வேம்பார் பரிசுத்த ஆவியானவர் கோவில்
தூத்துக்குடி மறைமாவட்ட பொன்விழா (1973) மலரில் குறிப்பிடப்பட்டுள்ள வேம்பார் பரிசுத்த ஆவியானவர் கோவில் வரலாறு:
வேம்பார் முத்துக்குளித்துறைப் பகுதியின் மிகப் பழமையான பங்குகளில் ஒன்று. 1545-ம் ஆண்டு புனித சவேரியார் பல தடவைகள் இவ்விடத்தைச் சந்தித்துள்ளார். இவ்விடத்தைப் பற்றி பல தடவை தன் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். 1621 -ம் ஆண்டு சேசு சபையார் மீண்டும் முத்துக்குளித்துறைப் பகுதிக்கு வந்த போது வேம்பார் அவர்களுக்கு அந்நிய இடமாயிருக்கவில்லை என்று மதுரை மிஷன் வரலாற்றுக் குறிப்பேடு கூறுகிறது. 1708- ல் வேம்பாரும் வைப்பாறும் இணைந்த பங்குகளாக விளங்கின. 1715-ம் ஆண்டின் வரலாற்றை வரைந்த ஓர் ஆசிரியர் வேம்பாரில் இருந்த பரிசுத்த ஆவியின் ஆலயம் கார்மணற் துறை கோவில்களிலேயே மிகப் பெரிய பேராலயம் என்று வர்ணித்துள்ளார். ஆனால் அவ்வாலயம் அழிந்துபட்டதாக வரலாறு கூறுகிறது. தற்போதுள்ள ஆலயம் சங். D. சுவாமி நாதர் காலத்தில் 1903 -ம் ஆண்டில் அடித்தளமிடப்பட்டு 1915 -ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாக அறிகிறோம்.
1876 -ம் ஆண்டிலிருந்து சங். பங்காரு சே.ச. சுவாமிகள் காலத்திலிருந்து வேம்பாறு 25ஊர்கள் இணைந்த பெரிய வேத போதகத் தளமாக விளங்கியது. 1908 - ல் இருந்து வேம்பாரின் இணை ஊர்கள் தூத்துக்குடியோடு ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டன.