வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 22 September 2015

கடற்கரையிலே
கடற்கரையிலே
(இலக்கியக் கட்டுரைகள்)
ரா.பி. சேதுபிள்ளை


Source:
கடற்கரையிலே

ரா. பி. சேதுப்பிள்ளை, B.A., B.L.,
தமிழ்ப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக் கழகம்

பழனியப்பா பிரதர்ஸ்

சேப்பாக்கம் தெப்பக்குளம்
சென்னை - 5. திருச்சிராப்பள்ளி
பரமசிவ நிலையம்,
127, லாயிட்ஸ் ரோட், சென்னை -6.

முதற் பதிப்பு - 1950
ஐந்தாம் பதிப்பு - 1956

Approved by the Madras Text Book Committee. class use Non-detailed Study vide consolidated list F.S.G.G., Page 29, 4-5-'55
விலை ரூ. 1-4-0


முகவுரை கற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந்நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம். விருதைத்‘தமிழ்த் தென்ற’லின் வழியாக வந்த இருபது கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்க இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இந் நூலை வெளியிட்டு உதவிய ‘பழனியப்பா சகோதரர்’கட்கும் எனது நன்றி உரியதாகும்.-
-
சென்னை,-
15-2-’50. ரா.பி. சேதுப்பிள்ளை-
------------------------------------------------------------
-
உள்ளுறை

எண் கட்டுரை - பக்கம்
1. திருவள்ளுவர் .... 1
2. இளங்கோவடிகள் .... 4
3. நக்கீரர் .... 8
4. பரணர் .... 12
5. சாத்தனார் .... 16
6. புனிதவதி .... 20
7. திருநாவுக்கரசர் .... 21
8. திருமங்கை மன்னன் .... 29
9. பட்டினத்தார் .... 34
10. பண்டித சோழன் .... 39
11. கண்டி மன்னன் .... 45
12. கம்பர் .... 51
13. தாயுமானவர் .... 56
14. மார்க்கப்போலர் .... 60
15. ஆனந்தரங்கர் .... 64
16. உமறுப் புலவர் .... 73
17. கால்டுவெல் .... 78
18. பரிதிமாற் கலைஞர் .... 83
19. சிதம்பரனார் .... 88
20. பாரதியார் .... 95

கடற்கரையிலே
(இலக்கியக் கட்டுரைகள்)
ரா.பி. சேதுபிள்ளை

1. திருவள்ளுவர்

கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த நலங்களில் ஒன்று அதன் கடற்கரை யன்றோ?

அங்குள்ள திரு மயிலைக் கடற்கரையில் வேனிற்கால மாலைப் பொழுதிலே வந்து நின்றார் ஒருமேதை. சீலமே உருவாய அப் பெரியார் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும்போ லிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டுப் பெயர்ந்தார் அல்லர் அப் பெரியார்; கடலின்மேல் மண்டிய மேகத்தை நோக்கிப் பேசலுற்றார்:-

"என்னே இம் மேகத்தின் கருனை! சென்னை மாநகரில் அனல் வீசுகின்றது; கேணிகளில் குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், அளவிறந்த தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அன்னாரைத் தடிந்து கொள்ளுதல் தக்கதே யாகும் என்று கருதியன்றோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?

"கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளைகொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; அதனால் உன்னை+ எழிலி என்று அழைத்தனர்.
----------
+ எழில்=அழகு; எழிலி=அழகுடையது (a thing of beauty).

"கைம்மாறு வேண்டாக் கருமுகிலே! உனக்கு மனமுவந்து தன்ணீர் அளித்தால், தனக்கு நலம் உண்டு என்பதை அறியாது போயிற்றே இக் கடல் நீ மழை பெய்யாவிட்டால் இந் நெடுங் கடலும் தன் நீர்மை குன்றுமே! நீ ஆற்று நீராக வந்து கடலைப் பெருக்குகின்றாய்; ஊற்று நீராகப் பொங்கிக் கடலை ஊட்டுகின்றாய்; மழை நீராகப் பொழிந்து கடலை நிறைக்கின்றாய். ஒரு வழியாகக் கொடுத்துப் பல வழியாக வாங்குகின்ற உபாயமும் இக் கடல் அறியா தொழிந்ததே!

"நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்கா தாகி விடின்"

என்று நான் பாடியதை நீ மெய்பித்து விட்டாயே!

"மன்னுயிரை வாழ்விக்கும் மாரியே! உன்னை மனமாரப் போற்றுகின்றேன்; வாயார வாழ்த்துகின்றேன். பாரெல்லாம் புகழும் காரே! வாழி; ஏழுலகேத்தும் எழிலியே! வாழி" என்று வாழ்த்திக் கொண்டு தமது மயிலாப்பூர்க் குடிசையின் உள்ளே புகுந்தார் அம் மேதை. மழை கொட்டிற்று

-----------------------------------------------------------

2. இளங்கோவடிகள்

பாரதநாடு ஒரு பழம் பெரு நாடு. அந் நாட்டின் தென் கோடியாய்த் திகழ்வது குமரி முனை. குமரிக் கரையிலே நின்று கடலைக் காண்பது ஓர் ஆனந்தம். தமிழ் நாட்டுக் குணகடலும் குடகடலும் குதித்தெழுந்து ஒன்றோடொன்று குலாவக் காண்பது குமரிக்கரை. கருமணலும் வெண்மணலும் அடுத்தடுத்து அமைந்து கண்ணுக்கு விருந்தளிப்பதும் அக் கரையே. கன்னித் தமிழும் கவின் மலையாளமும் கலந்து மகிழக் காண்பதும் அக் கரையே.

இத்தகைய குமரிக் கடற்கரையிலே வந்து நின்றார் ஒரு முனிவர். அவர் திருமுகத்திலே தமிழின் ஒளி இளங்கிற்று. நீலத்திரைக் கடலை அவர் நெடிது நோக்கினார். அந் நிலையில் அவருள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது. தண்ணொளி வாய்ந்த அவர் வண்ணத்திருமுகம் வாட்டமுற்றது; கண் கலங்கிக் கண்ணீர் பொங்கிற்று. தழுதழுத்த குரலிலே அவர் பேசத் தொடங்கினார்:-

"ஆ! குமரிக் கடலே! உன்னைக் காணும்போது என் நெஞ்சம் குமுறுகின்றதே! உன் காற்றால் என் உடல் கொதிக்கின்றதே! அந்தோ! அலை கடலே! எங்கள் அருமைத் தமிழ்நாடு உனக்கு என்ன தீங்கு செய்தது? எங்கள் தாய்மொழியைப் போற்றி வளர்த்த பாண்டியன் உனக்கு என்ன பிழை சொய்தான்? தமிழ் நாட்டு மூவேந்தருள் எமது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை முன்னின்று ஆதரித்தவன் அவனே என்பதை நீ அறியாய் போலும்; கண்ணும் ஆவியுமாகத் தமிழ் அன்னையைப் பொற்றினானே அம் மன்னன்! பழந் தமிழைப் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்து பசுந்தமிழ் ஆக்கினானே! அவன் புகழை அறிந்து நீ அழுக்காறு கொண்டயோ? அன்றி, உன் முத்துச் செல்வத்தை அவன் வளைத்து வாரிக்கொண்டான் என்று வன்கண்மை யுற்றாயோ?

"கடுமை வாய்ந்த கருங்கடலே! மண்ணாசை உன்னையும் விட்டபாடில்லையே! மண்ணைத் தின்று தான் தீரவேண்டுமென்றால், பண்பு வாய்ந்த எங்கள் பாண்டிநாடுதானா உன் கண்ணிலே பட்டது? விலங்கினம் போன்ற வீணர் வாழும் நாடுகளை நீ விழுங்க லாகாதா? நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் தீயவர் நாட்டை நீ தின்று ஒழித்த லாகாதா? பிற நாட்டாரது உரிமையைக் கவர்ந்து, அவரை அடிமை கொள்ளும் பேராசைப் பேயர்கள் வாழும் நாட்டைப் பிடித்து உண்ண லாகாதா? நிறத் திமிர் கொண்டு அறத்தை வேரறுக்கும் வெறியர் வாழும் நாட்டை நீ அழித்து முடித்த லாகாதா? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பரந்த உண்மையைப் பறைசாற்றிய எங்கள் தமிழ் நாடா உன் மனத்தை உறுத்தியது? மன்னுயிரை யெல்லாம் தம்முயிர்போல் கருதிய முனிவரும் மன்னரும் வாழ்ந்த எங்கள் தமிழகமா உன் கருத்தை வருத்தியது? நாடி வந்தவர்க்கெல்லாம் நாடளித்து, வாடி வந்தவர்க்கெல்லாம் விருந்தளித்து அறநெறியில் நின்ற எங்கள் அருமைத் திருநாடா உன் பேய்ப்பசிக்கு இரையாக வேண்டும்?

"பொல்லாக் கடலே! தென்னவனுக் குரிய எத்தனை ஊர்களைத் தின்றுவிட்டாய்! எத்தனை ஆறுகளைக் குடித்து விட்டாய்! எத்தனை மலைகளை விழுங்கி விட்டாய்! பழங்காலத்தில் பஃறுளி (பல்துளி) என்ற ஆறு பாண்டியனுக்கு உரியதாயிருந்ததென்று தமிழ்க் கவிதை கூறுகின்றதே! அந்த ஆற்றின் அழகைச் சங்கப் புலவராகிய நெட்டிமையார் பாடினாரே! அந்த ஆறெங்கே? அதன் பரந்த மணல் எங்கே? அவ் வாற்றைக் கொள்ளை கொண்ட உன் கொடுமையை அறிந்து, கண்ணீர் வடித்தானே எங்கள் பாண்டியன்! அன்று அவன் அழுத குரல், இன்றும் உன் காற்றின் வழி வந்து என் காதில் விழுகின்றதே! இம்மட்டோ உன் கொடுமை? எங்கள் பழந்தமிழ் நாட்டின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாற்றையும் குடித்து விட்டாயே! 'தமிழகத்தின் வடக்கு எல்லை திருவேங்கடம், தெற்கு எல்லை குமரியாறு' என்று பனம்பாரனார் பாடினாரே! அக் குமரியாறு எங்கே? 'தமிழ் கூறும் நல்லுலகத்தின்' எல்லையாக நின்ற அந்த ஆற்றையும் கொள்ளை கொண்டு எங்கள் வரம்பழித்து விட்டாயே! பஃறுளி யாற்றுக்கும் குமரி யாற்றுக்கும் இடையே அமைந்த நாடு நகரங்கள் எல்லாம், இருந்த இடந் தெரியாமல் உன் கொடு மையால் கரைந்து ஒழிந்தனவே! அந் நிலப்பரப்பில், அடுக்கடுக்காக உயர்ந்து ஓங்கி நின்ற குமரி என்னும் பெருமலையும் உன் பாழும் வயிற்றில் பட்டு ஒழிந்ததே! ஐயோ! நீ எங்கள் மண்ணைக்கடித்தாய்; ஆற்றைக் குடித்தாய்; மலையை முடித்தாய் இப்படி எல்லாவற்றையும் வாரி எடுத்து வயிற்றில் அடக்கும் உன்னை 'வாரி' என்று அழைப்பது சாலவும் பொருந்தும்! நீ வாரி உண்டாய்! நீங்காத வசையே கொண்டாய். உன் கொடுமையால் தமிழ் நாடு குறுகிற்று; என் உள்ளம் உருகிற்று.

+ " நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு"

என்று குறுகிய தமிழ் நாட்டைப் பாடியபொழுது என் மனம் என்ன பாடு பட்டது என்பதை நீ அறிவாயோ?

"நெடுங்கடலே! செந்தமிழ் நாட்டைக் கொள்ளை கொண்டமையால் நீ கொடுங்கடல் ஆயினாய்! உன் கொடுமையால் நாடிழந்த பாண்டியன் வடதிசையிலுள்ள கங்கையும் இமயமும் கொண்டு வசையொழிய வாழ்ந்தான். உன்னைத் தூற்றுவேன்; அம்மன்னனைப் போற்றுவேன்.

++ "வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"
++ சிலப்பதிகாரம்: காடுகாண் காதை.

என்று வாழ்த்திக்கொண்டு கடற்கரையை விட்டு அகன்றார் அம் முனிவர்.

+ நெடியோன் குன்றம் = திருவேங்கடமலை.
தொடியோள் பௌவம் = குமரிக்கடல்.
- சிலப்பதிகாரம்:வேனிற்காதை

-----------------------------------------------------------

3. நக்கீரர்

தென்பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தெய்வ மணங் கமழ்ந்து திகழ்வது செந்தில் என்னும் திருச்செந்தூர். அங்கு அலை பாட மயில் ஆடும்; அகம் உருக அருள் பெருகும். ஒரு நாள் காலைப் பொழுதிலே அக் கடற்கரையில் வந்து நின்றார் நற்றமிழ் வல்ல நக்கீரர். தமிழ் ஆர்வம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. திருச்சீர் அலைவாய் என்ற ஆலயத்தின் அருகே நின்று அவர் பேசலுற்றார்:-

"அருந்தமிழ்க் கடலே! உன்னைக் காணப் பெறாது பன்னாள் வருந்தினேன். ஆயினும், எந்நாளும் உன்னை மறந்தறியேன். ஐந்தாறு நாளைக்கு முன்னே உன் பெருமையை ஒரு பழைய ஏட்டிலே கண்டேன்; ஆனந்தம் கொண்டேன். உன் அலைகளின் அழகும், அலைவாயில் அமைந்த ஆலயத்தின் சிறப்பும், ஆலயத்தை யடுத்த மணல் மேட்டின் மாண்பும் எத்துணை அருமையாக ஒரு பாட்டிலே படம் எடுத்துக் காட்டப்படுகின்றன! அப் பாட்டின் நயங்களைச் சங்கப் புலவரும் பாராட்டினர். மதுரைமா நகரில் அரசு புரிந்த நன்மாறன் என்ற பாண்டியனை வாழ்த்துவது அப் பாட்டு. 'நன் மாறனே! நீ பல்லாண்டு வாழ்க. கந்தவேள் வீற்றிருக்கும் செந்திலம்பதியில் உள்ள மேட்டு மணலினும் பலவாக நின் வாழ்நாள் நிறைக' என்று வாழ்த்தினான் இளநாகன். அவன் மதுரைப் புலவன்; மதுர மொழியன். அவன் + பாட்டைக் கேட்டிருப்பாய் கடலே!

"செந்தில் ஆழியே! உன்னைக் கண்டோர் எல்லாம் - உன் காற்றை உண்டோர் எல்லாம் - உன்னைப் பாராட்டிப் போற்றினர். குமரிக் கடல்போல் நீ கொடுங் கடல் அல்லை; உன் கரையில் நின்று குமுறினார் எவரும் இல்லை. தமிழகத்தில் உள்ள கடற்கரையூர்களை யெல்லாம் நான் கண்குளிரக் கண்டுள்ளேன். பட்டினம் என்று புகழ் பெற்ற காவிரிப்பூம் பட்டினத்தின் கடற்கரையை நான் அறிவேன். அங்கு மலை போன்ற மரக்கலங்கள் அலைகடலில் நீந்தி வருதலும் போதலும் ஆனந்தமான காட்சியே. ஆயினும், அக் கரையில் எப்போதும் ஆரவாரம்! அல்லும் பகலும் ஓயாத பண்டமாற்று! அமைதியை நாடுவார்க்கு அக் கடற்கரையில் இடமில்லை. எம் மருங்கும் வணிகர் கூட்டம்; பொருளே அவர் நாட்டம். உன்னிடம் ஆரவாரம் இல்லை; அமைதி உண்டு. பரபரப்பு இல்லை; பண்பாடு உண்டு. மரக்கலத்தால் வரும் பொருட் செல்வம் இல்லை; அதனினும் மேலாய அருட்செல்வம் உண்டு.

+ "வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
... ... ... ...
நீ நீடு வாழியே, நெடுந்தகை! தாழ்நீர்
வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுவாழ் எக்கர் மணலினும் பலவே."
- புறநானூறு 55.

"காண இனிய கருங்கடலே! அதோ! கிழக்கு வெளுக்கின்றது. நீல வானமும் நீயும் கூடுகின்ற குணதிசையில் செங்கதிரோன் ஒளிவீசி எழுகின்றான். அக் காட்சியைக் கண்டு குயில்கள் பாடுகின்றன; மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. ஆடும் மயில்களின் கோலம் என் கண்ணைக் கவர்கின்றதே! அணி அணியாக இம் மயில்கள் எல்லாம் கிழக்கு நோக்கி ஆடுகின்றனவே! அதன் கருத்தென்ன? செங்கதிர்ச் செல்வன் - ஞாலம் போற்றும் ஞாயிறு - உதிக்கும் அழகைக் கண்டு அவை குதிக்கின்றனவா?

"நீல நெடுங்கடலே! உன் + தொடுவானில் உதிக்கின்ற செஞ்சுடரைக் காணும்பொழுது, ++ ஆடும் மயிலில் எழுந்தருளும் முருகன் திருக்கோலம் என் கண்ணெதிரே மிளிர்கின்றது. என்னையாளும் ஐயனை- செய்யனை-செந்திற் பெருமானைப் பாடவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கின்றது. ஆயினும், பார்க்குமிடம் எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எப்படித் தமியேன் பாடுவேன்? ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியை எங்ஙனம் சொல்லோவியமாக எழுதிக் காட்டுவேன்? உயிர்க் குயிராய் நின்று உலகத்தை இயக்கும் உயரிய கருணையை எவ்வாறு சொற்களால் உணர்த்துவேன்? அவன்ஆட்டுவித்தால் உலகம் ஆடும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இத்தகைய இறைவனாகிய முருகனை ஏழையேன் என் சொல்லி ஏத்துவேன்?

+ தொடுவான் - Horizon
++ "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி"
- திருமுருகாற்றுப்படை.

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே"

என்று என் அத்தனை நித்தலும் கைதொழுவேன்.

"அலைவாயில் அமர்ந்தருளும் அண்ணலே! செந்திலம்பதியைப் படைவீடாகக் கொண்ட கந்தப் பெருமானே! உன்னைக் கலியுக வரதன் என்பார்; கடற்கரை யாண்டி என்பார்; அரந்தை கெடுத்து வரந்தரும் ஆண்டவன் என்பார்; செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை என்பார்; இன்று போலவே என்றும், எம்பெருமானே! கடற்கரையில் நின்று நின் அடியாரைக் காத்தருளல் வேண்டும். தமிழ் மக்களெல்லாம் நின் அடைக்கலம்" என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கடற்கரையை விட்டகன்றார் நக்கீரர்.

-----------------------------------------------------------

4. பரணர்

சேர நாட்டின் பழைய துறைமுக நகரம் முசிறிப் பட்டினம். பேரியாறு கடலிற் பாயும் இடத்தில் பெருமையுற்று விளங்கிய அந் நகரம் சேரநாட்டின் திருமுகம்போல் இலங்கிற்று. செங்குட்டுவன் என்ற சேரமன்னன் அரசு வீற்றிருந்தபோது, சீரும் சிறப்பும் வாய்ந்திருந்த முசிறிக் கடற்கரையிலே வந்து நின்றார் பரணர் என்ற நல்லிசைக் கவிஞர். அப்புலவர் பெருமானை மெல்லிய பூங்காற்றால் வரவேற்று, திரைக் கரத்தால் தொழுது நின்றது முசிறிக் கடல். அது கண்டு இன்புற்ற பரணர் ஆர்வத்தோடு பேசலுற்றார்:-

"சேர நாட்டுச் செல்வமே! உன் சீர்மை கண்டு சிந்தை குளிர்ந்தேன். மலை வளமும் அலை வளமும் பெற்ற இந் நாடு உன்னாலன்றோ தலைசிறந்து விளங்குகின்றது? நறுமலரை நாடிவரும் வண்டினம் போல், உன் துறைமுகத்தை நோக்கிவரும் பல நாட்டுக் கப்பல்களைக் கண்குளிரக் காண்கின்றேன்.

"குடகடலின் கோமானே! உன் பெருமையெல்லாம் சேரமன்னன் பெருமையன்றோ? எங்கும் புகழ் பெற்ற செங்குட்டுவன் உன்னைக் கண்ணெனக் கருதிக் காக்கின்றான். அவன், செம்மை சான்ற வீரன்; வெம்மை வாய்ந்த வேந்தன். அடிபணிந்த அரசரை ஆதரிப்பான்; மாறுபட்ட மன்னரைக் கீறி எறிவான்; தமிழகத்தைப் பழித்தவர் வாயைக் கிழித்திடுவான். இத்தகைய மான வீரனை மன்னனாக உடைய உனக்கு என்ன குறை?

