மீன் பக்கோடா
தேவையானப் பொருட்கள்
- பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு கப்
- மல்லித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
- பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி
- முள் இல்லாத சதைப்பற்றான மீன் துண்டுகள் – முக்கால் கிலோ
- பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை – அரை கப்
- கடலை மாவு – ஒரு கப்
- முட்டை – ஒன்று
- தண்ணீர் – 7 மேசைக்கரண்டி
- மைதா மாவு – ஒரு தேக்கரண்டி
- சோள மாவு – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
எல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், தேவையான உப்பு, தண்ணீரை ஊற்றிக் கலந்து சுமார் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். அது சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு மீதியுள்ள தூள்களைச் சேர்த்து சிறிது வதக்கி மீன் துண்டங்களையும் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, மீன் கலவையை ஆற வைத்து, அத்துடன் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்கு மசிக்கவும்.
இந்த கலவையை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு தேக்கரண்டியாக ஊற்றி, பக்கோடாக்களாக பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.