ஆளை அசத்தும் அஞ்சாளை மீன்
சமவெளி மக்கள் பாம்பை பார்த்து நடுங்குவர் என்றால், கடலோடிகள் அஞ்சும் மீன் வகைகளில் ஒன்று விலாங்கு மீன் இனத்தைச் சேர்ந்த அஞ்சாளை. பாம்பு போன்று இந்த மீனுக்கு விஷம் இல்லை என்றாலும் ஒருமுறை அஞ்சாளையிடம் கடி வாங்கினால் வாழ்நாளுக்கும் மறக்காது. கடல் மூரைகள் எடுக்கப் போய் அஞ்சாளையிடம் கடிபட்ட கடலோடிகள் ஏராளம்.
தமிழ்நாட்டு கடலில் சுமார் 20க்கும் மேற்பட்ட அஞ்சாளை மீன்( The fearless shark) இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை நீளம் மற்றும் வண்ணம் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழுப்பு, மஞ்சள், கறுப்பு, தவிட்டு நிறங்களில் காணப்படுகின்றன. 4 அங்குலம் முதல் 1மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில், பாறை பொந்துகளில், பாறைத் தொடர்கள் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கின்றன.
பற்களுடன் கூடிய இரு தாடை அமைப்புகளை கொண்ட ஒரே மீன் அஞ்சாளை மட்டுமே.இரண்டாவது தாடை தொண்டை பகுதிக்கு பின் இருக்கும். இரையை முதல் தாடையான வாய் பகுதி பிடிக்கும் போது இரண்டாவது தாடை வாய்ப்பகுதிக்கு நகர்ந்து வந்து இரையை கவ்வி உணவுப் பாதைக்குள் தள்ளும். இரு தாடை அமைப்பால் இரையானது அஞ்சாளையிடமிருந்து தப்ப இயலாது.
கண்கள் மிகச்சிறியவை. பற்கள் மிகவும் கூர்மையானவை.தோலில் திரவம் சுரப்பதால் வழுவழுப்பாக இருக்கும். சிறிய அளவு விஷத்தன்மை கொண்டது என்பதால் அஞ்சாளையை கடலோடிகள் உண்பதில்லை. சிறுவர்கள் அளைகளில் வசிக்கும் அஞ்சாளையை கொந்தானில் கண்ணி வைத்து பிடித்து தோலை உரித்து வெயிலில் காய வைப்பார். காய்ந்த தோலை தேங்காய் சிரட்டையில் கட்டி பறை போன்று குச்சியால் அடித்து ஒலி எழுப்பி விளையாடும் வழக்கம் கடற்புறங்களில் இருந்தது.
தாது மணல் கொள்ளையர் புண்ணியத்தில் அழிந்த கரையோர மீன் இனங்களில் அஞ்சாளையும் ஒன்று. சிறுமீன்கள், நண்டுகள், சிப்பிகள் தாது மணற் கழிவுகளால் அழிந்து அஞ்சாளையின் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டதால் இன்று கரையோரங்களில் அஞ்சாளை இல்லை.
#magnificent_fish
#magnificent_fish
- Francis Xavier Vasan