"வளமார்ந்த துறைமுகமே! உன் கடற்கரையில் சேர நாட்டுச் செல்வம் எல்லாம் சேர்ந்து குவிந்து சிறந்த காட்சி தருகின்றதே! மலைவளம் உடைய சேர நாட்டுக்கு மலையாளம் என்ற பெயர் எத்துனைப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது? மலைசார்ந்த நாடுகள் இம் மாநிலத்தில் எத்தனையோ உள்ளன! அவை இத்தகைய சிறப்புப் பெயர் பெற்றனவா? பாரிலுள்ள மலையெல்லாம் சேரநாட்டு மலையாகுமா? எத்தனை நாடுகளில் எரிமலை யிருந்து ஏக்கம் தருகின்றது! எத்தனை நாடுகளை மலைத்தொடர் நட்ட நடுப்பெற நின்று வெட்டிப் பிரிக்கின்றது! இத் தரணியிலே தலைகாய்ந்த தட்டை மலைகள் எத்தனை! முடி சாய்ந்த மொட்டை மலைகள் எத்தனை! இவை யெல்லாம் மலையென்று சொல்லத்தகுமா? தெள்ளு தமிழ் வள்ளுவனார் கூறியாங்கு, 'வாய்ந்த மலை' யன்றோ நாட்டுக்கு வேண்டும்? அத்தகைய மலைக்கு ஒரு சான்றாக நிற்பது இச்சேர நாட்டு மலை. கோங்கும் வேங்கையும் ஓங்கி வளர்ந்து, ஆரமும் அகிலும் அடர்ந்து செறிந்து, மாமுகில் தவழும் வளமலை யன்றோ மலையாள நாட்டு மலை? மேலைப்பெருங் கடலின் வழியாக வரும் மாரிக் காற்றைத் தலையாலே வரவேற்று மழை பொழியச் செய்யும் மலையன்றோ இந் நாட்டு மலை? இம்மலையிலே பிறந்து, முசிறிக் கடலிலே கலந்து மகிழும் பேரியாற்றின் அழகுதான் என்னே! அந் நதி திருமாலின் மார்பிலே திகழும் ஆரம் போன்றது என்று அழகுறப் பாடினாரே இளங்கோவடிகள்! அவர் புகழ்மாலை பெற்ற பேரியாறு நெடுமலையைக் கடந்து, சேர நாட்டின் வழியாக நடந்து, கடலிலே பரந்து பாய்கின்ற காட்சியை இன்று கண்டேன்; கண் குளிர்ந்தேன்!

"பார் அறிந்த பெருந்துறையே! இந்த ஆற்றங்கரையிலும், அலைகடல் ஓரத்திலும் அடுக்கடுக்காக மிளகு மூட்டைகள் மிடைந்து கிடக்கின்றன. கடற்கரையெங்கும் மிளகு மணம் கமழ்கின்றது. இம் மிளகின் சுவைகண்ட மேலைநாட்டார் உன் துறைமுகத்தில் வந்து மொய்க்கின்றார்கள்; சேர நாட்டாருடன் வேற்றுமையின்றிக் கலந்து வாழ்கின்றார்கள்; பண்ட மாற்றுக்கு வேண்டும் அளவு இந் நாட்டு மொழியைக் கற்றுக்கொள்கின்றார்கள்; கட்டி கட்டியாகச் செம் பொன்னைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்; கப்பல் கப்பலாக மிளகை ஏற்றிச் செல்கின்றார்கள்; கருமையான மிளகு, மேலைநாட்டுச் செம்பொன்னை இந் நாட்டிற்குக் கொணர்ந்து சேர்ப்பது அருமை வாய்ந்ததன்றோ?

"கரவறியாத் துறைமுகமே! பண்டமாற்றுச் செய்யும் முறையில் பொய்யும் புனைசுருட்டும் எந் நாளும் இந் நாட்டாரிடம் இல்லை. வாணிகம் செய்வ தில் முசிறியார் ஒருபோதும் மிகைபடக் கொள்ளார்; குறைபடக்கொடார். குட்ட நாட்டில் விளையும் மிளகு, மேலைநாட்டு யவனர்க்கு மெத்த இனிய பொருள். அதைக் கண்டால் அன்னார் கொட்டமடித்து வாரிக் கொள்கின்றார்கள்; கேட்ட விலையைக் கொடுக்கின் றார்கள். அந்த மிளகிலே அவ்வளவு தேட்டம்! ஆயினும், வெள்ளையர் நாவில் குட்டநாடு என்ற சொல் திட்டவட்டமாக வருவதில்லை. அதைக் "கொத்தநாரு" என்று அவர் சொத்தையாகச் சொல்லுவர். தென் மொழியில் உள்ள டகரம் அவர் நாவில் ஒருபோதும் சரியாக வராது. முசிறிக் கடற்கரையிலே அவர் குழறும் தமிழைக் கேட்பதும் ஒருவகை இன்பந்தான்! 

"செல்வத் துறைமுகமே! உன் கடற்கரையிலே செந்தமிழ் சிதைந்து வழங்கினாலும் பழுதில்லை. உன் நாடு பொன்னாடு ஆவது கண்டு என் உள்ளம் குளிர் கின்றது. பொன்னுடையான் சேரன்; புகழுடையான் சேரன்; அம் மன்னன் நீடூழி வாழ்க+ என்று செங்குட்டுவனை வாயார வாழ்த்தி விடைகொண்டார் பரணர்

+ "மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கு யாவும்
பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி'

-----------------------------------------------------------

5. சாத்தனார்

சோழ நாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் முன்னொரு காலத்தில் உலகறிந்த பெரு நகரம். கண்ணகி யென்னும் வீரமா பத்தினியைத் தமிழ் நாட்டுக்குத் தந்த திருநகரம் அதுவே. அந் நகரின் அழகிய கடற் கடற்கரையை வந்தடைந்தார் மணிமேகலை ஆசிரியராகிய சாத்தனார். அலை அலையாகப் பல எண்ணங்கள் அவர் உள்ளத்தில் எழுந்தன. பெருங்கடலை நோக்கி அவர் பேசலுற்றார்:-

"சோழ நாட்டுச் செழுங்கடலே! கங்கையினும் சிறந்த காவிரியாற்றின் நீரால் நீ நாளும் புனிதமடைகின்றாய். குடமலையிலே பிறந்து, கருநாட்டிலே தவழ்ந்து, தமிழ்த் திருநாட்டிலே நடந்து, உன்னை நோக்கி விரைந்து வரும் காவிரியைப் புகழாத கவி ஞரும் உளரோ? அந்த ஆற்று முகத்திலே வீற்றிருப் பது நின் அருமைத் திரு நகரம். இந்நகரின் அழகைக் கண்ணாற் பருகிக் களிப்புற்ற அறிஞர் +காவிரிப் பூம் பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் அழைத்தார்களே!
-----------------------------------------
+பூ-அழகு : பூம்பட்டினம்-The city beautiful

"பாடல் பெற்ற பட்டினமே! உன் அழகுக்கு அழகு செய்தான் திருமாவளவன் என்னும் சோழ மன்னன். இந் நாட்டை யாண்ட ஆதியரசர்களில் தலை சிறந்தவன் அவனே; தமிழகத்திற்கு ஏற்றமும் தோற்றமும் அளித்த ஏந்தல் அவனே;ஈழ நாட் டைச் சோழ நாட்டோடு இணைத்த வீரன் அவனே."

இங்ஙனம் திக்கெலாம் புகழ் பெற்று விளங்கிய திருமாவளவன் உன் அருமையும் பெருமையும் அறிந்தான்; காவிரி நாட்டுக்கு நீயே உயிர் என்பதை உணர்ந்தான்; கண்ணினைக் காக்கின்ற இமைபோல் உன் நலத்தினைக் காக்க முற்பட்டான். மன்னவனே முன்னின்றால் முடியாத தொன்று உண்டோ? அன்று முதல் நீயே சோழ நாட்டின் தலைநகரம் ஆயினாய்! அளவிறந்த பொன்னும் பொருளும் செலவிட்டு உன்னைப் புதுக்கினான் அம்மாநில மன்னன். காவிரியின் வண்டல் படிந்து தூர்ந்திருந்த உன் துறைமுகத்தைத் திருத்தினான்; பெருக்கினான்; ஆழமாக்கினான். அதனால் + கயவாய் என்ற பெயர் இத் துறைமுகத்திற்கு அமைந்தது. தட்டுத் தடையின்றி எட்டுத் திசையினின்றும் வணிகர் இங்குக் குடியேறி வாழத் தலைப்பட்டார். வந்தவர்க்கெல்லாம் நீ வீடு தந்தாய். நிற வேற்றுமையையும் பிற வேற்றுமையையும் பாராது வஞ்சமற்ற மாந்தரை யெல்லாம் நீ வரவேற்றாய். சீனகரும் சோனகரும் உன் கயவாயின் அருகே மணிமாட மாளிகை கட்டி வாழ்வாராயினர். இவ் வழகிய கடற்கரையிலே தாழைவேலி சூழ்ந்த ஏழடுக்கு மாடங்கள் எத்தனை! கண்டோர் வியப்புற வானளாவி நிற்கும் பண்ட சாலைகள் எத்தனை!

+ "கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"
*சிலப்பதிகாரம் இந்திர விழவு எடுத்த காதை* 

"பூம்புகார்த் துறையே! அல்லும் பகலும் நின் அருமைத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்கள் நீந்தி வரும் காட்சியைக் கண்டு கண் குளிர்ந்தேன். அந்த மாலை வந்தெய்து முன்னரே கடற்கரை யெங்கும் தீ நா விளக்குகள் திகழ்கின்றன. துறைமுகத்தின் அருகே ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம் காட்சி தருகின்றது. 'கலங்கரை விளக்கம்' என்ற சொல்லின் அழகுதான் என்னே! 'கருங் கடலில் நீந்தி வரும் கப்பல்களை நெறிகாட்டி அழைக்கும் விளக்கு' என்ற அருமையான பொருளை யுடையதன்றோ அச்சொல்? 'தன்னை நோக்கித் தவழந்து வரும் குழந்தையை முகமலரந்து, கைநீட்டி அழைக்கும் தாய் போல, இருட்டிலே கருங் கடலில் மிதந்து வரும் கப்பல்களை ஒளிக் கரத்தால் வரவழைக்கும் விளக்கு' என்ற அழகிய கருத்தன்றோ அச் சொல்லில் அமைந்திருக் கின்றது? கடற்கரையில் உள்ள அவ் விளக்கைக் காண்பது கண்ணுக்கு இன்பம். அதன் பெயரைக் கேட்பது காதுக்கு இன்பம். இவ் விருவகை இன்பத்தையும் நுகர்ந்தன்றோ இளங்கோவடிகள் 'இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கம்' என்று உளங்குளிர்ந்து பாடினார்? அவர் ஆசைபற்றிப் பாடிய பாட்டின் ஓசை நயம் உணராத செவி என்ன செவியே? 

"வளமார்ந்த துறைமுகமே! இந்நானிலத்தில் உள்ள நானாவிதப் பொருள்களும் நீரின் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் உன் +அங்காடியில் வந்து நிறைகின்றனவே! வடமலையிற் பிறந்த பொன்னும் மணியும், குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குணகடற் பவளமும், சேரநாட்டு மிளகும், சோழநாட்டு நெல்லும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் உன் அங்காடி யெங்கும் நிறைந் திருக்கின்றன. பசியும் பிணியும் பகையும் இன்றி, பண்பும் பயனும் உடையராய்க் குடிகள் வாழ்கின்றார் கள். இதுவன்றோ வாழ்வு?
------------------
+அங்காடி= பசார்(Bazaar)

"தலைசிறந்த திரு நகரே! நீ அருளுடையாய்; பொருளுடையாய்; அழகுடையாய்; புலவர் பாடும் புகழுடையாய். நின் சீரும் சிறப்பும் பாடித் திருமா வளவன் கையாற் பரிசு பெற்றான் கடியலூர்க் கண்ணன். பட்டினப்பாலை என்னும் பெயரால் அவன் பாடிய பாட்டிலே செந்தமிழ்ச்சுவை சொட்டுகின்றது. தமிழ்த்தாய் உன்னை வாழ்த்துகின்றாள். அவளருளால் வாழும் அடியேனும் உன்னைப் போற்றுகின்றேன். கண்ணகியை ஈன்ற காவிரிப்பூம் பட்டினமே! வாழி; ஆற்று முகத்தில் வீற்றிருக்கும் அணி நகரே! வாழி; நாட்டையும் நகரையும் ஊட்டி வளர்க்கும் காவிரித் தாயே! வாழி வாழ்க; வாழ்க" என்று வாழ்த்திய வாயினராய்க் காவிரியைத் தொழுத கையினராய்க் கடற்கரையை விட்டகன்றார் சாத்தனார்

"பாடல்சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
+ மணிமேகலை: பதிகம்

-----------------------------------------------------------

6. புனிதவதி

தமிழ்நாட்டிலே காரைக்காலின் பெருமை யாரைக் கேட்டாலும் தெரியும். வாணிகத்தால் வளம் பெற்ற காரைக்கால், புனிதவதி பிறந்தமையால் புனித முற்றது. காரைக்கால் அம்மையார் என்னும் செம்மை சேர் நாமம் பெற்றவர் அவரே! அவ்வம்மையார் கருவிலே திருவுடையார்; கனிந்த திருவருளுடையார்; நாவிலே தமிழுடையார்; நற்றவத்தின் திறமுடையார்.

அவர் சில காலம் இல்லறம் நடத்தினார். ஒரு நாள், அவரிடம் அமைந்திருந்த தெய்வத்தன்மையைக் கண்டான் அவர் கணவன்; துணுக்கம் கொண்டான். வணங்கத் தக்க தெய்வத்தை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மனையறம் புரிய அவன் மனம் இசைய வில்லை. கடல் கடந்து வாணிகம் செய்து வருவதாகச் சொல்லிக் காரைத் துறைமுகத்தில் அவன் கப்பலேறினான். மாதங்கள் பல சென்றன. ஆண்டுகளும் சில கழிந்தன. கணவன் திரும்பி வரக் காணது கையற வெய்திய காரைக்கால் அம்மையார் ஒரு நாள் கடற்கரையிலே நின்று உள்ளம் உருகிப் பேசலுற்றார்:-

"காரைப் பெருங்கடலே! நான் கண் பெற்ற கால முதல் நீ காட்சி தருகின்றாய். குழந்தைப் பருவத்தில் உன் தெள்ளிய மணலிலே தவழ்ந்து விளையாடினேன்; உன் அலைகளோடு உறவாடினேன்; இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றேன்; உன் துறைமுகத்தில் கப்பல் களைக் கண்டு களிப்புற்றேன். கரை காணாக் கருங் கடலே! ஆயினும், இப்பொழுது உன்னைக் கண்டு அஞ்சுகின்றது என் நெஞ்சம். ஆற்றாமையால் அலமருகின்றது என் உள்ளம். 'என் கணவர் - மாசற்ற மணாளர் - வாணிகம் செய்து வருவேன்' என்று சொல்லி உன் துறைமுகத்தில் வங்கமேறிச் சென்றார்; 'நெடுநிதி கொணர்வேன்' என்று நெடுங்கட லோடினார். ஆண்டு பல சென்றன. அவர் எங்குள்ளார் என்று அறியாது பாவியேன் ஏங்கித் தவிக்கின்றேன். 'அவர் ஏறிச் சென்ற கப்பல் என்னாயிற்றோ? இதுகாறும் அவர் வாராத காரணந்தான் யாதோ?' என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகின்றதே!

"நேச நெடுங்கடலே! என் கணவர் சென்ற வழிமேல் விழிவைத்து எத்தனை மாதமாகக் காத்திருக் கின்றேன்! வருகின்ற கப்பலை யெல்லாம் வாஞ்சை யோடு நோக்குகின்றேன். அந்தோ! ஒவ்வொரு நாளும் நான் படும் துயரத்தை யாரிடம் சொல்வேன்? கொண்ட கணவர்க்குத் தொண்டு செய்யும் உரிமை இழந்தேன்; தொல்லை வினையால் துயர் உழந்தேன்.

"அருமை சான்ற ஆழியே! உன்னையே தஞ்சமாக அடைந்தேன். வஞ்சம் ஒன்றும் அறியாத என் கணவர் வாழுமிடத்தைக் காட்டாயா? அஞ்சேல் என்று அருள் செய்யமாட்டாயா? முந்நீர் கடந்து வரும் மெல்லிய காற்றே! நீயேனும் ஒரு மாற்றம் உரையாயோ? பன்னாள் உன்னொடு பழகினேனே! அப்பான்மையை மறக்கலாமா? நட்டாரைக் கை விடுதல் நன்றாகுமா? ஐயோ! ஓர் உயிர்க்கும் நான் தீங்கு நினைத்தறியேனே. எனக்கு ஏன் இந்த இடர் வந்தது?

"அறவாழி அந்தணனே! நின்னை அறக்கடல் என்று ஆன்றோர் பாடினரே; அருட்கடல் என்று அறிந்தோர் போற்றினரே. இக் காரைக் கடலினும் பெரிதன்றோ நின் கருணைக் கடல்? கங்கு கரையின்றி எங்கும் நிறைந்த கருணையங் கடல் நீயே யன்றோ? மன்னுயிரை யெல்லாம் காத்தளிக்கும் அருங் கருணையால் அன்றோ அந்நாள் கடலினின்று எழுந்த பெரு நஞ்சை அள்ளி உண்டாய்? கண்டம் கறுத்தாய்; நீலகண்டன் என்ற பெயர் பெற்றாய். அண்டத்தை யெல்லாம் காக்கின்ற அருளின் அடையாளமன்றோ நின் கண்டத்தின் கருமை? அக் கருமையின் பெருமையை நினைத்து அடியேன் உருகுகின்றேனே!

"பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறம்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்"

எம்பெருமானே! நான் அறிவறிந்த காலமுதல் நின்னை நினையாத நாள் உண்டோ? அன்பு மொழிகளால் வாழ்த்தாத நாள் உண்டோ? அடங்கிப் பணிந்து வணங்காத நாள் உண்டோ? என்றும் நின் திருவடியே சரணமெனக் கொண்டேன். எல்லாம் உன் செயலே என்றுணர்ந்தேன். இவ்வாறு வளர்ந்து வந்த என்னை நீயே இல்லறத்தில் உய்த்தாய்; நாகையில் உள்ள நல்லார் ஒருவருக்கு இல்லாளாய இருக்க வைத்தாய்; இல்லறத்தில் பொருத்திய நீயே பின்பு என் கணவரைப் பிரித்துவிட்டாயே! ஐயனே! இதுவும் உன் திருவிளையாட்டோ? அல்லும் பகலும் உன்னையே நினைந்துருகும் அடியார்க்கு இத் தகைய துன்பம் வரலாகுமோ? தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை யென்பது மறைமொழி யன்றோ?

"கண்ணுதற் பெருங் கடவுளே! காரைக் கருங் கடலைக் காலையும் மாலையும் நோக்கிக் கன்ணீர் வடிக் கின்றேனே! என் துயரைக் கண்டு உற்றார் எல்லாம் உருகுகின்றனரே! மனையறமும் மறுகுகின்றதே! செம்மேனி எம்மானே! என் மனக் கவலையை மாற்றல் உனக்கு அரிதோ? அடியாரது அல்லல் தீர்பது ஆண்டவன் கடன் அன்றோ? என் செயலாவது இனி யாதொன்றுமில்லை, ஈசனே!

"காரைத் துறைமுகமே! இனி யான் உன் திருமுகத்தைப் பாரேன். பார்த்துப் பார்த்துப் பதங் குலைந்தது போதும். இறைமுகம் நோக்கிய எனக்கு உன் துறைமுகத்தில் இன்னும் என்ன வேலை? இன்றே என் பந்த பாசமெல்லாம் ஒழித்தேன்; மாயப் பிறப்பறுக்கும் மெய்ப் பொருளைச் சேர்ந்தேன்; என்றும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்று கட்டுரைத்துக் கடற்கரையை விட்டுக் காற்றினும் கடிது சென்றார் காரைக்கால் அம்மையார்.

-----------------------------
7. திருநாவுக்கரசர்

தமிழ் நாட்டில் ஈசனுக்குரிய கோயில் ஈச்சுரம் என்று வழங்கப் பெறும். முன்னாளில் மன்னரும் முனிவரும் பல ஈச்சுரங்கள் எடுத்தனர். பல்லவ மன்னன் ஒருவன் எடுத்த திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும் அகத்திய முனிவன் எடுத்த ஆலயம் அகத்தீச்சுரம் எனவும் வழங்குதலால் இவ் வுண்மை விளங்கும். இத் தகைய ஈச்சுரங்களை யெல்லாம் முறையாக வணங்க ஆசைப் பட்டார் திருநாவுக்கரசர். அவ்வாசையால் தமிழகத்திலுள்ள ஈச்சுரங்களைத் தொகுத்து ஒரு திருப்பாசுரம்+ பாடினார்: 

+ "நாடக மாடிடம் நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம்,
நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கான
கேடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்,
குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,
அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி
இறைவன் உறைசுரம் பலவும் இயம்பு வோமே"
- அடைவு திருத்தாண்டகம்

அப்பாட்டில் அமைந்த திருக்கோயில்களை ஒன்றன் பின் ஒன்றாக வணங்கிப் பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுவரத்தை வந்தடைந்தார்; கோடிக்கரையில் நீராடி அக் கோயிலைத் தொழுதல் முறையாதலால் கடற்கரைக்குச் சென்றார்; தென்முகமாக நின்றார் அவர், தூய வெண்ணீறு துதைந்த மேனியர்; மாசற இமைக்கும் உருவினர்; ஈசனார் புகழைப் பேசாத நாளெல் லாம் பிறவா நாளே என்று கருதும் பெற்றியர். இத் தன்மை வாய்ந்த பெரியார் கோடிக் கரையிலே நின்று பேசலுற்றார்:-

"ஆ! கோடிக்கடலே! பாண்டிநாட்டின் ஒரு கோடியில் நின்று பாரத நாட்டுப் பல கோடி மாந்தரை இழுக்கும் பண்புடையாய் நீ! நாடி வருபவர்க்கெல்லாம் நீ நலந் தருகின்றாய்; வாடி வருபவர்க்கெல்லாம் வழி காட்டுகின்றாய். முன்னொரு நாள் காதல் மனையாளைப் பிரிந்த கமலக் கண்ணன் கவலையுற்று உன் கடற்கரையிலே வந்து நின்றான். அவ் வீரனது மனத் துயரை நீ மாற்றினாய்; அவனுடன் வந்த வானரப் பெருஞ்சேனையை இலங்கையிற் கரையேற்றினாய்; அன்று முதல் கோடானு கோடி மக்களைப் பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேற்றிக் கொண்டிருக்கின்றாய். இதனாலன்றோ, 'கோடியுற்றார் வீடு பெற்றார்' என்று ஆன்றோர் உன்னைப் போற்றுகின்றனர்?

