சூட்சுமம் திறந்த திருமந்திரம்
புலன்களை வசப்படுத்துதல் குறித்த திருமந்திரப் பாடலில் காணலாம்.
"குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவி உள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2031
ஒரு முழம் ஆழமும் அரை முழம் அகலமும் உள்ள ஒரு குளம் (வாவி) உடலில் உள்ளதாம். இந்தக் குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றனவாம். ஒரு மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீச, குளத்தின் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டன. அவற்றின் துள்ளலும் அடங்கிப் போயிற்று என்பதே இப்பாடலின் சுருக்கமான பொருளாகும்.
இதில் குளமாக உருவகம் செய்யப்பட் டுள்ளது நமது முகம் (தலை). நமது தலையின் உச்சியிலிருந்து கழுத்து வரை உள்ள ஆழம் ஒரு முழம். ஒரு காது முதல் மற்றொரு காது வரையுள்ள அகலம் அரை முழம். நமது ஐம்புலன்களே இந்தக் குளத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
நமது மூளையே புலன் இச்சைகள் உருவாகும் இடமாகும். எனவே திருமூலர் "வாவி' என தலையினுள் இருக் கும் மூளையைக் குறிப் பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
வலையை வீசி இந்தப் புலன்கள் எனும் மீன்களைப் பிடிக்கும் மீனவன் பரம்பொரு ளாகிய சிவன். அவனையே "பரவன்' என்று வர்ணிக்கிறார் திருமூலர். எங்கும் நீக்கமற பரந்து நிற்பவனாக இறைவன் இருப்பதால் "பரவன்' என்ற பட்டமும் அவனுக்குப் பொருத்த மானதே.இப்பாடலில் உள்ள சூட்சுமம் என்ன? மனித முயற்சியால் நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நமது புலன்களை நம்மால் முழுமையாக வெற்றிகொள்ள முடியாது. இறைவன் தனது அருள் எனும் வலையை வீசினால் ஒரு நொடிப் பொழுதில் இந்தப் புலன்களின் துடிப்பும் துள்ளலும் நின்று போகும். ஆக, இறையருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதே இப்பாடலில் பொதிந்து நிற்கும் சூட்சுமமான பொருளாகும்.
Thanks: www.nakkheeran.in