வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 27 November 2019

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா?
உப்புப் பெறாத விஷயமெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசும் நாம், உப்பை விளைவிப்பவர் யார்? உப்பு எப்படி நமக்கு கிடைக்கிறது என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா ?

நெய்தல் நிலத்தில் மட்டுமே அங்கே வாழும் பரவரால் உற்பத்தியாகும் உப்பினை ஏனைய நிலப்பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியினை உமணர் என்போர் மேற்கொண்டிருந்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மருத நிலத்தைச் சேர்ந்த உமணர்கள் கழுதைகள், மாட்டுவண்டிகளின் வாயிலாக உப்பைக் கொண்டு வந்து அவற்றை நெல்லுக்கு பண்டமாற்று செய்தனர். இப்பண்ட மாற்று முறையில் நெல்லின் மதிப்பும் உப்பின் மதிப்பும் சமஅளவில் இருந்துள்ளது. இதில் உமணர்கள் என்பது யாரைக் குறிக்கும் என்பது ஆய்வுக்குரியது. உப்பை விநியோகிக்கும் பொறுப்பு மட்டும் உமணர்கள் வசம் இருந்தது. 

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் –

-- மதுரைபுலவர் சேந்தம்பூதனார், அகம்.

அணங்கு என்னும் பெண் தெய்வம் உறையும் கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து, நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினைப் படைக் கலன்களைக் கையிற் கொண்டெழுந்த வீரச் செயல்கள் புரியும் உமணர்கள் மூட்டைகளாக அடுக்கி, வெண்ணிறக் கழுத்தினைக் கொண்ட கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு, நிமித்தம் பார்த்தவராய்; அவற்றை மேற்குத் திசைகளில் உள்ள இடங்களுக்குக் கொண்டு செல்வர். இது அகநானூறு வருணிக்கும் ஒரு அந்த நாளைய வாழ்வியல் காட்சி.

உப்பு அமிர்தத்திற்கு இணையாகக் காணப்பட்டது சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள் தான் கடல்நீரில் இருந்து சோடியம் உப்பை பிரித்தெடுத்தார்கள். என்றுக் கூறப்படுகிறது எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்க காரணம் எகிப்தியர்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் உப்பை விற்று செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்

ஆனால் அந்த உப்பு எடுக்கும் கலையும் தொழில் அறிவும் தமிழகத்தின் தொல் பரவலுக்கு பின்பே தமிழர்களின் தொடர்புகளால்  வந்திருக்கலாம். எகிப்திய இறந்த மன்னர்களின் உடலைப் பதப்படுத்த தமிழ் நாட்டை சேர்ந்த பருத்தி துணிகளும், வாசனைத் திரவங்களும் பயன்பட்டபோது, இறந்த உடலைப் பதப்படுத்தும் உப்பையும் தொல் தமிழர்களே அறிமுகப்படித்திருக்கலாம். அதிகமாகப் பிடித்த மீன்களை உப்பிட்டு கருவாடாக்கும் வித்தையை தெரிந்தவர்கள் தொல் நெய்தல் நில மக்கள் ஆன பரதர் ஆகும் .

எகிப்து நாட்டில் இருக்கும் பல பிரமீடுகளில் காசா பிரமீடு மிக பெரியதாக உள்ளது. இதில், தமிழகத்தின் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த தமிழி எழுத்துக்கள், காசா பிரமீடு நுழைவு வாயிலில் ”கந்தன்’’ என்ற பெயராக எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தமிழ் மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார்.

உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். நாகைக்கு அருகில் பேரளம், சென்னைக்கு அருகில் கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். கடற்கரை பகுதியில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்கள். அவ்வளவு ஏன் உயிர்கள் முதலில் தோன்றியதே உப்பு நீரில் இருந்துதான் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது.

மனித நாகரீகத்தின் முதல் அடியே ருசியில்தான் துவங்குகிறது. அறுசுவை என்பது உடலுக்கு ஐம்பூத ஆற்றலை வழங்குவது. சுவை சூக்ஷமானது. அந்த கண்ணுக்குத் தெரியாத சுவையை நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களே பிரித்து அனுப்புகிறது. நாக்கைத் தாண்டியபின் உடலுக்கு சுவைத் தெரியாது.

வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதற்கும் உப்புக்கும் பரவருக்கும் தொடர்புண்டு தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் “வெட்டி” என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்” என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று “உப்பு ஊழியம்” ஆகும்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு. இதைத்தான் அப்போதைய மக்கள் வெட்டி வேலை என்று பயனற்ற வேலையை சொல்லும் வழக்கம் இன்றுவரை உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது, கல்வெட்டிலும் உள்ளது. 

கி.பி.12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று “உப்புக்காசு” என்ற பெயரிலான வரியை குறிப்பிடுகிறது. மேலும் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்மலைச் சொக்கநாதர் கோயில் கல்வெட்டொன்று

உப்பு பொதி ஒன்றுக்கு காசு ஒன்று

உப்பு பாக்கத்துக்கு காசு அரையும்

உப்பு தலைச்சுமை ஒன்றுக்கு காசு அரையும்

உப்பு வண்டி ஒன்றுக்கு காசு பத்தும்  என்று குறிப்பிடுகிறது.

இதே கல்வெட்டு

நெற்பொதி ஒன்றுக்கு காசு ஒன்றும்

நெற்பாக்கம் ஒன்றுக்கு காசு அரையும்

நெல் வண்டி ஒன்றுக்கு காசு பத்தும் என்று குறிப்பிடுகிறது. 

