ஆதி முதலே
பரிசுத்த ஆவியானவருக்கு தங்கள் பங்கு ஆலயத்தை அர்ப்பணித்திருந்த வேம்பாற்றுவாசிகள்
சந்த செபஸ்தியாரின் பேரில் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக அவருக்கென சிற்றாலயம்
ஒன்றினை நமதூரில் அமைத்து அவரை போற்றினர்.
அதனுடன் அக்கால
மரபிற்கேற்ப புதுமைக்கிணறு ஒன்றினை அவரின் பெயரில் ‘சந்த செபஸ்தியார்
புதுமைக்கிணறு’ என்று அவ்வாலயத்தின் அருகிலேயே அமைத்திருந்தனர்.
இப்புதுமைக்கிணற்றின் மூலம் ஏராளமான புதுமைகளும் நடந்தேறின. தொடர்ந்து வந்த
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணங்களால் அவ்வாலயம்
சிதைந்தும் போனது. கிணறும் தூர்ந்தது. அதன் பின்னரே சந்த செபஸ்தியாரின் சொரூபம்
தற்போதைய பங்கு ஆலயத்திற்கு கொண்டு செல்லப்;பட்டிருக்க வேண்டும் என அறிய முடிகிறது.
இதற்கிடையே சமீப
காலம் வரை நமது கன்னியர் இல்லம் செல்லும் பாதையில் காணப்பட்ட குருசடி “அர்ச
செபஸ்தியார் குருசடி” என்றே பெயரிலே தான் அழைக்கப்பட்டது என்பதை இங்கு உரைத்தல்
சாலச் சிறந்தது. இக்குருசடிதான் முந்தைய செபஸ்தியார் ஆலயத்தின் பகுதியாகவோ அல்லது
பண்டைய முறைமைப்படி ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டும் குருசடியாக இருந்திருக்க
வேண்டும் என்பதை உணர முடிகிறது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் இன்றளவும்
அப்பகுதிக்கு அருகில் காணப்படும் தெருவினை “சந்த செபஸ்தியார் தெரு” என்றே
அழைக்கப்படுவதும் இங்கு கூறுவது மிகவும்
சிறந்தது.
சந்த
செபஸ்தியாருக்கு சிற்றாலயம் இருந்ததை மேலும் உறுதி செய்யும் விதமாக வேம்பாற்றினைச்
சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நம்மவர் திரு. தம்பி ஐயா பர்னாந்து அவர்கள் வேம்பாறு
குறித்து எழுதிய “வேம்பின் வாசனை" எனும் நூற்குறிப்பில் 1926 ஆம் ஆண்டு அர்ச். மார்கரீத் மரியம்மாள் கன்னியர் மடம்
உருவாக்கப்படும் முன் அவ்விடத்தில் சந்த செபஸ்தியாருக்கு சிற்றாலயம் இருந்ததாகவும்,
வேம்பாற்றுக் கடலோடிகளால் அவ்வாலயத்தில் விழா
எடுக்கப்பட்டதாகவும், அவ்வாலயத்தில் கிடைத்த
ஓலைச்சுவடியிலிருந்துதான் ‘மங்களம் மங்களம்’ எனும் நவநாள் செபம் எடுக்கப்பட்டு
அச்சேற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கூடுதல் தகவலாக
இடைகாலத்தில் நம்மவர் திரு. வெலிச்சேர் கர்வாலி அவர்கள் தமக்குச் சொந்தமான
நிலத்தில் சந்த செபஸ்தியாருக்கு சிற்றாலயம் அமைத்து வழிபட்டதையும், கன்னியர் மடம் அமைக்க அப்பகுதியை கொடுத்ததாகவும் அறிய முடிகிறது.