"அறப்பெருங்கடலே! உன்கரையை வந்தடைந்தவர், இலங்கையில் முன்னாள் வாழ்ந்த அரக்கரை மறக்க வல்லரோ? உன்கரையில் மோதும் அலைகளெல்லாம் அவர் கதையை எடுத்தோது கின்றனவே! அரக்கர் கோமானாகிய இராவணன் கோடி மாதவங்கள் செய்தான்; என்னையாளுடைய ஈசனருளால் யாரும் பெறாத வரம் பெற்றான்; திறம் பெற்றான்; வளமார்ந்த இலங்கையில் வல்லரசனாய் வீற்றிருந்தான்; ஈசனுக் கினிய மாசில் வீணையைத் தன் மணிக் கொடியில் எழுதினான்; எட்டுத் திசையிலும் அவ் விசைக்கொடியை நாட்டினான்; முடி மன்னரெல்லாம் அவன் அடி பணிந்தார்கள். வெற்றிமேல் வெற்றி யடைந்தபேது அவன் தலை கிறுகிறுத்தது. 'மாநில முழுதும் எனதே' என்ற மமதை கொண்டான் அவன்; ஆகாயத்திலும் ஆணை செலுத்த விரும்பினான்; அதற்குத் தடையாக இமய மலையே நின்றாலும் அதைத்தட்டி வீழ்த்தத் துணிந் தான். ஒரு நாள், ஈசனார் வீற்றிருக்கும் இமய மலையைக் கடந்து செல்ல மாட்டாது இறங்கிற்று அவன் விமானம். 'ஐயனே! இது கயிலாய மலை! இதைக்கடந்து விமானம் செல்லாது' என்று அறிவுறுத்தினான் அவன் +வலவன். அம் மொழி அரக்கர் கோன் செவியில் ஏறிற்றா? கயிலாயம் என்ற சொல்லைக் கேட்ட பொழுது அவனுள்ளம் கசிந்ததா? கெடுமதியால் அவன் கடுகடுத்தான்; ++ தருக்கும் செருக்கும் தலைக்கொண்டான். அந்தோ! ஆணவத் தின் கொழுந்தாகிய அரக்கன் வெள்ளிமா மலையை அள்ளியெறிய முயன்றானே! ஈசனையே அசைத்து விடலாம் என்று எண்ணினானே! 

+ வலவன்-வான ஊர்தியை இயக்கும் பாகன் இவனை ஆங்கிலத்தில் Pilot என்பர்.

"கடுகிய தேர் செலாது; கயிலாயம் ஈது
கருதேல் உன்வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்மம் என நின்ற பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்றது என்தன் மனனே"
- திருநாவுக்கரசர் தேவாரம்

அவன் கற்றதனால் யாது பயன்? வரம் பெற்றதனால் என்ன நலன்? செருக்குற்றவர் சீரழிவர் என்பதற்கு அரக்கர்கோன் ஒரு சான்றாயினன்; அசைத்துப் பெயர்த்த கயிலாய மலையின்கீழ் அகப்பட்டுக் கதறினான்; தவறு செய் ததை உணர்ந்து பதறினான்; இன்னிசை பாடினான். கருணையே உருவான எம்பெருமான் அரக்கன் செய்த பிழையையும் பொறுத்தான்; நாளும் வாளும் தந்து நல்லருள் புரிந்தான்.

"ஆழ்ந்தகன்ற அருங்கடலே! ஆண்டவன் அளித்த வாளின் வன்மையால் புறப் பகையை யெல் லாம் அடக்கினான் அவ் வரக்கன். ஆயினும், அகப் பகையாகிய காமத்தை அடக்கும் வலிமை பெற்றா னில்லையே! ஆண்மையுள் எல்லாம் சிறந்த ஆண்மை -பேராண்மை-என்பது அது வன்றோ? பிறன் மனை நோக்காத ஆண்மையைப் பேராண்மை என்று வள்ளுவரும் பாடினாரே! போராண்மை பெற்ற இராவணன் பேராண்மை பெற்றான் அல்லன்; இன்பத் துறையில் எளியன் ஆனான்; மற்றொருவன் மனைவியை-மாசிலாக் கற்பினாளை-வஞ்சித்துக் கவர்ந்தான்! அறம் மறுக, ஆண்மை மாசுற, அம் மங்கையை அசோக வனத்தில் சிறை வைத்தான் கல்லும் கரைந்துருகக் கற்பின் செல்வி கண்ணீர் வடித்தாள். அவள் அழுத கண்ணீர் அரக்கர் குலத்தை அறுக்கும் படையாயிற்று; வில்லின் செல்வனாகிய இராமனை இலங்கைக்கு வரவழைத்தது. பொன் னகரினும் சிறந்த இலங்கைமா நகரம் போர்க் களமாயிற்று. அரக்கரெல்லாம் அழிந்தனர். அறப் பகையால் இராவணனும் ஆவி துறந்தான்.

அல்லற்பட்டு ஆற்றாது சீதை அழுத கண்ணீர் அரக்கர் கோமானை அழித்தது.

"கோடிப் பெருந்துறையே! நன்றி செய்த உன்னை மீண்டும் நாடி வந்தான் இராமன்; என்றும் நீ செய்த நன்மையை உலகம் உணருமாறும், இராவணனைக் கொன்ற பழி தீருமாறும் உன் கரையருகே ஈசனுக்கு ஓர் ஆலயம் எடுத்தான்; பூசனை புரிந்தான். இராமன் எடுத்த அவ் வாலயம் இராமேச்சுரம் என்று பெயர் பெற்றது.

"தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் 
மேவிய சிந்தையினார்கள் தம்மேல்வினை வீடுமே."
+ + தேவாரத் திருப்பாசுரம்

என்று எம்பிரான் சம்பந்தன் பாடிய பாட்டைப் படித்தேன்; என் தீவினையெல்லாம் தீருமாறு உன்னை அடுத்தேன். அரக்கர் தலைவனைக் கெடுத்த அகந்தை என்னும் நோய் அடியேனை அணுகாமல் காத்தருளல் வேண்டும். காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குற்றமும் அகற்றிக் கயிலாய நாதனிடம் என்னைக் கடிதனுப்ப வேண்டும். இராமனுக்கு அருள் புரிந்த இராமலிங்கப் பெருமானை நாடுகின்றது என் நெஞ்சம்! சென்று வருகின்றேன்" என்று கோடிக் கரையில் விடைபெற்றுக் கோயிலை நோக்கி நடந் தார் நாவரசர்.

-----------------------------------------------------------

8. திருமங்கை மன்னன்

தமிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலை சிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும்; கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந் நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளிகொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமாளை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கை யாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"தொண்டை நாட்டுப் பண்டைத் துறைமுகமே! நீ, மல்லை என்னும் பெயருடையாய்; எல்லையற்ற புகழுடையாய். உன் கடற்கரையிலே குன்றும் மணலும் கொஞ்சி விளையாடும். உன் அளப்பரும் பெருமையை அறிந்தன்றோ மாமல்லை என்று உன்னைப் போற்றினார் எங்கள் + மாதவச் செல்வர்?
---
+ பூதத்தாழ்வார் மகாபலிபுரம் என்னும் மல்லையிலே பிறந்த மாதவர்.

"மா மல்லை, கோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திரு வாக்கு.

"அவர் அருள் வாக்குப் பெற்ற நீ, மேன்மேலும் வளமுற்றாய்; வனப்புற்றாய்; தமிழகத்தை ஆளும் பல்லவ மன்னரின் செல்வப் பாவையாய் விளங்கு கின்றாய். மாமல்லன் என்னும் மாநில மன்னன் சிறப் பாக உன்னைச் சீராட்டினான். அவன் பல்லவர் குல திலகன்; பகைவரை வென்று அடக்கிய வீரன்; வட நாட்டிலுள்ள வலிமை சான்ற வாதாபிக் கோட்டை யைத் தகர்ந்தெறிந்த தலைவன். அவ் வீரவேந்தன் உன்பால் அன்புகொண்டான். காவிரித்துறை முகத்தைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்தி யமைத்தான் மாமல்லன். அன்று முதல் + மாமல்லபுரம் என்ற பெயரும் உனக்கு அமைவதாயிற்று.
--------
+ மாமல்லபுரம் என்ற பெயர் மகாபலிபுரம் என மருவி வழங்குகின்றது.

"மல்லைமா நகரே! மாமல்லன் அரசு வீற்றிருந்த நாளில் நீ அடைந்த புகழுக்கு ஓர் அளவுண்டோ? கடல் சூழ்ந்த இலங்கையின்மீது படையெடுத்தான் மாமல்லன். அப் படையின் பரப்பையும் சிறப்பையும் நீ நன்கு அறிவாயே! உன் துறைமுகத்திலன்றோ அச் சேனை வெள்ளம் கப்பலேறி இலங்கையை நோக்கிச் சென்றது? மண்ணாசை பிடித்தவனல்லன் மாமல்லன். அவன் இலங்கையை வென்று அரசாள விரும்பினா னல்லன். அந் நாட்டு மன்னன்-மான வர்மன்-மாற்றார் செய்த சூழ்ச்சியால் நாடு இழந்து மாமல்லனை வந்தடைந்தான். அவன் வடித்த கண்ணீர் மல்லன் உள்ளத்தைக் கரைத்தது. தஞ்சமடைந் தோரைத் தாங்கும் தகைமையாளன் மாமல்லன்; அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்ற தோழன்; ஆதலால், தன்னந் தனியனாய் வந்து தஞ்சமடைந்த மானவர்மன் நிலை கண்டு மனம் இரங்கினான்; அவனது மனக்கவலையை மாற்றுவதாக வாக்களித்தான். அதன் பொருட்டு உன் துறைமுகத்தினின்று புறப்பட்டது தமிழ்ச் சேனை; மாற்றாருடன் போர்புரிந்தது; வெற்றி பெற்றது. மானவர்மன் இலங்கைக்கு அரசன் ஆயினான். அவன் மானங்காத்த பெருமை உனக்கும் உரியதன்றோ?

"நல் வாழ்வு பெற்ற மல்லை நகரமே! இலங்கையில் வெற்றி மாலை சூடிய பெரும்படை வீர முழக்கத்துடன், 'மல்லன் வாழ்க, வாழ்க' என்று வாழ்த்திக் கொண்டு, மரக்கலங்களில் இங்கு வந்த காட்சியைக் கண்டவர் மறப்பரோ? + பொன்னையும், மணியையும், பொருளையும், போர்க்களிறுகளையும் சுமந்து நெளிந்து உன் துறைமுகத்தை நண்ணிய கப்பல்களின் மாட்சி சொல்லுந் தன்மையதோ? இவையெல்லாம் மல்லையங் கரையிலே பள்ளி கொண்ட மாதவன் செயலன்றோ?

+"புலங்கொள்நிதிக் குவையோடு புழைக்கைம்மாக் களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்கள்இயங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்என் மடநெஞ்சே"
- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்.

"மன்னர் போற்றும் மணிநகரே! வெற்றி மேல் வெற்றி பெற்ற மாமல்லன் உன்னை அழகு செய்யத் தலைப்பட்டான்; உன் கரும்பாறைகளை யெல்லாம் கலைக்கோயிலாகக் கருதினான். அவன் ஆணை தலைக் கொண்டு கற்பணியில் வல்ல சிறிபியர் கைசெய்யத் தொடங்கினர். அன்னார் ஆக்கிய நற்பணியின் அழகு தான் என்னே! இதோ, ஒன்றையொன்று அடுத்து அடுக்கடுக்காக உயர்ந்து நிற்கும் ஐந்து திருக்கோயில்களும் தமிழ் நாட்டுச் சிற்பக் கலையின் சீர்மைக்கு அழியாத சான்றாகுமல்லவா? இவற்றின் மருங்கேயுள்ள குகைக்கோயிலின் சிற்பத் திறனைத்தான் என்னென்று சொல்வேன்? இங்கு +ஏனத்தின் உருவாகி எம்பெருமான் காட்சி தருகின்றான். ஏன வடிவத்தில் அமைந்த எம் இறைவனது ஞான ஒளியைக் கண்டோர், இவ் வூனப் பிறவியை அறுத்து அந்தமில் இன்பம் அடைவரல்லரோ? ஏனக் கோயிலை அடுத்து அமைந்துள்ளது ஈசன் கோயில். அங்குள்ள கல்லோவியத்தின் செம்மையைச் சொல்லவுங் கூடுமோ? போர்க் கோலம் கொண்ட பராசக்தி, சங்கு சக்கரம் ஏந்தி, சிங்கத்தின்மீ தமர்ந்து எருமைத் தலையுடைய அசுரன் ஒருவனைத் தாக்கும் தன்மையில் அமைந்த அவ்வடிவம் என் உள்ளத்தை அள்ளுகின்றதே! 
----------
+ ஏனம் = வராகம்."ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே"
- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்,

இம் மட்டோ! மாயக் கண்ணன்-மணிவண்ணன்-கோவர்த் தனகிரியைக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காத்த கருணை அடுத்த பாறையில் வடிக்கப் பெற்றுள்ளது. 'கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை, எம்பெருமானைக் கண்டுகொண்டேன்' அக் கல்லோவியத்தில்! கண்ணன் கருணையால் கவலை நீத்த கோகுலத்தில் ஆயர் குழலூதும் அழகும், கன்றினிடம் அன்புடைய கறவைப் பசு மனமுவந்து இடையர்க்குப் பால் தரும் மாண்பும் அக்கல்லில் அமைந்து இனிய காட்சி தருகின்றனவே! அதன் மருங்கிலுள்ள பாறையிலே அருந்தவத்தின் கோலம் இலங்குகின்றது. ஒற்றைக் காலை ஊன்றி, உச்சிமேற் கைகூப்பி, வற்றிய மேனிய னாய் நற்றவம் புரியும் ஒரு மாதவன் வடிவம் அழகாக அக் கல்லில் வடிக்கப் பட்டிருக்கின்றது. அவனது அருந்தவத்தின் செம்மையால் சுற்றும் முற்றும் அமைதியே நிலவுகின்றது. எத்தனை கலைவாணர் கருத்து இக் கற்பனையில் அமைந்துள்ளதோ?

"நல்லோர் ஏத்தும் மல்லைமா நகரே! உன்னைக் காணப் பெற்றோர் வெம்மை நீத்துச் செம்மை யடைவர்; பிணக்கம் ஒழித்து இணக்கம் எய்துவர். உன் கடற்கரைக் கோயிலிலே கண்ணுதலோனும் கமலக் கண்ணனும் இணங்கி நின்று இன்பக் காட்சி தருகின்றனர். இதைக் கண்டும் இவ்வுலகம் பிணக்க நெறியிற் செல்லுதல் பேதைமை யன்றோ?

"பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள் இயங் கும்மல்லை
கடல்மல்லைத் தலசயனம்
வணங்குமனத் தாரவரை
வணங்குஎன் தன்மடநெஞ்சே"

என்று உருக்கமாகப் பாடிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே சென்றார் திருமங்கையாழ்வார்.

------------------------------------

9. பட்டினத்தார்

சென்னைமாநகரின் அருகேயுள்ள கடற்கரை யூர்களிலே சாலத்தொன்மை வாய்ந்தது திருஒற்றியூர். மூவர் தமிழும் பெற்றது அம் மூதூர். பட்டினத்தார் என்று தமிழகம் போற்றும் பெரியார் அப்பதியிலே பல நாள் வாழ்ந்தார். அவரை நன்றாகப் பற்றிக் கொண்டது ஒற்றியூர். தமது உள்ளங் கவர்ந்த ஒற்றியூர்க் கடற்கரையிலே நின்று ஒருநாள் அவர் உயரிய உண்மைகளை உணர்த்த லுற்றார்:-

"கற்றவர் போற்றும் ஒற்றிமாநகரே! உன்னை நாடி யடையாதார் இந்நாட்டில் உண்டோ? உன் கடலருகே நிற்கும் கரும்பைக் கண்படைத்தவர் காணா திருப்பரோ? அக் கரும்பின் தன்மையை என்னென்று உரைப்பேன்? காண இனியது அக் கரும்பு; கண் மூன்றுடையது அக் கரும்பு; கண்டங்கறுத்தது அக் கரும்பு; தொண்டர்க்கு உகந்தது அக் கரும்பு. கண்டு கொண்டேன் அக்+ கரும்பை! அக் கரும்பே என் கடு வினைக்கு மாமருந்து.

+ " கண்டம் கரியதாய், கண்மூன் றுடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய்-தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடல் அருகே நிற்கும் கரும்பு."

"அலைகடலே! உன் அலையை ஒத்ததே என் நிலையும்! அடுத்தடுத்து வருகின்ற உன் அலைகளை எண்ணமுடியுமோ? அப்படியே என் பிறப்பும் எண்ணத் தொலையாது. இம் மண்ணுலகிற் பிறந்து பிறந்து, நான் மனம் சலித்தேன்; என்னைச் சுமந்து சுமந்து அன்னையர் மெய் சலித்தார். என்னைப் படைத்துப் படைத்து அயனும் கை சலித்தான்; இது வரையில் பிறந்தது போதும். இனிப் பிறவாதிருக்க வேண்டும். அந் நிலையை நாடியே உன்னைத் தஞ்சம் அடைந்தேன்.

" பழங்கடலே! அப்பர் என்ற அருமைப் பெயர் பெற்ற அண்ணல்-செஞ்சொற் பாமாலை தொடுத்துச் சிவனார் திருவடியில் அணிந்த செம்மல்-முன்னொரு கால் உன் கரையை வந்தடைந்தார்; உள்ளம் உருகிப் பாடினார். ஒப்பற்ற அன்பு வாய்ந்த அப் பெருமானை 'அப்பர்' என்று அழைப்பது எத்துணை அழகு! என் அப்பன் காட்டிய நெறியைக் கடைப் பிடித்தல் என் பிறப்புரிமை யன்றோ? +'மனம் என்னும் தோணியில் சினம் என்னும் சரக்கை ஏற்றி, மதி என்னும் கோலை ஊன்றி, மாக்கடலிற் செல்லுங்கால், மதன் என்னும் பாறை தாக்குமே! ஒற்றியூர் உடைய கோவே! அப்போது உன்னை நினைக்கும் உணர்வினை அருள்வாய்' என்று அவர் அருளிய திருவாக்கே எனக்கு வழிகாட்டு கின்றது. வாழ்க்கை என்னும் கடலில் ஓடும் உயிருக்கு இதனினும் சிறந்த உறுதியுண்டோ? மனத்திலே சீலம் என்னும் சரக்கை ஏற்றாது, சினம் என்னும் சரக்கை ஏற்றுதல் ஈனம் அன்றோ? அச் சரக்கை ஏற்றிச் செல்லும்போது, செருக்கென்னும் பாறை தாக்கி நொறுக்கிவிடும் என்று அப்பர் கூறியது அமுத வாக்கன்றோ? யான், எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்றவரே பிறவிப் பெருங்கடல் கடந்து பேரின்ப உலகம் பெறுவர் என்று தமிழ்மறை பாடிற் றன்றோ? வாழ்க்கையை உருப்படவொட்டமல் சிதைத்து அழிக்கும் செருக்கை 'மதன் எனும் பாறை' என்று அப்பர் பெருமான் பாடிய அருமையை எவ்வாறு புகழ்ந்து உரைப்பேன்?

+" மனம்எனும் தோணிபற்றி
மதிஎனும் கோலை ஊன்றிக்
சினம் எனும் சரக்கைக் ஏற்றிச்
செறிகடல் ஓடும்போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே"

"நீர்ப் பெருக்குற்ற நெடுங்கடலே! செல்வச் செருக்கே செருக்கினுள் எல்லாம் தலையாகும். உலக வாழ்க்கை செம்மையாக நடைபெறுவதற்குச் செல்வம் இன்றியமையாததுதான். 'பொருளில்லார்க்கு இவ் வுலகமில்லை' என்பது பொய்யா மொழியே. ஆயினும், செல்வத்தின் பயனறிந்து வாழ்பவர் இவ் வுலகில் ஒரு சிலரேயாவர். அல்லும் பகலும் அரும்பாடுபட்டுத் தேடும் பணத்தை மண்ணிலே புதைத்துவைத்து மாண்டு ஒழிபவர் எத்தனை பேர்? பரிந்து தேடும் பணத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதே பேரின்பம் என எண்ணி வாழும் ஏழை மாந்தர் எத்தனை பேர்? செல்வம் என்பது சொல்லுந் தன்மைத்து என்ற உண்மையை அறியாது அதைக் காட்டி வைத்துக் காக்க முயலும் கயவர் எத்தனை பேர்? செல்வம் பெற்றவர் தம் நிலையைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கின்றார் இல்லையே! பிறக்கும்பொழுது தங்கத் தலையொடும்,வயிரக் கையொடும், வெள்ளிக் காலொடும் பிறந்தவர் எவரும் இல் லையே! இறக்கும்பொழுது பொன்னையும் பொருளை யும் தம்முடன் கொண்டு செல்வார் எவரும் இல்லையே! இத் தகைய செல்வத்தின் பயன்தான் யாது? உலகியல் அறிந்த பெரியோரெல்லாம் ஒரு தலையாக அதனை உணர்த்தியுள்ளார்க! 'ஈதலே செல்வத் தின் பயன்; அற்றாரை ஆதரித்தலே செல்வம் பெற்றா ரது கடமை.' இதை அறிந்து வாழ்பவர் ஆன்றோர் ஆவர்; கொடுக்க அறியாதவர் † குலாமர்; பிறவிப் பயன் அறியாப் பதடிகள்.

