருக்கென ஆலயங்கள் அமைத்தனர். 

அனைத்து கடற்கரை பட்டினங்களிலும் சிவாலயம் ஒன்று எழுப்பப்பட்டன. பரதவர்கள் கிறிஸ்தவத்தை தழுவியதும் அவ்வாலயங்கள் கைவிடப்பட்டன. அருகிலுள்ள ஊர்களுக்கு அவ்வாலயத்தின் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. உதாரணமாக வேம்பாற்றிலிருந்த மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் சிலைகள் மேல்மாந்தை மற்றும் விளாத்திகுளம் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோயில் எழுப்பப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. வேம்பாற்றில் அவ்வாலயம் இருந்த பகுதி சிவபெரும்குன்றம் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் திருவிழாவின் போது மீனவருகேன்று ஒருநாள் மண்டகப்படி  உண்டு. இவர்களுக்கென்று தனிவாயிலே (வடக்கு வாசல்) உண்டு எனவும், அது அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வாய்மொழி பேச்சுகள் நிலவுகின்றன. கடலில் மீன் வளம் பெருகவும், கடல் பயணங்களில் விண்மீனாய் வழிகாட்டவும், கடல் வாணிபம் சிறப்பாக அமையவும், மீனைப் போல விழி மூடாமல் தம்மைக் காக்கும் அன்னையாக பரதவர்கள் மீனாட்சியை வணங்கினர். 

64 நாயன்மார்களில் முதலானவர் அதிபத்தர் என்னும் பரதவர் ஆவார். சிவபக்தரான இவர் மீன் பிடித்தலில் தலைமீனை சிவனுக்குப் படைப்பவர். இவரை சோதிக்க சிவன் இவருக்கு தங்கமீன் ஒன்றினை முதல்மீனாக வலையில் பட செய்ய அதையும் சிவனுக்கே படைத்தார். இதனால் மகிழ்ந்த சிவன் இவருக்கு வீடு பேறு அளித்தார். இதனை நாகபட்டின மாவட்ட மக்கள் இன்றுவரை சிறப்பாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். 

அவ்வாறே 'சங்கறுப்பது எங்கள் குலம்' எனக்கூறிய நக்கீரரும் பரதவரே. இவரும் சிவனால் வீடு பேறு அடையப் பெற்றவர் ஆவார். இவ்வாறு இரு பரதவர்கள் சிவனால் வீடு பேறு அடையப் பெற்றதன் மூலம் பரதவர் சைவ வழிபாட்டின் மேல் கொண்ட  பற்றுதலை அறியலாம். 

திருவாரூர் அருகேயுள்ள திருக்குவளையில் கிபி. 1219 ல் எழுதப்பட்ட கல்வெட்டில் சிவன்படவர் என்னும் சொல் காணப்படுவதும், செஞ்சி மன்னரால் எழுதப்பட்ட செப்பேட்டில் சிவன்படவர் என்னும் சொல் காணப்படுவதும் கூர்ந்து நோக்கக் கூடியதே. இச்சொல்லே பிற்காலத்தில் செம்படவர் என மாறியிருக்க வேண்டும் என உணர முடிகிறது. இதனையே மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் 

' படவதேறிப்பாரொடு விண்ணும் பரவியேத்த' 

எனப்பாடி சிவனே படவன் எனக் குறிப்பிடுகிறார்.

திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசு படலம் நடைபெற்ற உத்திரகோசமங்கை தற்போது இராமநாதபுரம் அருகேயுள்ளது. இது ஆதியரசர் என்னும் பரதவ மன்னன் ஆளுகையிலிருந்தது. சிவனின் சாபத்தால்  உமையாள் இவரது மகளாகப் பிறக்க, நந்தி தேவர் சுறா வடிவில் கடலில் பரதவருக்கு தொல்லை கொடுக்க, ஆதியரசர் சுறாவைப் பிடிப்போருக்கு மகளை மனம் முடிப்பதாக வாக்குக் கொடுக்க, சிவனே வலையராய்  உரு எடுத்து சுறாவை அடக்கி உமையாளை மனம் முடித்து ஆசி வழங்கிய இடமாகும். இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் மாரியூர் பூவேந்திநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது. அவ்வாறே சிதம்பரத்தில் பர்வத ராஜ குலத்தோர் இந்நிகழ்வை தேர் திருவிழாவாக நினைவு கூர்வதும் முக்கியத்துவம் பெற்றது.