இதன் காரணமாக சந்த செபஸ்தியார் திருவிழாவிற்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில்
அவரது குடும்பத்தினருக்காக ஊர் சார்பாக சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுவதும்
நடைமுறையிலுள்ளது. இவற்றை மேலும் உற்றுநோக்கும் போது தற்போது நமது பள்ளியின்
விடுதி மாணவர்கள் குளிக்கப் பயன்படுத்தும் கிணறானது பழைய ஆலயத்தின் சிதைந்து போன
செபஸ்தியார் கிணறு தான் என்பதை உறுதியாகக் கூற முடிகிறது.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்
வாய்மொழிச்சான்றுகளில் சில
சான்று :
1. வேம்பாற்றுவாசிகள் கடல் தொழிலில் ஈடுபடும்
போது கடலில் மிதந்து கரை நோக்கி வந்த ஒரு பெட்டியை தாங்கள் எடுக்க முயலும் போது
அருகில் கடல் தொழில் செய்த அண்டையிலுள்ள வேறு ஊரினரும் எடுக்க முயல பெட்டிகரை
சேராமல் கடலுக்குள் சென்றது. இரு ஊராரும் விலக பெட்டி கரை நோக்கிவர என மும்முறை
நிகழ்ந்தது. இறுதியில்
வேம்பாற்றுவாசிகள் பெட்டியைக் கைப்பற்றித் திறக்க
பெட்டியினுள் சந்த செபஸ்தியாரின் சொரூபம் காணக்கிடைத்தது. சொரூபத்தினை பவனியாகக்
கொண்டு வந்து ஆலயத்தில் வைத்துப் பூஜித்தனர். அன்று இரவே சொரூபமானது காணாமல்
போனது. மேற்படி ஊரினர் சொரூபத்தைத் திருடி தங்களின் ஆலயத்தில் வைத்திருந்தனர்.
சொரூபம் அவ்வூருக்குச் சென்றது முதலே அவ்வூரில் பலவித வியாதிகளும். வருத்தங்களும்
தோன்றின. இதனிடையே சொரூபம் இருக்குமிடம் அறிந்து அங்கு சென்று கேட்க, அவர்களும் உரிமை கொண்டாடி தர மறுக்க, என பிரச்சனை அதிகமாக, வேம்பாற்றின் பங்குசுவாமிகளின் தலையீட்டால்
சொரூபத்தை மீட்டுக் கொணர்ந்ததாகவும், பின்அவ்வூரில்
பிணிகள் அகன்றதாகவும் தகவல் கூறப்படுகிறது.
2. வேம்பாற்றுவாசிகள் கடல் தொழிலில்
ஈடுபடும் போது கடலில் மிதந்து கரை நோக்கி வந்த ஒரு பெட்டியை தாங்கள் எடுக்க
முயலும் போது பெட்டி கரை சேராமல் கடலுக்குள் சென்றது. பெட்டி கரை நோக்கி வர,
விலக என மும்முறை நிகழ்ந்து இறுதியில் கரை சேர
பெட்டியை திறக்க முயல, அம்முயற்சி பலனளிக்கவில்லை.
வேம்பாற்றின் பங்கு சுவாமிகள் செபம் செய்த பின் எளிதில் திறக்க சந்த செபஸ்தியாரின்
லாவன்ய சொரூபம் பெட்டியினுள் இருந்தது. சொரூபத்தினை கடற்கரையிலிருந்து ஊர்
முழுதும் பவனியாகக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்து பூஜித்தனர். அந்நேரத்தில்
வேம்பாறு பகுதியில் நிலவிய கடும் கொள்ளை நோய்கள் சந்த செபஸ்தியாரின் வருகையால்
அகன்றதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
புனிதரின் சொரூபம் கடல் வழியாகவே
வேம்பாற்றிக்கு வந்து சேர்ந்தது என்பது நிம்பநகரோரின் ஒருமித்த கருத்தாகும்.