† " பிறக்கும் பொழுது கொடுவந்த 
தில்லை; பிறந்து மண்மேல் 
இறக்கும் பொழுது கொடுபோவ 
தில்லை; இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த 
தென்று கொடுக்கறியாது 
இறக்கும் குலாருக்குஎன் 
சொல்லுவேன் கச்சி ஏகம்பனே!"
-- பட்டினத்தார் பாடல் 

"பரந்த பெருங்கடலே! பசித்தோர் முகம் பார்த்து இரங்கும் தன்மை வாய்ந்த செல்வர் இல்லாத நாடு நாடாகுமா? ஏழையர்க்கு ஒன்றும் ஈயாது ஏழடுக்கு மாடம் கட்டி இறுமாந்திருப்பவர் இறைவனது கருத்தறியாத ஈனர் அல்லரோ? மெய்யறிவு பெற்ற மேலோர் எல்லாம் மெய்ப்பொருளாகிய இறைவனை 'ஏழை பங்காளன்' என்று குறித்தனரே யன்றிச் செல்வர் பங்காளன் என்று சிறப்பிக்க வில்லையே! இத் தகைய ஏழையரைப் புறக்கணிப்பது ஆண்டவனைப் புறக்கணிப்பதாகு மன்றோ? அழியுந் தன்மை வாய்ந்த செல்வத்தை அற்றார்க்கும் ஆதுலர்க்கும் கொடுத்து, அழியாத அறமாக மாற்றிக் கொள்வதன்றோ அறிவுடைமை யாகும்?

" நற்றவர் வாழும் ஒற்றியுரே! என்னையாளும் இறைவன் கருணையால் உறுதிப்பொருள் இன்ன தென்றுணர்ந்தேன். காவிரிப்பும் பட்டினத்தில் கடல் வாணிகத்தால் வந்த பொருளைக் கண்டு களிப்புற்றிருந்த என்னைக் கரையேற்றத் திருவுளங் கொண்டான் ஒற்றியுருடைய இறைவன்; ஒரு சீட்டைக் காட்டி என்னை ஆட்கொண்டான். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்னும் அருமைத் திருமொழியால் என்னுள்ளத்தை உருக்கினான். காதற்ற ஊசியைக் காட்டி என்னைக் கடைத்தேற்றி னானே!

"ஒற்றியுரே! உன் பெருமையை அவன் அருளால் உணர்ந்தேன். +நீயே சிவலோகம் என்று அறிந்தேன். என் உள்ளம் கவர்ந்த ஒற்றியே! வாழி; என்னைத் தாங்கும் ஒற்றியே! வாழி; உலவாப் பெரும் பெயர் ஒற்றியே! வாழி" என்று வாழ்த்திக்கொண்டு ஆழிக்கரையை விட்டகன்றார் இருவினைக் கட்டறுத்த பட்டினத்தார்.

"வாவிஎல்லாம் தீர்த்தம்; மனம்எல்லாம்வெண்ணீறு;
காவனங்கள் எல்லாம் கணநாதர்-பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்."
- பட்டினத்தார் பாடல்.

-----------------------------------------------------------

10. பண்டித சோழன்

தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களுள் ஒன்று நாகபட்டினம். நாகர் என்ற பழந் தமிழ்க் குலத்தார் ஒரு காலத்தில் அங்கே சிறப்புற்று வாழ்ந்திருந்தார் என்பர். சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினம் ஆழிவாய்ப்பட்டு அழிந்த பின்னர் நாக பட்டினம் தலையெடுத்தது; வணிகத்தால் வளமுற் றது. தஞ்சையைத் தலைநகராக கொண்ட சோழ மன்னர் நாகையைத் திருத்தி வளர்த்தனர். அம் மன்னரில் தலை சிறந்தவன் இராஜேந்திரன். அவன் தன் நிலப் படையால் கங்கை வரையுள்ள நாடுகளை வென்றான். கப்பற்படையால் கடாரம் முதலிய பல தேசங்களை வென்றான். அவ் வெற்றித் திறனை வியந்து 'கங்கை கொண்டான்' என்றும், 'கடாரம் கொண் டான்' என்றும் அவனைத் தமிழகம் பாராட்டியது. தமிழ்ச்சுவை யறிந்த அம் மன்னனைப் 'பண்டித சோழன்' என்று கலைவாணர் கொண்டாடினர். இத் தகைய காவலன் நாகைமா நகர்க்கு ஒரு கால் எழுந் தருளியபோது அந் நகரம் ஓகையுற்று எழுந்தது; கடற் கரையில் விண்ணளாவிய பந்தலிட்டு வரவேற்றது. அக் காட்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சியுற்ற மன்ன வன் பேசலுற்றான்:-

" நல்லோர் ஏத்தும் நாகைமா நகரே ! என்றும் உள்ள தமிழகத்தில் நீ தொன்றுதொட்டு இருந்து வருகின்றாய். சோழ நாட்டுக் கடற்கரை நகரங்களுள் இன்று நீயே தலைமைசான்றாய் ! கடல் வளம்படைத்த உன்னைக் 'கடல் நாகை' என்று பாடினார் திருநாவுக் கரசர். இருமையும் தரும் ஈசனார் கோயில் இங்கு அருமையான காட்சி தருகின்றது. காரோணம் என் னும் திருக்கோயிலைக் கண்பெற்றவர் கானுருதிப்பரோ?

"மன்னர் போற்றும் மணிநகரே ! இறைவன் அருளால் என் அரும்பெருந் தந்தையார்-இராஜ ராஜன்-நிலப்படையும் நீர்ப்படையும் பெருக்கினார்; செருக்குற்ற மாற்றரசரை நொறுக்கினார்; கோதாவரி முதல் குமரி வரை ஆணை செலுத்தினார்; கடல் சூழ்ந்த பல நாடுகளில் புலிக் கொடியை நாட்டினார். சென்ற விடமெல்லாம் செரு வென்று ஜெயம் பெற்ற மன்னரை 'ஜெயங்கொண்டான்' என்று தமிழகம் சீராட்டி மகிழ்ந்தது. அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து வாழ முயல்கின்றேன்; அம் மன்னர் அடிச்சுவடுபற்றி இந் நாட்டை ஆள ஆசைப்படுகின்றேன். அவர் காலத்தில் வெற்றிச்சுவை கண்ட தமிழ்ச்சேனை மேன்மேலும் வாகைமாலை சூட விரும்பிற்று; வடக்கே கங்கையாறளவும் சென்று மாற்றாரை வென்றது; பொங்கு கங்கையைப் பொற்குடத்தில் எடுத்து வந்தது; 'கங்கை கொண்டான்' என்னும் விருதுப் பெயரை எனக்குத் தந்தது.

" நலமார்ந்த நன்னகரே ! கங்கையின் நீரை என் தண்ட நாயகன் கொண்டு வந்தான். கோதாவரிக் கரையில் நான் அப்படைத் தலைவனை வரவேற்றேன்; கங்கையைக் கொண்டேன்; புதிதாகச் சோழநாட்டில் நான் கட்டிய ஏரியில் அந் நீரை உகுத்தேன்; 'சோழ கங்கம்' என்னும் பெயரையும் அதற்கு அளித்தேன்; கொள்ளிடத்திலிருந்து கால்பிடித்துக் காவிரியின் நீரை அந்த ஏரியிற் பெருக்கினேன். கங்கையும் காவிரியும் கலந்த ஏரியில் என்றும் நீர் பொங்கிப் பெருக வேண்டுமென்று இறைவனைத் தொழுதேன். அப்போது 'ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்ற தமிழ்ப் பாட்டை இசைவாணர் அந்த ஏரியின் கரையில் நின்று பாடினர். அதுகேட்டு என் உள்ளம் உருகிற்று. சோழ கங்கத்தின் கருணையால் வெற்றிட மெல்லாம் இப்போது விளைநில மாயிற்று; காடு மேடெல்லாம் கழனியாயின. சோழநாட்டை வள நாடாக்கி, வளவன் என்ற பெயரை எம் குலத்தார்க்கு வழங்கிய ஆதிமன்னன்-திருமா வளவன்-'குளம் தொட்டு வளம் பெருக்கினான்' என்று பட்டினப் பாலை பாராட்டுவதைப் படித்தேன். ஒல்லும் வகையால் அவ் வளவனைபோல் வேளான்மையை ஆதரிக்க ஆசைப் படுகின்றேன். படையாற்றலினும் பசியாற்றலே சிறந்த தென்பதை எண்ணி எண்ணி மனம் களிக் கின்றேன். கங்கை கொண்டேன்; பயிர் முகம் கண்டேன். ஆதலால், 'கங்கைகொண்டான்' என்ற விருதுப் பெயரைப் போற்றுகிறேன்.

"வளவன் நாட்டுத் துறைமுகமே! இந் நாட்டில் பசி ஒழிந்தால்மட்டும் போதுமா? பொருளும் பெருக வேண்டும் என்பது என் ஆசை. தாழ்விலாச் செல்வம் வாணிகத்தால் வரும். இதை உணர்ந்தன்றோ தமிழ் நாடு மூவேந்தரும் துறைமுக நகரங்களைக் குறிக் கொண்டு காத்தனர்? சோழநாட்டுக் கரையிலே திருமாவளவன் திருத்தியமைத்த பூம்புகார் நகரம் யார் செய்த தீவினையாலோ அழிந்து பட்டது. ஆயினும், நாக பட்டினமே! உன்னைக் கண்டு ஒருவாறு வாட்டம் தீர்ந்தேன். அந் நாளில் புகார் நகரத்தில் நிகழ்ந்த வாணிகம் இந் நாளில் இங்கு நடைபெறுகின்றது. பல இனத்தார், பல மதத்தார் இந் நகரிலே கலந்து வாழ் கின்றார்கள். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் நேசப் பான்மை யுடன் இந் நகரில் நிலவக் காண்கின்றேன். கடார தேசத்தை ஆளும் அரசன் சாக்கியச் சமயத்தைச் சார்ந்தவன். அந் நாட்டார் பலர், இந் நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வழிபாடு செய்வதற்காகப் புத்த விகாரம் ஒன்று இந் நகரிலே கட்ட விரும்பினான் கடார மன்னன்; என் தந்தையாரிடம் அதற்கு அனுமதி வேண்டினான். உடனே அனுமதி கொடுத்தார் அவர்; அம் மட்டில் அமையாது ஆனைமங் கலம் என்ற ஊரையும் அக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார். சூடாமணி விகாரம் என்னும் பெயரால் இந் நகரத்திலே அந்த ஆலயம் சிறந்து விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

"வணிகர் நிறைந்த மணி நகரே! கடார தேசத் திற்கும், தமிழ் நாட்டிற்கும் நினைப்புக்கு எட்டாத நெடுங்காலமாக வர்த்தக உறவு உண்டு. +காழகம் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந் நாட்டின் விளைபொருளும் நுகர்பொருளும் தமிழ் நாட்டுத் துறைமுகத்தில் வந்து இறங்கிய வண்ணமா யிருந்தன. காழக நட்டார் காவிரித் துறைமுகத்தில் குடியேறியவாறே திரை கடலோடிய தமிழகத்தார் காழகம் சாவகம் முதலிய நாடுகளில் வாணிகத்திற்காகச் சென்று வாழ்ந்தார்கள். அங்குள்ள தக்கோலம், மலையூர், பண்ணை ஆகிய ஊர்ப் பெயர்கள் தமிழர் இட்ட பெயர்கள் என்பதில் தடையமுண்டோ?
----------
+:"ஈழத் துணவும் காழகத் தாக்கமும்" -பட்டினப்பாலை.

"வாகை சூடிய நாகையே! இன்று கடாரத்தை ஆளும் அரசன் அந் நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பண்டை உறவை மறந்தான்; புத்த விகா ரத்தை நாம் ஆதரித்த அருமையையும் புறக்கணித் தான்; சித்த விகாரத்தால் சீனத்தாரோடு புத்துறவு பூண்டான். அவ் வர்த்தக உறவினால் கடாரத்திலுள்ள தமிழர் கையற்றார். தமிழகத்திற்கும் வாணிக வளம் சிறிது குறைவதாயிற்று. முறை தவறி நடந்த கடார மன்னர்க்குத் தமிழாற்றலை அறிவித்தற்காகவே நமது கடற்படை எழுந்தது. கடாரம் கிடுகிடுத்தது; குற்ற முள்ள மன்னவன் நெஞ்சு குறுகுறுத்தது. அவன் நமது அடியில் முடியை வைத்து வணங்கினான்; பிழை பொறுக்கும் படி வேண்டினான்; முறையாக திறை செலுத்த இசைந்தான்; 'இனி என்றும் தமிழ் நாட்டின் நலத்திற்கு மாறாக நடப்பதில்லை' என்று வாக்களித்தான். வடுப்படாமல் வாகைமாலை சூடிய தமிழ்ச் சேனை இந் நாகைத் துறைமுகத்தில் வந்து இறங்கியபொழுது இங்கெழுந்த எக்களிப்பை என்னென் றுரைப்பேன்! 'கங்கை கொண்ட தமிழரசன் கடாரமும் கொண்டான்' என்று கவிஞர் கொண்டாடினார்கள்; பாட்டாலும் உரையாலும் என் படைத் திறமையை பாராட்டினார்கள். அப் பாராட்டெல்லாம் என் குடிபடைகளுக்கே உரியவாகும். ஒன்றை மட்டும் நான் ஒப்புக்கொள்வேன். கங்கை கொண்டதனால் கழனி கண்டேன்; கடாரம் கொண்டதனால் கடல் வளம் பெற்றேன். இனி என் நாட்டுக்கு என்ன குறை?

" தகைமை வாய்ந்த திருநகரே! திருவள்ளுவர் கூறியவாறு தள்ளா விளையலும், தாழ்விலாச் செல்வமும் உடைய தமிழ் நாட்டில் தக்காரும் வாழ்வதறிந்து மனம் தழைக்கின்றேன். தஞ்சை மாநகரில் என் தந்தையர் எடுத்த திருப்பணி இனிது நிறைவேற உறுதுணையாக நின்றவர் கருவூர்த் தேவர் என்பதை நாடறியும். அவர் மும்மையும் உணர்பவர்; ஒருமையே மொழிபவர். அவர் ஆசியால் நான் வாசி பெற்றேன். கங்காபுரி என்னும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஈசனார்க்கு நான் எடுத்த திருக்கோயிலை கருவூர்ப் பெரியார் பாடியருளினார். அவர் பாடிய இசைப் பாட்டால் என் பெயர் தாங்கிய நகரின் புகழ் எட்டுத் திசையிலும் பரவலாயிற்று. அம்மட்டோ? அருள் நூலும், பொருள் நூலும் அவர் வாயிலாகக் கேட் டறிந்த என்னைப் 'பண்டித சோழன்' என்று தமிழகம் பாராட்டத் தொடங்கிற்று. அப் பட்டத்தை தாங்கு தற்குரிய தகுதி யில்லையே என்று ஏங்குகின்றது என்னுள்ளம். 

"கற்றவர் நிறைந்த நற்றவ நகரே! கடல் நாகை யாகிய நீ, கலை நாகையாகவும் விளங்குகின்றாய்! இங் குள்ள கலைவாணர் உதவியால் அருந்தமிழ்க் கலைகளை ஓதி யுணர்ந்து நான் பண்டித சோழன் ஆக முயல் வேன். மெய்ஞ்ஞான பண்டிதனாகிய முருகவேள் அருளால் முத்தமிழறிந்து வாழ்வேன். எல்லோரும் இன்புற்று வாழ ஈசன் அருள் புரிக " என்று பணிந்து விடை கொண்டான் பண்டித சோழன்.

-----------------------------------------------------------

11. கண்டி மன்னன்
இலங்கை என்று வழங்கும் ஈழநாடு இயற்கை வளம் வாய்ந்த நாடு. அங்குச் சிங்களவரோடு தமிழரும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரராஜசிங்கன் என்ற அரசன் அந் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; காவிரி நாட்டை நோக்கினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்தி லிருந்த நெல் கப்பலேறியது; யாழ்ப்பாணத் துறையில் வந்து மலைபோற் குவிந்தது. அதை கண்டான் அரசன்; கடற்கரையில் நின்று களிப்புடன் பேசலுற்றான்:-

"தென் இலங்கைத் திருநகரே! சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழும் இந் நாட்டில் என்றும் இல்லாத பஞ்சம் இன்று வந்து சேர்ந்தது. மாதம் மூன்று மழையுள்ள நாட்டில் பத்து மாதமாக ஒரு துளி மழையில்லையே! பயிர் முகங் காட்டும் கழனிகள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. வாழும் உயிர்கள் எல்லாம் வற்றி உலர்ந்து வானத்தையே நோக்கி நிற்கின்றன. காவலன் என்று பேர் படைத்த நான், நாடு படுந் துயரத்தைக் கண்டு நலிவுற்றேன்; கண்டிமா நகரிலுள்ள கண்கண்ட தெய்வமாகிய கண்ணகியை வேண்டினேன். 

'தாயே! பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில், வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது என்று இளங்கோவடிகள் பாடினாரே! கற்புத் தெய்வமாகிய நீ கோயில் கொண்டிருக்கும் நாட்டிலே இக் கொடுமை நிகழலாமா? நெஞ்சறிய ஒரு பிழையும் நான் செய்தறியேனே! வஞ்சமின்றி வாழும் என் குடிகள் பஞ்சத்தின் வாய்ப்பட்டு வருந்துதல் தகுமோ? அன்னையே! நானும் இந் நாடும் உன் அடைக்கலம்' என்று முறை யிட்டேன். அன்றிரவு சற்றுக் கண்ணயர்ந்தேன்; ஒரு காட்சி கண்டேன். எண்ணறந்த கப்பல்கள் தமிழ் நாட்டிலிருந்து நெல் மூடைகளைக் கொணர்ந்து இந்த யாழ்ப்பாணக் கரையிலே இறக்கிக்கொண்டிருக்கக் கண்டேன்; கண் விழித்தேன். கப்பலும் இல்லை; நெல்லும் இல்லை; கனவிற் கண்ட காட்சி என்று உணர்ந்தேன்; கவலையுற்றேன். ஆயினும், அக் கனவு வீணாகப் போகவில்லை. ஈழநாட்டின் துயரம் தீர்ப்பது சோழநாட்டின் உரிமையன்றோ என்று சிந்தித்தேன். சோழநாடு காவிரி பாயும் வளநாடு. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் பலர் அந் நாட்டில் வாழ்கின்றனர். இல்லையென்று சொல்லாமல் எல்லை யின்றிக் கொடுக்கும் நல்லார் பலர் அங்குள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் வாடாத பாமாலை பெற்ற வள்ளல்; சடையாது கொடுக்கும் சடைய வள்ளல். அவரிடம் இந் நாட்டின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு ஆறாம் நாளில் வந்தது ஆயிரம் கப்பல். அதோ! குன்று போலக் குவிந்திருக்கின்றதே அவர் அனுப்பிய நெல்! அந்த நெல்லிலே ஒரு கல்லுண்டா? கலப்புண்டா? பதருண்டா? பச்சை யுண்டா? அதை அள்ளிப் பார்ப்பவரெல்லாம் துள்ளி மகிழ்கின்றார்களே! இன்றுதான் இந் நாட்டார் முகத்தில் புன்னகை தவழக் கண்டேன்; என் மனக் கவலை விண்டேன்.

"தகை சான்ற தனி நகரே! தக்கோர் வாழும் நாடு தமிழ்நாடு என்று அறிவின்மிக்கோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதன் உண்மையை இன்று அறிந்தேன். தமிழ் நாட்டு வள்ளல், காலத்தில் உதவி செய்து நம்மை காப்பாற்றினார். கருணையே உருவாகிய அப் பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ரல்லரோ? உயிர் தந்த ஒருவனை 'அம்மையே, அப்பா, ஒப்பிலாமணியே' என்று நாம் எந் நாளும் போற்றுவோம். அவ் வள்ளலார் குலம் வாழையடி வாழைபோல் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவோம். அவர் நாட்டிலுள்ள காவிரியாறு இன்று போலவே என்றும் வளமுறத் திகழும் வண்ணம் ஆண்டவன் திருவருளை வேண்டுவோம்.

"அருள் பூத்த தமிழ் நகரே! காவிரி நாட்டின் கண்ணெனத் திகழும் தில்லையம்பதியிலே எம்மை யாளுடைய ஈசன்-மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வன்-ஆனந்தக் கூத்தாடுகின்றான். அப் பெருமான் ஆடுகின்ற அம்பலத்தை, 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர் பாடினர். காவிரியாற்றின் நடுவே கருணைமா முகிலாகிய திருமால் ஆனந்தமாய்க் கண்வளர்கின்றார். அவர் பள்ளிகொள்வதற்கு என்ன தடை? நாடு செழித்திருக்கின்றது; அறம் தழைத்திருக்கின்றது; எல்லோரும் இன்புற்று வாழ்கின்றார்கள். ஆதலால், காக்கும் கடமையுடைய பெருமாள் கவலையற்றுத் திருவரங்கத்திலே கண்வளர்கின்றார். காவிரி நாட்டிலுள்ள அமைதியைக் காட்டுகின்றது அவர் திருக்கோலம். எனவே, ஆனந்தக் கூத்துக்கும் ஆனந்த சயனத்துக்கும் அடிப்படையான காரணம் சோழ நாட்டு வளமே யன்றோ? இத் தகைய வள நாட்டில் +தரும தேவதைபோல் விளங்கும் வள்ளல் தழைத்து ஓங்கி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

+"இரவு நண்பகல் ஆகி லென், பகல் 
இருள றாஇர வாகிலென்,
இரவி எண்திசை மாறி லென்கடல்
ஏழும் ஏறிலென், வற்றிலென்?
மரபு தங்கிய முறைமை பேணிய 
மன்னர் போகிலென்; ஆகிலென்? 
வளமை இன்புறு சோழ மண்டல 
வாழ்க்கை காரண மாகவே, 
கருது செம்பொனின் அம்ப லத்திலே 
கடவுள் நின்று நடிக்குமே!
காவி ரித்திரு நதியி லேஒரு 
கருணை மாமுகில் துயிலுமே!
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி 
தங்கு மானிய சேகரன்,
சங்க ரன்தரு சடையன் என்றொரு 
தரும தேவதை வாழவே!"
- பெருந் தொகை, 1135 .