ஆதியில் கடற்கரைப் பட்டனமாகத் திகழ்ந்த இவ்வூர் இன்று கடற்கரையிலிருந்து தொலைவிலுள்ளது எனினும் அதற்கான எச்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிவ வழிபாட்டின் உச்சமாக இங்கு 7 அடி உயர மரகத நடராஜர் சிலை காணப்படுகிறது. இதனை ஆதி நடராஜர் எனவும், இவ்வூர் ஆதிசிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது. மாணிக்க வாசகரோ உத்திரகோசமங்கையை சிவனது சொந்த ஊராகவும், பாண்டிய நாடு சிவனது பதியாகவும் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

இங்கு காணப்படும் உமையவள் மங்களேஸ்வரி, சுந்தர நாயகி என அழைக்கப்படுகிறார். இம்மங்களாம்பிகையின் மேல் அளவு கடந்த பற்றுதல் கொண்ட பரதவர்கள் அவளுக்கு கல்லில் தேர் அமைத்து நகர்வலம் வந்தனர். காலத்தின் கோலத்தால் அத்தேர் இன்று அங்கு காட்சிப் பொருளாக உள்ளது. இதனை பரதவர்கள் தங்கள் சொற்கட்டயங்களில் ஒன்றான 'உத்திர கோசமங்கையில் கல்தேர் ஓட்டிய ஜெயவீரா' எனக் கூறுவதன் மூலம் இன்றும் இதனை நினைவு கூறுகிறார்கள்.

இக்கோவிலில் தலைமைப் பூசாரிகளாகப் பணி செய்த பரதவர்கள் கிறிஸ்தவம் தழுவிய பின் இக்கோவிலைக் கைவிட்ட,  பரதவருகே உரிய சாமி சன்னிதி இன்றும் இங்கு மூடப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் தழுவிய பின்னரும் பரத சாதித் தலைவர்கள் தங்களது பதவியேற்பு நாள் அன்று உத்திரகோசமங்கை வந்து வழிபட்டு வந்ததையும் பிற்காலத்தில் அதுவும் நின்றதையும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கொற்கை நூல் குறிப்பிடுகிறது.

 -தொடரும் -


- நி. தேவ் ஆனந்த்

காலனியம் சமயம் பரவர்


நூல் அறிமுகம்

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள்

- ஜெ.எச். செல்வராஜ், 
நெய்தல் வெளி வெளியீடு, நாகர்கோவில், 
விலை 85ரு.

மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, 80. அவர் தற்போது தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார். கடந்த 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில் பரவர்கள் வாழ்க்கையின் முதன்மையான சமூகவியல் பொருளியல் கூறுகளை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சுவையான பாரதி ஆய்வாளர்கள் கூட அறிந்திராத ஒரு நிகழ்வு பற்றிய பதிவுடன், முதல் அத்தியாயம் துவங்குகிறது. 1908ம் ஆண்டில் சுதேச கீதங்கள் என்ற தலைப்பில், பாரதி பாடல்களின் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று. அதில் இடம் பெற்றிருந்த, ‘பறையருக்கும் இங்க தீயர் புலையருக்கும் விடுதலை, பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’ என்ற பாடல் வரி, ஜே,ஆர். மிராந்தாவை உறுத்திற்று.

கொழும்பு நகரில் இருந்து வெளிவந்த, ‘திராவிட மித்திரன்’ (வாரம் இருமுறை வெளியாகும் இதழ்), பரதன் (மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான மிராந்தா, தூத்துக்குடிக்கு வந்து, அங்கு கைவல்ய சுவாமி மடத்தில் தங்கியிருந்த பாரதியை சந்தித்து, பரவர் எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட ஜாதியாகவோ, இழிந்த வர்ணத்தினராகவோ இருந்ததில்லையே, மோனைக்காக எங்கள் ஜாதி பெயரை சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் பாரதி, கவிதை வடிவில் வீசிய பதிலை, ஜே.ஆர்.மிராந்தாவின் வாய்மொழியாக கேட்டு, 1954ல் தாம் எழுதி வைத்திருந்ததை, நூலாசிரியர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