இத்தகவல்களுக்கு எந்த விதமான வரலாற்றுச் சான்றுமில்லையெனினும் இதனை
மறுப்பதற்கில்லை. எனினும் காலம் தான் இவ்வுண்மையை கண்டறிய வேண்டும்.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து
வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 3
Heritage Vembarites
22:59

சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருள்ளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருள்ளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
வேத சாட்சிகளுக்கு இராக்கினியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய மாதாவே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட கன்னிகையே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நற்போன பட்டணத்தின் பரிமள புஷ்பமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மிலான் தேசத்தின் அபிமானமாகிய செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகிமை போர்ந்த வங்கிஷ குலத்தில் பிறந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தர்ம மகிமையினால் அதிசங்கை யடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முகரூப ரேகையினால் சமஸ்தருக்கும் பிரியமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆத்தும ரூபலாவண்ணியத்தினால் படைத்தோனுக்கு அதிபிரியமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
படை வீரபராக்கிரமத்தினால் இராஜக்களுக்கு உபயமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஞானசங்கிராமத்தில் தெளிந்து ராஜாதிராஜனுக்கு அதிஉபயமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புத்தி விமரிசையினால் முந்தின சேனையின் தளவாயான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆயிரமாயிரம் பேர்களை ஞானசங்கிராமத்துக்கு நடப்பித்து மோட்ஷ சேனாதிபதியான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்து சேவகரை அன்ன பானத்தினால் தாங்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தத்தளித்திருந்திற பிராண பரித்தியாகிகளை புத்தி போதகத்தினால் பலப்படுத்திய செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மார்க்கு, மர்செலின் என்கிற சகோதரரை உறுதியாக்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இருவருடையவும் பிதாவான, தற்குலீனுவை வேதமாக்கிக் கால்கை முடக்கத்திலிருந்து இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நிக்கொஸ்திராத்துடைய குடும்பத்தையும், சகலரையும் ஒருமித்த வேதமாக்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆறு வருஷம் ஊமையாயிருந்த அவனுடைய ஸ்திரியை பேசச் செய்து தேவ துத்தியங்களை பாட வைத்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிலாவுதினுடைய இருபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பித்துக் குஷ்டத்திலிருந்தும், அகோரத்திலிருந்தும் இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொர்மான்சியூஸ் என்கிற பரிபாலனை மொழிவாதத்திலிருந்து இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அவனுடைய முழுக் குடும்பத்தையும் வேதமாக்கி தாசருக்கு மீட்சியைக் கொடுப்பித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்து வேதத்திற்காக அதிபராக்கிரமத்தோடு அமராடின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஒரு பயமும் அச்சமும் இல்லாமல் துஷ்ட அபிநாயக தியோக்லேசியான் முன்னால் கிறிஸ்துநாதரை வாழ்த்தின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அதி நிஷ்டூர தியோக்லேசியானுடைய சங்கைகளையும், சீர்களையும் புறக்கணித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மரத்தில் கட்டுண்டு எய்த அம்புகளால் சர்வாங்க முழுதும் குத்துண்டும் சாகாதிருந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சொற்பத்திற்குள் குணப்பட்டு நிஷ்டூர தியோக்லேசியானுடைய துஷ்டாட்டத்தை அகற்றி மீளவும் கிறிஸ்து நாதரை உச்சரித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைவாதைக்குக் கீழ்ப்படிந்து பிராணயாசின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அதிமறைவான தலத்தில் அடக்கப்பட்டாலும் அதிசங்கையான தலத்தில் பூமிதானத்தைக் கற்பித்தருளின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முழு கிறிஸ்தியானி லோகத்தில் வாழ்த்தப்படுகிற செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல வித ரோகங்களைப் போக்கியருள்ள வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வைசூரி முதலான விஷரோகங்களிலிருந்து அத்தியந்த தேசங்களைக் காத்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மோட்ச பிரகாசத்தை உலகத்தில் காண்பிக்க வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் கண்களுக்கு அதரிசனமான தேவ தூதர்களைத் தரிசனமாகக் காண்பிக்க வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல தூதாதி தூதருடைய நாயகனை முழு மனதாய்ப் பின்சென்ற செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சேசுக் கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பத்திரவான்களாகத் தக்கதாக ...
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீயோரே, எங்களுக்காக பிராத்தித்துக்கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
கிருபை தயவு நிறைந்த அனந்த சர்வேசுரா உமது அதி உச்சித வேதசாட்சியான ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் உமக்காகப்பட்ட பிரயாசங்களைத் தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீரங்களுக்கு ஔஷதமாகத் திருவுளமானீரே; அவருடைய பெரு பேறுகளைப் பார்த்து ஆத்தும வியாதியை ஒருக்காலும் நாங்கள் காணாமல் சரீரத்தில் உண்டாகிற சகலவித வருத்தங்களிலிருந்து நிவாரணமாக்கியருளும் என்று உம்மையே மன்றாடுகிறோம். ஆமென்
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பிராத்தனை
Heritage Vembarites
22:18
சங்கதி சொல்லும் கல்வெட்டுக்கள்
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு
படையெடுப்புகளாலும், காலத்தின் மாற்றத்தாலும் அவ்வாலயம்
சிதைவுற்றது. இதன் பின் அதே இடத்தில் புதிய ஆலயம் ஒன்றினை இரண்டாவதாக நம்மவர்கள்
அமைத்தனர் அவ்வாலயமும் சிதைவடைந்ததும் தற்போதுள்ள ஆலயத்தை உருவாக்கி 1915 ல் அபிஷேகமும் நடத்தினர்.