"கலைமணக்கும் தலைநகரே! செந்தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தொந்தம் மிகவுண்டு. ஈழநாட்டு ஆதியரசருள் ஒருவன் பாண்டி மன்னன் திரு மகளை மணந்து வாழ்ந்தான். சேரநாட்டரசன் வஞ்சிமா நகரில் நடத்திய கண்ணகி விழாவில் இந் நாட்டுக் கஜபாகு மன்னன் கலந்து கொண்டான். அன்று தொட்டு கண்டி முதலாய பல நகரங்களில் பத்தினித் திருநாள் நடைபெற்று வருகின்றது; அன்றியும், இந் நாட்டுக் கடற்கரையிலுள்ள கோணமலையில் திருக்கோயில் அமைத்து அதைத் +திருக்கோணமலை யாக்கியவர் தமிழர் அல்லரோ? கருங்கடலை நோக்கி வளைந்துள்ள மலையைக் கோணமலை என்று பெயரிட் டழைத்த தமிழரின் அறிவு நலம் வியக்கத்தக்க தன்றோ?

--------------

திருக்கோணமலை இப்போது Trincomalle (டிரிங்காமலி) என மருவி வழங்குகின்றது.

"தமிழ் மணக்கும் திருநகரே! இவையெல்லாம் உண்மையே எனினும், நீயே இலங்கை நாட்டின் தொன்னகரம்; தமிழர் வாழும் நன்னகரம். உன் கடற்கரையிலே குவிந்துகிடந்த பெருமணலைக் கண்டு, மணவை என்று முன்னையோர் உனக்குப் பெயரிட்டார்கள். இப்போது யாழ்ப்பாணம் என்ற அழகிய பெயரைத் தாங்கி நிற்கின்றாய் நீ! யாழ்ப் பாணர் என்பார் தமிழ்நாட்டுப் பழங்குலத்தார். செவிக்கினிய யாழிலே பண்ணொடு பாட்டிசைத்து இசையின்பம் விளைவித்தவர் அவரே! நாளும் இன் னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் காலத்தில் யாழ்ப்பாணர் குலத்திலே திருநீலகண்டர் என்னும் இசைவாணர் தலைசிறந்து விளங்கினர். தேவாரப் பாட்டைப் பண்முறையில் அமைத்துப் பாடியவர் அவரே! இத் தகைய பெருமை வாய்ந்த யாழ்ப் பாணர்கள் உன்பால் வந்து குடியேறினார்கள்; கடற்கரையில் அமர்ந்து பண்ணார்ந்த பாட்டிசைத்தார்கள் மேடும் காடுமாய்க் கிடந்த உன்னைப் பண்படுத்தி னார்கள். அப்போது நீ புதுப்பெயர் பூண்டாய். யாழ்ப்பாணர் திருத்திய காரணத்தால் யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றாய். அன்று முதல் உன் இசையும் இயலும் வளர்ந்தோங்கி வருகின்றன.

"வசை தீர்த்த வளநகரே! தமிழ் நாட்டு வள்ளல் அனுப்பிய நெல், இத் தமிழ் நகரத்தில் வந்து சேர்ந் தது சாலப்பொருத்த முடையதன்றோ? இந் நெல்லை அள்ளும்பொழுதும், அளக்கும்பொழுதும், உண வாக்கி உண்ணும்பொழுதும் தமிழ் அன்னத்தால் உயிர்வாழ்கின்றோம் என்ற உணர்ச்சி ஒவ்வொரு வருக்கும் உண்டாகும். அவ்வுணர்ச்சியால் எழுகின்ற நன்றி, ஈழநாட்டுக்கு என்றும் நலமளிப்பதாகும்.

"இசைவாணர் கண்ட மணிநகரே! உன்னால் இந் நாட்டுக்கு வந்த துன்பம் தீர்ந்தது. வயிறார உணவுண்ணும் உயிர்கள் எல்லாம் உன்னை வாயார வாழ்த்துக! உன் திசைநோக்கி வணங்குக!" என்று கைக்கூப்பித் தொழுது விடைபெற்றான் கவலை தீர்ந்த கண்டி மன்னன்.

-----------------------------------------------------------

12. கம்பர்

பாண்டி நாட்டுக் கடற்கரையிலுள்ள பழம் பதிகளில் ஒன்று தருப்பசயனம் என்னும் திருப்புல்லணை. திருப்புல்லாகிய தருப்பையைத் தலையணையாக வைத்து, கருங்கடலை நோக்கிக் கருணையங் கடலாகிய இராமன் வரங்கிடந்தமையால் திருப் புல்லணை என்னும் பெயர் அப்பதிக்கு அமைந்த தென்பார். வானர சேனையுடன் நாடும் மலையும் கடந்து வந்த இராமன் இலங்கைக்கு எதிரேயுள்ள அக்கடற்கரையை அடைந்தான்; குறுக்கே நின்ற கடலைக் கடந்து எவ்வாறு அரக்கர் நாட்டுக்குச் செல்வது என்றெண்ணிக் கவலையுற்றான். அந்த மனப்பான்மையோடு அவ் வீரன் நின்ற நிலையையும் நெடுங்கடல் அவனை வரவேற்ற நீர்மையையும் கவிக் கண்ணாற் கண்ட கம்பர் பேசுகின்றார்:-

"கருங்கடலே! அரக்கர் வாழும் இலங்கையின் நாற்புறமும் அரணாக நின்று அருங்காவல் புரிகின் றாயே! அவ் வரக்கர் அறநெறி துறந்தவர் என்பதை நீ அறியாயோ? 'இரக்கமற்றவர் அரக்கர்' என்ற வாய்மொழியும் கேட்டிலையோ? உன் காவலால் அன்றோ அன்னார் நிறுவிய வல்லரசு பின்னமின்றி வாழ்கின்றது? 'மா நீர் சூழ்ந்த இலங்கைக்கு மாற்றார் எவரேனும் வரமுடியுமா?' என்று அரக்கர் மார் தட்டிப் பேசுகின்றார்களே! 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்று மிஞ்சி அறைகின்றார்களே! உன் துணை யுடைமையா லன்றோ இப்படித் துள்ளுகின்றார்கள்? 

அறப் பெருங்கடலே! அரக்கர் வேந்தன் மறக்கள வேள்வி செய்பவன் என்பதை நீ மறந்தனையோ? பஞ்சவடிச் சோலையில் அவன் செய்த பாதகச் செயலை நீ அறியாயோ? மாசற்ற சீதையை நெஞ்சார வஞ்சித்துக் கவர்ந்தானே அந்நிருதர் வேந்தன்! தன்னந் தனியளாய்த் தவச்சாலையில் இருந்த கற்பின் செல்வியை எடுத்துச் சென்று சிறைச்சாலையில் வைத்த அவன் சிறுமையை நீ அறியாயோ? அசோக வனத்தில் சோகமே வடிவாயமைந்த அம் மங்கை, கணவனைத் திக்கு நோக்கித் தொழுவதும், விக்கி விம்மி அழுவதும், மக்கி மடிந்து விழுவதும் கண்டு இரக்கமற்ற அரக்கி யரும் தளர்ந்து ஏங்குகின்றார்களே! அவள் வடிக்கும் கண்ணீர் இலங்கைக் கோட்டையை இடித்து நொறுக்காமல் விடுமோ? 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' என்பது ஆன்றோர் மொழியன்றோ?

"அலைகடலே! அம் மங்கையின் கணவன் - செங்கமலக் கண்ணன்-வெஞ்சிலை வீரன், இதோ! உன் கரையில் வந்து நிற்கின்றான். அவன் பெருமையை அறிந்துதான் முன்னிலும் அதிகமாய் முழங்கு கின்றாயோ? சீதநீர்த் துளிகளைத் திரைக் கரத்தால் எடுத்து அவன் திருவடியில் தெளிக்கின்றாயோ? கோமகன் வந்தான் என்று குதிக்கின்றாய் போலும்? ஐயோ! அவ் வண்ணலின் நிலையை நீ அறிந்தாய் அல்லையே! ஆழிசூழ் உலமெல்லாம் அரசாளும் உரிமை துறந்து, பூழிவெங் கானம் போந்த புண்ணி யன் அவன்; கானகத்தில் கற்படை மனையாளைப் பறிகொடுத்துக் கடுந்துயர் உழந்த காதலன். மானம் அவன் மனத்தை அறுக்கின்றது. அரக்கர் நகரில் சிறைப்பட்ட சீதையின் சோகம் அவன் உள்ளத்தை உருக்குகின்றது; தூது சென்ற அனுமனிடம் அவள் சொல்லியனுப்பிய செய்தியை நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கின்றான் அவன்; அவள் குறிப்பிட்ட கால அவதி நெருங்குகின்றதே என்று மறுக்கம் உறுகின்றான்; காடும் மலையும் கடந்து வருகையில் சால நாள் கழிந்ததே என்று கவலைப்படுகின்றான்.

"மறிகடலே! நிலப்பரப்பின் எல்லை கண்ட வீரன் இப்போது நீர்ப் பரப்பின் தொல்லை கண்டு துளங்கு கின்றான்; உறக்கம் நீத்த கண்களோடு உன்னைப் பார்க்கின்றானே! + உன்னை நோக்கி அவலமே வடிவ மாக நிற்கும் அண்ணலை மணிவண்ணன் என்பார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்கள். ஆயினும் மனத்துயரால் மணிவண்ணத்தின் ஒளி மழுங்கி விட்டதே! இரவும் பகலும் உறங்காத கண்கள் செங் கமலத்தின் செவ்வி யிழந்தனவே!* அவன் அகத்தில் அடங்கிய ஆறாத் துயரம் முகத்தில் நன்றாய்த் தெரிகின்றதே! தூங்காத கண்களில் இன்னும் துலக்க மாகத் தோன்றுகின்றதே!

+ "பொங்கிப் பரந்த பெருஞ்சேனை
புறத்தும் அகத்தும் புடைசுற்றச்
சங்கிற் பொலிந்த கையாளைப்
பிரிந்த பின்பு தமக்கினமாம்
கொங்கிற் பொலிந்த தாமரையின்
குழவும் துயில்வுற்று இதழ்குவிக்கும்
கங்குற் பொழுதும் துயிலாத
கண்ணன் கடலைக் கண்ணுற்றான்"
--கம்பராமாயணம் - கடல் காண் படலம்

"முத்து விளைக்கும் முந்நீரே! அறவோனாகிய அப் பெருமானைக் கண்டு நீ அன்பு கொண்டாய்; மெல்லிய தென்றலால் வரவேற்றாய்; அழகிய முத்துக்களைக் கையுறையாக உன் கரையிலே வைத்தாய்; அந்தோ! வந்தவன் மனநிலையறியாது நடந்து கொண்டாயே! உன் வரவேற்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற்போல் அவ் வள்ளலை வாட்டி வருத்துகின்றதே; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்துவிட்டாயே! நீ விடுத்த மெல்லிய பூங்காற்று அவன் மேனியை வெதுப்புகின்றதே! நஞ்சுபோல் நலிகின்றதே! அதற்கும் மேலாக உன் முத்துக்கள் சீதையின் முறுவலை நினைப்பூட்டி, கனலோடு காற்றும் கலந்தாற்போல் கடுவேகத்தை அவன் மனத்தில் ஊட்டி விட்டனவே!

"தூர மில்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல
வீர வில்லி நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு
ஈர மில்லாத நிருதரோடு என்ன உறவுண்டு உனக்கு ஏழை
மூரல் முறுவல் குறிகாட்டி முத்தே! உலகை முடிப்பாயோ?" +
+ கம்பராமாயணம் - கடல் காண் படலம்

"தென் கடல் முத்தே! நீரிலே பிறந்து, நீரிலே வளர்ந்த உனக்கு ஈரமில்லாத அரக்கரோடு எப்படி உறவு உண்டாயிற்று? உனக்கும் அவர்க்கும் ஒருவித உடன்பாடும் இல்லையே! பண்பாடற்ற அரக்கரோடு சேர்ந்து ஐயன் மனத்தைப் புண்படுத்தி விட்டாயே! தன்னோடு சீதை கானகம் நோக்கிப் புறப்படும் பொழுது,

"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண்ண கையாய்!"

என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே! இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரைகடந்த சீற்றத்தால் அவான் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ் வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசர மெல்லாம் சாம்பராய் விடுமே!

"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே! உன் முகத்தைக் கண்டு பெருங்கோபமும் தாபமும் பிறந்தா லும்அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ் வீரன்.செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்படமாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள் வார்'என்னும் முதுமொழியின் உண்மை யறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக் காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருத மாட்டான். இத் தகைய வீரனுக்குத் துணைபுரித லன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே வாழி! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி!" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர். 

-----------------------------------------------------------

13. தாயுமானவர்

திருமறைக்காடு என்பது சோழமண்டலக்கரையி லுள்ள பெருமை வாய்ந்த பழம்பதிகளில் ஒன்று. தமிழர் வாழும் இலங்கையைத் தண்ணளியோடு நோக்கி நிற்பது அதன் துறைமுகம். இந் நாளில் அது வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்றது. அவ் வூரிலே தோன்றினார் தாயுமானவர் என்று தமிழகம் போற்றும் சிவஞானச் செல்வர். கற்று அறிந்து அடங் கிய அப் பெரியார், திருச்சிராப்பள்ளி முதலிய பல ஊர்களில் உள்ளத் துறவியராய் வாழ்ந்து, இறுதியில் தம் பிறப்பிடமாகிய திருமறைக்காட்டைத் தரிசிக்க வந்திருந்தபோது அங்குள்ள பழங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"மறைக் காட்டுத் திரைக்கடலே! இம் மண்ணுலகில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களிலே தலைசிறந்தவர் மானிடர் அல்லரோ? 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது' என்பதில் ஐய முண்டோ? ஆயினும், அப் பிறப்பின் மேன்மையை மானிடர் அறிந்தனரா? பெரும்பாலோர் அன்ன விசாரம் அதுவே விசாரமாக அலைந்து திரிகின்றார்களே! இதனை வாழ்வு என்று சொல்லலாமா? சிறப்பாகப் பகுத்தறிவு பெற்ற மாந்தர், குறிக்கோள் இல்லாது வாழலாமா? வயிறு வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டு வாழ்நாளை வறிதாகக் கழிக்கலாமா? உயிர் வாழ்வதற்காக உண்பதும், உண்பதற்காக உயிர் வாழ்வதும் உயரிய செயலாகுமா? மனிதப் பிறப்பின் பெருமையை நினைத்துப் பார்ப்பவர் எத்தனைபேர்? 'நான்யார்?' என்று சிந்திப்பவர் எத்தனை பேர்? 'இப் பிறவி தப்பினால் எப் பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ?' என்று எண்ணிப் பார்ப்பவர் எத்தனை பேர்? 'யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மின்றி மற்றொன்றும் காணாத மாந்தர் பலரல்லரோ? 

"நேர்மையுள்ள நெடுங்கடலே! மனித இனத்தில் கற்றவர் மேலோர் என்றும், மற்றவர் கீழோர் என்றும் கருதப் பெறுவர். ஆயினும் கற்றவர் எல்லாம் மெய்யறிவு பெற்ற மேலோர் என்று சொல்ல முடியுமா? கற்ற கல்வியால் கர்வமுற்று, பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் மாற்றி மருட்டும் மாந்தரும் உளரே! வித்தையின் மதுகையால் நாத்திகம் பேசி நாத் தழும்பேறும் அறிஞரும் உளரே! வாது செய் வதும் பேது செய்வதும் வாக்கு வன்மையால் இயலு மல்லவா? இத் தகைய வித்தகரால் விளையும் தீமையை அளவிட்டுரைக்க லாகுமோ? இதைக் கருதும்பொழுது 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' என்று சொல்லுதல் தவறாகுமோ?

"ஆழ்ந்து அகன்ற பெருங்கடலே! நெடுங்கடல் என்றும் பெருங்கடல் என்றும் பேசப்படுகின்றாய் நீ! பொங்கி எழுகின்றாய்; விழுகின்றாய்! உனக்குக் கங்கு கரை இல்லை. +மாந்தர் கட்டுகின்ற ஏரிக்கும் குளத்திற்கும் கரையுண்டு; மட்டற்ற வெள்ள முடைய நீ, கரை யொன்றும் இன்றியே கட்டுப் பட்டு நிற்கின்றாயே! இஃது இறைவன் செயல் அன்றோ? அவன் ஆணையால் உலகம் இயங்கு கின்றது என்பதற்கு நீயும் ஓர் அடையாளமாய் நிலவுகின்றாயே! அவனன்றி ஓர் அணுவும் அசை யாது என்ற ஆப்தர் மொழியை நீயும் மெய்ப்பிக் கின்றாயே!

+ "உரையிறந்து பெருமை பெற்றுத்
திரைக்கை நீட்டி
ஒலிக்கின்ற கடலே! இவ்
வுலகம் சூழக்
கரையின்றி வைத்தார் யாரே?"
-- தாயுமானவர் பாடல்

"கத்தும் கருங்கடலே! அந்தோ! உனது ஆரவாரம் எனக்குப் பிடிக்கவில்லை. அல்லும் பகலும் நீ அலறுகின்றாயே! அமைதியில் உனக்கு அணுவள வும் நாட்டமில்லையே! சும்மா இருக்கின்ற சுகத்தை நீ அறிந்தா யல்லை! பேசாத நிலையன்றோ பெருநிலை? அந் நிலையை நாடுகின்றது என் உள்ளம். 'சும்மா இரு' என்று எல்லோரும் சொல்லுவர். சொல்லுதல் யார்க்கும் எளிது; சும்மா இருக்கும் செயலோ மிக அரிது. மதயானையை மடக்கலாம்; மற்றைய விலங்கு களை அடைக்கலாம். கனல்மேல் இருக்கலாம்; புனல் மேல் நடக்கலாம். ஆனால், சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறம் அரிது, அரிது. அத் திறம் பெற்றவர் கோடியில் ஒருவரே என்று கூறவும் வேண்டுமோ?

"அருந் தமிழ்க் கடலே! இத் தமிழ்நாடு தெய்வத் திருநாடு; செயற்கரிய செய்யும் சீலர் நிறைந்த நாடு; மோன நிலையே ஞானநிலை என்றும் காட்டும் மாதவர் மலிந்த நாடு; அனுபவ ஞானம் பெற்ற ஆன்றோர் வாழ்ழும் நாடு. இந் நாட்டிலே அனுபூதிச் செல்வராய் விளங்கிய அருணகிரிநாதரை அறியாதார் உளரோ? அவர் அருளிய 'கந்தர் அனுபூதி' செந்தமிழ் நாட்டார் போற்றும் ஞானக் களஞ்சியம். அந்த அனுபூதியிலே மிளிர்கின்றது ஓர் அருமையான வாசகம்:

"ஆசா நிகளம் துகள்ஆ யினபின்
பேசா அனுபூ திபிறந் ததுவே"

என்ற வாசகத்தைப் படித்தேன்; சிந்தித்தேன்; தெளிந்தேன். அரியவற்றுள் எல்லாம் அரிது என்று ஆன்றோர் பலரும் அறிவுறுத்திய அனுபூதிச் செல்வம் பெற்ற அருணகிரிநாதரை மனமாரப் போற்றி னேன்; அப் பெருமானை ஞானத் தந்தையாகக் கொண்டேன். 'ஐயா! அருணகிரி அப்பா! உன்னைப் போல், மெய்யாக ஓர் சொல் விளப்பினர் யார்?' என்று விம்மிதமுற்று நின்றேன்.

"பழங்கடலே! பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்க மற நிற்கும் பரம் பொருளையே நாடுகின்றது என் நெஞ்சம். பேச்சற்ற நிலையே பேரின்ப நிலை யென்று அறிகின்றது என் உள்ளம். தன்னேரில்லாத் தலை வனைத் தர்க்கமிட்டுக் காணமுடியுமோ?