கடந்த, 1914ல் இந்தியாவின் புனித சங்கு (தி சேக்ரெட் சாங்க் ஆப் இண்டியா) என்ற நூலில், ஜேம்ஸ் ஹோர்னலும், 1917ல் திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடியில் (டின்னவேலி டிஸ்ட்ரிக்ட் கெஜட்டீர்), மாவட்ட ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட்டும், பரவர் பற்றி எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து மேற்கோள் காட்டியும், பரவர்களின் குடிப்பழக்கம் எவ்வாறெல்லாம் அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து வந்துள்ளது என்பதை விளக்கியும், ஆசிரியர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரவர்களுக்கு உள்ளேயே, மூன்று வகை ஜாதி அடுக்குகள் இருப்பதும் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தேர் திருவிழாவில், பரவர்களின் தலைவர், முதன் முதலில் வடம்பிடிப்பதே நடைமுறையாக இருந்துள்ளது. 1947ம் ஆண்டில், கத்தோலிக்க மத குருமாரே முதலில் வடம் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் சிக்கி கொள்ளாமல், அப்போதைய மறைமாவட்ட ஆயர், வாடிகன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவருக்கு தந்தி அடித்து கேட்டபோது, மேலும் குழப்பம் வகையில் ஆயர் பதில் தந்தி கொடுத்த நிகழ்வு – இவை போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் பதிவாகி உள்ளன.

அருமையான புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டியது

புறநானூறு மூலமும் உரையும்



புறநானூறுமூலமும் உரையும் : (பக்கம் :474) 


பரதவர் - 378 

இவர் தென்திசைத் தமிழகத்தே வாழ்ந்தவர்; கடலோடி களாகக் கடல் வாணிபத்திலும், கடல்தரு பொருள்களை ஈட்டு வதிலும் ஈடுபட்டிருந்தவர்.'தென் பரதவர் போரேறே எனக் கூறும் மதுரைக் காஞ்சி, இவர் பாண்டியரது மேலாட்சிக்கு உட்பட்டிருந்தவர் எனக் காட்டும். சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடும் ஊன்பொதி பசுங்குடையார், இச் செய்யுளில், தென் பரதவர் மிடல்சாய' என்று அவனது வெற்றிச் சிறப்பையும் கூறுகின்றார் பரதவர் என்பது இதனாற் பாண்டியர் குடியினரைக் குறித்ததும் ஆகலாம்; பாண்டியருக்கு 'மீனவர் என்று வழங்கும் பெயரையும் இங்குக் கருதுக. 


பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் - 55 - 57 196, 198 - 

இவன், தன் காலத்துப் பிறவரசரினும் மேம்பட்டு விளங்கிய சிறப்பினன். மதுரை மருதன் இளநாகனார். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் முதலியோர் இவனைப் பாடியுள்ளனர். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவன். இவன் காலத்துச் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவான். பழையன் இவன் பாண்டியர் மறவருள் ஒருவன். மோகூர்த் தலைவனாக விளங்கியவன். சோணாட்டுப் போஒர் என்னும் கோட்டைத் தலைவனாகிய பழையன் வேறு; இவன் வேறு. 


பாண்டியன் அறிவுடை நம்பி - 184, 188 

இவன் அறிவாற்றலாற் சிறந்தவன். பிசிராந்தையார் காலத்தில் இருந்தவன். பிசிராந்தையார் இவனுக்கு உரைத்த அறவுரைகள் மிகவும் செப்பம் உடையன. மக்கட்பேறு இல்லாத வாழ்வு ஒரு வாழ்வாகாது’ என்னும் பொருள்பட இவனுரைத்த செய்யுள் (188) மிக்க செறிவுடையது. பாடினோர் வரலாற்றுள்ளும் இவனைப் பற்றிக் காண்க. 


பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3 

இவனைப் பாடியவர் இரும்பிடர்த் தலையார். இவனுடைய மற மேம்பாட்டையும், கொடைச் சிறப்பையும் அவர் பாடியுள்ளனர். ‘கருங்கை’ என்பது இவனது தோள்வலியால் அமைந்த சிறப்புப் பெயர் ஆகும்.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com