பாய்மரக் கப்பல்
பண்டையத் தமிழர்களோடு அதிகமான அளவுக்கு வணிகத் தொடர்பில் இருந்தவர்கள் யவனர்களே. யவனர்கள் என்றால் அராபியர்கள். கேரளத்து கொடுங்கல்லூரிலிருந்து குமரியின் குளச்சல்வரை வந்தவர்கள் அவர்கள்.
"யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்பது சங்கத் தமிழ் பாட்டு. உலகின் பல நாடுகளுக்கும் பாய்மரக் கப்பல்களில் அரபிகள் சென்றார்கள். அவர்கள் பயணம் செய்து வந்த கப்பல்களின் தோற்றத்தைக் கண்டு தமிழ் மக்கள் வியந்தார்கள். யவனர்கள் வெண்ணிற குப்பாயம் அணிவார்கள். அவர்களை ” குப்பாயத்தார் ” என்று அழைக்கும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்தது.
திருவிளையாடல் புராண காலத்திலேயே "பள்ளிக் குப்பாயத்தார்" என்று அரபிகளை வர்ணித்த வரிகள் வரலாறாய் இருக்கிறது. அதனால் குப்பாயம் அணிபவர்களை "பாய்கள்" என தமிழர்கள் அப்பவே அழைத்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
உருதுவில் பாய் என்றால் சகோதரன். அந்த பாய்க்கும் தமிழ் முஸ்லிம்களை அழைக்க பயன்படும் பாய்க்கும் வேறுபாடு உண்டு. உருது பாய் வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ் பாய் வந்து விட்டாரென்பதுதான் உண்மை.
அதற்கு ஆணித்தரமான இரு காரணங்கள் உண்டு. அவை …குப்பாயமும் பாய்மரக் கப்பல்களும்.
குப்பாயம் அணிவதை வைத்து யவனர்கள் "பாய்" என்றழைக்கப்பட்டார்கள். அவர்கள் அரபி வணிகர்களாக வந்து போனார்கள். இஸ்லாம் தோன்றிய பிறகு "முஸ்லிம் பாய்களாக" வாழ ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால்…
முஸ்லிம்களின் பெயரால் அழைக்கப்பட்டவைதான் 'பாய்மரக் கப்பல்கள்' குப்பாயமணிந்த பாய்மார்கள் ஓட்டி வந்த கப்பல்கள் 'பாய்மார் கப்பல்கள்' என்று அழைக்கப்பட்டு அவை மரக்கப்பல்களாகவும் இருந்த காரணத்தால் 'பாய் மரக் கப்பல்கள்' என்றும் தமிழர்களால் அழைக்கப்பட்டன.
Thanks: www.seasonsnidur.wordpress.com