வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 7 April 2016

பழந்தமிழர்களும் ஆமைகளுடன் பயணித்த கடல்பயண சாதனைகளும்...(HISTORY OF TAMIL KING'S TRAVEL IN OCEANS)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார்.

இதில் ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி “ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை” என்ற தலைப்பில் பேசியது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாள்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.

கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.

பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.

ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.

கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநர் வெ.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com