இக்கல்வெட்டு மூலம் உப்புக்கு இணையான வரியே நெல்லுக்கும் வாங்கப்பட்டுள்ளது. உப்பும் நெல்லும் ஒரே விலை விற்ற செய்தியும் தெரியவருகிறது. 

இதே போல சடையவர்மன் நான்காம் சுந்தரபாண்டியனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (1324-24) கல்வெட்டு ஒன்று காரைக்கால் அருகாமையில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜமண்டபத்தில் காணப்படுகிறது. அக்கோயிலின் தானத்தார்க்கு அவன் விடுத்த கட்டளையொன்று அதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

இன்னாயனார் திருநாமத்துக் காணியி(n)ல
தரிசு கிடந்த நிலத்தில் ஒரு கண்டமும்
ஒரு கெணியும்
தருசு திருத்தி, உப்பு படுத்து
முதலான உப்பு புறநாட்டிலெ விற்று இம்முதல்
கொண்டு திருமார்கழித் திருவாதிரை திருநாள்த்
தாழ்வுபடாமல் எழுந்தருளப் பண்ணவும்
மார்கழித் திருவாதிரைத் திருநாள் நடத்தும் செலவுக்காகப்
புதிதாக உப்பளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

இந்தக்கல்வெட்டின் மூலம் நெய்தல் நில மக்களின் மார்கழி திருவாதிரை அடுத்த கடல் பயணப் புறப்பாட்டு ஏற்பாடுகளுக்காக சிவனை வழிபாட்டு கிளம்பும் முறை இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போதுதான் பருவக்காற்று சாதகமாக இருக்கும். இன்றைய வரையில் சிதம்பரம் தில்லை நடராசர் ஆலயத்தில் ஆருத்திரா திருவிழாவில் முதல் மரியாதை சிதம்பரத்து மீனவருக்கே இருக்கிறது. அவர்களின் வழிபாட்டிற்குப் பிறகே நடராசர் 1000 கால் மண்டபத்தைவிட்டே வெளிவருவார். அந்த விழாவுக்கு பெயரென்னத் தெரியுமா தரிசனம் .!

ஏதன் தரிசனம்? ஆருத்திரா தரிசனம் என்றால் மார்கழி திருவாதிரையை நெய்தல் மக்களுக்கு தரிசனப்படுத்தி கடல்பயணம் செய்ய வைக்கும்  நிகழ்வுதான் அந்தத் திருவிழா. திருவண்ணாமலையில் மலையில் கார்த்திகைத் திருநாள் அன்று தீபம் ஏற்றும் உரிமை இன்னமும் நெய்தல் நில மக்களிடமே உள்ளது. கார்த்திகை
மாத கார்த்திகைக்கு பிறகு தீபம் ஏற்றியதும் அடை மழை நின்று பயணம் தொடங்க ஏற்பாடுகள் நடக்கும் .

தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சமூகம் பரவர். பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல. பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள். தம் பெருமை வலிமை அறியாத அனுமனை போல், கட்டு இல்லாதிருந்தால் கட்டுண்டதாக மயங்கி நிற்கும் கோயில் யானைப்போல் இன்று பெருமை கொண்ட நெய்தல் நில மக்கள் மயக்கத்தில் இருக்கின்றனர்.

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று அடையாளப்படுத்துகின்றன. தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களை மீனவர் என ஒரு சாதிப்பெயரில் அடக்கி, அவர்தம் பெருமையை மழுங்க அடித்து, வயிறு பிழைப்புக்கு மீன்பிடித் தொழில் புரிந்து ஆயிரம் ஆயிரம் வருட பாரம்பரிய கடல் சார் அனுபவமும் அறிவும் படைத்த ஒரு சமூகம், இந்த நிலையில் இருக்கும் நிலை மிகக்கொடுமையானது.

அவர்களுக்கும் 22 சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், மரக்காயர், என இன்னும் பல சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

உண்மையில் தமிழனின் கடல் சார் பயணத்தையும், அவர்களின் வணிகத்தையும், பொருளாதார ஆளுமைகளையும் ஆராய இன்னமும் மிஞ்சி இருக்கும் கலப்பில்லாத உண்மைத்தமிழராக இருக்கும் தமிழ் நாடு, இலங்கை மீனவர்களையும், நகரத்தாரையும் ஆராய்ந்தால் போதும். அதாவது பட்டினவரையும், பட்டணத்தவரையும் ஆராய்ந்தால் போதும். முதலில் தொல் தமிழ் நாட்டின் திணை ஒன்றான நெய்தல் நிலமக்கள் முதலில் மீனவர் எனும் சாதிப்பிரிவில் இருந்து வெளிவரவேண்டும். அவர்களின் பெருமையும் அனுபவமும் அறிவும் மீன்பிடித்தலில் மட்டுமல்ல. 

தமிழ் சித்தர்களை வெறும் மருத்துவர்கள் என்று அறிவது எப்படித் தவறானதோ, அப்படியே நெய்தல் நில மக்களை மீனவர்கள் என்று கூறுவதும் ஆகும். அவர்கள் மிகச் சிறந்த மாலுமிகள், கடலில் கலம் ஓட்டும் காற்றின் திசை அறியும், உலகின் ஆயிரம் திசை அறியும் வல்லமைபெற்றவர்கள், மிகச் சிறந்த வணிகர்கள், பொருளாதார நிபுணர்கள், யாருக்கும் கட்டுப்படாத தீரர்கள், அஞ்சாத வீரர்கள் இன்னம் சொல்ல நிறைய இருக்கிறது. இத்தகையது திரை மீளர்களைப் பற்றி சொல்லச் சொல்ல விரியும்.

அண்ணாமலை சுகுமாரன் எம். ஏ , டி இ இ
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com