+"தர்க்கமிட்டுப் பாழாம்
சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி
நேர்பெறுவது எந்நாளோ?"
+ தாயுமானவர் பாடல்

என்று பாடிக்கொண்டே கடற்கரையை விட்டகன்றார் தாயுமானவர்

-----------------------------------------------------------

14. மார்க்கப் போலர்

தென்பாண்டி நாட்டுக் கடலருகே உள்ளது காயல் என்னும் துறை. முன்னாளில் அது பெரிய தொரு துறைமுக நகரம். பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் முத்துவிளையும் பெருந்துறையாக விளங்கிய காயல் இப்பொழுது தூர்ந்து கிடக்கின்றது. கடல் நெடுந்தூரம் விலகிவிட்டது. கலங்கள் இயங்கும் காயலாக அத் துறைமுகம் சிறந்திருந்த காலத்தில் பாண்டி நாட்டிற்கு வந்தார் மார்க்கப் போலர் என்ற மேல் நாட்டு அறிஞர்; காயல் மாநகரைக் கண்டார்; அந் நகரின் அழகிய கடற்கரையிலே நின்று பேசலுற்றார்:-

"தென்னவன் நாட்டு நன்னகரே! முன்னொரு காலத்தில் எத் திசையும் புகழ் மணக்க வீற்றிருந்த இத்தாலிய நாட்டிலே பிறந்தவன் நான். இளமை யிலேயே இவ் வுலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது. அந்த ஆசையால், கலத்தினும் காலினும் போந்து பல நாடு நகரங்களைக் கண்டேன்; பண்டைச் சிறப்புடைய பாண்டி நாட்டை வந்தடைந்தேன்; ஐந்து மன்னர் இந் நாட்டில் ஆட்சி புரிகின்றார்கள். தலை நகரில் சுந்தர பாண்டியன் அரசு வீற்றிருக்கின்றான். அவன் வாழும் முறையையும் ஆளும் முறையையும் கண் டறிந்தேன். துறைமுக நகரமாய் விளங்கும் நீயே பாண்டி நாட்டிற்கு ஏற்றமும் தோற்றமும் தரு கின்றாய்; வாணிக வளத்தின் உறைவிடமாய்த் திகழ்கின்றாய். உன் துறைமுகத்திலே கலங்கள் இயங்கும் காட்சியைக் கண்டு இன்புறுகின்றேன்.

"முத்தம் தரும் முந்நீர்த் துறையே! தென்னாட்டு முத்து எந் நாட்டிலும் சென்று ஏற்ற முற்று விளங்கு வதை நான் அறிவேன். ஆயினும், முத்துச் சலா பத்தை முதன் முதலாக இன்றுதான் கண்டேன். இளவேனிற் காலமே முத்துக் குளிக்கின்ற காலம். அப் பணியில் நன்றாகப் பழகியவர் பாண்டி நாட்டுப் பரதவர். அன்னார் சலாபத் துறையிற் போந்து சலிப்பின்றிப் பணி செய்வதைப் பார்த்தேன். இடுப்பிலே வலைப் பையை இறுக்கிக்கொண்டு, காலிலே கல்லைக் கட்டிக்கொண்டு, படகின் நெடுங் கயிற்றைப் பற்றிக் கொண்டு அவர் கடலின் உள்ளே இறங்குவர். நொடிப் பொழுதிலே கடலடியிற் போந்து, அகப்பட்ட முத்துச் சிப்பிகளை அள்ளிப் பையிலே போடுவர்; மூச்சு முட்டும் வேளை கிட்டியவுடன், காலில் உள்ள கல்லைக் கடலடியிற் கழற்றிவிட்டுக் கயிற்றை அசைப் பர். அப்போது படகின்மீது கண்ணும் கருத்துமாய் நிற்கும் பரதவர் கயிற்றை மேலே இழுத்து முத்துக் குளித்தவரைக் கடலினின்று எடுப்பர்.

"பரதவர் மலிந்த பாண்டித் துறையே! முத்துச் சலாபவேலை நடைபெறும்பொழுது இந் நகரமே புத்துயிர் பெறுகின்றது. உன் கடற்கரையிலே பல நாட்டு வணிகரும் செல்வரும் வட்டமிடுகின்றார்கள். முத்துச்சிப்பி கரையிலே வந்து குவிந்தவுடன் பங் கிடப்படுகின்றது. பாண்டி நாட்டை யாளும் மன்னர்க் குப் பத்தில் ஒரு பாகம்; அடுத்தபடியாக மந்திரம் ஓதும் மறையவர்க்கு இருபதில் ஒருபாகம். முந்நீரில் மூழ்கி முத்தெடுக்கும்போது மீன்கள் தடை செய்யா வண்ணம் மந்திர வலிமையால் அவற்றைக் கட்டி முத்துக்குளிப்பவரைப் பாதுகாக்கும் மறையவர்க்குரிய மந்திரக் கூலியாம் அஃது. இவ் விரு பங்கும் போக எஞ்சிய முத்துதான் பாடுபடும் பரதவர்க்குரிய தாகின்றது.

"காவலர் போற்றும் காயல் மாநகரே! எத்தனை வகையான செல்வம் இருப்பினும் பாண்டி மன்னர்க்கு முத்துச் செல்வமே முதன்மையான செல்வம். அழகிய முத்தைக் காணும்பொழுது, அவர் அடையும் இன்பத் திற்கு ஓர் அளவில்லை. இதனாலன்றோ ஆணி முத்துக் களை அயல் நாட்டார்க்கு விற்கலாகாது என்னும் அரசாங்க விதி பிறந்திருக்கின்றது! நாட்டுக் குடி களில் எவரிடமேனும் ஆணிமுத்து அகப்பட்டால், அதிகவிலை கொடுத்து அரசனே அதனை வாங்கிக் கொள்கின்றான். ஆதலால், பாண்டிய நாட்டுக் கருவூலத்திலுள்ள செல்வத்தை அளவிட்டு உரைத்தல் ஆகுமோ? முன்னோர் தேடிவைத்த முத்தையும் மணி யையும் பாண்டி மன்னர் கண்ணிணும் அருமையாய்க் காக்கின்றார்கள். மேன்மேலும் அவற்றைச் சேர்ப்ப தில் அன்னார் கருத்துச் செல்கின்றதே யன்றி எடுத் துச் செலவழித்தல் என்பது என்றும் இல்லை. சுந்தர பாண்டியன் மார்பில் ஓர் அழகிய முத்தாரம் இலங்கு கின்றது. அது, வழி வழியாக அச் செழியன் குலத்தில் வருகின்ற ஓர் அருங்கலம். ஆணிமுத்துக்களை அணி பெறக் கோத்தமைத்த அந்த ஆரத்தின் விலையை யாவரே மதிக்க வல்லார்? இத் தகைய அணிகள் எத்தனை, எத்தனை! 

"கடல்வளம் கொழிக்கும் காயலே! தென்னவன் நாட்டுத் திருவே ஓர் உருவெடுத்தாற்போலத் திகழ்கின்றாய் நீ! பஞ்ச பாண்டியரும் உன்னை நெஞ்சாரப் போற்றுகின்றார்; உன் வாணிக வளத்தினைக் கண்டு உள்ளம் தழைக்கின்றார். மேலைக் கடலிலே செல்லும் வர்த்தகக் கப்பல்கள், உன் துறைமுகத்தைத் தொடாமற் செல்வதில்லை. குடகடலின் வழியாக வரும் கலங் களில் குதிரைகள் ஆயிரம் ஆயிரமாக இங்கே இறங்கு கின்றன. பாண்டியர் ஐவரும் குதிரைப் படையின் பெருக்கத்திலே ஆசையுடையவர்; ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வாங்குகின்றனர்; விரும்பி அதிக விலையும் தருகின்றனர். ஆயினும் குதிரை விற்பவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை; பஞ்சவரை வஞ்சிக்கின்றார்கள்.தாம் விற்கும் குதிரை கள் பாண்டிய நாட்டில் வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்க்கில்லை. ஒல்லையில் அவை ஒழிந்தால் நலம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அயல் நாட் டிலிருந்து வாங்கும் குதிரைகளைப் பேணி வளர்க்கத் தெரிந்தவர் தென்னாட்டில் இல்லை. அவை நோயுற்றால் மருந்து கொடுக்க வல்லாரும் இல்லை. குதிரை விற்ப வர்கள் அத்தகைய மருத்துவரை இங்கே வரவிடுவ தும் இல்லை. பாண்டியர் வாங்கும் குதிரைகள் ஓர் ஆண்டிற்குள் மாண்டு ஒழிந்தால், மீண்டும் பதினாயிரம் பரிகளைக் கொண்டுவந்து விற்கலாமல்லவா? இப்படி அரசனை வஞ்சித்துத் தம் வாணிகத்தை வளர்க்கின்றார் அயல் நாட்டுக் குதிரை வர்த்தகர்! ஆயினும் இப்படிப் பிழைக்கின்ற ஏழை மக்கள் உன் முத்துச் செல்வத்தைப் பறிக்க முடியுமா? முத்தம் தரும் முந்நீர்த் துறையே! நீ நித்தம் வாழி, வாழி!" என்று வாழ்த்தி விடை பெற்றார் மார்க்கர். 

-----------------------------------------------------------

15. ஆனந்த ரங்கர்

புதுவை என்னும் புதுச்சேரி முன்பு பிரஞ்சு ஆட்சியிலுள்ள துறைமுக நகரம். புதுச்சேரியைப் பாண்டிச்சேரி என்று வழங்கலாயினர் வெள்ளைப் பரங்கியர். அந் நகரில் வாணிகத்தால் வளம் பெற்ற வருள் ஒருவர் ஆனந்த ரங்கர். மதி நலத்தால் அவர் மன்னரும் மதிக்க வாழ்ந்தார். புதுவையில் ஆட்சி புரிந்த பிரஞ்சுக் கவர்னர்களில் தலைசிறந்தவன் டூப்ளே என்பவன். அவனுடைய நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர் ஆனந்த ரங்கர். நாள்தோறும் நாட்டிலே தாம் கண்ட காட்சியையும், கேட்ட செய்தியையும் ஒழுங்காகக் குறித்து வைத்தார் அவர். அதுவே இப்பொழுது சிறந்த சரித்திரக் களஞ்சியமாக விளங்கு கின்றது

பன்னீராண்டு புதுவையில் கவர்னராயிருந்து பணி செய்த டூப்ளேயின் பெருமையை அன்று பிரஞ்சு நாட்டார் அறிந்தாரல்லர். அரசியலாளரின் கோபத்திற்கு ஆளாகி, அப் பெருமகன் பதவியிழந்து, விரசு கோலந் துறந்து, பாரீசுக்குக் கப்பலேறிய நாளில் பழைய நினைவுகளெல்லாம் ஆனந்தரங்கர் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. அவற்றை எவரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ள விரும்பாது அந்தி மாலையில் அவர் கடற்கரையில் பேசலுற்றார்:- 

"பொங்கு மாக்கடலே! புதுவையின் கவர்ன ராய்ப் பன்னீராண்டு ஆட்சி புரிந்த பெருமகன் இன்று காலையில் கப்பலேறிச் சென்றான். இந் நாளை நான் எந்நாளும் மறக்க முடியுமா? இத்தனை காலமும் என் இன்ப துன்பங்களுக் கெல்லாம் காரணனாய் இருந்த அக் கவர்னரையே நினைத்துக் கரைகின்றது என் நெஞ்சம். ஐயோ! பெருங்கடலே! என் கதையை உன்னிடம் சொல்லாமல் வேறுயாரிடம் சொல்வேன்? நான் சென்னையின் அருகேயுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தேன். என் தந்தையாரோடு இளமை யிலேயே இந்த ஊரை வந்தடைந்தேன். 'புதுவையை அடைந்தவர் புதுவாழ்வு பெறுவர்' என்று என் தந்தையார் நம்பினார். அவர் முயற்சி யுடையவர்; 'வர்த்தகமே அர்த்த சாதனம்' என்று அடிக்கடி சொல்வார். இத் தகைய பண்புடைய தந்தையார் என் பதினாறாம் ஆண்டில் பரமபதம் அடைந்து விட்டார். 

"ஈர நெடுங்கடலே! அன்று தொட்டுக் குடும் பப் பொறுப்பெல்லாம் என் இளந்தலையில் விழுந்தது. ஆயினும் நான் தயங்கவில்லை; 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற முதுமொழியை நம்பி வர்த்தகம் செய்யத் தலைப்பட்டேன்; புதுவையில் அங்காடி வீதியிலே ஒரு சிறு பாக்குக் கடை வைத்தேன். அக் கடையே என் ஆக்கத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. ஆதலால், அக் கடையை விடாமல் இன்றுவரை நடத்தி வருகி்ன்றேன். அதில் ஆனந்தமாய் இருந்து என் தாய் மொழியைக் கற்கவும் கேட்கவும் எனக்கு ஆசை அதிகம். 'செல் வத்துட் செல்வம் செவிச்செல்வம்' என்ற அருமைத் தமிழ் மறையை நான் எந் நாளும் மறந்தறியேன். அருந் தமிழ் விருந்தளிக்கும் அறிஞருக்குப் பெரும் பொருள் அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஒரு நாள் மதுரகவி என்னும் பாவலர் என்னைக் காண வந்தார். மாலைப்பொழுது. நான் இன்று போலவே அன்றும் இக் கடற்கரையிலே உலாவிக் கொண்டிருந்தேன். அவர் வந்ததும் தேன்மடை திறந்தாற் போல் பாடத் தொடங்கினார். நெடுங்கடலே! உன் மெல்லிய காற்றினும் இனிமையா யிருந்தது அவர் பாடிய தெள்ளிய தமிழ்ப் பாட்டு. அப்போது நான் நடையை மறந்தேன்; கடையை மறந்தேன்; ஆனந்த பரவசனாயினேன். அந் நிலையைக் கண்டார் கவிஞர்; அளவிறந்த அன்பு கொண்டு என்னைப் பற்றியே ஓர் பாட்டுப் பாடிவிட்டார்.

' உலங்கொண்ட மனிப்புயனே! பிரம்பூர் ஆ
னந்தரங்கா! உன்பாற் சொல்ல
வலங்கொண்ட கருடனையாம் இடங்கண்டோம்
எழில்நரையான் வலத்தே கண்டோம்
பொலங்கொண்ட மணிமாட மீமிசையில்
புயல்தவழும் புதுவை யென்னும்
தலங்கண்டோம் நினதுநகை முகங்கண்டோம்
இனிவேண்டும் தனம்கண் டோமே!"
-- பெருந்தொகை, 1357.

"புதுவைப் பெருங்கடலே! இப்போது புதுச் சேரி புத்துயிர் பெற்று வருகின்றது; வர்த்தகத்தால் வளம் பெருகுகின்றது; குச்சு வீடுகள் மச்சு வீடுகளாகின்றன. புதியவாகப் பல பேட்டைகள் உண்டா கின்றன. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் வாணிகத் துறையிலே போட்டியிடுகின்றனர். இருதிறத்தா ரும் தங்கள் பெயரை இத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட ஆசைப்படுகிறார்கள். ஆங்கிலேயரின் வர்த்தக நிலைய மாகிய சென்னையில் 'காலட்' என்பவர் சிறிது காலம் கவர்னராயிருந்தார்; நெசவுத் தொழிலைப் பேணி வளர்ப்பதற்காக நல்ல நீரும் நிழலும் அமைந்த திருவொற்றியூரிலே ஒரு பேட்டையை உண்டாக்கினார்; நூறு குடும்பங்களைக் கொண்ட அக் குடியிருப்புக்குக் 'காலட்பேட்டை' என்ற பெயர் கொடுத்தார். காலட் கவர்னர் கப்பலேறிப் போய் விட்டார். அவர் பெயர் தாங்கிய பேட்டை 'காலாடிப் பேட்டை' என்று இப்போது வழங்குகின்றது. வெள்ளைப் பெயரால் விளையும் விபரீதத்திற்கு வேறு சான்று வேண்டுமா? 

"முந்நீர்ப் பெருந்துறையே! இத்தகைய பேராசை டூப்ளே கவர்னரிடமும் இருந்தது. புதுச்சேரியின் பாக்கமாக அமைந்த ஒரு சிற்றூருக்கு அவர் டூப்ளேப் பேட்டை என்று பெயரிட்டார்; எல்லோரும் அவ்வூரை அப்படியே அழைக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்; துரைத்தன அதிகாரிகள் டூப்ளேப் பேட்டையிலேதான் வீடு கட்டி வசிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆயினும், நாட்டு மக்களுக்கு புதுப்பெயரிலே நாட்டமில்லை. 'தானாய்ப் பழுத்தால் பழமா, தடியால் அடித்தால் பழமா?' என்பது பழமொழியல்லவா? மேலும் டூப்ளேப் பேட்டை என்ற பெயர் நாட்டு மக்கள் நாவில் நல்ல முறையில் வருமா? இயற்கைக்கு மாறாக வற்புறுத் தினால் காலாடிப்பேட்டை போன்ற விபரீதந்தான் விளையும். டூப்ளேப்பேட்டை என்பது துவளைப் பேட்டையாகுமோ? அல்லது தவளைப் பேட்டை யாகுமோ? யார் அறிவார்? பேராசையுடைய டூப்ளேயின் செவியில் இதைச் சொன்னால் ஏறாதென்று நான் சும்மா இருந்து விட்டேன்.

" நலமார்ந்த நற்கடலே! ஒரு நன்றி செய்தாரை உள்ளத்தில் வைத்துப் போற்றுவது தமிழர் பண்பு. அந்த முறையில் எனக்குப் பெருநன்றி செய்த டூப்ளே துரையை நான் என்றென்றும் போற்றுவேன். புதுவையில் பிழைக்கவந்த எனக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்தவர் அவரே! சிறப்புடன் சிவிகையில் ஏறி, மேளதாளத்துடன் அவர் மாளிக்கைக்குச் செல்லும் உரிமையை எனக்குத் தந்தார் அவர்; அங்காடி விலைகளையும் அரசியல் முறைகளையும் அந்தரங்கமாக என்னுடன் ஆலோசித்தார்; நிற வேற்றுமை சிறிதும் இன்றி நெருங்கி என்னுடன் மனங்கலந்து பேசி மகிழ்ந்தார்; மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைத்தாலும் சீறி விழ மாட்டார்; தம் செவியில் ஏற்று நிதானமாக ஆராய்வார். இது வன்றோ நல்லமைச்சனுக்கும் அதிகாரிக்கும் ஏற்ற பண்பு?

"கரை காணாக் கருங்கடலே! ஆயினும், அவரிடம் ஒரு பெருங்குறை யுண்டு. அக் குறையினால் குன்று முட்டிய குருவி போல் மறுகினார் அப்பெருமகனார். அவருக்கு மனையாளாய் வாய்த்த மேடம், செருக்கும் சிறுமையும் உடையவள்; எல்லோரையும் அடக்கி ஆள்வதில் ஆசையுடையவள். வீட்டிலே அவள் இட்டதே சட்டம். பொறியில் அகப்பட்ட எலிபோல் அடங்கி அவள் சொல்லின் வழியே சுழல்வார் டூப்ளே துரை; ஒன்றும் மறுத்துப் பேச மாட்டாமல் விழிப்பார். அவள் அதிகாரம் வீட்டளவில் நின்றுவிடவில்லை. அரசியல் வேலைகளிலும் அவள் தலையிட்டு அல்லல் விளைப்பால். அம் மேடம் தருக்குற்றுத் தகாத செயல்களைச் செய்யத் தூண்டும் பொழுது டூப்ளே தடுத்துச் சொல்ல அஞ்சுவார்; சில வேளைகளில் அடிமைபோல் கெஞ்சுவார்; அவர் கெஞ்சக் கெஞ்ச அவள் மிஞ்சுவாள். அந்தோ! பேய் கொண்டாலும் கொள்ளலாம்; இத்தகைய பெண் கொள்ளலாகா தம்மா!

"காலங் கண்ட நெடுங்கடலே! அன்றாடம் கவர்னர் வீட்டிலும் வெளிநாட்டிலும் நான் கண்டதும் கேட்டதும் பல உண்டு. அவற்றை யெல்லாம் என் நாட் குறிப்பிலே நான் எழுதி வைக்கத் தொடங்கினேன். அவ்விதம் குறித்து வைப்பதில் ஒரு கருத்தும் எனக்கில்லை. பசித்தவன் பழங்கணக்கைப் பார்ப்பது போல் வேலையற்ற வேளைகளில் என் நாட்குறிப்பைப் பார்த்துப் பொழுது போக்குவேன். இக் காலம் மிகக் குழப்பமான காலம்; முத் திறத்தார் ஆதிக்கம் பெற முயலும் காலம். மகமதியரும், ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் ஒருவரை ஒருவர் ஆள்வினையாலும் சூழ்வினையாலும் வென்று உயரக் கருதும் காலம். இந்தக் காலத்தில் டூப்ளே கவர்னராக வந்தது புதுவைக்கு ஒரு நல்ல காலம்!

"புகழார்ந்த புதுவைக் கடலே! தென்னாட்டிலே பிரெஞ்சு ஆட்சியை நிறுவ ஆசைப்பட்டார் டூப்ளே; மகமதிய நவாப்போடு அரசியல் சதுரங்கம் ஆடினார்; சென்னையில் இருந்த ஆங்கிலயேர் மீது கப்பற்படை கொண்டு சாடினார். பிரெஞ்சுப்படை வென்றது. சென்னைக் கோட்டையிலே பிரெஞ்சுக் கொடி பறந்தது; டூப்ளேயின் புகழ் உயர்ந்தது. பிரெஞ்சுக் கொடியை வணங்கிப் பணியாத ஆங்கிலப் படை வீரரை யெல்லாம் சிறைப்பிடித்துப் புதுவைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறந்தது. சென்னைக் கவர்னராயிருந்த மார்ஸ் என்பவரும் அவர் பரிவார மும் இப் புதுவைத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப் பெற்றனர்; ஆங்கிலக் கவர்னருக்கு மரியாதை காட்டி வரவேற்கக் கருதியவர்போல் டூப்ளே ஆடம்பரமாக இத் துறைமுகத்திற்கு வந்தார். அம்மம்ம! அப் போது இக் கடற்கரையில் கூடியிருந்த மக்களுக்குக் கணக்குண்டா? ஆரவாரத்திற்கு ஓர் அளவுண்டா? புதுவைக் கடலினும் பெரிதாகப் பெருமுழக்கம் செய்த மக்களைக் கண்டு டூப்ளே மனங் குளிர்ந்தார்; மார்ஸ் மனந் தளர்ந்தார். அன்று மலர்ந்த செந் தாமரையை ஒத்தது டூப்ளேயின் முகம்! மாலைக் கமலம் போல் வாடிக் குவிந்தது மார்ஸின் முகம். இந்தக் கோலத்தில் வெற்றிபெற்ற கவர்னரும் தோல்வியுற்ற கவர்னரும் புதுவையின் வீதியின் வழியே சென்ற காட்சிக்கு நிகரான தொன்றை நான் என்றும் கண்ட தில்லை. மறுநாள் டூப்ளேயின் மாளிகைக்குச் சென் றேன். ஆனந்த மயமாக விளங்கிய அவர் 'ஆனந்த ரங்கரே வாரும்' என்றழைத்தபோது நான் என்றும் இல்லாததோர் இன்பம் பெற்றேன். அவர் மதி நலத்தை மனமாரப் புகழ்ந்துரைத்தேன்.