புதிய ஆலயத்தை அமைத்ததும் தங்களின்
பழைய ஆலயம் இருந்த பகுதியை மையவாடியாக மாற்றினர். 1963 ல் மையவாடியான ஊருக்கு வெளியே சென்றது 1964 ஆம் ஆண்டு வரை ஊரின் மையப்பகுதியிலே மையவாடி அமைந்திருந்தது. பின்
மையவாடி இருந்த இடத்தில் நம்மவர் திரு. செல்வம்
காகு அவர்கள் புனித செபஸ்தியாரின் மணிமண்டபத்தை அமைத்தார்.
தற்போதைய புனித
செபஸ்தியார் மணிமண்டபத்தின் பின்புறம் கல்லறைக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
இக்கல்வெட்டு கல்லறைக் கல்வெட்டு என்பதால் இக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர்
குறித்த செய்திகளே காணப்படுகின்றன. எனினும் அதனையும் கருப்பொருளாகக் கொண்டு
வரலாற்றை வெளிப்படுத்தும் முயற்சியே இக்கட்டுரையாகும்.
அக்கல்வெட்டில் முதலாவதாக மயில்
சின்னமும் அதைத் தொடர்ந்து கீழே காணப்படும் வசனங்களும்; பொறிக்கப்பட்டுள்ளன
1602 ம் வருசம் ஐப்பசி மாதம்
2ம் தேதி வேம்பாத்தில் பட்டங்கட்டி
சுவாம் வாசு அடைப்பனார்
மகள் அம்புறொசு க்கூநு வுடைய
பெண்சாதி மரிய தவாசு வை
அடக்கின குழி வாசல்
போர்த்துக்கீஸியரின் ஆளுகைக்கு முன்பு பரதவ மக்கள் தங்கள் ஊர் தலைவர்களை பட்டிங்கட்டிகள் என்றே அழைத்து வந்தனர். போர்த்துக்கீஸியரின் ஆளுகைக்குப்பின் போர்த்துக்கீஸியர்கள் புதிய சாதித்தலைமையை உருவாக்கினர். அவற்றை வேம்பாறு முதல் மணப்பாடு வரை வாழ்ந்த பரதவர்கள் ஏற்றுக் கொண்டனர். எனவே தான் அப்பகுதிகள் எழுகடற்றுறை என்றும், சாதிதலைவனார் ஏழூர்கோமகனார் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் பெரியதாழை முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த பரதவர்கள் புதிய சாதித்தலைமையை ஏற்க மறுத்து தங்களின் பழைய உள்ளுர் தலைவர்களான பட்டங்கட்டிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.
இவை மட்டுமின்றி பட்டங்கட்டி என்பது
பரதவ சாதித் தலைவரால் அளிக்கப்படும் உயர்ந்த விருதாகும். சிவப்பு நிறத்தில்
கோடுகள் வரையப்பட்ட துணியினை ஊரில் நன் மதிப்பு பெற்றவருக்கு தலையில் பரதவ சாதித்
தலைவர் அணிவித்து விடுவார். அவர்கள் பட்டங்கட்டிகள் என அழைக்கப்படுவர். சமூக
அந்தஸ்தினைப் பெற்றுள்ள ஊர் பெரியவர்கள் பலரும் இப்பட்டத்தைப் பெறுவர். ஆனால்
கல்வெட்டில் காணப்படும் பட்டங்கட்டி என்பது போர்த்துகீஸியரால் இராமேஸ்வரம் முதல்
வேம்பாறு வரையான கடலோரப் பகுதியை கண்காணிக்கும் உள்நாட்டுத் தலைவராகும்.
