அலைகளின் மைந்தர்கள் - 3
நான் என்ன செய்ய வேண்டும் ஆண்டவரே.. கடவுளிடம் கேட்டார் சந்தியாகப்பர் ..
இந்த மக்களை நான் புலம் பெயர்ந்து இங்குகொண்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தவர்கள் மீண்டுமாய் இவர்கள் தங்களது ஊருக்கு திரும்பி செல்ல கூடாது.. இந்த இனம் மூக்கையூரில் பல்கி பெருக வேண்டும். இங்கு இவர்களை நிலைப்படுத்த வேண்டுமென்றால்... இவர்களுக்கான பாதுகாப்பையும், தொழிலையும் நீ உறுதிசெய்.. இவர்கள் செழித்து வளர்ந்து அவர்களும் தங்குவதற்கு வீடு வாசல் கட்டியபிறகு உனக்கும் பின்னாளில் அழகான வீட்டை (ஆலயம்) கட்டித்தருவேன் என்றார் கடவுள்..
சொந்த வீடுன்னு சொன்னவுடனே சந்தோஷமாக தலையாட்டினார் சந்தியாகப்பர் ..
மோயிசனை மாதிரி சொதப்பிட மாட்டியே.. என்றார் கடவுள்.. அவரு செங்கடலை பிளக்க செங்கோலை தூக்க எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு உங்களுக்கு தெரியும்ல...மறுபடியும் இந்த வேலைய போய் அவருக்கு தூக்கி கொடுத்துருக்கிய ..
தராதரம் அறிஞ்சு வேலை கொடுக்கனும் ஆண்டவரே..
சிரித்துக்கொண்டே சரி..சரி.. கவனமாக இவர்களை பார்த்துக்கொள் என்று சொல்லி சந்தியாகப்பரை விட்டு நகரும் போது..
ஆண்டவரே ஒரு நிமிஷம்.. என்ன என்பது போல் பார்வையால் கேட்டார் கடவுள்..
கலிலேயா கடற்கரையில் உங்கள் மகன் கால்களை நனைத்தது போல் இந்த மூக்கையூர் கடற்கரையிலும் உங்கள் கால்களை நனைத்து செல்லுங்கள் அப்புறம் நான் இந்த இனத்தை பார்த்துக்கிறேன் என்றார் சந்தியாகப்பர்..
கடவுளின் கால்கள் கடலை தொட்டவுடன் ஆழ்கடலிலுள்ள மீன்கள் கூட கரைக்கு மிக அருகாமையில் வர தொடங்கியது...
கரவாடை பொறக்குறதுக்கு இன்னும் மூன்று மாசம்தான் இருக்கு. நாம் நடந்து போய் ஊர் சேரனும்னா எத்தனை நாள் ஆகும்னு தெரியல..
அதுனால மூனுமாசமும் இங்க தங்கி மீன்பிடிச்சுட்டு போவோம்னு முடிவெடுத்தாங்க.. புதுசா கல்யாணம் முடிச்ச ரெண்டு மூனு இளந்தாரி பசங்கதான் நெளிஞ்சாங்க. பிறகு அவர்களும் சம்மதித்தார்கள்..
முதல்நாள் கட்டுமரங்கள் கடலுக்கு சென்றது.
கடலுக்குள் மீன்பிடிக்க போயிருக்காங்களாம்...
அவர்கள் திரும்பி வருவதை பார்க்க மூக்கையூரில் மற்ற இனத்தவர் அனைவரும் ஆச்சரியத்துடன் கடற்கரையில் நின்றார்கள்.. செய்தி கேள்விபட்டு சாயல்குடி மைனரும் கடற்கரைக்கு வந்தார்.. சரியான மீன்பாடு... எல்லா கட்டுமரத்துலயும் ஒமல் நெரஞ்சுட்டு... இதுவரைக்கும் அவர்கள் இவ்வளவு மீன் பிடிச்சதேயில்லை (எல்லாம் சந்தியாகப்பர் மகிமைதான்) ..
தாங்கள் கொண்டுவந்த மீன்கள் அனைத்தையும் கடற்கரையில் நின்ற மக்களுக்கு அவர்களிடம் எதுவும் வாங்காமல் அவர்களுக்கு மீன்களை அள்ளி அள்ளி கொடுத்தார்கள் ..
இதுவரை கடல் மீன்களையே சாப்பிடாத மக்கள் (மழைகாலத்துல மூக்கையூர்ல ஒடுற குண்டாறு தண்ணியில சேலையை வைத்து மறித்து பிடிக்கும் மீன்கள் தான் அவர்கள் இதுவரை சாப்பிட்டது) மகிழ்சியோடும் நன்றியோடும் வாங்கி சென்றார்கள். தங்களிடம் எதுவுமே வாங்காமல் அவர்கள் கொடுத்ததை நினைத்து அவர்களை நினைத்து பிரமித்து போனார்கள் மற்ற இனத்தவர்கள்.
இவர்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விவசாய கிராமங்களிலும் பரவியது.. கடல் மீன்களை வாங்கி செல்ல மூக்கையூர் கடற்கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து சென்றார்கள்.. பண்டமாற்று முறை தொடங்கியது.. அரிசி கொடுத்தார்கள் மீன்கள் வாங்கினார்கள். அங்காடி (திண்பண்டம்) கைமாறியது.. பதநீர் கொடுத்தார்கள்.. கள்ளு கொடுத்தார்கள் (பொண்டாட்டிய சாக கொடுத்தவன் ஒருத்தன் நல்ல போதையில் இந்த ஊரவிட்டு போக கூடாது போலயேன்னு மனதுக்குள் நினைத்தான் )..
சந்தியாகப்பர் தன் வேலையை ஆரம்பிச்சுட்டார் ...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து