"புகழ்பூத்த புதுவைத் துறையே! சென்னையிலே பிரஞ்சு ஆதிக்கம் பெருகக்கண்ட மகமதிய நவாப்பு பெருஞ்சீற்ற முற்றார்; முள் மரத்தை முளையிலே கிள்ளி யெறியவேண்டும் என்றெண்ணிச் சென்னையின்மீது படையெடுத்தார். நவாப்பின் மைந்தன் மாவுஸ் கானே படைத்தலைவனாயினான். இதையறிந்த டூப்ளே புதுவையிலிருந்து ஒரு பட்டாளத்தைச் சென்னைக்கு அனுப்பினார். அடையாற்றின் வடகரையில் இரு படைகளும் கை கலந்தன; கடும்போர் புரிந்தன. சிறிது நேரத்தில் மகமதியர் படை சின்ன பின்ன மாய்ச் சிதறி ஓடிற்று. 'மகமதியர் அதிசூரர்; அவரை வெல்ல எவராலும் ஆகாது' என்று பொதுமக்கள் எண்ணியிருந்த எண்ணம் அடையாற்றுப் போரிலே அடிபட்டு ஒழிந்தது. மகமதியரது பேராண்மையைத் தகர்த்த டூப்ளேயின் புகழ் மும்மடங்கு வளர்ந்தது.

"நிலையற்ற பெருங்கடலே! ஆயினும் இன்ப மும் துன்பமும் கலந்தே இவ் வுலக வாழ்க்கை. உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். நாட்டிலே குழப்பம் பெருகிற்று; வர்த்தக வளம் குறுகிற்று; பாரீசு நகரம் பரபரப்புற்றது. டூப்ளேதான் இதற் கெல்லாம் காரணம் என்ற கருத்துப் பரவிற்று. எல் லோரும் அவரைக் கைவிட்டார். முன்பு கரும்பாய் இருந்தவரேல்லாம் வேம்பாயினர்; வேலையைவிட்டு அவரை நீக்கினர்; மற்றொருவரைக் கவர்னராக நியமித் தனர். புதிதாக வந்த கவர்னரிடம் புதுவையை ஒப்புவித்து, பாரீசை நோக்கிப் புறப்பட்டார் டூப்ளே.

"கதறும் பெருங்கடலே! அந்தோ! அன்று கவர்னராய் அவர் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங் கிய பெருமை என்ன! அவரை வரவேற்ற மாட்சி என்ன! அலங்காரக் காட்சி என்ன! பன்னீராண்டு அவர் ஆட்சி புரிந்தார். அப்போது அவர் நாவசைந் தால் இந் நாடசையுமே! அவர் அறிவிற் சிறந்தவர்; ஆள்வினை யுடையவர்; ஆங்கிலேயரை அலற வைத்தார்; மகமதியரை மறுகவைத்தார்; பாதுஷாவை யும் பதற வைத்தார். இத் தகைய பிரஞ்சு கவர்னர் எளியராய்த் தனியராய் இன்று இந் நகரை விட்டுச் செல்கின்றார்; நிதியிழந்து, நிமிர்ந்த நடையிழந்து, வழியனுப்ப நண்பர் யாருமின்றி வைகறைப் பொழு திலே இப் பதியை விட்டுப் போகின்றார். காட்டில் அரசு வீற்றிருந்த சிங்கத்தைக் கூட்டில் அடைத்தாற் போல் அவரைக் கப்பலில் ஏற்றிக் குற்றவாளிபோல் கொண்டு செல்கின்றார்களே! இன்று அக்டோபர் மாதம் பதினான்காம் தேதி; இந் நாள் அவர்க்கு அட்டமத்தில் சனியாய் அமைந்ததே! பாரீசு நகரத் தில் இனி அவர் என்ன பாடு படப்போகின்றாரோ?" என்று கண்ணீர் வடித்துக்கொண்டு கடற்கரையை விட்டகன்றார் ஆனந்த ரங்கர். 

-----------------------------------------------------------

16. உமறுப் புலவர்

+ இளசை - எட்டயபுரம்

"வளமார்ந்த துறைமுகமே! செல்வமும் சீலமும் பொருந்தித் திகழ்கின்றாய் நீ! தள்ளா விளையுளும், தாழ்விலாச் செல்வரும், தக்காரும் உள்ள இடமே தலைசிறந்தது என்று தமிழ்மறை கூறிற் றன்ற்றோ? பாரி வள்ளல் வாழ்ந்ததனால் பாண்டி நாட்டுப் பறம்பு மலை புகழ் பெற்றது. சடையப்ப வள்ளலின் கொடைத் திறத்தால் வெண்ணெய் நல்லூர் விளக்க முற்றது. அவ் வண்ணமே சீதக்காதியால் சிறப்புற்றாய் நீயும்! அவர் இந் நாட்டு வணிக மன்னர்; அளவிறந்த பொருளாளர். செல்வச் செருக்கு என்பது அவரிடம் சிறிதும் இல்லை. உதவி பெற வந்தவர்க்கு 'இல்லை' என்ற சொல் அவர் வாயினின்று எந் நாளும் வந்த தில்லை; காட்சிக்கு எளியராய் கருணையே உருவமாய் விளங்குகின்றார். அவரைக் கண்டாலே கலி தீரும்.

"அறம் மணக்கும் திரு நகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவ மழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோய் மிகுந்தது. நாளுக்கு நாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சிற் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி; +"கார் தட்டினால் என்ன? கருப்பு முற்றி என்ன? என் களஞ்சிய நெல்லை- அல்லா தந்த நெல்லை எல்லார்க்கும் தாருவேன்' என்று மார் தட்டினார்! இதுவன்றோ அறம்?

+ "ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்திலேதங்கள் காரியப்பேர்
ஆர்தட் டினும்தட்டு வாராம லேஅன்ன தானத்துக்கு
மார்தட் டியதுரை மால்சீதக்காதிவ ரோதயனே" 
--படிக்காசு புலவர் பாட்டு.

"புகழார்ந்த கீழக்கரையே! செம்மனம் வாய்ந்த சீதக்காதியின் புகழ் செந்தமிழ் நாட்டையும் கடந்து சென்றது. வடநாட்டை ஆண்ட அவுரங்கசீப் என்னும் அரசன் அவர் பெருமையை அறிந்தான். அரசாங்க சேவையில் அவரை அமர்த்தினான். அவுரங்கரது ஆணை தலைக்கொண்டு சீதக்காதியர் சில காலம் வங்க நாட்டுக் 'கலீபா'வாக வேலை பார்த்தார். ஆயினும், இவர் மனம் தமிழகத்தையே நோக்கி நின்றது. செவிச் சுவையுடைய சீதக் காதியார் தேனினும் இனிய தமிழ்ச் சொல்லைக் கேளாமல், வடநாட்டில் வாழ முடியுமா? அறஞ் செய்ய விரும்பும் அவர் உள்ளம், ஆட்சியிலும் அர சாங்கச் சூழ்ச்சியிலும் ஈடுபட முடியுமா? வேந்தனிடம் விடைபெற்று, மீண்டும் தென்னாட்டை வந்தடைந்தார் சீதக்காதியார்; தென்னாட்டு முத்துக்களாகிய அழகிய மாலையை அவுரங்கசீபுக்குக் கையுறையாக அனுப்பினார். சீலம் வாய்ந்த சீதக்காதியாருடைய அன்பு மாலையாக அதனை ஏற்றுக்கொண்ட அரசன் சந்தனமும் தேயிலையும் வந்தனத்துடன் வழங்கினான்.

"வள்ளல் வாழ்ந்த வளநகரே! மகமதிய மதத்தில் சிறந்த பற்றுடையவர் சீதக்காதி; நபி நாயகத்தைப் பரவாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருது பவர் ஆயினும், *பறந்த நோக்கம் உடையவர் அவர்; பசியால் வரும் வறிஞரையும், பரிசுக்கு வரும் அறிஞ ரையும் சாதி மதம் பாராது ஆதரிக்கும் சீலர். சைவ சமயத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கந்தசாமிப் புலவரும், நமசிவாயப் புலவரும், பிறரும் சீதக்காதி யிடம் சிறந்த சம்மானம் பெற்றதை நான் அறி வேன். எக் குடிப் பிறப்பினும், யாவரே யாயினும் கற்றோரை யெல்லாம் தமது சுற்றமாகக் கருதிய செம்மல் சீதக்காதியார் என்பது சிறிதும் மிகை யாகாது.

"சான்றோரை ஈன்ற பழம்பதியே! நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றறிந்து அடங்கிய பெரியார் ஒருவரை ஆன்ம நேயராகப் பெற்றார் சீதக்காதியார். இஸ்லாமிய உலகத்தில் சதக் கத்துல்லா என்னும் சான்றோரை அறியாதார் உளரோ? நபி நாயகத்தின் திருவுள்ளத்தை நன்றாக உணர்ந்தவர் அவரே! அல்லாவின் பெருமையைத் தமிழ்நாட்டார் அனைவரும் அறியவேண்டும் என்பது அவர் ஆசை. அவரடியின்கீழ் அமர்ந்து அறிவுரை கேட்கும் பேறு கடையேனாகிய எனக்கும் கிடைத்தது. ஒரு நாள், சாந்தமே உருவாகிய சதக்கத்துல்லாவைக் காண்டேன்; காந்தத்தின் வாய்ப்பட்ட இரும்புபோல் ஆயினேன்; அப் பெருமான் அருளால் நபி நாயகத்தின் மார்க்கத்தை நன்கு உணர்ந்தேன்; என் உள்ளத்தில் அவர் திருவாய் மலர்ந்த வசனங் களே நிரம்பி நின்றன. அவற்றை எண்ணுந் தோறும் இன்பத்தேன் என் உள்ளத் தடத்தில் ஊற் றெடுத்துப் பெருகிற்று. அறிவிற் சிறியவனாயினும் ஆர்வத்திற் சிறந்து நின்ற என் நிலையை அறிந்தார் என் குருநாதர்; வாய்திறந்து ஒரு வாசகம் பேசினார். அதை நினைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் உருகுகின்றது; கண்களிற் கண்ணீர் பெருகுகின் றது. 'அப்பா! நபிநாயகத்தின் சேவைக்கு நீ ஆளாகி விட்டாய். அவர் பெருமையைத் தமிழகத்தார் அறி யும் வண்ணம் ஒரு பெருங் காவியம் செய்க' என அவர் பணித்தார். உடனே, அவர் திருவடியிலே விழுந்தேன்; எழுந்தேன்; நற்றவச் செல்வராகிய அப் பெருமான் திருவடியைச் சிந்தையாரத் தொழுது சீறாப்புராணம் பாடத் தொடங்கினேன். ஐயாயிரம் திருவிருத்தங்களைக் கொண்ட அக்காவியத்தில்+ ஏதேனும் அருமை இருந்தால் அதற்கு உரியவர் என் குருநாதரே. வாசி இருந்தால் அஃது அவர் ஆசியின் பயனே. இருமையும் தரும் அப்பெருமானிடம் என்னை ஆட்படுத்திய அண்ணல் சீதக்காதியாரை என்றும் மறக்க இயலுமோ?

+ "நம்மை ஆளுடையான் வேத
நபிதிரு வசனம் தீனோர்
சம்மதித் திடப்பார் எல்லாம்
தழைக்கவே விளக்கம் செய்தோர்
இம்மையும் மறுமை யும்பேறு
இலங்கிய சதக்கத் துல்லா
செம்மலர் அடியி ரண்டும்
சிந்தையில் இருத்தி னேனே"
-- சீறாப்புராணம்.

"அழியாப் புகழ் பெற்ற அருங்கரையே! செந் தமிழ் வளர்த்த சீதக்காதியார் இறந்தார் என்று அறிந்தபோது, அந்தோ! அலறி அழுத புலவர் எத்தனை பேர்! கதறிப் புலம்பிய கவிஞர் எத்தனை பேர்! கோமான் கொடை மிகுந்த சீமான்-இறந் திட்டபோதே புலமையும் செத்ததுவே' என்று சரம கவி பாடினார் ஒருவர். 'தினம் கொடுக்கும் கொடை யானே! தென் காயற் பதியானே! சீதக்காதி! இனி யாரை நோக்கி உயிர் வாழ்வோம்?' என்று ஏங்கினார் பலர். 'செத்தும் கொடை கொடுப்பான் சீதக்காதி' என்று கருதி அவர் சமாதியில் இரந்து நிற்பவர் இன்றும் பலராவர்.

"கருங்கடலே! ஆண்டாண்டுதோறும் அழுது
புரண்டாலும் மாண்டார் மீண்டுவருவதுண்டோ?

சீதக்காதியார் போன்ற சீலர் பலர் இச் செந்தமிழ் நாட்டிலே தோன்றுவாராக! வாழையடி வாழையென அவ் வள்ளல் குலம் வாழ்க!" என்று வாழ்த்திச் சென்றார் உமறுப் புலவர்.

---------------------------------------------

17. கால்டுவெல் ஐயர்

தென்பாண்டி நாட்டிலே ஐம்பதாண்டு வாழ்ந்து தமிழ் மொழிக்கு அரும்பெருந் தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயர். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து அவற்றின் பெருமையை மேலை நாட்டார்க்குக் காட்டிய மேதை அவரே; நெல்லை நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் முதன் முதல் எழுதித் தந்தவர் அவரே. பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தூர்ந்து கிடந்த துறைமுகங்களின் பழம் பெருமையை வெளியிட்டவர் அவரே. இத்தகைய கால்டுவெல், பாண்டி நாட்டு மூதூராகிய கொற்கைக்கு மூன்று மைல் தூரத்தில் விலகி நிற்கும் கருங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"கொற்கைக் கருங்கடலே! ஐயாயிரம் மைலுக்கு அப்பாலுள்ள அயர்லாந்து தேசத்திலே பிறந்தவன் நான்; ஆங்கில நாட்டு நாகரீகத்திலே தோய்ந்து வளர்ந்தவன்; கிருஸ்து மத சேவை செய்ய ஆசை யுற்று இளமையிலே தமிழகம் போந்தேன்; தென் தமிழ்நாடு என்னும் நெல்லை நாட்டையே என் தாயக மாகக் கொண்டேன்; வடமொழியும் தென்மொழியும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்தேன். தென்மொழியின் திறம் என் கருத்தைக் கவர்ந்தது. அம் மொழியின் நீர்மை என் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. ஆதலால், தமிழ்ப்பணியே தலைப்பணியாகக் கொண் டேன். இந் நெல்லை நாட்டிலே பல்லாண்டுகளாக வாழ்ந்து, ஒல்லும் வகையால் தமிழ்த்தொண்டு செய்து வருகின்றேன். பாண்டிநாட்டுப் பெரும் பட்டினமாய் பழங்காலத்தில் விளங்கிய கொற்கையம்பதியை காணும் ஆசையால் இங்குற்றேன்.

"நற்றமிழ் நாட்டுக் கொற்கைக் கடலே! நான்மாடக்கூடல் என்னும் மதுரை மாநகரம் தோன்றுவதற்கு முன்னே, இக் கொற்கையம்பதியே பாண்டியர் வாழ்ந்த தலைநகரமாய் விளங்கிற்று. இதனாலன்றோ கொற்கை வேந்தன் என்றும், கொற்கைக் கோமான் என்றும், கொற்கையாளி என்றும் பாண்டியன் பெயர் பெற்றான்? கொற்கைத் துறையின் பெருமையால் நீயும் கொற்கைக் கடல் என்று அழைக்கப் பெற்றாய்.

"தூர்ந்தழிந்த துறைமுகமே! ஈராயிரம் ஆண் டுக்கு முன்னே பாரறிந்த பாண்டித்துறைமுகம் நீயே! அந் நாளில் காயல் துறையைக் கண்டவர் யார்? தூத்துக்குடியைத் தெரிந்தவர் யார்? இக் கொற்கைத் துறையிற் குளித்த முத்து, மேலை நாட்டுக் கொற்றவர் முடிமீது விளங்கிற்று. கொற்கைத் துறைவனாகிய பாண்டியனை மேலைநாட்டுப் பெருமன்னர் பலர் அறிந்திருந்தனர். யவன நாட்டு அகஸ்தஸ் என்னும் பேரரசனிடம் தூதனுப்பி உறவாடிய பாரத மன்னன் பாண்டியனே என்பது என் கொள்கை. இத் தகைய பெருமை யெல்லாம் முத்து விளைத்த கொற்கைத் துறையால் வந்ததன்றோ? இப்போது அத்துறை எங்கே? மரக்கலங்கள் எங்கே? ஆணிமுத்து விலைப்படும் அங்காடி எங்கே? மன்னர் வாழ்ந்த மாளிகை எங்கே? எல்லாம் கனவிற் கண்ட காட்சிபோற் கழிந்தனவே! அன்று முத்தம் அளித்த நீயும் மூன்று மைல் விலகி நிற்கின்றாயே! அந்தோ! கொற்கை மாநகரே! பாண்டிய நாட்டு மக்களே நின் பழமையை அறியாமல் வாழ்கின்றார்களே! தாலமி என்ற யவன அறிஞன் எழுதிவைத்த குறிப்பன்றோ இன்று நின் பழம் பெருமை விளக்குகின்றது?

"துறையைத் தூர்த்த திருநதியே! தமிழ் மணக்கும் பொதிய மலையினின்று நிலை புறப்பட்டு வருகின்றாய். எழுபது மயில் நடந்து நெல்லை நாட்டுக்குச் செழுமை தருகின்றாய்; உன்னாலேயே தென்பாண்டி நாடு பயிர் முகங் காட்டும் பழனத் திரு நாடாயிற்று. நெல்லை நாட்டை வாழ்விக்கும் நீ, 'நல்லை, நல்லை' என்று உன்னை நாவார வாழ்த்துகின்றேன்; மனமாரப் போற்றுகின்றேன். ஆயினும், உன் கொடுமையை என்னால் மறக்க முடியவில்லையே! உன்னாலேயே உலகம் புகழ்ந்த கொற்கைத் துறைக்கு இன்னல் விளைந்தது. உன் தண்ணீரிற் கலந்து வந்த மண்ணும் மணலும் கொற்கைத் துறைமுகத்தைத் தூர்த்து விட்டன. நெல்லை நாட்டை நீ ஊட்டி வளர்த்தாய்; அதன் நல்ல துறைமுகத்திற்குக் கேட்டை விளைத்தாயே! நிலத்துக்கு நீர் அளித்தாய்; கடலுக்கு மண்ணடித்து விட்டாயே!

"பாண்டிப் பழம் பதியே! 'கெட்டார்க்கு இவ்வுலகில் நட்டார் இல்லை' என்னும் பழமொழிக்கு நீயும் ஓர் எடுத்துக்காட்டனாய்! கருங்கடல் உன்னைக் கைவிட்டு அகன்றபோது, வறும்பூத் துறக்கும் வண்டுபோல வணிகரும் செல்வரும் உன்னை விட்டுப் பெயர்ந்தார்கள்; கடலருகே யமைந்த காயல் என்னும் இடத்தைத் துறைமுகமாகத் திருத்தி அங்கே குடியேறினார்கள். கடல் வாணிகத்தால் தழைத்தோங்கித் தலையெடுத்தது காயல்மா நகரம். அதன் சிறப்பை எழுதிப்போந்தார் மார்க்கப் போலர். ஆயினும், காயலின் வாழ்வும் நெடுங்காலம் நிலைக்கவில்லை. உனக்கு நேர்ந்த கேடு காயலையும் தொடர்ந்தது. பொருநையாற்று மண்ணால் காயலும் தூர்ந்து ஒழிந்தது. பொருநையாற்று முகத்தில் துறைமுகம் அமைத்தால் அது நிலைக்காது என்பதை அறிந்த நெல்லை நாட்டார் தூத்துக்குடியைத் துறைமுக நகரமாக்கினார்கள். சரித்திர முறையில் பாண்டிநாட்டின் ஆதித் துறைமுகம் நீயே; இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை யெல்லாம் ஆராயந்தரிவதற்குள் நான் பட்டபாடு கொஞ்சநஞ்ச மன்று.