அக்காலத்தில் இராமேஸ்வரம் முதல்
கன்னியாகுமரி வரையான கடற்பகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
அவற்றுள் ஒன்றை நிர்வாகிப்பவருக்கு பட்டங்கட்டி என்ற விருதை போர்த்துக்கீஸியர்
வழங்குவர் அவ்வாறு அப்பகுதிகளில் ஒன்றை நிர்வகித்து வந்தவரே நமதூரின் சுவாம் வாசு
அடைப்பனார் ஆவார். இதில் அடைப்பனார் என்பது ஜாதித் தலைவரால் உள்ளுர் நிர்வாகத்தை
கவனிக்க அமைக்கப்பட்ட ஊர் தலைவர் ஆவார். இதன் மூலம் இவர் இரண்டு பொறுப்புகளையும்
நிர்வாகித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இவை மட்டுமின்றி இக்கல்வெட்டு மூலம்
பரதவரில் பட்டங்கட்டி, அடைப்பனார் என்ற பதவிகள் நடைமுறையில்
இருந்ததினை இக்கல்வெட்டு உலகிற்கு தெரியப்படுத்துகிறது.
1568 ல் வேம்பாற்றில் மறைபணியாற்றிய சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் வேம்பாற்றில் வாழ்ந்த பட்டங்கட்டியரை முத்துக்குளித்துறையின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என தம் கடிதம் ஒன்றின் மூலம் புனித இஞ்ஞாசியாருக்கு தெரிவிக்கிறார் என்பதையும் நாம் இங்கு நினைவு கூர்தல் மிகவும் பொறுத்தமானது.
இக்கல்லறைக் கல்வெட்டு வேம்பாறு
பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் மகளும், அம்புறொசு க்கூநுவுடைய பெண்சாதியுமான மரிய த வாசு என்ற பெண்ணின்
கல்லறையின் மேல் அமைந்த கல்வெட்டாகும். இதில் வாசு மற்றும் க்கூநு என்பது பரதவரின்
குடும்பப் பெயர்கள் ஆகும்.
வேம்பாற்றில் அமைக்கப்பட்ட முதல் ஆலயத்தை
அமைக்க வேம்பாறு பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் உதவியை சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் பெற்றிருக்க வேண்டும் எனக் கருத
முடிகிறது. அவ்வாலயமே உரோமையின் ஆலயங்களின் அழகிற்கு சற்றும் குறையாமல் பெரிய
ஆலயமாக அமைந்திருந்தது. அத்துடன் அக்காலத்தில் சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகளே வேம்பாறு, தூத்துக்குடி மற்றும் புன்னக்காயல் பகுதிகளின் பங்குத்தந்தையாகப் பணியாற்றினர். எனவே போதிய குருக்கள் இல்லாததால்
ஊர்தலைவர்கள் மற்றும் கோவில் பிள்ளைகளின்
பொறுப்பிலே ஆலயம் பராமரிக்கப்பட்டது. முத்துக்குளித்துறைக்கு வந்து சேர்ந்த
புனித சவேரியார் இங்குள்ள மக்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். எனவே
போதிய குருக்களை அனுப்புமாறு தம் கடிதத்தில் புனித இஞ்ஞாசியாருக்கு தெரிவிப்பதை
நாம் நினைவு கூர்தல் அவசியமாகும்.
இவற்றின் மூலம் கோயிலின் பராமரிப்பு காரியங்களில் ஈடுபடும் பொறுப்பினைப் பெற்ற
வேம்பாறு பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் மகளை அக்காலத்தில் ஆலய முற்றத்தில்
அடக்கம் செய்திருக்கலாம் (தற்போது குருக்களுக்கு அத்தகைய முக்கியத்துவம்
அளிக்கப்படுவதைப் போல) எனவும், ஆலயம் பழுதடைந்ததும் அக்கற்களைக்
கொண்டே புதிய ஆலயம் அமைக்கப்பட்டதால் அக்கல்வெட்டு அதே இடத்திலே நிலை பெற்று
தற்போதைய இடத்தில் காணப்படுகிறது எனக் கொளல் வேண்டும்.
இவையனைத்தையும் விட வேம்பாற்றில்
நிலவிய சுத்தமான தமிழ் மொழி நடைச் சிறப்பினை அறிய இக்கல்வெட்டு பெரிதும்
உதவுகிறது. இக்கல்வெட்டில் பிற மொழி கலப்பின்றி
அனைத்து எழுத்துகளும் தமிழ் வரி வடிவத்தையே கொண்டுள்ளன. தமிழின் அச்சுத்
தந்கை என அழைக்கப்படும் சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் தாம்
தமிழ் பயின்றது வேம்பாற்றிலே என்பதை தம் கடிதத்தில் தெளிவுபடுத்துகிறார்.
இன்றளவும் சுத்தமான தமிழ் பெயர்கள் வேம்பாற்றில் நிலவி வருவதும் மற்றைய கடற்கரை
ஊர்களைத் தவிர்த்து வேம்பாற்றில் பேசப்படும் பேச்சு வழக்கும் சிறப்பானது என்பது
உள்ளங்கை நெல்லிகனி ஆகும்.
மொழி சீர்திருத்தமானது வீரமா முனிவரால்
அறிமுகம் செய்யப்பட்டது என்ற நோக்கில் காணும் போது 1742-43 ஆகிய இரு வருடங்களில் வேம்பாற்றில் மறைபணி ஆற்றிய வீரமாமுனிவர்
இக்கல்வெட்டிலும் சீர்திருத்தங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என கருத முடிகிறது.
ஏனெனில் அக்காலத்தில் மெய் எழுத்தின் மேல் மெய்ப்புள்ளிகள் இடும் பழக்கம்
தமிழரிடம் காணப்படவில்லை. ஆனால் இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளின் மேல்
மெய்ப்புள்ளிகள் காணப்படுகின்றன.
1537 ல் பரதவர் கத்தோலிக்க மறையைத் தழுவி
இருந்தாலும் தற்காலத்தைப் போல் தங்கள் வாழ்க்கையில் முழுமையாக மத அடையாளங்களை
இணைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வாழ்ந்து இக்கல்வெட்டு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
இக் கல்வெட்டில் பரதவரின் மயில் சின்னம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால்
தூத்துக்குடியில்
காணப்படும் கல்வெட்டில் மயில் சின்னமானது போர்த்துக்கீஸியரின் இலச்சினைக்குள் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளன இது போர்த்துக்கீஸியரின் குடிமக்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. அவற்றுடன் “கிரியேலேசோனும், ஆவே மரியாவும் வேண்டிக் கொள்ளவும்” என்ற வார்த்தைகள் காணப்படுகிறது. அடுத்ததாக வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள கல்வெட்டானது சற்று பிந்தியது. ஆனால் இக்கல்வெட்டில் இருமயில்கள் ஒரு சிலுவையைத் தாங்கிப் பிடித்தவாறு காணப்படுகிறது இதன்மூலம் கிறிஸ்தவம் பரதவருக்குள் உட்புகுத்தப்பட்டுள்ளதை நன்கு அறிய முடிகிறது. ஆனால் நமதூரில் கிறிஸ்தவமும், போர்த்துக்கீஸியரின் ஆளுகையும் நன்கு காணப்படிணும் இக்கல்வெட்டு நமதூர் பரதவர் தம் தனித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்பதைப் பறைசாற்றுகிறது.
காணப்படும் கல்வெட்டில் மயில் சின்னமானது போர்த்துக்கீஸியரின் இலச்சினைக்குள் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளன இது போர்த்துக்கீஸியரின் குடிமக்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. அவற்றுடன் “கிரியேலேசோனும், ஆவே மரியாவும் வேண்டிக் கொள்ளவும்” என்ற வார்த்தைகள் காணப்படுகிறது. அடுத்ததாக வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள கல்வெட்டானது சற்று பிந்தியது. ஆனால் இக்கல்வெட்டில் இருமயில்கள் ஒரு சிலுவையைத் தாங்கிப் பிடித்தவாறு காணப்படுகிறது இதன்மூலம் கிறிஸ்தவம் பரதவருக்குள் உட்புகுத்தப்பட்டுள்ளதை நன்கு அறிய முடிகிறது. ஆனால் நமதூரில் கிறிஸ்தவமும், போர்த்துக்கீஸியரின் ஆளுகையும் நன்கு காணப்படிணும் இக்கல்வெட்டு நமதூர் பரதவர் தம் தனித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்பதைப் பறைசாற்றுகிறது.
தகவல்: திரு. தம்பி ஐயா பர்னாந்து
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து
சங்கதி சொல்லும் கல்வெட்டுக்கள் - 1
Heritage Vembarites
03:04