"குறுகி நிற்கும் கொற்கைப் பதியே! சென்ற ஆண்டில் ஒரு நாள், சில வேலையாட்களோடு இந்து வந்து சேர்ந்தேன். அங்குமிங்கும் சில இடங்களை அகழ்ந்து பார்க்க வேண்டுமென்பது என் ஆசை. அப்போது இவ்வூர் வாசிகள் கூடித் திரண்டார்கள்; என்னை நோக்கி என்னென்னவோ மறைவாகப் பேசினார்கள். 'இந்தப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்திருக்கிறார்' என்றான் ஒருவன். 'புதையலை எடுத்தால் பூதம்விடுமா?' என்று மாற்றம் உரைத்தான் மற்றொருவன். அன்னார் கருத்தை அறிந்து கொண் டேன். உடனே முதியோர் சிலரை என்னருகே அழைத் தேன். 'பூதங்காக்கும் புதையலிடம் நான் போவதில்லை' என்று வாக்களித்தேன். அதை ஏற்றுக்கொண்டு இவ் வூரார் என்னை வேலை செய்ய விட்டார்கள். 

"பாண்டிப் பெருங்கடலே! 'பாண்டி நாடே பழம்பதி' என்பது தமிழகத்தார் கொள்கை. அதன் உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டாமா? பழங் கதைகள் சொல்வதிற் பயன் உண்டா? பாண்டி நாட் டிலே பாழடைந்து கிடக்கும் பழம்பதிகள் எத்தனை? மதில் இடிந்து கிடக்கும் மாளிகைகள் எத்தனை? தூர்ந்து கிடக்கும் துறைமுகங்கள் எத்தனை? இவற்றை யெல்லாம் துருவிப் பார்க்க வேண்டாமா? புதை பொருள்கள் கதை சொல்லுமே! கற்கருவிகள் காலங் காட்டுமே! இந்த வகையில் ஆராய்ந்து கொற்கையின் பெருமையைக் காணும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகக் கூறிக் கொற்கைக் கடலிடம் விடை பெற்றார் கால்டுவெல் ஐயர்.

-----------------------------------------------------------

18. பரிதிமாற் கலைஞர்

தென்னாட்டுக் கடற்கரை நகரங்களில் தலைமை சான்றது சென்னை. அதன் அழகிய கடற்கரையைப் புகழாதார் இல்லை. மாலைப் பொழுதில் அங்கு வீசும் மெல்லிய காற்றை நுகர்ந்து களித்திருப்பவர் பல்லா யிரவர். வேலை பார்த்துக் களைத்தவரும், வேலையின்றி இளைத்தவரும், காரில் ஏறி வருவோரும், கால் நடை யாய்த் திரிவோரும் அங்கே காட்சி யளிப்பர். மதுரையிற் பிறந்து, ஆங்கிலமும் அருந்தமிழும் ஆர்வமுறப் பயின்று, சென்னைக் கிறிஸ்துவ கல்லூரி யில் தமிழாசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் உண்மை யான தமிழ்த் தொண்டர்; தமிழின் நலமே தம் நல மாகக் கொண்டவர்; ஒரு நாள் அந்திமாலையில் சென்னை நீதிமன்றத்திற்கு அருகேயுள்ள கடற் கரைக்குச் சென்றார்; சுற்று முற்றும் பார்த்துப் பேச லுற்றார்:-

"சென்னைமா நகரின் செல்வமே! உன் அருமையை அறியாதார் இந் நகரில் உண்டோ? செல் வருக்கும் வறிஞருக்கும் நீ ஒருங்கே சுகம் தருகின்றாய்; இளைஞர்க்கும் முதியவர்க்கும் இன்பம் பயக்கின்றாய்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலம் புரிகின்றாய்! கலந்து பேச விரும்புவார்க்குக் களிப்பருள்வாய் நீ! எல்லார்க்கும் இனிய பூங்காற்றே! நீ என்றென்றும் வாழ்க.

"தமிழகத்தின் தலைநகரே! உன்னைக் காணும் பொழுது தமிழ்ப் புலவனாகிய என் உள்ளம் களிக் கின்றது. பழம் பெருமை வாய்ந்த தமிழகத்தின் தலை நகரம் நீயே என்று கருதும் பொழுது பெரியதோர் இன்பம் பிறக்கின்றது. கன்னித் தமிழ்-என்றும் உள தென் தமிழ்-தொன்று தொட்டு வழங்கும் திரு நகரம் நீயே என்று எண்ணும் பொழுது என்னையும் அறியா மல் கவிதை எழுகின்றது.

"மன்னு தொல்புகழ்த் தமிழ்மகள்
நடமிடும் வளஞ்சால் சென்னை மாநகர்"

என்று உன்னைப் பாடி மகிழ்வேன்.

"அருமைத் திருநகரே! நீ கருவாய் இருந்தபோது, திருவள்ளுவரின் அருளைப் பெற்றாய்! உருவாகி வரும் பொழுது ஆழ்வார்களின் ஆசி பெற்றாய்! திருந்தி வருங்கால் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றாய்! பெருகி வளர்ந்த பின் 'தருமம் மிகு சென்னை' என்று வடலூர் அடிகளால் வாழ்த்தப் பெற்றாய்! இத் தகைய புகழ்மாலை பெற்ற நீ, எத்தாலும் சிறப்புற்றிருத்தல் வியப்பாகுமோ? புதுமை சான்ற பட்டினமே! அந் நாளில் பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினமே. அதுவே தமிழகத்தின் பழைய பட்டினம். இந் நாளில் பட்டினம் என்றால் நீயே! உன்னைப் பார்க்கும்பொழுது, தமிழ் நாட்டின் பழைய நிலையும் பண்பாடும் அலை அலையாக என் உள்ளத்திலே எழுகின்றன. இதோ! உயர்ந்து எழுந்து நின்று தரையிலும் தண்ணீரிலும் ஒளி வீசுகின்றதே! இதைத் 'தீபஸ்தம்பம்' என்று எவரோ சொல்லி விட்டார்! அப் பெயர் இந் நாட்டுப் பள்ளிகளிலும் பரவத் தொடங்கிவிட்டது. அந்தோ! இவ் வொளியைக் குறிப்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் இல்லையா? நம் முன்னோர்கள்-திரைகட லோடித் திக்கெட்டும் புகழ் பெற்றவர்கள்-இதற்கு அழகிய பெயரிட்டுள்ளார்களே! அப் பெயர் மண்ணுள் மூழ்கி மறைந்தொழியலாகுமா? 'கலங்கரை விளக்கம்' என்ற அச் சொல் இன்று நேற்று எழுந்ததா? சிலப்பதிகாரத்தில் வழங்கும் செந்தமிழ்ச் சொல்லன்றோ? 'கலங்கரை விளக்கம்' என்ற சொல் இருக்க, தீபஸ்தம்பம் போன்ற பதங்களை வழங்குதல் நன்றோ?

"நீதி மன்றத்தின்மீது சுழன்று ஒளிரும் சுடர் விளக்கே! உன்னைப் போன்ற ஒளியைக் கண்டுதான் 'சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே'என்று புகழ்ந் ததோ எங்கள் அருமைத் திருவாசகம்? +சிவநெறியே சிந்திக்கும் என் உள்ளத்தில் அச் செஞ்சடைக் கடவுளின் கோலம் அன்றோ காட்சி தருகின்றது? காதவழி தூரம் ஒளி வீசும் கலங்கரை விளக்கே! வாழி.

+ "சுற்றி நின்றுசு டர்க்கற்றை வீசலால்
உற்று நோக்குநர் உள்ளம்ம லர்தலால்
மற்றி ராப்பொழு தத்தின்வ யங்கலால்
வெற்றி வேணியன் மேலொளிர் திங்களோ"
-பாவலர் விருந்து : பட்டினக் காட்சி

"பாக்கங்கள் பல உடைய பட்டினமே! கடற் கரையில் அமைந்த சிற்றூரைப் பாக்கம் என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். அந்த முறையில் சென்னப்பட்டினமே! நீயும் பல பாக்கங்களை உடை யாய். சேப்பாக்கம் முதல் கீழ்ப்பாக்கம் வரை எத் தனையோ பாக்கங்கள் உன்பால் உள்ளன. இன்னும் உன் பக்கத்திலுள்ள எத்தனை பாக்கங்களை நீ நாளடைவில் இணைத்துக் கொள்வாயோ? எத்துணை நலங்களைப் பிணைத்துக் கொள்வாயோ? உன் பெருமையெல்லாம் தமிழர் பெருமை! உன் வாழ்வெல்லாம் தமிழர் வாழ்வு! ஆதலால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க நன்னகரே!

"வெள்ளையர் ஆளும் விரிநகரே! நின் கோட்டை யின் அருகே இரவெல்லாம் அரவம்; சட்டைக்காரரின் கூட்டம்; வெள்ளைக்காரரின் வெறியாட்டம். இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை!

+ "வெள்ளைக் காரர்கள் பற்பலர் மிக்கஉல் லாசக் 
கள்ள ருந்திய படைஞர்கள் கவினுற உலவ
எள்ளி னும்பிறர் அதைச்சிறி தேனும்எண் ணுகிலாக்
கொள்ளி வாய்ப்புகைச் சுருட்டினர்......"
+ பாவலர் விருந்து:பட்டினக் காட்சி

உன்பால் வந்து குழுமுகின்றார்கள். நல்லார் அவ் வழிச் செல்லவும் நாணுகின்றனரே! சென்னைமா நகரே! வெள்ளையரால் நீ அடைந்த சிறுமை யெல் லாம் சொல்லத்தான் படுமோ? சிந்தைக்கினிய, செவிக்கினிய செந்தமிழ்ப் பெயர்களை அவர்கள் சிதைத்துவிட்டார்களே! திருவல்லிக்கேணி என்பது எத்துணை அழகான பெயர்! அல்லிமலர் பூத்த குளத் தைக் காண்பது ஓர் ஆனந்தமன்றோ? அக் குளத்தின் அருகே எழுந்த ஊரை 'அல்லிக்கேணி' என்று அழைத்தனர் நம் முன்னோர். அது, திரு என்னும் அடைபெற்றுத் 'திருவல்லிக்கேணி' யாயிற்று. இத் திருப் பெயரைத் 'திரிப்பிளிக்கேன்' ஆக்கிவிட்டார் களே வெள்ளையர்! அப் பாழான பெயர், நகரம் எங்கும், நாடெங்கும் பரவி விட்டதே. இத் தீமை தீரும் நாள் எந் நாளோ? இம்மட்டோ! நீ சிறந்து விளங்கும் கடற்கரையின் பெயர்தான் எப்படிச் சீர்கெட்டுக் கிடக் கின்றது? 'சோழ மண்டலக் கரை' என்பதன்றோ உன் கரையின் பெயர்? தமிழின் சிறப்பொலி ழகரம் வெள்ளையர் நாவில் நுழைவதில்லை. சோழ மண்டலம், அவர் நாவில் 'கோர மண்டல்' ஆயிற்று. ஆங்கிலக் கல்லூரிகளிற் பயிலும் இந் நாட்டு மாணவர்கள், 'கோர மண்டல் கோஸ்டு' என்று நித்தமும் தம் நெஞ்சிலே குத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறு கட்டழிந்து கிடக்கிறது நம் கல்வி முறை!

"மாசுற்ற மணிநகரே! இப்படிச் சீர்குலைந்த பெயர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ! சென்னை யின் இருப்புப்பாதை நிலையங்களில் தமிழ் அன்னை படும் பாடுதான் என்னே! எழுமூர் ஆங்கிலத்தில் எக்மூர் ஆயிற்று, கடற்கரை நிலையம் 'பீச்சு' என்று தமிழிலே எழுதப்பட்டுள்ளது. கோட்டைக்கு அடுத்த நிலையம் 'பார்க்கு' என்று குறிக்கப்படுகின்றது. இவை ஏன் தமிழ்ப் பெயர் பெறலாகாது? பீச்சு என்பதைக் கடற்கரை என்று மாற்றினால் என்ன கேடு? பார்க்கு என்பதைப் 'பூங்கா' என்று அழைத்தால் என்ன பிசகு?

"சென்னைக் கடலே! உன்னைப் போற்றுகின் றேன். வெள்ளையர் ஆட்சியினின்று நீ விரைவில் விடுபடல் வேண்டும்; இடையே வந்த கேடெல்லாம் ஒழியவேண்டும். நீ என்றும் தமிழ்க் கடலாகத் திகழ வேண்டும்; அருந்தமிழ்த் தாய் அதற்கு அருள் புரிய வேண்டும்" என்று பணிந்து வணங்கி விடைபெற்றார் பரிதிமாற் கலைஞர்.

-----------------------------------------------------------

19. சிதம்பரனார்

தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி இந்நாளில் எந்நாட்டாரும் அறிந்த துறைமுகநகரம். அந் நகரின் பெருமையைத் தம் பெருமை யாக்கிக் கொண்டார் சிதம்பரனார். அவர் தந்நலம் துறந்த தனிப்பெருந் தொண்டர். அன்னார் செய்துள்ள சேவையை நினைத்தால் உடல் சிலிர்க்கும்; உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்; உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகும். 'இந்தியக் கடலாட்சி எமதே' எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறி மயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். தென்னாட்டுத் திலகர் எனத் திகழ்ந் தவர் அவர். பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசிய தற்காக-நாட்டிலே சுதந்தர உணர்ச்சியை ஊட்டிய தற்காக-அவரைச் சிறைக் கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரன்னார்; ஒரு நாள் மாலைப் பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக் கடற்கரையிலே நின்று அவர் பேசலுற்றார்:-

"தென்னாட்டுத் துறைமுகமே! முந்நூறு ஆண்டு களாக நீயே இம் முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற் றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித் தோன் றல் நீயே என்று உணர்ந்து, உன்னை வணங்கு கின்றேன்; வாழ்த்துகின்றேன்.ஆயினும், அக் காலத் துறைமுகத்தின் மாட்சியையும், இக் காலத்திற் காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும்பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே! பார் அறிந்த பொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக் கடல் முத்து வளம் கொழித்தது. பழங் குடிகளாகிய பரதவர் மறக்கல வாணிகத்தால் வளம் பெற்று மாடமாளிகைகளில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று, மீனக்கொடி எங்கே? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்கே பறக்கின்றது? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பரந்து திரிகின்றது? கொள்ளை லாபம் அடிக்கின்ற வெள்ளையர் கப்பலில், கூலிவேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்! சொந்த நாட்டிலே வந்தவர்க்கு அடிமை செய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? 'வசை யொழிய வாழ்வாரே வாழ்வார்' என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?

"வளமார்ந்த துறைமுகமே! இந்த வசையை ஒழிப்பதற்காக இந் நகரில் சுதேசக் கப்பல் கம்பெனியொன்று இருபதாண்டுகளுக்கு முன் உருவாயிற்று. பாரத நாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்கு கொண்டார்கள். பழங்காலப் பாண்டியரைப் போல், மதுரைமா நகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்து, புலவர் பாடும் புகழுடயவராய் விளங்கிய பாண்டித்துரைத் தேவர் அக் கம்பெனியின் தலைவர் ஆயினார். அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக் கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்ட நாளில், இன்பவெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது; கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

"வாணிக மாமணியே! அன்றுமுதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது; வெள்ளையர் வாணிபம் தளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத் தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டார்; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக்கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக முறைமுகமாக கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர்; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்கு முறையைக் கையாளக் கருதி அரசாங்கத்தின் உதவியை நாடினார்.

"பரங்கியர் ஆளும் துறையே! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடைய தென்றும், அதை அசைக்க எவராலும் ஆகாது என்றும் அப்போது பொது மக்கள் எண்ணி யிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந் நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைதனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், 'சார், சார் ' என்று சலாமிட்டுப், 'புத்தி, புத்தி' என்று வாய்பொத்திச், 'சரி, சரி' என்று சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர், பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். அரசாங்கம் ஆட்டுவித்தால் அப் பதுமைகள் ஆடும்; எப்போதும் 'அரசு வாழ்க'என்று பாடும். இத்தகைய சூழ் நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம்! வந்தேமாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது; காட்டுக் கனல்போல் எங்கும் பரவிற்று. 'சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர். அவரே பாரத நாடு போற்றும் பாலகங்காதர திலகர். தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர்; செஞ்சொற் கவிஞர்; 'வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம், என்ற அழகிய பாட்டிசைத்து, நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார்; 'நொந்தே போயினும், வெந்தே மாயினும் வந்தேமாதரம்' என்னும் வீர மந்திரத்தை விடமாட்டோம் என்று வீறு பெறக் கூறினார்.

"புதுமை கண்ட துறைமுகமே! அந் நாளில் 'வந்தேமாதரம்' என்றால் வந்தது தொல்லை . அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக் கூட்டங்களிலும், தொழிலாளர் கூட்டங்களிலும், நான் பேசும்பொழுது வந்தேமாதர'த்தை அழுத்தமாகச் சொல்லுவது வழக்கம். அதைக்கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள்; உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியுமல்லவா? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று; என்மீது பலவகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமை தியை நான் கெடுத்தேனாம்! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை கொடுத்தேனாம்! வெள்ளையர்மீது வெறுப்பை ஊட்டினேனாம்! வீர சுதந்தரம் பெற வழிகாட்டினேனாம் வெள்ளைக் கோர்ட்டிலே இக் குற்ற விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண் டனை எனக்கு விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத் தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும், கண்ணனூர்ச் சிறையிலும் கொடும் பணி செய்தேன். என் உடல் சலித்தது; ஆயினும், உள்ளம் ஒரு நாளும் தளர்ந்ததில்லை; சிறைச் சாலையைத் தவச் சாலையாக நான் கருதினேன்; கை வருந்த மெய் வருந்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம்; என்று எண்ணி உள்ளம் தழைத்தேன்.

"செல்வச் செழுந்துறையே! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். கடும்பணி இட்ட வர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்தததில்லை. ஆனால், முறை தவறி நடந்தவர்களை எதிர்த்தேன்; வரை தவறிப் பேசியவர்களை வாயால் ஒறுத்தேன். ஒரு நாள் மாலைப்பொழுது: உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர்; அதிகாரத் தோரணை யில் நீட்டி நிமிர்ந்து நின்று கொண்டு எனக்குச் சில புத்திமதி சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. ‘அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும், மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்’ என்று வேக முறப் பேசினேன். மானமிழந்து வாயிழந்து மறைந்தான் ஜெயிலர்.

"தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும்-எந்த நாளிலும்-என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன்; இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பண்டித் துரைத்தேவரோடு உறவு கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச் சாலையில் செக்கிழுத்த துய ரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத் தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண் ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? தொல் காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லை யெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன். ஆங்கிலமொழி யில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம்போல் வாழ்வு’ என்று தமிழிலே மொழி பெயர்த்தேன். உயர்ந்த நூல்களிற் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளு மாறு ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ என்ற சிறு நூல்கள் இயற்றினேன். இவற்றை என் தமிழ்த் தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன் சிறையி லிருந்து நூற்ற என் சிறு நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை வேண்டுகிறேன்.

"வருங்காலப் பெர்ருவாழ்வே! காலம் கடிது சென்றது. என் சிறை வாழ்வு முடிந்தது. இந் நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தை களைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக் குழந்தையை-தேசக் கப்பலை- இத் துறை முகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். 'பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே' என்று பரிதவித்தேன். 'என்று வருமோ நற்காலம்' என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீர சுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும்? பாரத நாட்டிலே,

"பாயக் காண்பது சுதந்தர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளயர் உள்ளம்"

என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டகன்றார் வீரச் சிதம்பரனார்.

-----------------------------------------------------------

20. பாரதியார்

தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள் தோறும் அந்திமாலையில் கடற்காரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்:-

"அருந்தமிழ்க் கடலே! இன்று உன்னைக் காண ஏனோ என் உள்ளம் களிக்கின்றது! நீள நினைந்து நெஞ்சம் தழைக்கின்றது! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில் உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்; உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும்பொழுது இன்பம் பொங்குகின்றது என் உள்ளத்தில்! 'உன் மணற் பரப்பிலே நன்னீர் சுரந்து, அல்லி மலர் பூத்து நின்ற கேணிதான் அக் கவிஞர் பெருமான் கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற அருமைத் திருக்குறள் உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான்! உன் அல்லி மணற் கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்து விட்டாரே! அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக் கேணிக்கு வாழ்வின்மேல் வாழ்வு வருகின்றதோ?

"நீலத்திரைக் கடலே! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என்சொல்லி ஏத்துவேன்? மாநிலமெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப் பெருமானைத் தமிழகம் செய்த தவக் கொழுந்து என்பனோ? நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பனோ? ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடு நாயகமாய்க் காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன் கவியால் எழுதிக் காட்ட முடியுமா?ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.

"கல்விசி றந்தத மிழ்நாடு-புகழ்க்
கம்பன்பி றந்தத மிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் விசும்த மிழ்நாடு.
வள்ளுவன் தன்னைஉ லகினுக் கேதந்து
வான்புகழ் கொண்டத மிழ்நாடு-நெஞ்சை
அள்ளும்சி லப்பதி காரமென் றோர்மணி
ஆரம்ப டைத்தத மிழ்நாடு"
என்று பாடுவேன்; ஆனந்தக் கூத்து ஆடுவேன்.

"நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

"கண்ணைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்."

"தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!

"அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

"அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

"சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம - இனி அஞ்சிடோம்"

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க - எவரால் இயலும்?

செந்தமிழ்க் கடலே! இக் கரையில் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சி விட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளை யர் பாக்கம் என்றும், கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே! வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள் ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.

"என் அருமைத் தமிழ்க் கடலே! அது விழு கின்ற நாளிலே பாரத சமுதாயம் ஒன்று பட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக் கங்கள் அழியும்; தமிழ் நாடு தலையெடுக்கும். அப்போது,

"உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்"

என்று ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்' என்று அகம் களித்து இக் கடற்கரையில் இறுமாந்து உலாவு வோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com